ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

சரியா? சந்தோஷமா?

சரியா? சந்தோஷமா?

இரண்டு வாரமாக வேலை அதிகம். இணையத்தில் படிக்க நேரமில்லை; பதிய இன்னமும் அதிகம் நேரம் தேவையாதலால் பதியவும் இல்லை. இந்த இரண்டு வார வேலை பளுவில் அதிக நேரம் மத்தியஸதம் செய்வதிலும், மாறுபட்ட இலக்குகளுக்கிடையே ஒரு விதமான சமரசம் செய்வதிலும் செலவானது. அப்போது தோன்றிய ஒரு பொ.போ.பொ. (பொழுது போகாத பொம்மு) சிந்தனைதான் இது. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இந்த பொ.போ.பொ. பிரபலம் - ஒரு பிரதானமான வாரப் பத்திரிகையில் வந்த கார்ட்டூன். குமுதமா அல்லது விகடனா என்று நினைவில் இல்லை.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் வித விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் ஒரே விதமான விடை கிடையாது. எல்லா பிரச்ச்னைகளையும் ஒரே விதமாக வகைப்படுத்தவும் முடியாது. ஆனால் பெரும்பான்மையான சச்சரவுகள் ஒரே விதமான மூல காரணத்தினாலேயே வருகிறது என்று நினைக்கிறேன்.

சிறு வயதிலிருந்தே ஒரு விஷயம் சரியானதாக இருப்பதே நம் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ற பாடம் பதிந்துவிட்டது. உதாரணமாக பரீட்சையில் விடை சரியாக இருந்தால், மதிப்பெண் வரும், அதனால் மகிழ்ச்சி. அதனால் நம் மனதில் நம் எண்ணம், நம் கோணம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக சக்தி செலவழிக்கிறோம். எப்போது நம் கருத்து நமக்கு சரி எனப் பட்டு மற்றவரோடு அது ஒத்துப் போகவில்லையோ அப்போது சச்சரவுதான். நாம் நம்முடைய விடை சரி என்று முழு மதிப்பெண் எதிர்பார்த்து இருக்கையில், விடை திருத்தும் ஆசிரியர் நம் எதிர்பார்ப்போடு ஒத்துப் போகாமல் மதிப்பெண் குறைத்துப் போட நமக்கு வருவது கோபம், வருத்தம்தான்.

அந்த நேரத்தில் ஆசிரியர் ஒருவிதமான விடையை எதிர்பார்க்கிறார் என்று புரிந்து விட்டால், நமக்கு சரி என்று தோன்றுவதை எழுதாமல், ஆசிரியர் எது சரி என்று எதிர்பார்ப்பார் என்று புரிந்து கொண்டு அதை எழுதி மதிப்பெண் வாங்க முயற்சிப்போம். அந்த சிறு வயது பக்குவம் வயது ஆக ஆக குறைந்துவிடுகிறது. நம் கருத்து சரி என்று அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை வந்து விடுகிறது. மற்றவர் கருத்து நம்முடைய கருத்தோடு ஒத்துப் போகாத போது, அது தவறு என்று உடனேயே முடிவெடுத்து, தவறான கருத்தை திருத்த வேண்டும் என்ற ஒரு வேகம் வந்து விடுகிறது. அது மட்டுமல்ல, இந்த திருத்தும் முயற்ச்சியை ஏதோ ஒரு பொது நலத்துக்காக செய்வது போல கற்பனை பண்ணிக் கொண்டு, "என்னதான் இருந்தாலும் ஒரு principle வேண்டும்" என்றெல்லாம் நம் கருத்தை நியாயப்படுத்தி விடுகிறோம்.

இதை ஈகோ என்றும் சொல்லலாம்; பிடிவாதம் என்றும் சொல்லலாம். அலுவலகத்தில் நான் பார்த்த எந்தப் பிரச்சனையையும் உயிரையும் விடத் தகுந்த உயர்ந்த குறிக்கோள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும், அனைவருக்குமே இந்த ஈகோ பிரச்சனையால் தேவையில்லாத விரயம். என் கருத்தை மற்றவர் தவறு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, 'சொன்னால் சொல்லட்டுமே' என்று திரும்பிப் போகக் கற்றுக் கொண்டாலே பாதி சச்சரவு போய் விடும். அப்படி திரும்பிப் போவதால் இரு தரப்பிலும் மகிழ்ச்சிதான். பள்ளியில் படிக்கும் போது இயல்பாக வந்த இந்தத் தன்மை எப்படி தொலைந்து போனது என்று தெரியவில்லை.

கொஞ்சம் யோசித்தால் இந்த ஈகோவிற்காக நம் மகிழ்ச்சியைத் துறக்கக் கூடத் தயாராக இருக்கிறோம். இன்னமும் சொல்லப் போனால் தங்கள் குடும்ப மகிழ்ச்சியைக் கூட தியாகம் செய்து தம் கருத்து சரி என்று வாதிடுகின்ற மக்களை இப்போதும் நாம் பார்க்கிறோம். ஒரு கருத்துக்காக உயிரைக் கூட விடுகின்ற மக்களை சமயத்தில் நாமே ‘தியாகி’ என்றெல்லாம் உயர்த்திப் பேசுகிறோம். அந்த அளவிற்கு நம் வளர்ப்பில், வாழ்க்கை முறையில் கருத்துக்கு உயர்ந்த இடம் கொடுத்து, அதன் பொருட்டு கஷ்டத்தையோ, துயரத்தையோ ஏற்பது கூட உன்னதமானது என்று ஆதி காலம் தொட்டு பாடங்கள் இருக்கின்றன.

இது எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை. உயர்ந்த குறிக்கோளுக்காக உயிரையும் விடலாம் என்ற ரீதியில் நிறையப் படித்தாலும், எது உயர்ந்தது என்ற நிர்ணயம் செய்வது அவ்வளவு சுலபமாகத் தோன்றவில்லை. அரசியல் தலைவர்கள் கைதுக்கெல்லாம் தீக்குளிக்கும் செய்தியைப் படிக்கையில் இது சுத்தப் பைத்தியக்காரத்தனமான விஷயம் என்று தோன்றுகிறது.

மற்றவர் என் கருத்து தவறு என்று சொல்வதைக் கேட்டு வாதம் செய்யக் கிளம்பால் இருந்தாலே மகிழ்ச்சி தானாக வரும் என்றுதான் தோன்றுகிறது. என் கருத்து சரியாக இருப்பதாக ஊர்ஜிதம் செய்ய வேண்டுமா? அல்லது எனக்கும் மற்றவருக்கும் சந்தோஷமும் திருப்தியும் வேண்டுமா? என்று கேட்டால் இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுப்பேன். இந்த ஞானோதயம் இப்போதுதான் வந்திருக்கிறது; நடைமுறையில் எப்படி செயலாகிறது என்று கொஞ்ச நாள் கழித்துத்தான் தெரியும்.

வியாழன், செப்டம்பர் 03, 2009

குப்பை - 4

குப்பை - 4

சரி வீட்டின் குப்பை எது என்பதில் அவ்வளவாகக் குழப்பம் இல்லை; இந்த மனக்குப்பை, இணையக் குப்பை எது என்று கேட்டால் (வல்லியம்மாவின் கேள்வி - சென்ற பதிவிற்கு) எப்படி பதில் சொல்வது? வில்லியம் ஜேம்ஸ் டுரன்ட் என்ற தத்துவ ஆசிரியர் மலர் - அழகு பற்றி எழுதியதை கல்லூரியில் படித்ததுண்டு. "மலர் அழகாயிருப்பதால் நமக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை; அது சந்தோஷத்தைத் தருவதால் அதை அழகு என்கிறோம்" - என்பதுதான் அது. அதே போலத்தான் இந்தக் குப்பை அடையாளமும். எனக்குள் ஒருவிதமான 'நெகட்டிவ்' உணர்வை - அது வெறுப்பு, கோபம், அமைதியின்மை அல்லது அருவெறுப்பு போன்ற உணர்ச்சிகளாக இருக்கலாம் - ஏற்படுத்தும் எந்த செய்கையும், எழுத்தும், படமும் என்னைப் பொருத்தவரை குப்பை.

இந்த விளக்கம் எனக்குத் தெளிவாக இருந்தாலும், இதில் சில நடைமுறைப் பிரச்சனைகள். ஒரு வார்த்தை அல்லது படத்திற்கு எனக்கு வரும் உணர்வும் மற்றவர்களுக்கு வரும் உணர்வும் ஒரே விதமாக இருக்காது. எது எனக்கு குப்பை எனத் தோன்றுகிறதோ அது மற்றவருக்கும் பொருந்தாது. உதாரணமாக ஆத்திகருக்கு நாத்திகம் குப்பை; நாத்திகருக்கு ஆத்திகம் குப்பை. நான் என் உணர்வை பிராதனமாக்கி 'குப்பையை ஒழிப்பேன்' என்று கிளம்பினால் அது மற்றவரோடு சச்சரவைத்தான் உண்டு பண்ணும். அதனால் இந்த விளக்கம் நடைமுறைக்கு 'குப்பையை ஒழிக்க' உதவாது.

அது மட்டுமல்ல - ஒரே எழுத்து சிலருக்கு கோபத்தையும் சிலருக்கு சிரிப்பையும் வரவழைத்தால் அந்த எழுத்தை குப்பை என்று என் உணர்வை மட்டும் பிராதனாமக வைத்து சொல்வது சரியாகத் தோன்றவில்லை. வீரமணி என்ற பெயரைப் பார்த்தவுடன் நாத்திகம் நினைப்புக்கு வருகிறதா அல்லது அய்யப்பன் பாடல் நினைப்புக்கு வருகிறதா என்பது அவரவர் மனநிலையைப் பொருத்திருக்கிறது. 'கடவுள் இல்லை' என்ற வாக்கியத்தைப் பார்த்தவுடன் பெரும்பான்மையான ஆத்திகருக்கு கோபமும், நாத்திகருக்கு மகிழ்ச்சியும் வருவது இயற்கை. அதே சமயத்தில் 'அவன் இல்லை என்று சொல்வதற்குக்கூட அவனை முதலில் சொல்லாமல் இருக்க முடியாது' என்று இந்த வாக்கியத்தைப் பார்த்து மகிழ்ந்த சிவபக்தரைப் பார்த்திருக்கிறேன். 'இல்லை என்பதை எப்படிக் குறித்து இல்லை என்று சொல்லமுடியும்? இதுவே பகுத்தறிவுக்குப் புறம்பானது' என்று இதே வாக்கியத்தைப் பார்த்து கோபப்பட்ட நாத்திகரையும் பார்த்திருக்கிறேன்.

இணையத்தில் குப்பை அதிகம், அதனால் என் நினைப்பில் குப்பை வந்து விட்டது என்று சொல்வது, 'கல் தடுக்கி விட்டது' என்று நாம் சொல்வது போலத்தான். நாம் பார்க்காமல் கால் தடுக்கி விழுந்துவிட்டு ஏதோ நகர்ந்து வந்து கல் நம் காலை வாரி விட்டது போல சொல்வது எப்படிப் பொருந்தாத ஒன்றோ, அதே போல ஒரு எழுத்தை, படத்தை, செய்கையை குப்பை என்று சொல்வது உண்மையில் 'இதைப் பார்த்து படித்ததால், என்னுள்ளே குப்பையான உணர்வுகள் வந்து விட்டன' என்று தான் சொல்வதாக அர்த்தம். நான் 'குப்பை' என்று சொல்வது என்னுணர்வையும், அந்த எழுத்தின் (அல்லது படத்தின், செய்கையின்) வகைப்பாடையும் தான் குறிக்குமே தவிர, அதன் தரத்தைக் குறிக்காது.

அதே சமயத்தில் ஒரு எழுத்து பெரும்பான்மையான மக்களுக்கு ஒரே விதமான உணர்வைத் தந்தால், அந்த எழுத்தும் அந்த உணர்வோடு ஒன்றாகிப் போகிறது. மக்களை ஒரு சங்கடத்தில் ஒன்று சேர்த்து எழுப்பிவிட்ட பேச்சுகளை (உதாரணம்: காந்திஜியின் தண்டி யாத்திரை, மார்ட்டின் லூதர் கிங் பேச்சு) வரலாற்றின் அதிகம் காணலாம். அதே போல பெரும்பான்மையான மக்களுக்கு அருவருப்பைத் தரும் எழுத்தை குப்பை என்று சொல்வது தவறாகத் தோன்றவில்லை. எப்படி ஒரு எழுத்து எனக்குள் உணர்வைத் தூண்டுகிறதோ, அதே போல என் உணர்வுதான் எழுத்தாக என்னிடமிருந்து வருகிறது. என் உணர்வு குப்பையாயிருந்தால், என் எழுத்தும் அதை பிரதிபலிக்கும். மற்றவரைப் பற்றி தரக் குறைவாக எழுதுகையில் உண்மையில் என் உணர்வு குப்பை என்றுதான் நான் பறை சாற்றுகிறேன். இது புரிந்துவிட்டால் நான் குப்பை போடப் போவதில்லை. இது இணையத்தில் எழுதும் அனைவருக்கும் பொருந்தும்.

இணையத்தில் எப்படி குப்பையைக் குறைப்பீர்கள் என்று கேட்டால், நான் குப்பை போடாமல் இருக்கப் போகிறேன் என்றுதான் என்னால் சொல்ல முடியும். என் வீடு சுத்தமாயிருப்பதைப் பார்த்து அடுத்த வீட்டிலும் குப்பை குறைந்தால் அதுவே ஒரு பெரிய வெற்றி. சாதத்தில் கல், உமி வருவது சகஜம். அது குப்பைதான்; எடுத்து எறிந்துவிட்டு சாப்பிடத்தான் செய்கிறோம். அதே சமயத்தில் சாதம் எடுத்து வந்த பிளாஸ்டிக் டப்பா தவறி தரையில் விழுந்து மண்ணோடு கலந்துவிட்டால், சாதத்தைத் தூக்கிப்போட்டு விட்டு டப்பாவை அலம்பி எடுத்து வந்து விடுகிறோம். குப்பை அதிகமாகி வைத்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவையே நாறடித்துவிட்டால், டப்பாவோடு சேர்த்து எறிந்து விடுகிறோம்.

பிளாஸ்டிக் டப்பாவை குப்பையில் போடாமல் அதை மீள்சுழற்சி மூலம் மற்றுமொரு டப்பாவாக செய்ய முடியும்; செய்கிறார்கள். மனதில் வரும் கோபத்தை, அந்த வேகத்தை, வெறியை, ஒரு நல்ல காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று திருப்ப முடியும். என்னளவில் கொஞம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். கோபமே இல்லாமல் இருப்பதென்பது முடியாது போலத் தோன்றுகிறது; ஆனால் கோபம் வருகையில், வெளியில் புல்லை வெட்டவோ, அல்லது தரையை அழுத்திச் சுத்தம் செய்யவோ ஆரம்பித்தால், அந்த கோபத்தில் வரும் வேகம் ஒருவிதமாகத் தணிந்து போகிறது (புல்லும் வெட்டப்பட்டு விடுகிறது, தரையும் சுத்தம்!).

என் மனமும் இந்த சாதம் வைத்த பிளாஸ்டிக் டப்பா போலத்தான். அவ்வப் போது குப்பை வருகிறது - எடுத்துப் போடுவதற்காக மற்ற நல்ல உணர்வு தரும் விஷயங்களில் நேரத்தை செலவழிக்கிறேன். குப்பை தேங்க ஆரம்பித்தால், நானும் குப்பைத் தொட்டியாகிவிடுவேன் என்று தெரியும். அளவு ரொம்பவும் அதிகமானால் குப்பைத்தொட்டியே குப்பையாகிவிடுவதைப் பார்த்ததால், அளவு மீறக் கூடாது என்று தீர்மானம். இல்லையென்றால் யாராவது படையப்பா ஸ்டைலில்:"நேற்று வரைக்கும் குப்பைத் தொட்டியப்பா; இன்று முதல் நீ குப்பையப்பா" என்று பாடிவிடுவார்கள். எதோ ஒரு காரணத்துக்காக ஆண்டவன் (அல்லது இயற்கை) என்னைப் படைத்திருக்கிறான்; அது குப்பையாக மாற அல்ல என்று மட்டும் தெரியும்.

உங்களுக்கு வேறு ஏதாவது வழியில் குப்பையை குறைக்க, அல்லது தேங்காமல் இருக்க வைக்க முடியும் என்று தோன்றினால் அவசியம் சொல்லவும். என்னாலான வழியில் நிச்சயம் முயற்சிப்பேன்.

சனி, ஆகஸ்ட் 29, 2009

குப்பை - 3

குப்பை - 3

இந்தத் தொடர் எழுத ஆரம்பிக்கையில் எனக்குள்ளே நிறைய கேள்விகள். அதில் ஒன்று: 'உண்மையிலேயே சிறு வயதில் வீட்டில் குப்பை இல்லாமல் இருந்ததா?; அல்லது நானும் என் பாட்டி அடிக்கடி சொல்லி வந்தது போல "அந்தக் காலம் போல இல்லை" என்ற ரீதியில் பழையதை மிகைப்படுத்தி, நிகழ்வைப் புறக்கணிக்கிறேனா' என்பது தான். நன்கு ஞாபகப்படுத்திப் பார்க்கையில், பட்டுக்கோட்டையிலும், மன்னார்குடியிலும் வீட்டின் பின்புறம் இருந்த சாக்கடை நினைவுக்கு வந்தது. அவை எல்லோருக்கும் தெரிகிறமாதிரி திறந்த வெளிச் சாக்கடைகள். தண்ணீரில் அடித்துச் செல்லப் படும் வீட்டுக் குப்பைகள் எல்லாம் அதில் தான் சென்று சங்கமித்தன. கரையாத திடக் குப்பைகளுக்கு அங்கு இடமில்லை. தப்பி யாராவது அந்த மாதிரி குப்பையைப் போட்டால், சாக்கடை தேங்கி நாற்றம் மட்டுமல்லாமல் கொசுவும் சேர்ந்து அனைவருக்கும் தொந்தரவு. அதனால் அனைவருமே இந்த எழுதாத சட்டத்தைப் பின்பற்றி, சாக்கடை ஒடுகிற மாதிரியே வைத்துக் கொண்டிருந்தார்கள்.

வீட்டுக் குப்பைகள் இப்படி என்றால், வெளியே மனக் குப்பைகளைத் தூண்டும், சேர்க்கும் விஷங்களிலும், ஒரு விதமான் அளவுத் தடுப்பு இருந்தது. அப்போதெல்லாம் வீட்டில் வானொலி மட்டும்தான்; தொலைக் காட்சி இல்லை. இது இயல்பிலேயே ஆபாசக் குப்பைகள் வருவதைக் குறைத்தன. வெளியே சினிமா போஸ்டர்கள், தெருவில் எழுதப்பட்ட கரி வாசகங்கள் கொஞ்சம் குப்பைகளைக் கொடுத்தாலும், சுவர்கள் எண்ணிக்கைகளில் அளவு இருந்ததால், இந்த மாதிரிக் குப்பைகள் அளவிலே குறைவாக இருந்தன. மொத்த நகரத்தில் இருந்த சுவர்களில் வித விதமான கருத்துகள் - அது ஜவுளிக் கடை விளம்பரமாகட்டும், அல்லது அரசியில் கட்சியின் பிராசரமாகட்டும் (தேர்தல் சமயத்தில் இந்த எண்ணிக்கை பன்மடங்காகப் பெருகும்), அல்லது முனிசிபாலிடியின் சுகாதாரப் பிரசாரமாகட்டும் - மொத்தத்தில் தகவல் தெரிவிக்கும் விதமாகவே இயங்கி வந்ததால், அதிகம் குப்பைகள் இல்லை. பைபிள் போதனைகளைச் சொல்லும் பெண்கள் பள்ளியின் சுவரை பார்க்கையில், மனது கொஞ்சம் சமனப்பட்டுப் போனது.

கொஞ்சம் அரிதாக சுவற்றில் குப்பைகளையும் பார்க்கலாம் - ஒரு ஜாதியைத் திட்டியோ, அல்லது ஒரு வர்கத்தை, கட்சி/அரசியல்வாதியைத் திட்டியோ எழுதப்பட்டிருக்கும். என் வகுப்பில் கூடப் படித்த இராஜகோபாலுக்கும், கருணாநிதிக்கும் இடையில் இந்தமாதிரி ஒரு குப்பை சுவர் வாக்கியம்தான் அவர்களின் நட்புக்கு இடையில் வந்தது. ஊர் முழுதும் இருக்கும் சுவரொட்டிகள், சுவர் வாசகங்களில் இந்த மாதிரி குப்பைகள் விகிதாசாரப்படி மிகக் குறைவு; ஆனால் ஒரு குப்பைச் சுவரால் வந்த தீங்கை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

தற்போதைய காலத்தில், தொழில் நுட்ப வளர்ச்சியால் சில மாற்றங்கள். வீட்டில் இருக்கும் தண்ணீர்க் குப்பைகளை நகர பொதுக் கழிவுக் குழாய்களுக்கு பூமிக்கடியில் மறைத்து எடுத்துச் செல்வதால் அதன் அளவோ, அதிலுள்ள மற்ற சங்கடங்களோ (தேக்கம், அதனானால் வரும் நாற்றம், கொசு) தெரிவதில்லை. சங்கடங்கள் குறைவு என்பதால் இதை முன்னேற்றம் என்றுதான் சொல்லவேண்டும். அதே தொழில்நுட்பம் தொலைக்காட்சி மற்றும் இணையத்தைத் தந்திருக்கிறது. வானொலி அதிகம் கேட்பதில்லை; அதனால் அதில் எந்த அளவு குப்பை இருக்கிறது என்று நிச்சயமாகத் தெரியாது. எப்போதாவது காரில் செல்கையில், சில 'டாக் ஷோ' என்று சொல்லப் படும் பேச்சு மேடைகளில் பேசப் படுவதை கேட்ட போது, குப்பைகள் வானொலியிலும் வந்து விட்டன என்று புரிந்தது.

தொலைக் காட்சியைப் பற்றி சொல்ல வேண்டாம்; அது சினிமாவினால் உந்தப் பட்டு, வரும் பொருளாதாயத்தால் நிலை தடுமாறி, குப்பைகளை விகிதாசாரத்தில் அதிகமாகவே தருகிறது. வெளியே சுவரில் எழுத செலவு அதிகம்; அதனால் அந்த மாதிரிக் குப்பைகள் குறைவு. மாற்றாக வந்தது இணையம். இது ஒரு விதமான பெருச்சுவர்; அளவில் குறைவில்லை. அது மட்டுமல்ல - அனைவர் கைகளிலும் எழுத எடுக்க எடுக்க குறையாமல் வரும் கரித்துண்டுகள். மொத்தத்தில் இயற்கையாக இருந்த சுவர் எண்ணிக்கைத் தடை இப்போது இல்லை - கணினி மூலமாகச் சென்றால் உலகச் சுவர் அனைத்தும் தெரியும். இதில் கரித் துண்டால் மற்றவரைத் திட்டி எழுதியதையும் படிக்கலாம்; அல்லது அழகான வண்ணத்தோடு வரைந்த ஓவியங்களையும் பார்க்கலாம். வரைவது கடினம்; திட்டுவது சுலபம். அதிகப் படியான பக்கங்கள் சுலபமாக வருவதையே தருகின்றன.

இந்த இணையப் பக்கங்கள் நிரந்தரமாக நின்று விடுகின்றன. பொங்கலுக்கு முன் வெள்ளையடித்து, குப்பைகளை அழிக்க முடியவில்லை. மன்னார்குடியில் ஒரு குப்பைச் சுவரால் வந்த கேடு இன்னமும் நினைவில் இருக்கிறதால், இந்த இணையச்சுவர்களால் எத்தனை கேடு வருமோ என்று பயம் வருகிறது. சிறு வயதில் இருபது சுவர்களில் தொடர்ச்சியாக பைபிள் வாசகம் இருந்தாலும், கரித்துண்டால் அசிங்கமான படம் வரைந்து திட்டி எழுதப்பட்ட ஒரு சுவரைத்தான் பார்க்க ஆவல் (curiosity) இருந்தது. இப்போதும் அதே போல அதிகமான் மக்கள் ஒருவிதமான் ஆவலால் இந்த இணையக் குப்பைச் சுவர்களைப் பார்க்கிறார்கள்; படிக்கிறார்கள். இந்தச் சுவர்கள் நிரந்தரமாக இணையத்தில் நிற்பதால், குப்பைகள் தேங்க ஆரம்பித்து விட்டது. ஒரு பழைய திரைப் பாடலில் சொன்னது:
"தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ?
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ?"

இணையத்தில் தமிழ் மூலமாக வரும் குப்பைகளைப் படிக்கையில் தமிழும் பாவம்தானே என்று வருத்தம் வருகிறது. "தமிழினிய தெய்வதமே" என்று பெருமையோடு பாடியவர் இப்போது கணினியில் பதியப்படும் குப்பைகளைப் படித்தால் தன்னுயிரை விட்டுவிடுவார். இந்தக் குப்பைகள் தேங்காமல் எப்படி வெள்ளையடித்து சுவரைச் சுத்தம் செய்வது? எனக்குத் தோன்றியதை அடுத்த பதிவில் எழுதி, தொடரை முடிக்க உத்தேசம்.

வியாழன், ஆகஸ்ட் 20, 2009

குப்பை - 2

குப்பை - 2

'என்னடா இது ஒரு குப்பை விஷயத்துக்கு தொடரா'ன்னு நினைக்க வேண்டாம். இந்த 'குப்பை' வேறு விதமானது. வீட்டில் இருக்கும் பொருள் குப்பைகள் (புறக் குப்பைகள்) எப்படி வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறதோ அதே போல வளர்ந்து வருகையில், மனதிலும் குப்பைகள் (அகக் குப்பைகள்) பின்னிப் பிணைந்திருக்கின்றன. என் வாழ்க்கையில் புறக் குப்பைகள் எப்படி மாறி வளர்ந்தனவோ, அதே போலத்தான் அகக் குப்பைகளும் மாறி வந்திருக்கின்றன.

சிறு வயதில் வீட்டில் குப்பை பார்த்ததாக நினைவில்லை; மனதிலும் மற்றவரைப் பற்றிய பொறாமை, வன்மம், இன்னபிற கெட்ட எண்ணங்கள் இருந்ததாக நினைவில் இல்லை. கொஞ்சம் வளர்ந்தபின், சண்டை, கோபம் நிச்சயமாக வந்தன; ஆனால் அவைகள் நினைத்து நிற்கவில்லை. எப்படி பட்டுக்கோட்டையில், மன்னார்குடியில் வீட்டுக் குப்பைகள் தினமிருமுறை வெளியே சென்றனவோ, அதேபோல மனதிலும் கோபம், வருத்தம், போன்ற குப்பைகள் சீக்கிரம் காலியானது. தாமரை இலை தண்ணீர் போல உடனே கோபம் வெளியேறிப் போனது. நினைப்பிலும் தங்காமல், அது மனதில் ஊறி வன்மம், பொறாமை என்றேல்லாம் உருவேறாமல், காணாமல் போனது.

எனக்கு மட்டுமல்ல, கூடப் படித்த அனைவருமே கிட்டத்தட்ட அதே போலத் தான். 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' - சொல்லுக்கு அவசியம் இல்லாமல் போனது - அனைவருக்குமே 'உள்ளே' அதிகமாக ஒளித்து வைக்க குப்பைகள் இல்லாததால். வளர்ந்து கல்லூரிக்கு செல்கையில், கொஞ்சம் கொஞ்சமாக குப்பைகள் அதிகமானது. விடலைப் பருவ எண்ணங்கள் இப்போது யோசிக்கையில் குப்பைதான்; அப்போது அவை முக்கியமான விஷயம்! மூளையில் நினைவில் தேக்கி வைக்க விரும்பிய குப்பைகள்.

எப்படி நகரத்தில் வாசம் செய்கையில் குப்பைகள் சில மணி நேரம் அதிகம் வீட்டில் இருந்தனவோ, அதே போல வளர வளர கோபம், பொறாமை, கடுப்பு என்றெல்லாம் குப்பைகள் மனதிலும் நினைவிலும் அதிக நேரம் இருக்க ஆரம்பித்தன. குப்பைகள் அதிக நேரம் குப்பைத் தொட்டியில் தங்கி, வீட்டின் வாசம் கெட, குப்பைத்தொட்டியை மாற்ற வேண்டியிருந்தது. பழைய பிளாஸ்டிக் தொட்டியைத் தூக்கியெறிந்து விட்டு, முதிதாக மாற்றவும் முடிந்தது. ஆனால் இந்த மனக்குப்பைகளை வைத்திருக்கும் மனக் குப்பைத்தொட்டியை தூக்கியெறிந்து புதிதாக மாற்ற முடியவில்லை.

அலுவலகம் செல்ல ஆரம்பித்தவுடன் கற்றுக் கொண்ட முதல் பாடம் 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்' கலை! மனதில் குப்பைகள் இருக்கும்; வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்ற பாடம்தான் சரி என்று நம்மை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவும் ஒத்துக் கொள்ளவும் நாளாகினாலும், கடைசியில் அது தான் பாடமாகிப் போனது.

இப்போது நாடு விட்டு நாடு வந்ததில் வீட்டில் வாரக் குப்பை; அதற்காக பள பள தொட்டி, வாசனைப் பை என்றெல்லாம் உபயோகிக்கையில் மனதின் குப்பைகளுக்கும் இதே போல ஒப்பனை செய்யும் நாகரீகமும், வார்த்தை ஜாலமும் அத்தியாவசியமாகிப் போனதை நினைத்து வருத்தம் தான் வருகிறது. மறுபடியும் குப்பைகளில்லாத சிறுவயதுக் குழந்தை, சிறுவர் காலத்திற்கு செல்ல மாட்டோமா என்ற ஏக்கமும் வருகிறது.

குழந்தைகள் பேசும் பேச்சைக் கேட்கையில் குப்பைகளை தேக்காமல் அவர்களால் இருக்க முடிகிறதே என்ற சந்தோஷம் வருகிறது. அதே சமயத்தில் அவர்கள் பேசும் பேச்சு 'மற்றவர்களுக்குப் பிடிக்காது, பின்னாளில் சமூகத்தில் அவர்கள் இயங்குவதற்கு தடையாகும்' என்று நினைத்து பெற்றோர்கள் (நான் உள்பட) 'பண்பாகப் பேச' கற்றுக் கொடுப்பதைப் பார்க்கையில் நாமே குப்பைத்தொட்டியை வளர்க்கிறோமோ என்ற குற்றவுணர்வும் வருகிறது.

குப்பைகளே இல்லாமல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அது தேங்கி, மற்றவற்றையும் நாசம் செய்யாமல், தேங்காமலாவது இருக்கட்டுமே என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2009

குப்பை - 1

குப்பை – 1

இது உண்மையிலேயே 'குப்பை/குப்பைத் தொட்டி' பற்றிய பதிவுதான். சிறு வயதில் பார்த்ததெல்லாம் தெருவில் ஒரு சிமென்ட் சிலின்டர். மூலையில் நிறுத்தி வைத்திருப்பர்கள். வாரம் ஒரு முறை முனிசிபாலிடி குப்பை வண்டி வந்து அந்த சிமென்ட் குழாயைச் சாய்த்து விட்டு, கூடையில் சேர்த்து, வண்டியில் (மாட்டு வண்டி) போட்டு எடுத்துச் செல்வார்கள். மன்னார்குடியில் நாங்கள் இருந்த தெருவில் புழுதி அதிகம்; குப்பை வண்டி வந்து போகும் போது தெரு முழுதும் ஒரே தூசி படலம் தான். காரணம் அந்த தொழிலாளர்கள் துடைப்பத்தால் - நீண்ட கழியின் முனையில் முக்கோண வடிவில் சிறு தட்டி - பெருக்கி குவித்தபடியே போவார்கள்; பெண் தொழிலாளிகள் அதையும் எடுத்து வண்டியில் போட்டுக் கொண்டே தொடர்வார்கள். வீட்டின் அருகிலேயே குப்பைத்தொட்டி இருந்ததால், வீட்டிற்குள் குப்பை சேகரம் இல்லை.

இது வட நாட்டில் (சண்டீகர்/தில்லி) வாசம் செய்த போது 'கூடா'வாக மாறியது. ப்ளாட்டில் இருந்ததால், வீட்டிற்குள்ளேயே ஒரு சிறு குப்பைத் தொட்டியில் முதலில் சேகரம்; தினமும் காலையில் அந்த ப்ளாட்டுகளுக்குப் பொதுவான ஒரு 'கூடா' சேகரம் பண்ணும் பணியாளர் வந்து தன்னுடைய பெரிய பிளாஸ்டிக் கூடையில் ஒவ்வொரு வீட்டு 'கூடா'வையும் போட்டு எடுத்துச் செல்வார். அது ஒரு பெரிய வண்டிக்கு (இது இயந்திர வண்டி; மாடு தப்பித்தது) மாறி நகரத்தை விட்டு வெளியே செல்லும். 'கூடா' மனிதர் வராத நாளில் (அது வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள்), வீட்டுக் குப்பை அளவு அதிகமாகும். ஆக ஒரு விதமான கிராம/நகர இடத்திலிருந்து மாநகரத்துக்கு மாறுகையில், வீட்டுக் குப்பை அதிகமாயிற்று. வீட்டிலே குப்பை சேகரத்திற்கென்று தனியான குப்பைத் தொட்டி - பிளாஸ்டிக்கில்! குப்பையை வீட்டிலே சேமித்து வைப்பது, முன்னேற்றத்திற்கு அடையாளமானது!!


பின் நாடு விட்டு நாடு வந்து அமெரிக்க வாசத்தில் வீட்டுக் குப்பை தொட்டி அளவிலே பெருத்தது - காரணம், இங்கு தினந்தோரும் வீட்டுக் குப்பையை யாரும் எடுத்துச் செல்வதில்லை. வாரம் ஒரு முறை அல்லது இரு முறை - இரண்டுக்கும் தனித் தனிக் கட்டணம். அதிலும், நேரத்திற்கு (முதல் நாள் மாலையே) குப்பைத் தொட்டியை வீட்டு வாசலில், அதற்குறிய இடத்தில் வைக்க வேண்டும். வேளை தப்பினால் வீட்டிலே இருவாரக் குப்பை. எடுத்துச் செல்லும் இயந்திர வண்டி (பெரிய லாரி), தன் இயந்திரக் கரத்தால் குப்பைத் தோட்டியைத் தூக்கி, கவிழ்த்து குப்பை வண்டியில் விழுந்த பின், தொட்டியை வைத்துவிட்டு செல்லும். அதனால் தொட்டி எந்தப் பக்கம் பார்த்து இருக்கிறது என்றெல்லாம் சரிபார்த்து வைக்க வேண்டும்! இல்லையென்றால் பாதி குப்பை பெட்டிக்குள்ளேயே இருக்கும்.

இந்தப் பெரிய குப்பைத்தொட்டி அனேகமாக எல்லா வீட்டு காரேஜிலோ அல்லது வீட்டுப் பின்புறமோ தனியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விட்டிற்கு வெளியே வந்து குப்பையைப் போடுவது இயலாத ஒன்று - அதுவும் பனி பெய்யும் குளிர் காலத்தில். அதனால் வீட்டிற்குள்ளே சிறு குப்பைத் தொட்டிகள். அதுவும், குப்பை வாரியாக - சமையலறை குப்பைத் தொட்டி தனி விதம்; குளியலறை குப்பைத்தொட்டி வேறு விதம்; தவிர பாட்டில், காகிதம் என்று மறுசுழற்சி (recycle) செய்யும் பொருள்களுக்கான குப்பைத் தொட்டி வேறு. நம்மூர் சாப்பாடு சாப்பிட்டு, தட்டில் உள்ள கருவேப்பிலை, முருங்கைக்காய் சக்கை எல்லாம் தட்டைக் கழுவும் தொட்டியில் போட முடியாது - அங்கு 'garbage dispenser' இருந்தாலும் கூட. முருங்கைக்காய் தொட்டியில் மாட்டிக் கொண்டு அதை சுத்தம் பண்ணுவதற்கு முன் பசி வந்து இன்னுமொரு முறை சாப்பிட வேண்டிருக்கும்..


தவிர, இந்தக் குப்பைத் தொட்டி மூன்று-நான்கு நாட்களுக்கான குப்பை சேகரம் பண்ணுவதால், அளவிலும் பெரிதாக இருக்க வேண்டும், மூடியோடு கூட வேறு இருக்க வேண்டும் – இல்லையென்றால் நம் சுவாசம் பாதிக்கும்! குப்பையை நேரடியாக பெட்டியில் போடவும் முடியாது; அப்புறம் பெட்டியை யார் அலம்பி சுத்தம் செய்வது? இதற்கென்று ஒரு பிளாஸ்டிக் பை! அதிலும் வகை வகையாய் இருப்பதால் (நல்ல வாசனையோடு இருக்கும் பைகளும் உண்டு), கடையில் இதைத் தெரிந்தெடுக்கவே நேரமாகும். இதெல்லாம் போதாதென்று குப்பைத் தொட்டியை இளப்பமாகவும் வாங்க முடியாது - வீட்டிற்கு ஏற்ற சமையலறை; சமையலறைக்கேற்ற குப்பைத் தொட்டி. இந்தியாவில் இருக்கையில் உபயோகித்த பிளாஸ்டிக் போய் பள பளபளவென்றிருக்கும் எவர்சில்வர் குப்பைத் தொட்டி வாங்கியாகிவிட்டது. அனேகமாக முக்கால்வாசி வீட்டில் இது தான் சமையலறையில் இருக்கும்.

சாப்பிட்ட கையோடு மூடியைத் திறக்க முடியாதென்று, தொட்டியின் அடியில் ஒரு பெடல். அழுத்தினால் மூடி திறக்கும். நம்மூரில் பிளாஸ்டிக் பெட்டி அதிக நாள் வராது; உடைந்து போகும், வேறு வாங்க வேண்டும். இங்கு நிறைய நாள் உபயோகிக்கலாமே என்று நினைக்க வேண்டாம். அழுத்தும் பெடல் - பிளாஸ்டிக். கொஞ்ச நாளில் உடைந்து போகும் - அப்போது மூடியை கையால் தான் தூக்க வேண்டும். தூக்கிப் போட்டு புதிது வாங்கி விட மனசு வரவில்லை. நான் வளர்ந்த விதம் தனி! பள பளவென்றிறுக்கும் இதை தூக்கிப் போடுவதா என்று யோசனை. இதனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக பெடல் இல்லாத தொட்டி. சரி நாம் தான் இப்படி என்றால் ஒரு நண்பர் (அவரும் நம்மூரிலிருந்து குடி பெயர்ந்தவர்) வீட்டுக்குப் போயிருந்த போது அவர் வீட்டு சமையலறையிலும் இதே போன்று ஒரு பெடல் இல்லாத எவர் சில்வர் தொட்டி!!

சரி ஒரு பொது விஷயம் இருக்கிறதே என்று பேசிக் கொண்டிருந்தோம். இந்த குப்பைத் தொட்டி தயாரிக்கும் நிறுவனங்களை திட்டினோம் - வருமானத்துக்காக வேண்டுமென்றே இப்படி செய்கிறார்களே என்று. வீட்டிற்கு வந்திருந்த மூன்றாவது நண்பர் - அவரும் நம்மூர் தான் - புதிதாக எவர்சில்வர் பெடலோடு வந்த தொட்டி வாங்கியதாகவும், அதுவும் கொஞ்ச நாளில் உடைந்து போய் விட்டது (காரணம் பெடலை தொட்டியோடு இணைக்கும் கம்பி பிளாஸ்டிக்!!) என்றும், அந்தப் பெடல் எவர் சில்வர் என்பதால் அதை தூக்கிப் போடாமல் கராஜில் வைத்திருப்பதாகவும் சொன்னார்! சரி நாமே தேவலை என்றுதான் தோன்றியது.

வாழ்க்கையில் அதிக விஷயங்களில் முன்னேற்றம் இருந்தாலும் இந்த குப்பை மட்டும் முந்நாளை விட இந்நாளில் ரொம்பவும் நெருங்கி இருப்பதை நினைக்கும் போது மனது கொஞ்சம் வருத்தப்படத்தான் செய்கிறது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிறு வயதில் சராசரியாக வீட்டில் இருந்த குப்பையை விட, இப்போது மூன்று அல்லது நான்கு மடங்கு - அதுவும் மிக அருகே! இது ஒரு விதமான பின்னிறக்கம் தான்!! தொடர்ச்சி அடுத்த பதிவில்.

சனி, ஆகஸ்ட் 08, 2009

பார்வை வேறு, கோணம் வேறு.

பார்வை வேறு, கோணம் வேறு.

"மேக மூட்டம் இல்லாத நாளில் இங்கிருந்து பார்க்கையில் அமெரிக்கா தெரியும்", எங்கள் பேருந்தில் இருந்த ஸ்பீக்கரில், பயண கைடு வர்ணித்துக் கொண்டு வந்ததை "ஓ" என்று பஸ்ஸின் பின்புறத்தில் இருந்து ஒரு வந்த சப்தம் பாதியில் நிறுத்தியது. கூட வந்திருந்த ஒரு குடும்பத்தில் (அப்பா, அம்மா - ஒரு பத்து வயது பையனோடு வந்திருந்தார்கள்), அப்பா மெதுவாக அந்த சிறுவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தடங்கலுக்குப் பிறகு - முன்னால் அமர்ந்திருந்த சில தலைகள் திரும்பிப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டன - வர்ணனை தொடர்ந்தது.

கனடாவில் விடுமுறைக்கு சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நாளாக எண்ணம்; இப்போதுதான் நிறைவேறியது. இருவருக்கும் வேலை வேலை என்று ஓடி, கொஞ்சம் அலுப்பும் சேர, திடீரென்று ஒரு விடுமுறை யோசனை தோன்றியதில் இந்தப் பயணம். விடுமுறையில் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் யாராவது வண்டி ஒட்டி எல்லா இடத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று முதலிலேயே முடிவெடுத்து வந்து விட்டோம் - தினசரி வாழ்க்கையில் அதிகமான நேரம் டிராபிக்கில் கார் ஒட்டியதால், ஒரு வாரம் சும்மா சுற்ற வேண்டும் என்றுதான் தீர்மானம். சப்தம் இல்லாமல், அதிக வேலை இல்லாமல் நாளைக் கழிப்பதே இந்த வார இலக்கு எங்களுக்கு!

பயணத்தின் மூன்றாவது நாள் - குபெக். மான்டிரியாலில் இருந்து ஒரு மூடிய ஏ.ஸி. பஸ்ஸில் வந்து, பின் ஒரு திறந்த பஸ்ஸில் குபெக்கிற்குள் சுற்றி வந்து கொண்டிருந்தோம். பயண ஆரம்பத்திலிருந்தே இந்த சிறுவனின் செய்கைகளும், சப்தங்களும் தொந்தரவாகவே இருந்து வந்தன. பஸ் மலையில் ஏறி நிறுத்தத்தில் நின்றது - எங்களைப் போன்று வந்திருந்த பிற சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க, சிரம பரிகாரம் செய்து கொள்ள. இறங்குகையில் சப்தம் போட்ட சிறுவனையும், அந்த குடும்பத்தையும் ஒரு நோட்டம் விட்டுக் கொண்டே இறங்கினேன், மற்ற பயணிகளைப் போலவே. அதிக காசு கொடுத்து கொஞ்சம் ஜாலியாக சுற்றலாம் என்று வந்தால் இத்தனை இடைஞ்சலா என்று தோன்றினாலும், இதற்கு முன் சொந்தக் காரர் ஒருவர் வீட்டுப் பிள்ளையையும் இதே போல பார்த்ததால் எங்களுக்கு அவர்கள் மேல் கொஞ்சம் பரிதாபம் வந்தது.

எங்கள் சீட்டுக்கு முன்னாலிருந்த ஒரு முதிர் தம்பதியினர் இதை தங்களுக்குள் வெளிப்படையாகவே கொஞ்சம் கடுப்போடு (மற்றவர்களுக்கு கேட்காத மாதிரிதான்) பேசிக்கொண்டு வந்தார்கள். பஸ் கிளம்பும் நேரம் வந்தது; பயணிகள் அனைவரும் வந்து விட்டார்கள் அந்த ஒரு குடும்பத்தைத் தவிர. ஐந்து நிமிட தாமத்திற்குப் பிறகு அவர்களையும் ஏற்றிக் கொண்டு மற்ற பயணிகளின் முணுமுணுப்புகளோடு வண்டி கிளம்பியது.

மலையிலிருந்து இறங்குகையில் சப்தம் கொஞ்சம் அதிகமாகவே வந்தது அந்த சிறுவனிடமிருந்து. நல்ல வேளையாக பஸ்ஸில் காலி இடம் கொஞ்சம் இருந்தது. எல்லா பயணிகளும் பஸ்ஸின் முன்புறம் உள்ள சீட்டுகளுக்கு மாற, அந்தக் குடும்பமும் கடைசி சீட்டுக்கு மாற, நடுவில் இரண்டு/மூன்று வரிசை காலி சீட்டுகளோடு வண்டி சென்றது. பஸ்ஸில் கைடு உட்பட அனைவர் முகத்திலுமே கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது - இந்த குடும்பத்தைப் பார்க்கையில்.

அடுத்த நிறுத்தம் குபெக்கிற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்க்க. அங்கிருந்த விஞ்ச் மூலமாக மலைக்கு செல்ல வேண்டும். விஞ்ச்சில் அதிகபட்சம் ஆறு அல்லது எட்டு பேர்தான் செல்ல முடியும்; அதனால் பஸ்ஸின் பயணிகளை இரண்டு/மூன்று குழுவாகப் பிரித்து விஞ்சில் அனுப்பிக் கொண்டிருந்தார் கைடு. எங்கள் முறை வருகையில் நாங்களும், அந்தக் குடும்பமும் மட்டும். விஞ்சில் செல்கையில் எங்கள் பார்வைக்கு பதில் சொல்லும் வகையில் அப்பா சொன்னார் - சிறுவனுக்கு Autism என்று.

கொஞ்சம் பேசிக் கொண்டே வந்தோம்; பின் திரும்பி வருகையிலும், மற்ற பயணிகள் கொஞ்சம் விலகிச் செல்ல, நானும் என் மனைவியும் இவர்களோடேயே விஞ்சில் வந்து, பஸ்ஸில் ஏறினோம். இம்முறை அவர்களுக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தோம்; அந்த அம்மாவின் முகம் 'நன்றி' என்று பார்வையில் சொன்னது. பஸ்ஸில் முன்னாலிருந்த பயணிகள் முகத்தில் கேள்வி - எங்களைப் பார்க்கையில், 'ஏன் முன்னால் அமரவில்லை' என்று.

மான்டிரியால் திரும்புகையில் சிறுவன் உறங்கி விட, அவர்களோடு பேசிக் கொண்டே வந்ததில் அந்த குடும்பத்தைப் பற்றி தெரிந்தது. மனைவி ஒரு டாக்டர். கணவர் நல்ல வேலையில் இருந்து விட்டு, வீட்டு நிலைமைக்காக வேலையை விட்டு விட்டார். விடுமுறைக்காக கனடா வந்திருக்கிறார்கள். பையனுக்கு வயது பத்தாகி விட்டாலும், மனதளவில் ஒன்றரை வயது; பேச்சு வரவில்லை; இன்னமும் Diaper தான் உபயோகிக்கிறான் (அதனால் தான் குபெக்கில் ஐந்து நிமிட தாமதம்). மான்டிரியாலில் இறங்குகையில் அவரிடம் ஆறுதலாகச் சொன்னேன் "உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவன் உங்களை சோதித்திருக்க வேண்டாம்" என்று.

அது வரை இயல்பாக பேசிக் கொண்டிருந்த அவர் முகத்தில் வருத்தம். "நீங்கள் எனக்கு ஆறுதல் என்ற முறையில்தான் சொல்கிறீர்கள்; ஆனால் அடிப்படையில் நீங்களும் மற்ற பயணிகளும் இதை ஒரே மாதிரி தான் பார்க்கிறீர்கள். என் மகனை கடவுள் எங்களுக்கு அளித்த சோதனையாகவோ, தண்டனையாகவோ நாங்கள் கருதவில்லை. என் மகனுக்கு கடவுள் எங்களைப் பரிசாக அளித்திருக்கிறர், அதை எந்த விதத்திலும் குறைத்துவிடக் கூடாது; அவனுக்கு கிடைத்த உயர்ந்த பரிசாக எங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதுதான் எங்கள் நோக்கம். தயவு செய்து அதைப் புரிந்து கொள்ளுங்கள்", என்றார்.

மற்ற பயணிகள் முகத்தில் தெரிந்த எரிச்சலையும், கடுப்பையும் குறையாக நினைத்து என்னை அவர்களை விட உயர்வாக நினைத்த எனக்கு அவர் சொன்னது ஆழமாகப் பதிந்தது. அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவர் நிச்சயம் அவர் மகனுக்கு உயர்ந்த பரிசுதான் என்று சொல்லி, மனைவியுடன் ஓட்டல் திரும்பினேன்.

பிகு:
இது என் நூறாவது பதிவு. ரொம்ப நாளாக மனதில் இருந்த விஷயத்தை சொல்வதா வேண்டாமா என்று போராடி சொல்வது என்று தீர்மானித்து பதிந்திருக்கிறேன்.

திங்கள், ஜூலை 20, 2009

யோசிக்கும் மொழி - 2

யோசிக்கும் மொழி - 2

அலுவலக அல்லது தினசரி வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றி யோசிப்பதற்கும், குழந்தை பசி பற்றி யோசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவதற்கு மொழி அவசியம் தேவை; இரண்டாவது வகைக்கு பேசும் மொழி தேவையில்லை. உடல் உறுப்புகள் தங்களுக்குள் ஏதோ ஒரு வகையில் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டிருக்கிறது. அது எந்த மொழி என்று தெரியவில்லை; ஆனால் இது நாடு, மதம் பொறுத்து மாறாமல், உலகம் முழுதும் உள்ள மனித வர்கத்திற்கு பொதுவாக இருக்கும் என்று தோன்றுகிறது. இது மற்ற விலங்குகளுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை.

அசை போடும் வகையில் நினைப்பில் வெறும் வார்த்தைகள் மற்றும் வருவதில்லை. என் அனுபவத்தில் நினைப்பில், ஸ்பரிசம், வாசனை, வெப்பம்/குளிர் போன்ற மற்ற புலன் சம்பந்தப்பட்ட விஷயங்களும் சேர்ந்தே வருகின்றன. ஒரு நிகழ்ச்சியின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட புலன்களின் அனுபவம், அதே உணர்ச்சியினை அனுபவிக்கும் போது அந்த நினைப்பைக் கொண்டு வருகிறது. இதில் மொழியும் அடங்கும்; ஆனால் நினைப்புக்கு மொழி அத்தியாவசியம் என்று தோன்றவில்லை.

ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை கொஞ்சம் சுவாரசியமானது. இதில் கொஞ்சம் விடை தேடும் வகையில் யோசனையும் சேர்ந்தே இருப்பதால், மொழி தேவைப்படுகிறது. ஆழ்ந்த வினாக்கள் மேலறிவுக்கு மட்டும் புலப்படுவதில்லை; இந்த அடித்தள அறிவு (குழந்தையின் பசி அழுகை போல) மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது. நான் படித்த வரையில் (நிச்சயம் கொஞ்சம் தான்), ஞானிகளின் அனுபவங்கள் வார்த்தைகளால் மட்டும் விபரிக்க முடியாததாகவே இருக்கிறது. உதாரணமாக, இந்த சுயதரிசனம், சுயவிமர்சனம் பற்றி ஆராய்ந்து எழுதிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கும், அவருக்கு நேர்ந்த அனுபவங்களை முழுவதுமாக விபரிக்க கடினமாகவே இருந்திருக்கிறது.

இவர் மட்டுமல்ல, மற்ற ஞானிகளுக்கும் அனுபவங்களை விபரிப்பது கடினமாகவே இருந்திருக்கிறது. மொழியால் விபரிக்க முடியாத அளவுக்கு, இவர்கள் எவருக்கும் மொழிப்பிரச்சனை இருந்ததில்லை; காரணம் அனுபவத்தை விபரிக்கும் வகையில் எந்த மொழியுமே இன்னமும் வளரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

பழங்கதைகளில், அது இந்திய புராணங்களாகட்டும் அல்லது கிரேக்க மற்று ஐரோப்பியக் கதைகளாகட்டும், பறவை - விலங்குகளோடு பேசும் சக்தி படைத்த மனிதர்களைப் பற்றி அதிகம் கதைகள் உண்டு. இந்த விலங்கு மொழியும் ஒரு விதமான புலன்களின் தகவல் பறிமாற்றமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. கருத்துகளை, எண்ணங்களை மற்ற சக மனிதர்களோடு பறிமாறிக் கொள்ள உதவும் வாய் மொழியில் அதிக சக்தி செலவழித்ததால், மனிதர்களுக்கு இந்த புலன்களின் தகவல் பறிமாற்ற மொழி மறந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

மொத்தத்தில் மனித மூளை இயக்கத்திற்கு வாய்மொழி அவசியம் இல்லை; அதே சமயத்தில் விடை தேடும் வகையில் வரும் யோசனைகளுக்கு வாய் மொழி நிச்சயம் உதவுகிறது (தேவை) என்பது என் கணிப்பு.

உங்களுக்குத் தோன்றுவதை கருத்தாகப் பதியலாம்.

பி.கு.: சென்றவாரம் பிட்ஸ்பர்க் சென்று பாலாஜி தரிசனம் செய்ததால், இணையத்தில் பதியவில்லை.

ஞாயிறு, ஜூலை 05, 2009

யோசிக்கும் மொழி

யோசிக்கும் மொழி

யோசனை என்பது ஒருவிதமான கற்பனையே. மூளையில் ஏதோ ஒரு மூலை, நாம் யோசிக்கும் போது இயங்குகிறது. யோசனைகள் பல வகை. என் கணிப்பில் இவைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 1. விடை தேடும் வகை 2. அசை போடும் வகை 3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை. ஒரு பிரச்சனையை தீர்க்க, வழிதேட முயல்கையில் வரும் சிந்தனைகள், ஒரு நல்ல நிகழ்ச்சி, திரைப்படம் பற்றி நினைத்து அசைபோட்டு இன்பமுறுகையில் வரும் சிந்தனையை விட வித்தியாசமானது. இதிலும், ஒரு சுய படைப்பில், அது கதையோ, கவிதையோ வரும் சிந்தனை கிட்டத்தட்ட ஒரு பிரச்சனையைத் தீர்க்க வரும் சிந்தனை போலிருந்தாலும், கொஞ்சம் மாறுபட்டது. படைப்பைப் பற்றி, அல்லது இயற்கையைப் பற்றி வரும் யோசனைகள், சிந்தனைகள் இந்த மாதிரியே.

சிறுவயதில் என் யோசனைகளில் அதிகமான நேரம் இந்த கற்பனை, ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகையிலும், விடை தேடும் வகையிலும் சென்றது. வளர்ந்து படிக்கும் காலத்தில், முக்கியமாக பரீட்சை நடக்கும் காலத்திற்கருகில் விடை தேடும் வகையிலேயே அதிக நேரம் சென்றது. இப்போதெல்லாம், அசைபோடும் வகையில் அதிக நேரமும், கொஞ்சம் பிரதிபலிப்பிலும் செல்லுகிறது. இதில் நான் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று நினைக்கிறேன்; எனக்குத் தெரிந்த பல பேர்கள் இது போன்றே நேர விகிதாசார வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த யோசனையில் ஒரு வித்தியாசத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன். சிறு வயதில் சிந்தனைகள் தமிழிலேயே இருந்தன. அயல்நாட்டு வாசம், வேலை காரணமாக ஆங்கிலம் அதிகமாக பேசப் போக, இப்போதெல்லாம் சில விதமான சிந்தனைகள் - முக்கியமாக அலுவலக சம்பந்தமான விடை தேடும் வகையில் சிந்தனை ஆங்கிலத்திலேயே வருகிறது. இதுவும் நாடு விட்டு நாடு வந்த அனைவரும் உணர்ந்ததுதான் என்று நினைக்கிறேன்; நிச்சயமாகத் தெரியவில்லை. சமீப காலமாக அசைபோடும் கற்பனைகள் தவிர, மற்ற அனைத்து சிந்தனைகளும் ஆங்கிலத்திலேயெ இருப்பதைப் பார்க்கிறேன்.

இதையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் (இந்த யோசனையே ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகைதான்) தோன்றிய கேள்விகள் - யோசனைக்கு மொழி தேவையா? எந்த மொழி சிந்தனைக்கு அதிகம் உதவும்? இந்தக் கேள்விகளைப் பற்றி நான் ஆராய்ந்ததே இந்தப் பதிவும், இதன் தொடர் பதிவும்.

இங்கு நான் யோசனை, சிந்தனை, நினைப்பு என்ற வார்த்தைகளை ஒன்றே போல பாவித்து, மாற்றி மாற்றி எழுதியிருந்தாலும், இவற்றுக்குள் வித்தியாசம் இருக்க வேண்டும். குழப்பத்தைக் குறைப்பதற்காக, இந்தப் பதிவில் இதற்குப் பின் ஒவ்வொரு வகைக்கும் தனி வார்த்தையை உபயோகித்திருக்கிறேன்:
1. விடை தேடும் வகை – Problem solving - யோசனை;
2. அசை போடும் வகை – Thought/memory - நினைப்பு
3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை – Reflection/analysis - சிந்தனை

முதலில் யோசனை: இந்த வகைக்கு முக்கிய தேவை ஒரு பிரச்சனை அல்லது தீர்க்க வேண்டிய புதிர். வாழ்க்கையில் பெரும்பான்மையான சமயம் இந்த பிரச்சனையே ஒரு மொழி மூலமாகத் தான் நம் மூளைக்குத் தெரிய வருவதால், அது சம்பந்தமான யோசனையும் அந்த மொழியிலேயே வருவது இயல்பு. சிறுவயதில் நான் தமிழ்நாட்டில் தமிழிலேயே பேசி, கல்வி கற்றதால், அப்போது தமிழில் இந்த யோசனை இருந்ததும், இப்போது அலுவலகத்தில் ஆங்கிலத்திலேயே பேசி பணிபுரிவதால், இப்போது ஆங்கிலத்தில் இந்த யோசனை வருவதும் இயல்பே. மொத்தத்தில் பிரச்சனை எந்த மொழியோ அந்த மொழியே யோசனைக்கும் உதவும்.

இதில் ஒரு சங்கடம். குழந்தையாக இருந்த போதும் பிரச்சனைகள் இருந்திருக்கும், உ.ம். பசி. அப்போது மூளையில் யோசனை இருந்ததா? குழந்தை அழுது பால் குடிக்கையில் நிச்சயம் யோசனை இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் குழந்தைக்கு மொழி தெரியாதே - யோசனை எந்த மொழி?

அடுத்த வாரம் தொடர்கிறேன்.

ஞாயிறு, ஜூன் 28, 2009

இரயில் - 8

இரயில் - 8

ரயில் பயண உறவுகள் என்றவுடன் முன்பு தொலைக்காட்சியில் வந்த 'ரயில் சினேகம்' போன்ற ஏதாவது கதை இருக்கும் என்று நினைக்க வேண்டாம். ரயில் பயணங்களில் பார்த்த, பேசிய மனிதர்கள் நிறைய பேர்களை பயணம் முடிந்த சில நாட்களில் (பல சமயம் சில நிமிஷங்களுக்குள்) மறந்திருக்கிறேன். அபூர்வமாக சில முகங்கள், வார்த்தைகள் இன்னமும் நினைவில் இருக்கின்றன. அனேகமாக இந்த மாதிரி பாதித்த நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட மனிதர்கள் பெயர் தெரியாது; அல்லது மறந்திருக்கும்.

ரயில் பயண சந்திப்புகள் இரண்டு வகை: தொலைதூர பயணத்தில் - குறைந்தது ஒரு நாள், ஒரு இரவு - அதே பெட்டியில் கூட வருபவர்களோடு நடக்கும் சம்பாஷணைகள், முதல் வகை. குறைந்த தூர, ஆனால் தினப்படி நடத்தும் பயணங்களில் (உதாரணமாக அலுவலகம் சென்று வர) சந்திப்புகள், கருத்துப் பறிமாறல்கள் - இரண்டாம் வகை. முதலாம் வகை பெரும்பான்மையாக ஒரு வித கட்டாயத்தால், பொழுது போக வழியில்லாமல் நடப்பவை. இது ஒரு விதமான புகைப்படம் போல - படம் அழகாயிருந்தால், வித்தியாசமாக இருந்தால் நினைப்பில் இருக்கும். இரண்டாம் வகையில் ஒரு விதமான தொடர்ச்சி, வளர்தல், மாற்றம் உண்டு; கிட்டத்தட்ட ஒரு தொலைக்காட்சி சீரியல் போல. பிடிக்கவில்லை என்றால் பெட்டி, நேரம் மாற்ற முடியும்.

விபரம் புரியாத (நான் மூன்றாவது அல்லது நான்காவது படித்த போது என்று நினைக்கிறேன்) வயதில் எழும்பூர்-தாம்பரம் தடத்தில், மின் வண்டியில் என் வயதே ஒத்த ஒரு சிறுவன், கண்ணில்லாத ஒரு பெண்மணியுடன் (அம்மா?), பாடிக் கொண்டே மற்றவர்களிடம் காசுக்காக டப்பாவை குலுக்கிக் கொண்டே போனது இன்னமும் நினைவில் இருக்கிறது (பாட்டு:அச்சமயம் புதிதாக வந்த 'மேலும் கீழும் கோடுகள் போடு, அதுதான் ஓவியம்'). இப்பவும் அந்தப் பாட்டு கேட்கையில் மனதில் ஒரு விதமான குழப்பம் கேள்விதான் – “ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? என்ன காரணம்?” என்று! இன்னமும் விடை கிடைக்கவில்லை.

93 - 96 வட நாட்டு வாசத்தில் வருடா வருடம் சென்னை-டில்லி ரயில் பிரயாணம் இரு முறையாவது வரும். நடுப் பயணத்தில் (வண்டி அனேகமாக நாக்பூருக்கு அருகே இருக்கும்), கால் நடக்க முடியாத (போலியோ) வாலிபர் ரயில் பெட்டி தரையை ஒரு பிரஷ் கொண்டு சுத்தம் செய்து காசு கேட்பார் - சலனம் அதிகம் இல்லாத முகம், தாடி; சோகம், வருத்தம் தெரியாது; ஒரு விதமான 'கடமையைச் செய்கிறேன்' என்பது போல பாவம். பெயர் தெரியாது; அதே பிரயாணங்களில் காப்பி, வடை போன்று சாப்பாடு கொண்டு வரும் ஊழியர் ஒருவருடைய முகமும் நினைப்பில் இருக்கிறது. நெற்றியில் விபூதி, சிறிய மீசை, எப்போதும் சிரித்த முகம்; சில்லறை இல்லாவிட்டாலும் கடுப்படிக்காமல், நினைவில் வைத்துக் கொண்டு பாக்கி கொண்டு கொடுப்பது இல்லை, வந்து பாக்கி காசை வாங்கிக் கொள்வது என்று பொறுமையாக செய்பவர். இருவருமே கீதையில் வரும் சிதப்பிரஞ்ஞன் சுலோகம் நினைப்புக்கு வரவழைப்பார்கள்.

2003ல் பிரிட்ஜ்வாட்டர் நிலையத்திலிருந்து நூவர்க் செல்கையில் தினமும் பார்த்த ஒரு வித்தியாசமான பேர்வழி. பெட்டியில் யாராவது தும்மினால், இருமினால் கோபம் பொத்துக் கொண்டு வரும் இவருக்கு (சுத்தம், சுகாதாரத்தில் அளவு கடந்த பைத்தியம் என்று சொல்லலாம்). இவரைப் பற்றி தெரிந்தவர் எவரும் அருகே அமர மாட்டார்கள். அது மட்டுமல்ல, வண்டி நூவர்க் நிலையம் அருகே செல்கையில் அந்தப் பெட்டியில் முதல் ஆளாக இறங்க வேண்டும் என்பதற்காக முன்னமேயே எழுந்து கதவருகே நின்று கொள்வார். ஒரு முறை இன்னுமொரு பிரயாணி தெரிந்தோ, தெரியாமலோ முதலில் சென்று நின்று கொள்ள, இவர் முகத்தைப் பார்ர்க சகிக்கவில்லை (உண்மையில் கொஞ்சம் பயமே வந்தது; ஏதாவது இசகு பிசகாக செய்து வைக்கப் போகிறாரே என்று).

மொத்தத்தில் ரயில் என்ற வாகனம் என் வாழ்க்கையில், சிந்தனையில் நிறைய பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. தில்லி ரயில் மியூசியம், மற்றும் லண்டன் அறிவியல் மியூசியம் என்று சென்று பார்த்து மகிழ்ந்த நினைப்புகள் இன்னமும் பசுமையாக இருக்கிறது. ரயில் பற்றிய இந்தப் பதிவும் நிலையத்திற்கு வந்து விட்டது.

அடுத்த வாரம் வேறு விஷயம் பார்க்கலாம்.

முந்தைய பதிவுகள்:
இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5 இரயில் - 6 இரயில் - 7

ஞாயிறு, ஜூன் 21, 2009

இரயில் - 7

இரயில் - 7

டீசலோடு கிரசின் கலந்து புகை கக்கும் லொட்டை பேருந்துகள் தரும் எரிச்சலோடு கலந்த வாசனையைத் தவிர பேருந்து நிலையத்திற்கு என்று தனித்த வாசனை இல்லை. ஆனால் ரயில் நிலைய மணமே தனி. இந்த மணத்தை விபரிப்பது கடினம்; இருந்தாலும் முயற்சிக்கிறேன். மூடிய, பெரிய நிலையங்களில் இந்த மணம் தூக்கலாக இருக்கும். அதிலும் கரி வண்டிகள் அதிகமாக இருந்தால் இதை சுலபமாக உணரலாம். உதாரணமாக திருச்சி ஜங்க்ஷன் நிலையத்தில் இருக்கும் மணம் (இது திறந்த வெளி நிலையமாக இருப்பினும்), கொஞ்ச தொலைவில் இருக்கும் பேருந்து நிலைத்தில் இருக்காது. இது கொஞ்சம் கொல்லப் பட்டறை வாசனை, குமிட்டி அடுப்பு வாசனை (அதிலும் கரிதான்) எல்லாம் கலந்து இருக்கும்.

சென்னையில் எழும்பூர் நிலையமானாலும் சரி அல்லது சென்ட்ரல் நிலையமாக இருந்தாலும் சரி, மணம் ஒன்று தான். இந்த மணத்தில் ஒரு விதமான 'ரேஞ்ஜ்' - விகிதாசார வித்தியாசம், இருக்கும். சென்ட்ரல் அல்லது எழும்பூர் நிலையத்தில் நிற்கும் எந்த தொலைதூர பயண ரயிலிலும் இதை நீங்கள் உணர முடியும். ரயில் கிளம்பும் முன் பிளாட்பாரத்தில் ஒரு முனையிலிருந்து அடுத்த முனை வரை நீங்கள் நடக்கையில் இந்த வித்தியாசத்தை உணரலாம். அதிலும் கண்ணையும், காதையும் மூடிக்கொண்டு நடந்தால் அதிகமாகவே இந்த வாசனை வித்தியாசம் தெரியும். எது மேலாவது இடித்துக் கொண்டு விழுந்தால் நான் பொருப்பல்ல.

இஞ்ஜினைக் கடக்கையில் வரும் கொல்லப் பட்டறை வாசனை, நீராவி அல்லது வெப்பம் தரும் வாசனை வித்தியாசம், சரக்குப் பெட்டியைத் தாண்டும் போது வரும் வாசனை (அதிலும் மீன், கருவாடு போன்ற சரக்கு இருக்கையில் வரும் வாசனை), சமையல் வண்டியைத் (அல்லது பிளாட்பாரத்தில் இருக்கும் சாப்பாட்டுக் கடையைத்) தாண்டுகையில் வரும் வாசனை, குளிர் பதன பெட்டியைத் தாண்டுகையில் மட்டுப் படும் வாசனை என்றெல்லாம் வகை பிரித்து உணர முடியும். அதிலும் இரவு நேர ரயில் நிலைய வாசனை, தூக்கலானது. காரணம் சப்தம் குறைவு; வெப்பம் குறைவு என்று என் ஊகம்.

இத்தனை வித்தியாசம் சரக்கு ரயிலில் வராது. அதில் வரும் வாசனை பெரும்பான்மையாக அதில் வரும் சரக்கைப் பொருத்தது. உரங்கள் ஏற்றி வரும் சரக்குப் பெட்டிக்கும், இரும்பு சாமான்கள் கொண்டு வரும் பெட்டிக்கும் உள்ள வித்தியாசம் கொஞ்சம் அருகே சென்றால் தான் தெரியும். ரயில் பெட்டிக்குள் ஏறினால் ரயில் இருக்கும் இடம், பருவம் பொருத்து வித்தியாசம் வேறுபடும். உதாரணமாக குளிர்காலத்தில் தெற்கே (தமிழ்நாட்டில்) ரயில் பெட்டியின் வாசம், வடக்கே (சண்டீகர்) இருக்கும் வாசத்தில் இருந்து அதிகம் வேறுபடும். மத்தியப் பிரதேசத்தில் தகிக்கும் கோடையில் குளிர் பதனப் படுத்தப் படாத பெட்டியில் பிரயாணம் செய்தால் வியர்வை வாசனை தவிர வேறு எதுவும் தெரியாது. அதே வண்டி ரயில் நிலையத்தை அடைந்தவுடன் கீழே இறங்கி பிளாட்பாரத்தில் உலவுகையில் வரும் வாசனை - சுகந்தம்!!

ரயில் தான் இப்படி என்றால் நிலையத்தின் வாசனை வேறுபாடுகள் அருமை. அதிலும் சாப்பாட்டுக் கடைகள், உணவு வாசனைகள் மிகவும் ரசிக்க வேண்டியவை. சிலருக்கு சில வாசனைகள் பிடிக்காது; அதனால் வாசனை மட்டம், கெட்ட வாசனை என்பார்கள். நானும் அப்படித்தான் பேசியிருக்கிறேன். ரொம்ப வருடம் கழித்து அரிசோனா பீனிக்ஸில் வியட்நாமிலிருந்து குடிபெயர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் "வாசனையில் நல்லது கெட்டது இல்லை. உனக்கு சில வகை பிடித்திருக்கிறது; சில வகை பிடிக்கவில்லை. வாசனையில் மொத்தம் இரண்டு வகை தான் - இருக்கிறது; இல்லை - No good or bad smell; just there is smell or no smell" என்றார். அது மனதில் ஆழமாகப் பதிந்து போனது. அதனால் தான் இந்தப் பதிவில் வியர்வையும், கருவாடும் 'வாசனை'!

ஸ்ரீரங்க ரயில் நிலையத்தில் கிடைக்கும் பூரி-உருளைக் கிழங்கு வாசனை, சென்னை-தில்லி தடத்தில் ரயிலில் கிடைக்கும் மசால் வடை வாசனை, பீகார் ரயில்களில் கிடைக்கும் குடுவை டீ வாசனை என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவில் அனுபவித்த வித்தியாசமான அனேக வாசனைகளை நியூயார்க் ரயில் நிலையங்களில் என்னால் உணர முடியவில்லை. அனைத்து வண்டிகளும் குளிர் பதனப் படுத்தப் பட்டு, மூடியே இருக்கின்றன. சரக்கு ரயிலை தூர இருந்து தான் பார்க்க முடிகிறது. என் கணிப்பில் அறிவியல் ஆராய்ச்சியில் கண், காது புலன்கள் சம்பந்தப்பட்ட விஷங்களுக்கு தந்த முக்கியத்துவம் மூக்கு சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு இல்லை. அதனால் என்னால் முடிந்த தொண்டு, வாசனைக்கென்று ஒரு பதிவு.

அடுத்த பதிவில் ரயில் பயணத்தில் பார்த்த, பாதித்த உறவுகள் பற்றி.

முந்தைய பதிவுகள்:இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5 இரயில் - 6

ஞாயிறு, ஜூன் 14, 2009

இரயில் - 6

இரயில் - 6

ரயில் என்ற வார்த்தை எனக்கு உணர்த்திய இன்னுமொரு பரிமாணம் 'வலிமை'. ரயில் சம்பந்தப்பட்ட (பெரும்பான்மையான) பொருள்கள் திடத்தில், சக்தியில் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். உதாரணமாக வீட்டில் இருக்கும் மின் விளக்கு/மின் விசிறியின் சுவிட்சை இயக்க (அழுத்த) வேண்டிய விசையை விட, ரயில் பெட்டியில் இருக்கும் சுவிட்சை இயக்க அதிக விசை தேவை. வீட்டில் நாற்காலியில் இடித்துக் கொண்டால் வரும் வலியை விட, ரயில் நிலையத்தில் உள்ள இருக்கையிலோ அல்லது ரயில் பெட்டியிலுள்ள இருக்கையிலோ இடித்துக் கொண்டால் வரும் வலி அதிகம்.

சாலை போட உபயோகிக்கும் சரளைக் கல்லை விட ரயில் தண்டவாளம் போட உபயோகிக்கும் சரளைக் கல் வலிமை அதிகம். ஜன்னல் கம்பியிலிருந்து ஆரம்பித்து தண்டவாளம் வரை கிட்டத்தட்ட அனைத்து பாகங்களும் அதை ஒத்த மற்ற வாகன பாகங்களோடு பார்க்கையில் பெரிதாகவோ, வலிமையாகவோ தான் இருக்கும். ஐம்பது சரக்குப் பெட்டிகளை இரண்டு டீசல் என்ஜின்கள் இழுத்துச் செல்வதைப் பார்க்கையில் அந்த வலிமையை நினைத்து வியந்தது அதிகம். இந்த வலிமை சம்பந்தமான ஒரு கதை என் அப்பா சொன்னது (அவருக்கு அவர் தாத்தா சொன்னது).

கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் ஒப்பிலியப்பன் கோவிலின் மூலவர் விக்கிரகம் முதலில் அத்தி மரத்தில் செய்ததாம். கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன், ஒப்பிலியப்பன் கோவிலுக்கு அருகில் இருக்கும் பவுண்டரீகபுரம் கிராமத்தில் இருந்த அண்ணு அய்யங்கார் கனவில் ஒப்பிலியப்பன் வந்து தான் மயிலம் பக்கத்தில் இருக்கும் ஒரு குளத்தில் இருப்பதாகவும், தன்னை எடுத்து வந்து நிர்மாணிக்க வேண்டும் என்று கட்டளையிட்டாராம். மயிலம் உளுந்தூர்பேட்டைக்கும், விழுப்புரத்திற்கும் இடையே உள்ள இடம்; அப்போது விருத்தாசலம் அருகே இருந்த இரயில் நிலையம்.

இவரும் கொஞ்சம் பணம் சேர்த்து மயிலம் சென்று அங்கிருந்த உள்ளூர் மக்கள் உதவியுடன் குளத்திலிருந்த கல்லை எடுத்து விருத்தாசலம் ரயில் நிலையம் சென்றார். வழியில், கல்லின் கனம் தாளாமல், பல முறை வண்டியின் அச்சு முறிந்து போக, புது வண்டி, புது அச்சு என்றெல்லாம் மாற்றி மாற்றி மிகவும் சிரமப்பட்டு விருத்தாசலம் வந்தடைந்தார். நடந்த கதையெல்லாம் சொல்லி ரயில் பார்சல் ஆபீசில் கல்லை கும்பகோணம் அனுப்பி வைத்து விட்டு, இவரும் ஊர் வந்து சேர்ந்தார்.

கும்பகோணம் வரும் வழியில், ரயில் சரக்குப் பெட்டியும் கல்லின் கனம் தாளமல் சக்கர அச்சு முறிந்து போக, ரயில்வேயிலிருந்து இவருக்கு ஆயிரக் கணக்கில் அபராதத் தொகையுடன் நோட்டீசு வந்து விட்டது. இது நடந்தது சுதந்திரத்திற்கு முன்னால்; ரயில் நிர்வாகம் ஆங்கிலேய அரசின் கையில். வட்டாரத் தலைமயகம் திருச்சியில், ஒரு ஆங்கிலேயர் தான் தலைமை. இவரிடமோ கையில் அபராதத் தொகை கட்ட பணமில்லை.

அண்ணு அய்யங்காரும் திருச்சிக்கு சென்று நிலைமையை விளக்கினார். விருத்தாசலம் ரயில் நிலையம் வருவதற்குள் பலமுறை மாட்டு வண்டி அச்சு முறிந்ததையும், இதை விபரமாக விருத்தாசல ரயில் நிலையத்தில் விளக்கியதையும் சொல்லி, ஒரு சரக்கு ரயிலின் வலிமையை, அதன் பளு தாங்கும் திறமையை, கிராமத்தில் வசிக்கும் தம்மால் எப்படி ஊகிக்க முடியும் என்று கேட்டாராம். இதை வட்டார அலுவலக நிர்வாகியும் ஒப்புக் கொண்டு, அபராதத் தொகையை ரத்து செய்ததோடு இல்லாமல், கல்லை கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கும் மன்னிப்புக் கோரி கடிதம் எழுதினாராம். இப்பொதும் ஒப்பிலயப்பன் கோவில் சென்று வழிபடும் போதெல்லாம், இந்தக் கதை நினைப்புக்கு வரும்.

ரயில் நிலையம் சம்பந்தமான வாசனை பற்றிய விஷயங்கள் அடுத்த பதிவில்.

முந்தைய பதிவுகள்:
இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5

ஞாயிறு, ஜூன் 07, 2009

இரயில் – 5

இரயில் – 5

வில்லிவாக்கத்தில் ஒரு வருடத்திற்குப் பிறகு தேவர் தெருவிலிருந்து, தாமோதரப் பெருமாள் காலனிக்கு மாற்றி வந்தோம். அதிலும், வீட்டிற்குப் பின்புறம் தண்டவாளங்கள் தான். அதிலும் அம்பத்தூர் செல்லும் பாதை தவிர, பாடி வீல்ஸ் இன்டியா தொழிற்சாலையை ஒட்டி, ரயில் வண்டிகளுக்கு பூச்சு அடிக்கும் நிலயத்திற்கு செல்வதற்கான இன்னுமொரு பாதையும் உண்டு. இந்த பெயிண்ட் அடிக்கும் நிலையத்திற்கு செல்வதற்காக முழுவதும் முடிக்கப்படாத வண்டிப் பெட்டிகளை அழைத்துச் செல்வதற்காக சின்ன டீசல் இன்ஜின்கள் இயங்கும்.

இந்த இன்ஜின்கள் மொத்தம் இரண்டு வகை (அப்போது). டீசல் மற்றும் கரி. டீசலில் பெரிசு, சிறிசு உண்டு. இந்த சிறிசு அம்பத்தூர் - பீச் லோகல் வண்டிக்கு அதிகம் உபயோகிப்பார்கள். கரி இன்ஜினில் இரண்டு வகை - முகம் தட்டையான வகை; மற்றும் முகம் ஒரு கூம்பு போல முடிந்த வகை. மின் வண்டி அப்போது இந்த தடத்தில் கிடையாது. ஒவ்வொரு இன்ஜின் சப்தமும் தனி.

கரிவண்டி நிலையத்தை விட்டு கிளம்புவது, ஒரு அழகான கர்நாடக சங்கீதப் பாட்டின் ஆரம்பம் போல. ஸ்வரம் நிதானமாக ஆரம்பித்து, ஒரு சீராக வேகம் எடுக்கும். நிலையத்தின் வெளியே கொஞ்ச தூரத்தில் சாலை தண்டவாளத்தைக் கடக்கும்; அதற்கு முன்பாக அனேகமாக அனைத்து வண்டிகளும், ஓசை (விசில்) எழுப்பி விட்டுத்தான் செல்லும். இந்த விசிலும் ஒரு விதமான தாளத்தோடுதான் - கரிவண்டிகள் அனேகமாக இரண்டு விசில் அடிக்கும், ஒரு சின்னது, தொடர்ந்து கொஞ்சம் நீளமான விசில். இந்த சின்ன விசில் முடிவதற்கு முன் பெரியது ஆரம்பித்துவிடும் - இரண்டுக்கும் நடுவில் நிசப்தம் இருக்காது.

இந்த இன்ஜின் சக்கரங்கள் அளவும், சக்கரங்களுக்கு இடையே உள்ள தூரமும் வண்டிப் பெட்டிகளில் இருக்கும் சக்கரங்களை விட மாறுபட்டது. நீராவிப் பெட்டியிருந்து (அதான் பிஸ்டன் இருக்கும் டப்பா) வரும் இரும்பு உருளை இரண்டு அல்லது மூன்று பெரிய சக்கரங்களோடு (ஆரங்கள் உள்ள சக்கரங்கள்) இணைந்திருக்கும். நீராவி இந்த இரும்பு உருளையைத் தள்ளும் போது அந்த விசை ஒரு சக்கரத்திற்கு மட்டும் செல்லாமல் இந்த இரண்டு/மூன்று சக்கரங்களுக்கும் செல்லத்தான் இந்த அமைப்பு. இதில் சமயத்தில் நிலையத்திலிருந்து கிளம்புகையில் இன்ஜின் சக்கரத்தில் தண்டவாளத்தோடு அதிக பிடிப்பு இல்லாமல், சக்கரம் ஒரே இடத்தில் வேகமாகச் சுற்றுவதைப் பார்க்கலாம். அப்போது வரும் சப்தம் (கிட்டத்தட்ட அபஸ்வரம்) நிச்சயாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

அந்த நான்கு வருடங்களில் வெவ்வேறு விதமான சப்தங்களையும் அந்த வண்டிகளையும் கேட்டு/பார்த்து, அடையாளம் காண்பதில் தேர்ச்சி வந்தது. அதிலும் தாமோதரன் காலனி வீட்டில் மொட்டைமாடி - அதனால் வண்டிகளைப் பார்ப்பதும் கேட்பதும் அதிகமானது. அப்போது நாங்களாய் தென்னங் குறும்பையில் இரண்டு தென்னங்குச்சியை சொருகி (ஒரு பெரிய குச்சியை வளைத்து - ஆங்கில தலைகீழ் U, நடுவில் இரண்டாவது சின்ன குச்சியை சொருகி, மூன்றாவது குச்சியை இந்த குறும்பைக் குச்சிகளுக்கு இடையே நுழைத்து சுழற்றினால் ஒரு விதமான கிலுகிலுப்பை சத்தம் - Rattler) சுழற்றினால் வரும் சத்த தாளத்தை ரயில் வண்டியின் தாளத்தை ஒட்டி வரவழைப்பது ஒரு விளையாட்டு.

இது தவிர ஒரு ஊதல் - புல்லாங்குழல் போல. அதில் ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி, தண்ணீரில் நனைத்து, அந்த குச்சியை குழலின் உள்ளே மேலும் கீழும் அசைத்து, ஊதலின் சப்தம் மாறுவதை (சப்தம் கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயி என்று மாறும்) கேட்போம். இந்த மேலிருந்து கீழ் அசைவை ஒரு தாள வேகத்தோடு செய்தால் கரிவண்டிகள் எழுப்பும் முன்னால் சொன்ன அந்த இரண்டு விசில் போல வரும். இந்த விசில் சப்தம் ஏன் அளவில் வேறுபடுகிறது என்று புரிந்தது, மன்னார்குடியில் திரு ஸ்ரீதரன் அவர்கள் இசைக் கவை பற்றி சொல்லிக் கொடுத்த போது கொஞ்சம் புரிந்தமாதிரி இருந்தது. ஊதுபத்தி டப்பாவை (ஒரு உருளை அட்டை) காதில் வைத்து ரயில் ஊதலைக் கேட்கையில் தெரிந்த வித்தியாசத்த்தை விவரிப்பது கடினம்; இசைக் கவைப் பாடம் நிச்சயம் உதவியது.

முந்தைய பதிவுகள்
இரயில் - 1
இரயில் - 2

இரயில் - 3
இரயில் - 4

ஞாயிறு, மே 31, 2009

இரயில் - 4

இரயில் - 4

ஒரு விஷயத்தை உணர்ந்து அனுபவிக்க, அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு இருந்தால் உதவியாக இருக்கும். அதே சமயத்தில் அந்த அறிவு, அல்லது ஞானம் கொஞ்சம் அதிகமாக இருந்துவிட்டால் சமயத்தில் அந்த ஞானமே அனுபவ முழுமைக்குத் தடையாக இருந்துவிடுகிறது.

சிறு வயதில் ரயில் செல்லும் ஓசையை நான் அனுபவித்து ரசித்திருக்கிறேன். பார்க்காமலேயே வண்டி கொரட்டூர் பக்கத்திலிருந்து பெரம்பூர் செல்கிறதா, அல்லது பெரம்பூர் பக்கத்தில்ருந்து கொரட்டூர் செல்கிறதா என்று சொல்வது கொஞ்சம் சுலபம். திசை மட்டுமில்லாமல், இது கூட்ஸ் (சரக்கு ரயில்); இது பாசஞ்சர்; இது எக்ஸ்ப்ரஸ்; இது பெரிய கூட்ஸ் பெட்டி; இது சிறியது என்றெல்லாம் சொல்லி தம்பியையும், அக்கம் பக்கத்து சிறுவர்களையும் போட்டி விளையாட்டுக்கு அழைத்திருகிறேன். அனேகமாக நான் தான் வெல்வேன்; அதனால் யாரும் அதிகமாக இந்த விளையாட்டுக்கு வர மாட்டார்கள்.

அப்போது யாராவது என்னை 'எப்படி உன்னால் பார்க்காமலே சரியாகச் சொல்ல முடிகிறது' என்று கேட்டிருந்தால், எனக்கு பதில் சொல்லத் தெரிந்திருக்காது. பின்னால், மன்னார்குடியில் படிக்கையில், டாப்ளர் விதி பற்றி திரு சேதுராமன் சொல்லிக் கொடுக்கையில் - இந்த வில்லிவாக்க விளையாட்டு நினைப்புக்கு வந்து 'அட இதானா அது' என்று புரிந்தது. தண்டவாள துண்டுகளுக்கு இணைப்பு கொடுக்கையில் விடும் இடைவெளியில் (வெப்பத்தில் இரும்பு விரியும் போது ரயில் தடம் புரளாமல் இருக்க), சக்கரம் செல்லும் போது வரும் ஓசை ஒருவிதமான தாளம். ரயில் பெட்டிகளின் சக்கர அமைப்பு - இரண்டு இரண்டாக இருக்கும் சக்கரங்களுக்கு இடைப்பட்ட தூரம் எப்போதும் ஒரே அளவில் இருக்கும். முதல் பெட்டியின் கடைசி சக்கரத்திற்கும், இரண்டாம் பெட்டியின் முதல் சக்கரத்திற்கும் இடைய உள்ள இடைவெளி ஒரே சீராக இருக்கும். இதனால் ரயில் செல்லும் போது சீரான தாள கதியில் ஓசை வருகிறது. 'தடக்-தடக்' என்னும் இந்த சுருதி, தம்புராவில் இரண்டு மீட்டுதல்களை ஒத்திருக்கும்.

பெரிய சரக்குப் பெட்டியில் முன்-பின் சக்கர தூரம், சிறிய சரக்குப் பெட்டியிலிருப்பதை விட அதிகம் - அதனால் இந்த தாள அமைப்பு சற்று மாறும். முதல் 'தடக்-தடக்'க்கும் இரண்டாம் ‘தடக்-தடக்'கிற்கும் அதிக இடைவெளி இருந்தால் அது பெரிய பெட்டி; இல்லையென்றால் சிறிய பெட்டி. திறந்த பெட்டியில் காற்று புகுந்து செல்லும் விதமும், மூடிய சரக்குப் பெட்டியைத் தாண்டி வரும் விதமும் பயணிகள் ரயிலுக்கும், சரக்கு ரயிலுக்கும் ஓசை வித்தியாசம் ஏற்படுத்தும்.

இந்த மாதிரி சீரான தாள ஓசைகளை கேட்க வேண்டும் என்று ஒரு வெறி; அளவு கடந்த ஆர்வம். வீட்டின் பின்புறம் குடித்தனம் இருந்தவர்கள் தயிர் கடைய ஒரு தூணில் கயற்றை வளையமாகக் கட்டி, அதில் மத்தை வைத்து, மத்தை மற்றொரு கயற்றால் சுழற்றி தயிரை கடைவார்கள். தச்சர்கள் மரத்தில் துளை போட இதே போன்று கயற்றால் சுழற்றி இயக்குவதைப் பார்த்திருக்கிறேன். இவை அனைத்திலுமே ஒரு சீரான தாள அமைப்பைக் கேட்கலாம். எங்கள் வீட்டில் மத்தை அம்மா கையால் சுழற்றுவார்கள். அதில் ஓசை சீராக வரவில்லை என்றால், அம்மாவை 'நீ சரியாக சுற்றவில்லை' என்றெல்லாம் சொல்லி வெறுப்பேத்தியிருக்கிறேன்.

நல்ல வேளை என் அம்மா கொஞ்சம் அதிகமாகவே பொறுமை சாலியாக இருந்ததால், இந்த ஆர்வம் எந்த விடத்திலும் தடங்கலில்லாமல் அதிகமான அனுபவத்தைப் பெற முடிந்தது. இந்தக் காலத்தில் இருக்கும் 'அறிவும்' 'ஞானமும்' இருந்திருந்தால், எனக்கு 'OCD – Obsessive Compulsive Disorder' இல்லை ‘ADD – Attention Deficit Disorder’ என்றெல்லாம் சொல்லி 'தெரபி' கொடுத்திருப்பார்கள். இப்படியெல்லாம் செய்யாமல், பொறுமையுடன் என்னை வளர்த்த அம்மாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.


திரு சேதுராமன் அறிவியல் வகுப்பில், டாப்ளர் விதியையும், அதன் சமன்பாடுகளையும் ரொம்பவும் விபரமாக பாடம் நடத்திய போது, அதை நன்றாகப் புரிந்து கொள்ள உதவியது இந்த சிறுவயது 'உணர்தல்' தான். அந்த அனுபவம் இல்லாமல் இந்த விதியை நான் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்க முடியாது. அறிவியலால் புரிந்தது பத்து வருடங்களுக்குப் பின்னால்; ஆனால் சிறுவயதில் இந்த வித்தியாசத்தை உண்ர்ந்ததோடு அல்லாமல் அதை அடையாளமும் கண்டு கொண்டதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் வேலை விஷயமாக வில்மிங்டன் செல்ல 'Acela’ எக்ஸ்ப்ரசில் போகையில், பெட்டியின் வாசலில் கண்ணை மூடிக் கொண்டு நின்று கொண்டு இந்த தாளத்தை ரசிக்கையில், அம்மாவின் மத்தும், டாப்ளர் விதியின் சமன்பாடும், வில்லிவாக்க ரயில் நிலையமும் தான் நினைப்புக்கு வந்தது. அனுபவத்தையும், அறிவியலையும் முழுமையாக உணர வைத்தை அம்மாவிற்கும், ஆசிரியருக்கும் நன்றி.

முந்தைய பதிவுகள்
இரயில் - 1
இரயில் - 2
இரயில் - 3

சனி, மே 23, 2009

இரயில் - 3

இரயில் - 3

நான் வளர்ந்த காலத்தில் விளையாட்டு பொம்மைகள் வீட்டில் அதிகம் கிடையாது. வாங்கித்தந்த பொம்மைகளைவிட நாங்களாய் உருவாக்கிக் கொண்ட விளையாட்டு பொம்மைகளைத் தான் அதிகம் விரும்பி உபயோகித்தோம் - நான் மட்டுமல்ல, தெருவில் வசித்த முக்கால் வாசி சிறுவர்கள் வீட்டு நிலைமையும் இதே போலத்தான். மொட்டைமாடியில் நின்று பட்டம் (வீட்டில் வரும் செய்தித்தாளில் செய்தது) விடுவது, மற்றும் விதவிதமான வண்டிகள் செய்து விளையாடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி - பட்டமோ, வண்டியோ, செய்தது நாம் தானே! விளையாடுவதை விட செய்த பொருள் நன்றாக இயங்கினால் சந்தோஷம் அதிகம்.

பட்டம் அனேகமாக கோடையில்தான். ரயில் வண்டி செய்வது அதிகமாக மழைக்காலத்தில் - வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அடைந்து கிடக்கையில் சிகரெட்டு டப்பா, தீப்பெட்டி கொண்டு வண்டிகள் செய்வோம். தீபாவளி சமயத்தில் அதிகம் தீப்பெட்டி கிடைக்கும். உள்ளிருக்கும் பெட்டியை பாதி திறந்து அடுத்த தீப்பெட்டியுடன் இணைத்தால் தொடர் வண்டி ரெடி. துணி தைக்கும் ஊசியால் (ஊசி முக்கியம்; குச்சியால் நேரடியாக ஓட்டை போட முயன்றால், பெட்டி உடைய வாய்ப்பு உண்டு) தீப்பெட்டியில் ஓட்டை போட்டு, தென்னங்குச்சியை நுழைத்து (அது தான் ஆக்சில் - Axle) சக்கரத்துக்கு எது கிடைக்கிறதோ - அது வெண்டைக்காயின் காம்பாக இருக்கட்டும், அல்லது சப்போட்டா பிஞ்சு இல்லை தென்னங்குறும்பை! - அதை இரண்டு பக்கங்களிலும் சொருகி எந்த வண்டி வேகமாகப் போகிறது என்று போட்டி போட்டுக் கொண்டிருப்போம்.

ஒரு முறை பள்ளியில் சாக்பீஸ் டப்பா ஒன்று - தக்கையான மர டப்பா - கிடைக்க, அதிலும் இதே போன்ற வித்தை காட்டி வண்டி செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்த வண்டி விளையாட்டில் நிஜத்தை பிரதிபலிக்க சேர்த்த டிக்கட், வண்டியின் டிரைவர் வண்டி நிற்கும் நிலையப் பெயர் சொல்வது (வரிசையான பெயர்கள் - அது எழும்பூர் - தாம்பரம், அல்லது அம்பத்தூர் - பீச் வழித்தடமாக இருக்கும்) என்றெல்லாம் விதிமுறைகள் ஏற்படுத்தி விளையாடினோம்!

ஒரு முறை - 75ல் என்று நியாபகம் - வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு ரயில் புத்தக நிலையம் ஒன்று வந்து ஒரு வாரம் இருந்தது. இரண்டு/மூன்று பெட்டிகளை ஒரு புத்தகக் கடை போல மாற்றி ஒரு வாரம் நிலையத்தில் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்பா எங்களை அழைத்து சென்று புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். அதில் ஒன்று 'யார் அதிக பலசாலி?' - பத்து/பதினைந்து பக்கங்கள், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு படம், ஒரு சிறுவன் அப்பாவிடம் 'உலகிலேயே யார் அதிக பலசாலி' என்று கேட்க, அப்பா ஒவ்வொரு இடமாக ஆழைத்துச் செல்வது போல கதை - முதலில் யானை, பஸ், பின் ரயில் நிலையம், கிரேன், கப்பல் என்றெல்லாம் பார்த்து விட்டு கடைசில் இதை எல்லாம் இயக்கும் மனிதன் தான் அதிக பலசாலி என்று முடியும்.. அங்கு வாங்கின இன்னுமொரு புத்தகம் உள்ளங்கை அளவுதான் - ஆனால் நிறைய பக்கங்கள். எல்லாமே பாட்டுதான் - ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இல்லை நான்கு வரிகள். அதில் படித்த ஒரு ரயில் பாட்டு இன்னமும் நினைவில் இருக்கிறது.

ரயிலே ரயிலே ரயிலே
ரயிலும் சிறிது வேகமாய்ப் போனால்
மெயிலே மெயிலே மெயிலே

டிக்கட் டிக்கட் டிக்கட்
டிக்கட் இன்றி பயணம் சென்றால்
இக்கட் இக்கட் இக்கட்

பாலம் பாலம் பாலம்
பாலத்தின் மேல் பாராது போனால்
ஓலம் ஓலம் ஓலம்

என்று ஆரம்பிக்கும் - மொத்தம் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் ஒரு பாட்டுக்கு.

ரயிலைப் பார்த்து, கேட்டு, நுகர்ந்து அந்த அனுபவத்தை பின்னாளில் பள்ளி/கல்லூரியில் படித்த பாடங்களோடும், புத்தகங்களோடும் பொருத்தி புரிந்து கொண்டதையும் அடுத்த பதிவில் தருகிறேன்.

முன்பதிவுகள்
இரயில் – 1
இரயில் – 2

சனி, மே 16, 2009

இரயில் – 2

இரயில் – 2

இராமநாதபுரத்தில் வீடு இரயில் நிலையம் அருகில் இல்லை; அதனால் பார்ப்பதே அபூர்வம். அனேகமாக வீதியில் (வடக்கு வீதி) செல்லும் மாட்டு வண்டிதான். எப்போதாவது கார், ஜீப். திண்ணையில் உட்கார்ந்து அதிகம் பார்த்தது சைக்கிள் தான். அதே தெருவில் எங்கள் பெரியப்பாவும் இருந்தார்; அவரிடம் ஒரு ஜீப் இருந்தது (உப்பளத்துக்கு சென்று வர). அதில் ஏறி அமர்ந்து ஓட்டுவது போல கற்பனை செய்து விளையாடுவது ஒரு முக்கியமான பொழுதுபோக்கு.

சென்னை வந்து முதலில் குடிபுகுந்தது, வில்லிவாக்கம் தேவர் தெருவில். அந்தத் தெருவின் வடக்கு வரிசையில் எங்கள் வீடு - வீடு என்றால் ஒரு வீட்டில் வீட்டுக்காரரையும் சேர்த்து நான்கு குடித்தனங்கள்; அதில் நாங்களும் ஒன்று. வீட்டிற்கு கொல்லைப்புறம் ஒரு பாதை; அதைத் தாண்டி இரயில் நிலையம். வீட்டுக்காரருக்கும் மற்றுமொரு குடித்தனக்காரருக்கும் இந்திய ரயில்வேயில் தான் வேலை - பெரம்பூர் லோகோவொர்க்ஸ். இருவரும் ரயில் தண்டவாளத்தை ஒட்டி நடந்தே வேலைக்குச் செல்வார்கள். வீட்டின் கொல்லையில் சில தென்னை மரங்கள், ஒரு மாமரம் (சின்னது) இரண்டு பெரிய சப்போட்டா மரங்கள், ஒரு பவழ மல்லி, மற்றும் சில பெயர் தெரியாத சில்லறை மரங்கள். இதைத் தவிர கொத்து கொத்தாக சிவப்பு நிறத்தில் பூக்கும் ஒரு புதர் போன்ற பெரிய செடி/மரம் - பேரெல்லாம் நினைவில்லை. யாராவது கேட்டால் பெரிய மரம், சின்ன மரம் என்றுதான் சொல்லத் தெரியும் - டெனிஸ் த மெனஸ் கார்ட்டூனில் டெனிஸ் சொல்வது போல! அங்கு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு இரயிலை வேடிக்கை பார்ப்பது ஒரு விளையாட்டு.

அப்போதெல்லாம் இரயில் எண்ணிக்கை அதிகம் கிடையாது; மொத்தமாக நான்கு அல்லது ஐந்து, இல்லை அதிக பட்சம் ஆறு இரயில் தான் பார்க்க முடியும் மாலை வேளையில். அதிலும் இரண்டு சரக்கு வண்டியாக இருக்கும். அதில் என்ஜினையும், கார்டு பெட்டியையும் தவிர பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது. ஆனால் எண்ணிக்கை அதிகம்; அதிலும் எப்போதாவது ஒரு டாங்கரோ, அல்லது இராணுவ வண்டிகளை ஏற்றி செல்லும் திறந்த வெளிப்பெட்டிகள் (open carriages) வந்தால் ஒரு குஷி.

என் அப்பாவிற்கு பாரிஸ் கார்னர் அருகே அலுவலகம்; அதனால் வில்லிவாக்கத்தில்ருந்து இரயில் பிடித்து 'பீச்' நிலையம் போவார். எனக்கும் என் தம்பிக்கும் காலை அவர் கிளம்பும் ரயிலை கண்டிப்பாகப் பார்த்தே ஆக வேண்டும். ஒரு வருடம் கழித்து அவர் வேலை நேரம் இரண்டாவது ஷிப்ட் மாற, அவர் போவதும் தெரியாது, வருவதும் தெரியாது! நாங்கள் பள்ளியில் இருக்கையில் அவர் வீட்டிலிருந்து புறப்படுவார். எட்டு அல்லது எட்டரைக்கு நாங்கள் தூங்கிவிடுவோம்; அவர் வருவதோ 'அறிவாளி' படத்தில் தங்கவேலு மனைவி சொல்வது போல 'பேய் அலையற' நேரம்!

சென்னையில் உறவினர்கள் அதிகம்; மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது விசேஷம்! அவர் எங்களை குடும்பத்தோடு குரோம்பேட்டை, அல்லது நங்கநல்லூர், மாம்பலம் என்று அழைத்து செல்வார். ரயில் - பஸ் என்று மாற்றி மாற்றி அழைத்துப் போக வேண்டும் என்று சொல்லிவிடுவோம் - அப்போது தானே நிறைய டிக்கட் கிடைக்கும். டிக்கட் சேர்ப்பதில் எனக்கும் என் தம்பிக்கும் போட்டி வேறு உண்டே! எங்களுக்காக பேருந்தில் வில்லிவாக்கத்திலிருந்து எழும்பூர் (பல்லவன் - எண் பதினாறு); எழும்பூரிலிருந்து மாம்பலம், மீனம்பாக்கம் (அப்போது பழவந்தாங்கல் ரயில் நிலையம் வரவில்லை) அல்லது கிரோம்பேட்டை (ரயில் நிலையத்தில் 'கி', கடைகளில் 'கு' - இப்பவும் இந்த பெயர் குழப்பத்தைப் பார்க்கலாம்) வரையில் மின் வண்டியில் செல்ல வேண்டும்! எனக்கும் என் தம்பிக்கும் எழும்பூரிலிருந்து தாம்பரம் வரை உள்ள அனைத்து ரயில் நிலையப் பெயர்களும் வரிசையாக அத்துப்படி. எங்கள் ரயில் விளையாட்டில் நிஜத்தைப் பிரதிபலிக்க இது உதவியாக இருந்தது.

தீப்பெட்டி, சிகரெட் டப்பா ரயில் வண்டிகள் செய்த கதைகளையும் டிக்கட் சம்பந்தமான அனுபவத்தையும் (பாட்டு கூட உண்டு) அடுத்த வார பதிவில் தருகிறேன்.

முன்பதிவு
இரயில் – 1

சனி, மே 09, 2009

இரயில் - 1

இரயில் - 1

ரயில், ரெயில், ரயிலு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த ஊர்தி என்னை மிகவும் கவர்ந்த வாகனம். சிறு வயதில் என் கற்பனையெல்லாம் என்ஜினில் - அதுவும் கரி வண்டியில் - ஒரு தடவையாவது சவாரி செய்ய வேண்டும் என்பதுதான். இன்று வரை நடக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் இந்த கரி வண்டியே காணாமல் போகும்; அதற்கு முன் ஒரு தடவையாவது அதில் ஏறி விட வேண்டும் என்று ஆசை. காபி, தேனீர் வரிசையில் இரயிலைப் பற்றி எழுத வேண்டும் என்று ரொம்ப நாளுக்கு முன்னால் யோசித்து வைத்திருந்தேன். இப்போது ஆரம்பித்துவிட்டேன்.

எழுத்தாளர் பாலகுமாரன் கல்கியில் "இரும்பு குதிரைகள்" எழுத ஆரம்பித்த போது எனக்கு கொஞ்சம் வருத்தம் - லாரியை இரும்பு குதிரையாக எழுதுகிறாரே; ரயிலை விட்டு விட்டாரே என்று. இந்த ரயில் மோகம் எனக்கு வந்தது நாங்கள் வில்லிவாக்கத்தில் வசித்த காலத்தில் (என்னுடைய ஆறிலிருந்து பத்து வயது வரை). வீட்டிற்கு பின்புறம் வில்லிவாக்கம் ரயில் நிலையம். வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு ரயில் போவதை வேடிக்கை பார்ப்பது ஒரு முக்கியமான விளையாட்டு (அப்போது தொலைக்காட்சி இல்லை).

என் முதல் நியாபகம், இராமனாதபுரம் ரயில் நிலையம்தான். அதிலும் கண்ணால் பார்த்து நினைவில் இருக்கும் சித்திரத்தை விட, நுகர்ந்து அனுபவித்த மணம் தான் இன்னமும் பசுமையாக இருக்கிறது. என் தந்தைக்கு உத்தியோக மாற்றம்; இராமனாதபுரத்திலிருந்து சென்னைக்கு. வங்கியில் மாற்றல் ஆனதால், முதல் வகுப்பில் பயணம். மேலிருக்கும் மெத்தைக்கு செல்ல ஜன்னலுக்குப் பக்கத்தில் கால் வைத்து ஏற ஒரு இரும்புப் படி - மூடியிருந்தது. எனக்கு ஐந்தரை வயது; அதை திறக்க முயற்சிக்க, வலு இல்லாததால், அது சடக்கென்று மூடி என் கை விரல்களை பதம் பார்க்க, அப்பா திட்டுவாரே என்று பயந்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டது இன்னமும் நினைவில் இருக்கிறது!

இரயில் மெதுவாகக் கிளம்பி பின் வழியில் பரமக்குடி நிலையத்தில் நின்றது. பரமக்குடி தான் நான் பிறந்த ஊர்; என் பெரியம்மா வீட்டில். அவர்கள் குடும்பத்துடன் இரயில் நிலையத்திற்கு வந்து எங்களை வழியனுப்பியதும், வண்டி கிளம்புகையில் என் அம்மாவும் பெரியம்மாவும் அழுததும் இன்னமும் நினைப்பில் இருக்கிறது. என் அம்மா பள்ளியில் படித்தது, வளர்ந்தது என் பெரியம்மா வீட்டில் தான்; அதனால் இருவருக்கும் ஒட்டுதல் அதிகம். பெரும்பான்மையான பயணம் முழுதும் இரவில் இருந்ததால், அப்பா ஜன்னலை எல்லாம் மூடிவிட, கரு நீல இரவு விளக்கைப் பார்த்துக் கொண்டே தூங்கிப் போனேன்; என் தம்பி முதலிலேயே தூங்கிவிட்டான். இப்பவும் எனக்கு அந்த கருநீல விளக்கைப் பார்த்தால் ஒரு இனம் புரியாத சோகம் வருகிறது - காரணம் அந்தப் பயணம் தானோ என்னவோ!

மறுநாள் மதிய வாக்கில் சென்னை வந்து கருப்பு டாக்சியில் ஏகப்பட்ட சாமானோடு (கூரையில், பின் டிக்கியை மூட முடியாமல் கயற்றால் கட்டி) வில்லிவாக்கம் (இன்னுமொரு பெரியம்மா வீடு) வந்து சேர்ந்தோம். வில்லிவாக்க வாசம், ரயில் மோக வளர்ச்சி பற்றி அடுத்த வாரம்.

பிகு:
பின்னாளில் பட்டுக்கோட்டை தமிழ் ஆசிரியர் இரயில் என்றுதான் எழுத வேண்டும் (என் பெயரையும் அவர் அரங்கநாதன் என்று தான் வகுப்பு பதிவேட்டில் எழுதி முதல் வரிசையில் உட்கார வைத்தார், பெயர் 'அ'வில் ஆரம்பித்ததால்) என்று சொன்னதால் தலைப்பில் இரயில் என்று எழுதினாலும், பழக்கம் விடாமல் பதிவு முழுதும் ரயில் என்றே எழுதியிருக்கிறேன். தமிழாசிரியர் மன்னிக்க.

ஞாயிறு, மே 03, 2009

தந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா!

தந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா!

இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது நான் இணையத்தில் பதிந்து. முக்கிய காரணம் 2007ல் வேலை மாற்றம் (அதே அலுவலகம்; பணி வேறு). ஒரு வருடத்திற்குள் வேலை புரிந்து போய், அலுவலகத்தில் செலவழிக்கும் நேரம் குறைந்து போனாலும், திரும்பி வராததற்கு காரணம் சோம்பல். தவிர என் இணைய விடுப்பு யாருக்கும் பெரிய இழப்பாகத் தெரியவில்லை. இந்த இரண்டு வருடத்தில் அதிக பட்சம் ஐந்து அல்லது ஆறு விசாரணைகள் - ஏன் எழுதுவதில்லை என்று.

கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பேர் ரொம்பவும் வற்புறுத்தினார்கள் - அவர்கள் சொன்ன காரணங்கள் நிறைய இருந்தாலும், ஒரு காரணம் நிரம்பவும் ஆழமாக இருந்தது. "முயற்சி செய்யாத போது நூறு சதவீத வாய்ப்பையும் இழக்கிறாய்" என்பது தான் அது. You miss 100% of shots you don’t take! அதனால் தான் இந்த மறு நுழைவு!

சொந்த வாழ்க்கையில் இந்த இரண்டு வருடங்களில் பெரிய மாறுதல் ஏதும் இல்லை. அதே வீடு, வேலை (ஆண்டவன் புண்ணியத்தில் இன்னமும் வேலை இருக்கிறது!), தினசரி வாழ்க்கை. பிள்ளைகள் பெரிதாகி வருகிறார்கள் - அதில் அனேக மாற்றங்கள்; வாழ்க்கையில் பெற்றோர் பணி சம்பந்தமான கல்வி இன்னமும் தொடருகிறது - பிள்ளைகளின் தயவால்.

வெளியே மாற்றங்கள் அதிகம் - புது ஜனாதிபதி இங்கே! உலகமும் முழுவதும் இந்த "எகானமி" படுத்தும் பாடு தாங்கவில்லை. பொருளாதாரத்தில் (பொருள் + ஆதாரம்) - பொருளும் இல்லை; ஆதாரமும் இல்லை போல் தெரிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விண்கலத்தில் ஏறி 'வியாழன்' கோளுக்குச் (குரு - ஜாதக கணிப்பில் அவர் தான் செல்வத்தை குறிப்பவர்) சென்று, இப்போது திரும்பினால், விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பூமி அப்படியே தான் இருப்பது போல் தெரியும். இந்த இரண்டு வருடங்களில் புதிதாக பெரிய மலையோ, கடலோ வரவில்லை - இயற்கையின் செயலில் இரண்டு வருடங்களில் பெரிய மாற்றம் இல்லை; குரு தந்த செல்வத்தில் குறைவு இல்லை.

ஆனால் மனித இனத்தால் உருவாக்கப் பட்ட இந்த பொருளாதரம், பணம் என்ற விஷயங்களில் தலைகீழ் மாற்றம். மொத்த உலக சொத்து இருப்பில் (GDP) பத்து சதவீதம் குறைந்து போயிற்று என்கிறார்கள். எங்கே போயிற்று என்று யாரும் புரியும்படி சொல்ல மாட்டேன் என்கிறார்கள். கீதாசாரம் தான் துணைக்கு வருகிறது!

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்!
இந்த மாற்றம் உலக நியதியாகும்.