ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

சரியா? சந்தோஷமா?

சரியா? சந்தோஷமா?

இரண்டு வாரமாக வேலை அதிகம். இணையத்தில் படிக்க நேரமில்லை; பதிய இன்னமும் அதிகம் நேரம் தேவையாதலால் பதியவும் இல்லை. இந்த இரண்டு வார வேலை பளுவில் அதிக நேரம் மத்தியஸதம் செய்வதிலும், மாறுபட்ட இலக்குகளுக்கிடையே ஒரு விதமான சமரசம் செய்வதிலும் செலவானது. அப்போது தோன்றிய ஒரு பொ.போ.பொ. (பொழுது போகாத பொம்மு) சிந்தனைதான் இது. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இந்த பொ.போ.பொ. பிரபலம் - ஒரு பிரதானமான வாரப் பத்திரிகையில் வந்த கார்ட்டூன். குமுதமா அல்லது விகடனா என்று நினைவில் இல்லை.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் வித விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் ஒரே விதமான விடை கிடையாது. எல்லா பிரச்ச்னைகளையும் ஒரே விதமாக வகைப்படுத்தவும் முடியாது. ஆனால் பெரும்பான்மையான சச்சரவுகள் ஒரே விதமான மூல காரணத்தினாலேயே வருகிறது என்று நினைக்கிறேன்.

சிறு வயதிலிருந்தே ஒரு விஷயம் சரியானதாக இருப்பதே நம் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ற பாடம் பதிந்துவிட்டது. உதாரணமாக பரீட்சையில் விடை சரியாக இருந்தால், மதிப்பெண் வரும், அதனால் மகிழ்ச்சி. அதனால் நம் மனதில் நம் எண்ணம், நம் கோணம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக சக்தி செலவழிக்கிறோம். எப்போது நம் கருத்து நமக்கு சரி எனப் பட்டு மற்றவரோடு அது ஒத்துப் போகவில்லையோ அப்போது சச்சரவுதான். நாம் நம்முடைய விடை சரி என்று முழு மதிப்பெண் எதிர்பார்த்து இருக்கையில், விடை திருத்தும் ஆசிரியர் நம் எதிர்பார்ப்போடு ஒத்துப் போகாமல் மதிப்பெண் குறைத்துப் போட நமக்கு வருவது கோபம், வருத்தம்தான்.

அந்த நேரத்தில் ஆசிரியர் ஒருவிதமான விடையை எதிர்பார்க்கிறார் என்று புரிந்து விட்டால், நமக்கு சரி என்று தோன்றுவதை எழுதாமல், ஆசிரியர் எது சரி என்று எதிர்பார்ப்பார் என்று புரிந்து கொண்டு அதை எழுதி மதிப்பெண் வாங்க முயற்சிப்போம். அந்த சிறு வயது பக்குவம் வயது ஆக ஆக குறைந்துவிடுகிறது. நம் கருத்து சரி என்று அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை வந்து விடுகிறது. மற்றவர் கருத்து நம்முடைய கருத்தோடு ஒத்துப் போகாத போது, அது தவறு என்று உடனேயே முடிவெடுத்து, தவறான கருத்தை திருத்த வேண்டும் என்ற ஒரு வேகம் வந்து விடுகிறது. அது மட்டுமல்ல, இந்த திருத்தும் முயற்ச்சியை ஏதோ ஒரு பொது நலத்துக்காக செய்வது போல கற்பனை பண்ணிக் கொண்டு, "என்னதான் இருந்தாலும் ஒரு principle வேண்டும்" என்றெல்லாம் நம் கருத்தை நியாயப்படுத்தி விடுகிறோம்.

இதை ஈகோ என்றும் சொல்லலாம்; பிடிவாதம் என்றும் சொல்லலாம். அலுவலகத்தில் நான் பார்த்த எந்தப் பிரச்சனையையும் உயிரையும் விடத் தகுந்த உயர்ந்த குறிக்கோள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும், அனைவருக்குமே இந்த ஈகோ பிரச்சனையால் தேவையில்லாத விரயம். என் கருத்தை மற்றவர் தவறு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, 'சொன்னால் சொல்லட்டுமே' என்று திரும்பிப் போகக் கற்றுக் கொண்டாலே பாதி சச்சரவு போய் விடும். அப்படி திரும்பிப் போவதால் இரு தரப்பிலும் மகிழ்ச்சிதான். பள்ளியில் படிக்கும் போது இயல்பாக வந்த இந்தத் தன்மை எப்படி தொலைந்து போனது என்று தெரியவில்லை.

கொஞ்சம் யோசித்தால் இந்த ஈகோவிற்காக நம் மகிழ்ச்சியைத் துறக்கக் கூடத் தயாராக இருக்கிறோம். இன்னமும் சொல்லப் போனால் தங்கள் குடும்ப மகிழ்ச்சியைக் கூட தியாகம் செய்து தம் கருத்து சரி என்று வாதிடுகின்ற மக்களை இப்போதும் நாம் பார்க்கிறோம். ஒரு கருத்துக்காக உயிரைக் கூட விடுகின்ற மக்களை சமயத்தில் நாமே ‘தியாகி’ என்றெல்லாம் உயர்த்திப் பேசுகிறோம். அந்த அளவிற்கு நம் வளர்ப்பில், வாழ்க்கை முறையில் கருத்துக்கு உயர்ந்த இடம் கொடுத்து, அதன் பொருட்டு கஷ்டத்தையோ, துயரத்தையோ ஏற்பது கூட உன்னதமானது என்று ஆதி காலம் தொட்டு பாடங்கள் இருக்கின்றன.

இது எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை. உயர்ந்த குறிக்கோளுக்காக உயிரையும் விடலாம் என்ற ரீதியில் நிறையப் படித்தாலும், எது உயர்ந்தது என்ற நிர்ணயம் செய்வது அவ்வளவு சுலபமாகத் தோன்றவில்லை. அரசியல் தலைவர்கள் கைதுக்கெல்லாம் தீக்குளிக்கும் செய்தியைப் படிக்கையில் இது சுத்தப் பைத்தியக்காரத்தனமான விஷயம் என்று தோன்றுகிறது.

மற்றவர் என் கருத்து தவறு என்று சொல்வதைக் கேட்டு வாதம் செய்யக் கிளம்பால் இருந்தாலே மகிழ்ச்சி தானாக வரும் என்றுதான் தோன்றுகிறது. என் கருத்து சரியாக இருப்பதாக ஊர்ஜிதம் செய்ய வேண்டுமா? அல்லது எனக்கும் மற்றவருக்கும் சந்தோஷமும் திருப்தியும் வேண்டுமா? என்று கேட்டால் இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுப்பேன். இந்த ஞானோதயம் இப்போதுதான் வந்திருக்கிறது; நடைமுறையில் எப்படி செயலாகிறது என்று கொஞ்ச நாள் கழித்துத்தான் தெரியும்.

வியாழன், செப்டம்பர் 03, 2009

குப்பை - 4

குப்பை - 4

சரி வீட்டின் குப்பை எது என்பதில் அவ்வளவாகக் குழப்பம் இல்லை; இந்த மனக்குப்பை, இணையக் குப்பை எது என்று கேட்டால் (வல்லியம்மாவின் கேள்வி - சென்ற பதிவிற்கு) எப்படி பதில் சொல்வது? வில்லியம் ஜேம்ஸ் டுரன்ட் என்ற தத்துவ ஆசிரியர் மலர் - அழகு பற்றி எழுதியதை கல்லூரியில் படித்ததுண்டு. "மலர் அழகாயிருப்பதால் நமக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை; அது சந்தோஷத்தைத் தருவதால் அதை அழகு என்கிறோம்" - என்பதுதான் அது. அதே போலத்தான் இந்தக் குப்பை அடையாளமும். எனக்குள் ஒருவிதமான 'நெகட்டிவ்' உணர்வை - அது வெறுப்பு, கோபம், அமைதியின்மை அல்லது அருவெறுப்பு போன்ற உணர்ச்சிகளாக இருக்கலாம் - ஏற்படுத்தும் எந்த செய்கையும், எழுத்தும், படமும் என்னைப் பொருத்தவரை குப்பை.

இந்த விளக்கம் எனக்குத் தெளிவாக இருந்தாலும், இதில் சில நடைமுறைப் பிரச்சனைகள். ஒரு வார்த்தை அல்லது படத்திற்கு எனக்கு வரும் உணர்வும் மற்றவர்களுக்கு வரும் உணர்வும் ஒரே விதமாக இருக்காது. எது எனக்கு குப்பை எனத் தோன்றுகிறதோ அது மற்றவருக்கும் பொருந்தாது. உதாரணமாக ஆத்திகருக்கு நாத்திகம் குப்பை; நாத்திகருக்கு ஆத்திகம் குப்பை. நான் என் உணர்வை பிராதனமாக்கி 'குப்பையை ஒழிப்பேன்' என்று கிளம்பினால் அது மற்றவரோடு சச்சரவைத்தான் உண்டு பண்ணும். அதனால் இந்த விளக்கம் நடைமுறைக்கு 'குப்பையை ஒழிக்க' உதவாது.

அது மட்டுமல்ல - ஒரே எழுத்து சிலருக்கு கோபத்தையும் சிலருக்கு சிரிப்பையும் வரவழைத்தால் அந்த எழுத்தை குப்பை என்று என் உணர்வை மட்டும் பிராதனாமக வைத்து சொல்வது சரியாகத் தோன்றவில்லை. வீரமணி என்ற பெயரைப் பார்த்தவுடன் நாத்திகம் நினைப்புக்கு வருகிறதா அல்லது அய்யப்பன் பாடல் நினைப்புக்கு வருகிறதா என்பது அவரவர் மனநிலையைப் பொருத்திருக்கிறது. 'கடவுள் இல்லை' என்ற வாக்கியத்தைப் பார்த்தவுடன் பெரும்பான்மையான ஆத்திகருக்கு கோபமும், நாத்திகருக்கு மகிழ்ச்சியும் வருவது இயற்கை. அதே சமயத்தில் 'அவன் இல்லை என்று சொல்வதற்குக்கூட அவனை முதலில் சொல்லாமல் இருக்க முடியாது' என்று இந்த வாக்கியத்தைப் பார்த்து மகிழ்ந்த சிவபக்தரைப் பார்த்திருக்கிறேன். 'இல்லை என்பதை எப்படிக் குறித்து இல்லை என்று சொல்லமுடியும்? இதுவே பகுத்தறிவுக்குப் புறம்பானது' என்று இதே வாக்கியத்தைப் பார்த்து கோபப்பட்ட நாத்திகரையும் பார்த்திருக்கிறேன்.

இணையத்தில் குப்பை அதிகம், அதனால் என் நினைப்பில் குப்பை வந்து விட்டது என்று சொல்வது, 'கல் தடுக்கி விட்டது' என்று நாம் சொல்வது போலத்தான். நாம் பார்க்காமல் கால் தடுக்கி விழுந்துவிட்டு ஏதோ நகர்ந்து வந்து கல் நம் காலை வாரி விட்டது போல சொல்வது எப்படிப் பொருந்தாத ஒன்றோ, அதே போல ஒரு எழுத்தை, படத்தை, செய்கையை குப்பை என்று சொல்வது உண்மையில் 'இதைப் பார்த்து படித்ததால், என்னுள்ளே குப்பையான உணர்வுகள் வந்து விட்டன' என்று தான் சொல்வதாக அர்த்தம். நான் 'குப்பை' என்று சொல்வது என்னுணர்வையும், அந்த எழுத்தின் (அல்லது படத்தின், செய்கையின்) வகைப்பாடையும் தான் குறிக்குமே தவிர, அதன் தரத்தைக் குறிக்காது.

அதே சமயத்தில் ஒரு எழுத்து பெரும்பான்மையான மக்களுக்கு ஒரே விதமான உணர்வைத் தந்தால், அந்த எழுத்தும் அந்த உணர்வோடு ஒன்றாகிப் போகிறது. மக்களை ஒரு சங்கடத்தில் ஒன்று சேர்த்து எழுப்பிவிட்ட பேச்சுகளை (உதாரணம்: காந்திஜியின் தண்டி யாத்திரை, மார்ட்டின் லூதர் கிங் பேச்சு) வரலாற்றின் அதிகம் காணலாம். அதே போல பெரும்பான்மையான மக்களுக்கு அருவருப்பைத் தரும் எழுத்தை குப்பை என்று சொல்வது தவறாகத் தோன்றவில்லை. எப்படி ஒரு எழுத்து எனக்குள் உணர்வைத் தூண்டுகிறதோ, அதே போல என் உணர்வுதான் எழுத்தாக என்னிடமிருந்து வருகிறது. என் உணர்வு குப்பையாயிருந்தால், என் எழுத்தும் அதை பிரதிபலிக்கும். மற்றவரைப் பற்றி தரக் குறைவாக எழுதுகையில் உண்மையில் என் உணர்வு குப்பை என்றுதான் நான் பறை சாற்றுகிறேன். இது புரிந்துவிட்டால் நான் குப்பை போடப் போவதில்லை. இது இணையத்தில் எழுதும் அனைவருக்கும் பொருந்தும்.

இணையத்தில் எப்படி குப்பையைக் குறைப்பீர்கள் என்று கேட்டால், நான் குப்பை போடாமல் இருக்கப் போகிறேன் என்றுதான் என்னால் சொல்ல முடியும். என் வீடு சுத்தமாயிருப்பதைப் பார்த்து அடுத்த வீட்டிலும் குப்பை குறைந்தால் அதுவே ஒரு பெரிய வெற்றி. சாதத்தில் கல், உமி வருவது சகஜம். அது குப்பைதான்; எடுத்து எறிந்துவிட்டு சாப்பிடத்தான் செய்கிறோம். அதே சமயத்தில் சாதம் எடுத்து வந்த பிளாஸ்டிக் டப்பா தவறி தரையில் விழுந்து மண்ணோடு கலந்துவிட்டால், சாதத்தைத் தூக்கிப்போட்டு விட்டு டப்பாவை அலம்பி எடுத்து வந்து விடுகிறோம். குப்பை அதிகமாகி வைத்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவையே நாறடித்துவிட்டால், டப்பாவோடு சேர்த்து எறிந்து விடுகிறோம்.

பிளாஸ்டிக் டப்பாவை குப்பையில் போடாமல் அதை மீள்சுழற்சி மூலம் மற்றுமொரு டப்பாவாக செய்ய முடியும்; செய்கிறார்கள். மனதில் வரும் கோபத்தை, அந்த வேகத்தை, வெறியை, ஒரு நல்ல காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று திருப்ப முடியும். என்னளவில் கொஞம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். கோபமே இல்லாமல் இருப்பதென்பது முடியாது போலத் தோன்றுகிறது; ஆனால் கோபம் வருகையில், வெளியில் புல்லை வெட்டவோ, அல்லது தரையை அழுத்திச் சுத்தம் செய்யவோ ஆரம்பித்தால், அந்த கோபத்தில் வரும் வேகம் ஒருவிதமாகத் தணிந்து போகிறது (புல்லும் வெட்டப்பட்டு விடுகிறது, தரையும் சுத்தம்!).

என் மனமும் இந்த சாதம் வைத்த பிளாஸ்டிக் டப்பா போலத்தான். அவ்வப் போது குப்பை வருகிறது - எடுத்துப் போடுவதற்காக மற்ற நல்ல உணர்வு தரும் விஷயங்களில் நேரத்தை செலவழிக்கிறேன். குப்பை தேங்க ஆரம்பித்தால், நானும் குப்பைத் தொட்டியாகிவிடுவேன் என்று தெரியும். அளவு ரொம்பவும் அதிகமானால் குப்பைத்தொட்டியே குப்பையாகிவிடுவதைப் பார்த்ததால், அளவு மீறக் கூடாது என்று தீர்மானம். இல்லையென்றால் யாராவது படையப்பா ஸ்டைலில்:"நேற்று வரைக்கும் குப்பைத் தொட்டியப்பா; இன்று முதல் நீ குப்பையப்பா" என்று பாடிவிடுவார்கள். எதோ ஒரு காரணத்துக்காக ஆண்டவன் (அல்லது இயற்கை) என்னைப் படைத்திருக்கிறான்; அது குப்பையாக மாற அல்ல என்று மட்டும் தெரியும்.

உங்களுக்கு வேறு ஏதாவது வழியில் குப்பையை குறைக்க, அல்லது தேங்காமல் இருக்க வைக்க முடியும் என்று தோன்றினால் அவசியம் சொல்லவும். என்னாலான வழியில் நிச்சயம் முயற்சிப்பேன்.