சனி, அக்டோபர் 09, 2010

மதமும் மானுடமும்

மதமும் மானுடமும்

மதந்தழுவா மனிதர்களும் வாழ்கையிலே
மனிதர்சேரா மதங்களிங்கே வாழ்ந்ததில்லை

மதம்வாழ மானுடமும் தேவையென்றால்
மதியுரைத்தேன் மானுடமே மேன்மையென்று.

மக்களுக்கு உணவாகும் மாக்களுமே
மனிதர்வாழ உதவிடுமே தன்னுழைப்பால்

மனிதர்வாழ மாக்களுதவி தேவையென்றால்
மனந்தெளிந்தேன் மாக்கள்தானே மேன்மையென்று

மாக்களுக்கு மானுடமும் தேவையில்லை
மரம்செடி புல்பூண்டு போதுமிங்கே

மாக்கள்வாழ தாவரமும் தேவையென்றால்
மரமன்றோ மாக்களினும் மேன்மையிங்கே!

மரம்செடியும் வளர்வதுவும் புவியின்மேலே
மண்ணதனனின் வளத்தாலே செழிக்குமிங்கே

மண்ணதனின் துணையன்றி மரமில்லையென்றாலே
மண்ணன்றோ மற்றதைவிட மேலிங்கே!

மரமதுவும் வளர்ந்திடவே மாரியோடு
மாருதமும் ஆதவனும் வேண்டுமிங்கே

மற்றதெல்லாம் பஞ்சபூதம் தந்ததென்றால்
மதம்காக்க மரணிப்பது மடமையன்றோ?