ஞாயிறு, டிசம்பர் 31, 2006

ஒரு இரயில் பயணத்தில் - 3

“அப்படி இப்படின்னு 2006 முடிஞ்சு போச்சு. இந்த வருஷத்திலதான் எத்தனை மாற்றம். வருஷ ஆரம்பத்துல டெஸ்ட்ல ஹாட்ரிக் எடுத்த பதான் வருஷ முடிவுல டெஸ்ட் டீம்லேயே காணோம். சென்னையில, பங்களூரில வருஷ ஆரம்பத்தில ஆட்சி செஞ்சவங்க இப்ப இல்ல. நாம கூட வருஷ ஆரம்பத்துல அமெரிக்கா வருவோம்ன்னு நினைக்கல. இப்ப என்னடான்னா குளிர்ல நியூயார்க்ல எக்கச்சக்கத்துக்கு துணி போத்திக்கிட்டு வேலைக்கு ஓடறோம். ”

“நிறைய விஷயம் மாறவே இல்லையே. பதான் இருந்த அந்த டெஸ்ட்லயும் தோல்வி; இல்லாத வருஷக் கடைசி டெஸ்ட்லயும் தோல்வி. வருஷ ஆரம்பத்துல கர்நாடகாவோடதான் தண்ணிச் சண்டை; இப்போ கேரளாவோட கூட. எனக்கு வருஷ ஆரம்பத்துல இருந்த கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை"

“அப்படி என்ன சந்தேகம் உனக்கு?”

“குழந்தை பிறந்ததும் பெற்றவங்களை அம்மான்னு கூப்பிடறோம். இதே முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வகையில், முட்டை இட்டவுடன் அம்மாவாகுமா இல்லை முட்டை பொரிஞ்சு குஞ்சு வந்தவுடன் அம்மாவாகுமா? அதே மாதிரி முதலில் இட்ட முட்டையிலிருந்து வருவது அண்ணா/அக்காவா இல்லை முதலில் பொரியும் முட்டையில் இருப்பது அண்ணா/அக்காவாகுமா?”

“மூளையை எதுக்குத்தான் செலவழிக்கறதுன்னு உனக்கு புரிய மாட்டேங்குது. இப்போ இது ரொம்ப முக்கியமா? ஒரு வருஷமா இந்தக் கேள்வியத்தான் யோசிச்சியா?”

“தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லு; அதை விட்டுட்டு ஏன் கேள்வி கேட்கிறேன்னு விதண்டாவாதம் பண்ணாதே”

“தெரியலைப்பா; ஆளை விடு. எனக்கு வர சந்தேகம், கேள்வியெல்லாம் இல்லாத ஒண்ணைப் பத்தி யோசிக்கிற விதம் இல்லை. இருக்கிற விஷயங்களிலே வர கேள்விக்கே உனக்கு பதில் தெரிய மாட்டேங்குது. இந்த அழகுல - முட்டை வந்தா அம்மாவா? முட்டை பொரிஞ்சா அம்மாவா? - இப்படி ஒரு கேள்வி”

“நீ அப்படி என்ன கேள்வி கேட்டே எனக்கு பதில் சொல்ல வராத மாதிரி?”

“பாட்டுல ராகம் எப்படி கண்டு பிடிக்கறதுன்னு கேட்டேன்ல? நீ என்ன சொன்ன?”

“உனக்கு பாடிக் காமிச்சு, என் MP3 ப்ளேயரும் கொடுத்து கேட்கச் சொன்னேனே? இன்னுமா விளங்கல?”

"இப்படித்தான் நீ சொல்லிட்டுப் போயிடுவே. உன்னை நம்பி, உன் MP3 ப்ளேயர்ல ஒரே ராகத்துல இருக்கற பாட்டா செலக்ட் பண்ணி கேட்டேன். எல்லாப் பாட்டும் வித்தியாசமாத்தான் இருக்கு - ரெண்டு பாட்டு கூட ஒரே மாதிரி தெரியலே"

"என்ன ராகத்துல கேட்டே?"

"ராகமாலிகா. உங்கிட்ட இருக்கிறதுல அதிகமான பாட்டு அந்த ராகத்துல தான் இருக்கு. ராகமாலிகா ராகம் ரொம்ப பாப்புலரா?”

"தெரியலேன்னா கேட்டுத் தெரிஞ்சுக்கணும். இப்படி லூசாட்டம் ஏதாவது சொல்லக்கூடாது. ராகமாலிகா ராகம் இல்ல. அது நம்ப ஊர்ல சொல்ற கதம்ப மாலை மாதிரி. கதம்பம்ன்னு பூ கிடையாது. நிறைய பூக்களை கலந்து மாலையா கட்டினா கதம்பம். அதே மாதிரி நிறைய ராகங்களை உபயோகிச்சு ஒரு பாட்டு பாடினா அது ராகமாலிகா"

"ஓகோ - காலைல குடிக்கிற பஞ்ச் மாதிரியா? பஞ்ச்ன்னு ஒரு பழம் கிடையாது - ஆனா பஞ்ச்க்குள்ள நிறைய பழரசம் – சரிதானே?"

"உனக்கு சாப்பாட்டு உதாரணம் தான் கொடுக்கணும். சரி பஞ்ச் இல்ல கதம்ப சாதம் மாதிரின்னு வச்சுக்கோயேன். பாட்டுல இருக்கிற வெவ்வேறு பகுதியை வெவ்வேறு ராகத்துல பாடினா அது ராகமாலிகா."

"ஆமா - 'ராகம்: ராகமாலிகா' அப்படின்னு போட்டா வேற என்னன்னு நினைச்சுக்கிறது. பேசாமா ‘கதம்பம்’ன்னு போடலாம்ல? இதெல்லாங்கூட என்னை மாதிரி ஒரு அறிவுஜீவி வந்து தான் சொல்ல வேண்டியிருக்கு. நீ என்னடான்னா, முதலில் வந்த முட்டை அண்ணாவா, இல்லை முதலில் பொரிஞ்ச முட்டை அண்ணாவான்னு கேள்வி கேக்கற!"

“யோசிச்சுப் பாரு மனுஷங்க மட்டும் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வகையா இருந்திருந்தா எத்தனை குழப்பம், கேசு வந்திருக்கும்?"

“ஏன் இந்தக் கேள்வியோடு நிறுத்திட்டே? மனுஷனுக்கு கொம்பு முளைச்சா எப்படி இருக்கும்? அப்படின்னு ஆராய்ச்சி பண்ண வேண்டியதுதானே?”

“அதைப் பத்தியும் யோசிச்சிருக்கேனே. கொம்பை வளர்க்கலாமா இல்லையா என்பதில ஒவ்வொரு மதமும் ஒவ்வோண்ணு சொல்லும் - சில பேர் கொம்பு சாத்தானோட வடிவம்ன்னு சொல்லி வெட்டிப்பாங்க, சிலர் அது ‘கடவுள் தந்தது; வெட்டக்கூடாது’ அப்படின்னு சொல்லி வளர்ப்பாங்க. ஒரு மதம் கொம்பை மூடணும்ன்னு சொல்லும், இன்னொரு மதம் கடவுள் தந்ததை மூடக்கூடாதுன்னு சொல்லும். மதச் சண்டைகள் வருவதற்கு இன்னுமொரு காரணம் கிடைக்கும்.

சிலர் கொம்புக்கு நெயில் பாலிஷ் மாதிரி கொம்பு பாலிஷ் போட்டுப்பாங்க. சிலர் கொம்புக்கு தங்கம், வெள்ளில நகை பண்ணிப் போட்டுப்பாங்க. தொப்பி வகையில நிறைய மாற்றம் வரும்; விளையாட்டுகளில், முக்கியமா ரக்பில, ஹெல்மெட் வித்தியாசமா இருக்கும். ஸ்பெயின்ல மாட்டைக் கத்தியால குத்தி கொல்றத்துக்கு பதிலா, கொம்பால முட்டிக் கொல்லும் விளையாட்டு வரலாம். பேப்பர்ல 'கொம்பால் குத்திக் கொலை'ன்னு தலைப்பு வரும்.”

"எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். உன்னைப் போய் கேள்வி கேட்டேனே! நல்ல வேளை ஸ்டேஷன் வந்தாச்சு. இறங்கலாம் வா."

செவ்வாய், டிசம்பர் 26, 2006

ஒரு இரயில் பயணத்தில் - 2

"சும்மா சொல்லக்கூடாது, இந்த குளிர் விடுமுறையும், சின்ன வயசில நாம பள்ளியிலே படிக்கறச்சே அனுபவிச்ச கோடை விடுமுறை மாதிரி நல்லாவே இருக்கு"

"ஆமா. ரயில்ல உட்கார இடம் கிடைக்குது; அலுவலகத்தில ஆள் இல்ல. என்ன எக்கச்சக்கமா கோட், மப்ளர், ஸ்வெட்டர்ன்னு ஒரு குட்டி பீரோ துணி போட்டுக்கிட்டு போக வேண்டியிருக்கு"

"ரொம்ப அலுத்துக்காதே. வெள்ளிக்கிழமை மீட்டிங்ல என்ன சொன்னாங்க?"

"ஆங் - சொல்ல மறந்துட்டேனே. இந்த வார மீட்டிங்ல பாதுஷா சூப்பர்!"

"என்ன சொன்னாங்கன்னுதானே கேட்டேன்; என்ன மென்னாங்கன்னா கேட்டேன்? அது சரி உனக்கு சாப்பாட்டப் பத்தி யோசிக்காம இருக்க முடியாதே. டோனட்ன்னு சொல்லேன்; பாதுஷாவாம்!"

"இரண்டையும் ஒரே மாதிரி தான் செய்யறாங்க. என்ன பாதுஷா கொஞ்சம் வெயிட்டா இருக்கும்; டோனட் கொஞ்சம் லேசு. எதோ நட் போல்ட திங்கறா மாதிரி சொல்ல வேண்டாமேன்னு பாதுஷான்னு தமிழ்ல சொல்றேன். மீட்டிங்ல ஒண்ணும் பெரிசா சொல்லல. வழக்கம் போல 'ஹாப்பி ஹாலிடேஸ்; சீ யூ இன் த நியூ இயர்' அப்படின்னு சொன்னாங்க. ஏன் கேக்கற?"

"இல்ல செலவக் குறைக்க நம்ம மாதிரி கான்ட்ராக்டருக்கெல்லாம் கட்டாய விடுமுறை தரப் போறாங்கன்னு ஒரு வதந்தி இருந்தது"

"என்னடா அக்குறும்பு. இவங்களுக்குத்தானே பண்டிகை; நமக்கு இல்லையே? நமக்கு ஆபீஸ் வந்தாத்தானே துட்டு?"

"அதான் தெரியுமே. ஆபீஸ்ல இவங்க ஆளே இருக்கறதில்லே; நம்மை மாதிரி கான்ட்ராக்டர் வேலை செய்யாம சம்பளம் வாங்கறதப் பார்க்க பொறுக்கலே!"

"அவ்வளவு சந்தேகமா இருந்தா இவங்கள்ல நாலு பேர் வேலைக்கு வரட்டுமே. நானா வேணாங்கறேன்?"

"சரி அதை விடு. இந்த வருடம் இந்த மாதிரி ஏதும் பண்ணலை. அடுத்த வருடம் நாம் இங்க இருக்கமோ இல்லையோ!"

"இன்னுமொரு முக்கியமான விஷயம். அடுத்த மீட்டிங்ல இருந்து 'சுகர் ப்ரீ' சாமானும் இருக்குமாம்! நம்ம டிப்பார்ட்மென்ட்ல புதுசா வந்திருக்கற மக்கள்ல யாருக்கோ சுகர் இருக்காம். கேட்டவுடனே இனிமே பத்திய மீட்டிங்தானோன்னு கொஞ்சம் பயந்துட்டேன். அதனாலே நைசா விசாரிச்சுட்டேன்; நல்ல வேளை சக்கரை சாமானும் உண்டு."

"என்னதான் இருந்தாலும் இந்த ஊரிலே எல்லாரையும் அனுசரிச்சுத்தான் போறாங்க. மற்றவங்களோட சாப்பாட்டுப் பிரச்சனைகளையும் யோசிக்கிறாங்க. அப்படி இருக்கறப்பவே, காப்பியை மேல கொட்டிக்கிட்டு கம்பெனி மேல கேஸ் போடறாங்க"

"கேஸ்னு சொன்னதும் நினைவுக்கு வருது. இங்கிலாந்துல ஒரு வேர்ஹவுஸ்ல வேல செஞ்ச மனுஷன் தலையில அடிபட்டிடுச்சாம். அதுக்கப்புறம் அந்தாளு பலான படம் பார்க்கறது, பொண்ணுங்கள டாவடிக்கறதுன்னு ஆரம்பிச்சுட்டானாம். இந்த மாதிரி பண்ணத்துக்கு காரணமே தலைல அடிபட்டதுதான், அதனால கம்பெனிதான் நஷ்ட ஈடு கொடுக்கணும்னு கேசும் போட்டு ஜெயிச்சுட்டானாம்"

"அடப்பாவி. இவன் டாவடிக்கறத்துக்கு இவன் காரணம் இல்லையா? இது மட்டும் நம்மூர் அரசியல் வாதிகளுக்கு தெரிஞ்சது, போச்சு. பண்ற அத்தனை அயோக்கியத்தனத்துக்கும் காரணம் நான் கீழ விழுந்து அடி பட்டுக்கிட்டதுதான் காரணம்னு சொல்லி தப்பிச்சுக்குவாங்க"

"ஏன் அரசியல்வாதிகளை மட்டும் சொல்ற. வீட்டில சின்னப்பசங்கள்ல இருந்து கிழங்கட்டை வரை எல்லோரும் ‘தலைல இடிச்சுக்கிட்டேன்; அதனால நான் காரணம் இல்லை’ன்னு சொல்லிக்கிட்டு எல்லா விதமான தப்பும் பண்ணுவாங்க"

"சரி அதை விடு. சுக்வீந்தர ஏன் பிராஜக்ட்லேர்ந்து எடுத்துட்டாங்க? இத்தனைக்கும் அவனுக்கு இங்க்லீஷ் நல்லா பேச/எழுத வரும்l தவிர அவனுக்கு ரிகொயர்மென்ட்டெல்லாம் நல்லாப் புரியுமே?"

"ஆனா கோடெழுத வரலையே? கோடும் எழுதாம, நல்லாவும் பேசினா இவனுக்கு கோடெழுத தெரியலங்கறது மத்தவங்களுக்கு நல்லா தெரிஞ்சுடுதே! நம்ம இர்பான் பதான் மாதிரி தான். போலிங் போட டீம்ல எடுத்தா 'நான் நல்லா பேட் பண்றேன்' அப்படின்னு சொன்னா வச்சுக்குவாங்களா?"

"சரி. ஸ்டேஷன் வந்தாச்சு, இறங்கலாம் வா."

ஞாயிறு, டிசம்பர் 24, 2006

படம் எங்கே போச்சு?

ஒவ்வொரு புது பெற்றோருக்கும் தன் குழந்தையை எப்படி ‘ஐடியலாக’ (IDEAL) வளர்க்க வேண்டும் என்று நிச்சயம் எண்ணம் இருக்கும். குழந்தை வளர்ந்து பெரிதாகும் போது அவர்களுடைய ‘வளர்க்கும் முறை’ அந்த ‘வளர்க்கும் தர’த்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். இரண்டு (அல்லது மூன்று/நான்கு) குழந்தைகளுக்குப் பின் இந்த ‘தரம்’ மொத்தமும் மாறியிருக்கும். எனக்கும் இந்த மாதிரி நிறைய விஷயங்களில் ஒரு ‘தரம்’ வைத்திருந்து அவைகள் மாறி வருவதைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். இது அவ்வளவு சுவையாக இல்லை. பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் சொன்ன பொன் மொழி நினைவுக்கு வந்து படுத்துகிறது: 'வாழ்க்கை என்பது அனேகம் பேருக்கு இலட்சியத்திற்கும் நடைமுறைக்கும் நடக்கும் சமரசம்.'

Real life is, to most men, a perpetual compromise between the ideal and the possible – Bertrand Russell.

‘சிறு வயதில் குழந்தைகள் தெரிந்து கொள்வது அவர்கள் கேட்கும் கேள்வியில்தான் உள்ளது; அந்த ஆவலை (CURIOSITY) தடை செய்யக் கூடாது, அவர்களுக்கு உண்மையான பதிலை சொல்வதன் மூலம் அவர்களுடைய அறிவை வளர்க்க முடியும்’, என்றெல்லாம் எனக்கு ஒரு தீர்மானமான எண்ணம். ஆதலால் என் மகள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு உண்மையான விளக்கம் தர வேண்டும், அரை குறை பதில் சொல்லி சமாளிக்கவோ, அல்லது கோபிக்கவோ கூடாது என்றும் அவள் பேச ஆராம்பிப்பதற்கு முன் உறுதியாய் இருந்தேன். இதற்கு சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது நான் அதிகம் கேள்வி கேட்கிறேன் என்று சில ஆசிரியர்கள் என்னை கேள்வியே கேட்கக் கூடாது என்று படுத்தியதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

என் மகள் சிறு குழந்தையாய் பேச ஆரம்பித்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தபோது முதலில் அதிகம் கேட்ட கேள்வி ‘எங்கே?’ என்பது தான். ‘ஏன்’ ‘எப்படி’ என்பதெல்லாம் பின்னால் தான் வந்தது. அவள் கேட்ட நிறைய ‘எங்கே?’ கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. முடியவில்லை என்பதில் இரண்டு வகை – ஒன்று எனக்குத் தெரியும் என்று நான் நினைத்துக் கொண்டு அவளுக்கு புரிகிற மாதிரி விடை சொல்ல ஆரம்பித்து, அவளையும் குழப்பி, நானும் குழம்பியது; மற்றொன்று எனக்கு விடையே தெரியாத கேள்விகள்!

உதாரணமாக 'சூரியன் எங்கே போச்சு?' என்ற கேள்விக்கு, விபரமாக பந்தை வைத்து பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றெல்லாம் சொல்ல ஆரம்பிக்க அவளைக் குழப்பி வெறுப்பேற்றியதுதான் மிச்சம். இது முதல் வகை.

இரண்டாம் வகையில் - அதாவது எனக்கு உண்மையில் விடையே தெரியாத வகையில், சில கேள்விகளுக்கு கொஞ்சம் பொய் கலந்து சொல்லி சமாளிக்க ஆரம்பித்தேன். வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கையில் சாலையில் போன காரைப் பார்த்து ‘கார் எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு உண்மையில் எனக்கு பதில் தெரியாது; இருந்தாலும் ‘வீட்டுக்கு போச்சு’ என்று சொல்வேன் (பொய்தான் – இருந்தாலும் பாதகமில்லை என்ற நினைப்பு). இது வானத்தில் பறக்கும் பறவைக்கும் (‘அது தன்னோட கூட்டுக்கு போச்சு’) பொருந்தும். அந்த சமயத்தில் உண்மையாக இல்லாவிட்டாலும் இந்த மாதிரி விடைகள் பொருத்தமானவையாகவே இருக்கும்.

இதிலேயே கடினமான கேள்விகளை என் மகள் கேட்க ஆரம்பித்த போதுதான் பிரச்சனையே வந்தது எனக்கு. வீட்டில் தொலைக்காட்சி பெட்டியை அணைத்தவுடன் ‘படம் எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை. என் மண்டைக்குள் அந்தக் கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது. படம் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளி பரப்பப் படும் போது அலைகள் ரூபத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் பார்க்க எனக்கு தொலைக்காட்சி பெட்டி தேவை. நான் தொலைக்காட்சி பெட்டியை அணைப்பதன் மூலம் படம் இல்லாமல் போய் விடுகிறதா என்ன? இது பூனை கண்ணை மூடிக் கொண்டு விட்டால் உலகம் இருண்டுவிடும் என்பதைப் போல இருக்கிறது. ‘எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. என் மகளிடம் 'தெரியாது' என்று சொன்னால், நான் பதில் தெரிந்து கொண்டே அவளுக்கு சொல்லவில்லை என்று கோபம் - அழுகை. வழக்கம் போல் என் மனைவி ‘காணாமல் போச்சு’ என்று பதில் சொல்லி அவளை சமாதானப் படுத்தினாள். இருந்தாலும் எனக்கு இந்தக் கேள்வி ஒரு புரியாத புதிராகவே இன்னமும் இருக்கிறது. உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

இப்போதெல்லாம் என் மகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பை என் மனைவியிடமே விட்டு விட்டேன். இதே போல எனக்குள்ளேயே நிறையக் கேள்விகள் வர ஆரம்பித்துவிட்டன. உதாரணமாக இந்த வருடம் முடிந்து, அடுத்த வருடக் காலண்டரை மாட்டி, '2006 எங்கே போச்சு?' என்று யோசித்தால் பதில் கிடைக்கும் என்று தோன்றவில்லை. வயது ஆக ஆக எனக்குத் தெரியாதது அதிகமாவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. 'எங்கே?' கேள்விகளுக்கே இப்படி என்றால், 'ஏன்?' என்ற கேள்விக்கு நிச்சயமாக நான் அம்பேல்!!!

புதன், டிசம்பர் 20, 2006

ஓணான் வாயில் புகையிலை - ஏன்?

மன்னார்குடியில் பள்ளியின் பெரிய விளையாட்டு மைதானம் பள்ளிக்கு அருகில் இல்லாமல் கொஞ்சம் தொலைவில் இருக்கும். எல்லோரிடமும் சைக்கிள் இருக்காது; கிரிக்கெட் விளையாட மைதானத்துக்குப் போக வேண்டும் என்றால் நிறையப் பேர் கும்பலாக நடந்துதான் போவோம். சந்தடியான தெருவெல்லாம் தாண்டி, அதிகம் ஆள் நடமாட்டமில்லாத பாதையில் போகும் போது, சிலருக்கு ஒரு முக்கியமான விளையாட்டு ஓணானைப் பிடித்து, அதன் வாயில் கொஞ்சம் புகையிலையோ அல்லது கீழே கிடக்கும் பீடி/சிகரெட்டின் தூளையோ (அதுவும் புகையிலைதானே) போட்டு, ஓணான் தள்ளாடுவதைப் பார்ப்பது. இதை செய்யும் தைரியம் சிலருக்குத்தான் உண்டு; எனக்கு அதைப் பார்க்கக் கூட அவ்வளவாக வராது. கொஞ்சம் ஒதுங்கியே சென்று விடுவேன். அப்போதெல்லாம் தோன்றிய கேள்வி 'இதை ஏன் செய்கிறார்கள்?' என்பதுதான்.

நண்பர்களிடம் கேட்டால் வந்த பதிலெல்லாம் 'என் அண்ணன் செய்தேன் என்று சொன்னான்; நானும் அதேபோல விளையாடுகிறேன்' என்ற ரீதியிலேயே இருந்தது. அண்ணன்களைக் கேட்டால், அவர்களும் 'முந்தைய தலைமுறையில் செய்ததாக சொன்னார்கள்; அதான் நானும் செய்தேன்' என்றுதான் சொல்லுவார்கள். இருபது வருடங்களுக்கும் மேலாக பதில் தெரியாத இந்தக் கேள்விக்கு இந்த வாரம் எதிர்பாராத விதமாக ஒரு பதில் கிடைத்தது. அதைத்தான் இங்கு பதிகிறேன். இந்த பதில் எத்தனை தூரம் சரி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்தக் கதை ஆப்ரிக்கப் பழங்குடியினரிடமிருந்து வந்தது. ஸூலூ இன மக்களிடையே இந்தக் கதை பழங்காலந்தொட்டு சொல்லப்பட்டு வருகிறது என்று 1913-ல் வெளியான ‘The Belief in Immortality and the Worship of the Dead, Volume I’ என்ற புத்தகத்தில் சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ப்ரேசர் (Sir James George Frazer) சொல்லியிருக்கிறார்!

வெகுகாலத்துக்கு முன்னால் கடவுள் (உன்குலுன்குலு - UNKULUNKULU) பூமிக்கு ஒரு ஓணனை அனுப்பி மக்களிடையே அவர்கள் இறக்காமல் இருக்குமாறு சொல்லச் சொன்னாராம். ஓணானும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்ததாம். வழியிலே அங்கும் இங்கும் அலைந்து விட்டு பழங்களைச் சாப்பிட்டு படுத்துக் கொண்டிருந்ததாம். இதற்கிடையே கடவுளும் யோசித்து, ஒரு பல்லியையும் அனுப்ப, அது மக்களிடத்திலே வந்து ‘நீங்கள் இறக்குமாறு கடவுள் சொன்னார்’ என்று சொல்லியதாம். இகைக் கேட்ட மக்களும் இறக்க ஆரம்பித்தனராம். கொஞ்ச நாள் கழித்து ஓணானும் மெதுவாக வந்து ‘கடவுள் உங்களையெல்லாம் இறக்காமல் இருக்கச் சொன்னார்’ என்று சொன்னதாம். ஆனால் மக்களோ ‘உனக்கு முன்பாகவே பல்லி வந்து எங்களை இறக்கச் சொல்லிவிட்டது’ என்று சொல்லி – தொடர்ந்து இறக்க ஆரம்பித்தார்களாம். அவர்களுடைய சந்ததியினர் எல்லாம் இதனாலேயே தாமதமாக வந்த ஓணானைப் பழிவாங்க, அதன் வாயில் புகையிலையைப் போட்டு அதைத் துன்புறுத்துகிறார்களாம்.

நம் ஊரிலே மட்டும் தான் இந்த மாதிரி செய்கிறார்கள் என்று நினைத்தால், காலங்காலமாக ஆப்ரிக்காவிலும் இதே போல செய்திருக்கிறார்கள், மற்றும் ஒரு கதையும் இருக்கிறது என்பதைப் படிக்க ஆச்சரியமாக இருந்தது. உங்களுக்கு இது போல ஏதாவது கதை தெரியுமா?

வெள்ளி, டிசம்பர் 08, 2006

ஒரு இரயில் பயணத்தில்...

ரயிலில் நியூயார்க் வரும் போது கணிப்பொறித் துறையில் வேலை செய்யும் இரு தமிழ் பேசும் வாலிபர்கள் என் காதில் விழுகிற மாதிரி பேசிக் கொண்டு வந்த உரையாடல்.

“கொஞ்சம் முன்னாலேயே கிளம்பலாம்னு இதுக்குதான் சொன்னேன். இப்படி மூச்சு வாங்க ஓடி வரவேண்டாமில்லையா?”

“கொஞ்சம் வேகமா நடந்தாக் கூட ஒனக்கு மூச்சு வாங்கும்; ஒழுங்கா சாப்பிட்டாத்தானே?”

“சாப்பாட்டைப் பத்தி பேசி வெறுப்பேத்தாதே. அந்தக் குழந்தையைப் பாரு; நம்மைப் பார்த்து சிரிக்கிற மாதிரி இருக்கு”.

“அழகா இருக்குல்ல – அது சிரிக்கறச்சே. நல்ல ஆப்பிள் மாதிரி கன்னம்”

“மறுபடியும் சாப்பாடா? ஏன் கன்னத்தில 440-ஸ்டிக்கர் ஒட்டிருக்கா?”

“ஆங் – ஆப்பிள்ன்ன ஒடனே நினைவுக்கு வருது, சப்ஜி மண்டில இனிமே 440 வாங்க கூடாது – ஒரு பவுண்டு 99 சென்ட்; இருந்தாலும் ஆப்பிள் ஒரே மாவா இருக்கு. பவுண்டுக்கு 1.19 கொடுத்தாலும், 460 தான் வாங்கணும்”.

“எனக்கு தெரிஞ்சு கடையில இருக்கிற காஷியரத் தவிர இந்த லேபிள் ஸ்டிக்கர் எல்லாம் பார்க்கிற ஒரே ஆள் நீதாம்ப்பா. எப்படித்தான் சாப்பாட்டு விஷயத்தில மட்டும் இதெல்லாம் கரெக்டா நினைப்புல வச்சுக்கறயோ?”

“பின்ன – உன்னோட ஒரே ரூம்ல இருந்தா யாருக்குத்தான் சாப்பாடு விஷயம் மறக்கும். காலைல பிரேக் ஃபாஸ்ட்ன்னு சொல்லிட்டு, அரை டம்ளர் ஜூஸ் – அதுவும் எல்லாப் பழத்தையும் ஒண்ணா போட்டு கலக்கி கொடுக்கற பன்ச். அப்புறம் சீரியல்ன்னு சொல்லிட்டு சோளச் சீவல். கொஞ்சம் ஏமாந்தா வெறும் டப்பாவைக் காட்டியே அனுப்பிடுவே”

“கார்ன்பிளேக்குன்னு சொல்லேன் - சோளச்சீவல்ன்னு சொன்னா குழப்பமா இருக்குல்ல?”

“கார்ன்பிளேக்குன்னு சொன்னா ரொம்ப பெரிசா ஏதோ சாப்பிடறா மாதிரி தோணும். சோளச்சீவல்ன்னு சொன்னாத்தான் அது சாப்பிடப் பத்தாதுன்னு புரியும்”

“இங்க இருக்கப்போறது ஐந்து மாசமோ அல்லது ஆறு மாசமோ. கொஞ்சம் காசு சேர்த்தால் ஊருக்கு போய் செலவழிக்கலாம் இல்லையா?”

“அதுக்குன்னு இப்படியா? ஒரு டோஸ்ட், பேகல் இல்ல மப்பின் இப்படின்னு எதையாவது சாப்பிடலாம்ல”

“நீயும் நானும் சைவம். மத்தியானத்துக்கு காண்டீன்ல சான்ட்விச்னு இதே பிரட்டும், தக்காளி வெங்காயமும்தான். அதை காலையிலயும் சாப்பிடணுமா? சரி விடு. எப்பப் பார்த்தாலும் நீ சாப்பாட்டைப் பத்தி மட்டும் தான் யோசிக்கற. ஆமா நேத்து மத்தியானம் உன் சீட்டுக்கு வந்தப்போ நீ இல்லையே – ஓபியா?”

“அதெல்லாம் இல்லை, நம்ப சுக்வீந்தருக்கு கோடெழுத கொஞ்சம் ஹெல்ப் பண்ண போயிருந்தேன்”

“நீ அவனுக்கு கோடெழுத போனியா? நீயே காப்பி-பேஸ்ட் கேசு – சொந்தமா என்னிக்கு கோடெழுதியிருக்கே?”

“என்னோட பாலிசியே ‘DON’T REINVENT THE WHEEL’ தான். எவ்வளவு அழகா நான் ரீயூஸ் பண்றேன்?”

“ஆமா – எல்லாத்தையும் வகைக்கு தகுந்தா மாதிரி வோர்டுல காப்பி-பேஸ்ட் பண்ணி வச்சுருக்கே. அதைத் தவிர்த்து கூகுள்ல தேடி கோடு சேக்கற! கேட்டா ‘பெஸ்ட் பிராக்டீஸ் லைப்ரரின்னு’ பந்தவா சொல்றே. அதுவும் ஒரு பிளாஷ் டிரைவ்ல வேற. டிப் டாப்பா பேன்ட், சட்டை, கோட்டு. அவனவன் ஒனக்குத்தான் எல்லாந் தெரியும்ன்னு வந்து நிக்கறான். எல்லாம் நேரம்.”

“ஆள் பாதி ஆடை பாதின்னு நீ கேட்டதில்லையா? ஆமா நீ ஏன் ரெகுலரா ஷேவ் கூட பண்ணறதில்லை? காசு செலவாயிடுமின்னா? இல்ல காதல் தோல்வியா?”

“கிண்டலா? நான் ஷேவ் பண்ணாததற்கு ரெண்டு காரணம். ஒண்ணு குளிர் – காலங்கார்த்தால எவன் சில்லுன்னு தண்ணிய மூஞ்சில அப்பிக்கறது? இரண்டாவது – நீ சொன்ன மாதிரி ‘ஆள் பாதி ஆடை பாதி’ - வேலைக்கு ஏத்த ஒப்பனை”

“வேலைக்கு ஏத்த ஒப்பனையா?”

“ஆமா – நான் பண்றது டெஸ்டிங். ஒன்னை மாதிரி காப்பி-பேஸ்ட் கோடன்க கிட்ட போய் ‘நீ பண்ணது தப்பு’ன்னு சொல்லற வேலை! அப்ப போய் டிப்-டாப்ப ஷேவ், டிரஸ் பண்ணிக்கிட்டு ‘ஹாய்!, உன் கோடுல மிஸ்டேக்’ன்னு சொன்னா அவனவனுக்கு பத்திக்கும். அதுக்காகத்தான் நானே ரெண்டு நாள் தாடியோட போயி ‘தப்பு நடந்துடுச்சுன்னு’ சோகமா சொன்னா, என்னை திட்ட மாட்டானுங்க”

“ஏதோ இஷ்டத்துக்கு பீலா வுடரே – காலையில பாத்ருமுக்குள்ள போனா வர ஒரு மணி நேரம் ஆவுது வெளிய வர. ஆனா ஷேவ் பண்ண தண்ணி சில்லுன்னு இருக்குன்னு ரீல் விடர”

“சத்தமா பேசாத; அந்த சின்னப் பையன் நம்மையேபாத்து சிரிச்சுக்கிட்டு இருக்கான்”

“யாரு அந்த ஆப்பிள் கன்னமா”

“மறுபடியும் சாப்பாடா?”

ரயில் நியுவர்க் நிலையத்திற்கு வந்து சேர, அவர்கள் இருவரும் இறங்கினார்கள். மறுமுறை அந்த இருவரையும் பார்த்தால் சொல்கிறேன்.

புதன், டிசம்பர் 06, 2006

தேநீர் – 13

இந்த இறுதிப் பகுதியில் தேநீர் பற்றிய சில பொது விஷயங்களைத் தந்திருக்கிறேன். முதலில் வடுவூர் குமாரின் கேள்வி பற்றி.

இந்தியாவில் டீ ஏலம் நிலைநிறுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இந்த அமைப்பில் பங்கேற்க சில சட்ட திட்டங்கள் உண்டு – ஏலம் எடுப்போரும், டீயை விற்போரும் இந்த சட்ட திட்டத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும். யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம், இந்த சட்ட திட்டங்களௌக்கு உட்பட்டு இருக்கும் வரை. ஏலம் எடுத்தவருக்கும், விடுபவருக்கும் சில பொறுப்புகள் உண்டு – ஏலம் விடுபவர், குறிப்பிட்ட அளவு தேயிலையை ஏலம் எடுத்தவருக்கு இத்தனை நாட்களுக்குள் (சாதாரணமாக 72 மணி நேரம்; ஏலம் எடுப்பவருடன் பேசி ஒத்துக்கொண்டால் இந்த கால நிர்ணயம் மாறலாம்) கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே ஒத்துக்கொண்ட அளவு அபராதம் கட்ட வேண்டும். அதே போல ஏலம் எடுத்தவர், அதே போல குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பணத்தையும் செலுத்த வேண்டும் – தவறினால் அதற்கும் அபராதம் (வட்டி) உண்டு. ஏலம் நடத்தும் அமைப்பு இதையெல்லாம் அதன் செயல்பாட்டு ஆவணங்களில் விபரமாக விளக்கியிருக்கும். ஏதாவது பிரச்சனை வந்தால் ஆர்பிட்ரெஷன் (Arbitration) என்று சொல்லப்படும், ஒரு நடு நிலை வகிப்பவர் கூறும் தீர்ப்பை இரு தரப்பாரும் ஏற்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரை அதனுடைய டீ பொட்டலங்கள் எப்போது விற்பனையாகிறது என்பது மிக முக்கியம். தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட தேயிலையின் சுவை, ருசி ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் – இது இயற்கை. முதலில் தோட்டத்தில் டீத் தூளாக்கப் பட்டு, ஏலத்தின் மூலமாக தொழிற்சாலைக்கு வந்து, பொட்டலமாகி, மொத்த வினியோகஸ்தரிடம் வந்து, பின் அங்கிருந்து சில்லறை வினியோகஸ்தர்கள் மூலமாக உங்கள் தெருமுனை கடைக்கு வருகிறது. பின் நீங்கள் வாங்கி தினம் இரண்டு-நான்கு ஸ்பூன் கணக்கில் டீயாக அருந்தப் படுகிறது. இதில் நேரம் முக்கியம் – இரண்டு காரணங்களால். ஒன்று டீயின் சுவை குறைவு. இரண்டாவது நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்த 72 மணி நேரத்தில் பணத்தை கொடுத்தாக வேண்டும். நம் போன்ற உபயோகிப்பவர்கள் டீ வாங்கி பணம் கொடுக்கும் வரை நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும் – காலம் அதிகமாக முதலுக்கு வட்டியும் அதிகம்.

நிறுவனங்களே உங்களுக்கு விற்பது என்று எடுத்துக் கொண்டால் ரொம்ப நாள் காத்திருக்க வேண்டும். ஆதலால் அவர்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு தன் பொட்டலங்களை விற்று விடுவார்கள். அந்த மாதிரி விற்கும் போதே பணமும் நிறுவனத்துக்கு வந்து விடும். முக்கால் வாசி நிறுவனக்கள் சில்லறை வினியோகஸ்தர்களிடம் இருந்து நிறுவனத்தின் பெயரில் முன்னமேயே கையொப்பமிட்ட காசோலைகளை வங்கி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். மொத்த வினியோகஸ்தர்களிடம் இருந்து பொட்டலங்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு அனுப்பப் படும் போது இந்த காசோலைகள் வங்கிகளில் நிறுவனங்கள் கணக்கில் போடப்படும். பொருளை காசு கொடுத்து வாங்கி கடைகளுக்கு விற்பதால் இந்த சில்லறை வினியோகஸ்தர்களுக்கு வரும்படி வேண்டும்; அதே போல் தெரு முனையில் இருக்கும் கடைக்காரரும், தன் சொந்தக் காசைப் போட்டு பொட்டலம் வாங்குவதால் அவருக்கும் வரும்படி வேண்டும். இதை எல்லாம் கணக்கில் வைத்து, கடையில் நீங்களும் நானும் வாங்கும் விலையிலிருந்து, கொஞ்சம் குறைவாகவே நிறுவனக்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு விற்கும். இது போதாதென்று, நிறுவன இருப்பு அதிகமானால் ‘தற்காலிக விலைக் குறைப்பு’, மற்றும் ‘சிறப்புத் தள்ளுபடி’ என்றெல்லாம் சொல்லி நிறுவனக்கள் விற்பனையைப் பெருக்க முயலும்.

இது மட்டுமல்லாமல் இந்த பொட்டலங்களை ஒவ்வொரு இடமாக அனுப்பி, ஏற்றி இறக்குவதால் வரும் சேதம், நாள் கடந்து போனதால் விற்க முடியாமல் திரும்பி வரும் சரக்கு (அனேகமாக அனைத்து நிறுவனங்களும், கடைக்காரர்களிடம் இருந்து இதை ஏற்றுக் கொள்ளும்; இதை கமிஷனாக (அளவைப் பொறுத்து) கடையிலிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளும் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு நிறுவனங்கள் தந்து விடும்), என்றெல்லாம் வேறு செலவு. உற்பத்தி செய்யும் செலவோடு, இவற்றையெல்லாம் அனுமானித்து, விற்கும் விலையை நிர்ணயிப்பது அவ்வளவு சுலபமல்ல. அடிக்கடி விலயையும் மாற்ற முடியாது. ஒட்ட வேண்டிய லேபலில் இருந்து எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். இத்தனையும் மீறி இந்த வியாபாரத்தில் பணம் பண்ணுவதற்கு கொஞ்சம் திறமை வேன்டும்.

என்னுடைய பயிற்சியின் போது இரண்டு வாரங்கள் விற்பனைப் பிரிவில் இருந்தேன். விற்கும் அதிகாரியுடன் (Sales Manager) மொத்த வினியோகஸ்தர் (C&FA), சில்லறை வினியோகஸ்தர் (Distributor), மற்றும் கடைகள் (Shops) எல்லாம் போயிருக்கிறேன். இந்த அதிகாரி அவர்களோடு விற்பனைக்காக ஹிந்தியில் பேசுவதை (மிரட்டல், கெஞ்சல், கொஞ்சல், புகழ்ச்சி, பேரம் - எல்லாம் உண்டு) கேட்டு பிரமித்துப் போயிருக்கிறேன். அவரோடு சேர்ந்து டீ விளம்பரத் தோரணம் (YELLOW LABEL) கட்டியிருக்கிறேன். அவர் தொலைபேசியில் உயர் அதிகாரிகளுடன் தற்காலிக விலைக் குறைப்புக்காக போராடியதைக் கேட்டிருக்கிறேன் (உயர் அதிகாரி மறுத்தது வேறு விஷயம்; போதாக் குறைக்கு உங்களுக்கு - என்னையும் சேர்த்துத்தான் - விற்கத் தெரியவில்லை என்று அவர் கோபிக்க வேறு செய்தார்). இந்த இரண்டு வார பயிற்சி முடிந்ததும் எனக்கு நிச்சயமாய் தெரிந்த ஒரு விஷயம் - என்னால் இந்த விற்பன வேலையை செய்ய வராது, முடியாது என்பதுதான்!

இந்தியாவில் தேயிலை உற்பத்தி கிட்டத்தட்ட 9 லக்ஷம் மெட்ரிக் டன் (90,00,00,000 கிலோ - 90 கோடி கிலோ). 2003-ம் வருடத்தில் வட இந்தியாவில் 66.36 கோடி கிலோவும், தென் இந்தியாவில் 19.34 கோடி கிலோவும் விளைந்தது (மொத்தம் 85.7 கோடி கிலோ). இதில் பெரும்பான்மை சதவீதம் ஏலத்தின் மூலமாகத் தான் விற்பனையாகின. கிட்டத்தட்ட 20 கோடி கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த விற்பனை முறை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. எத்தனையோ சின்னச் சின்ன மாற்றங்கள் வந்தாலும், இந்த அடிப்படை விற்பனை முறை நூறு வருடங்களுக்கும் மேலாக மாறாமல் இருக்கிறது. அதே போல தேயிலையிலிருந்து டீத் தூள் செய்வதிலும் மிகப் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை – க்ரீன் டீ என்று சொல்லப்படும் நீராவி மூலம் பதப்படுத்தப்படும் முறையைத் தவிர.

இருபது – முப்பது வருடங்களுக்கு முன் இந்தியா உலகிலேயே அதிக டீ உற்பத்தி பண்ணும் நாடாகவும், ஏற்றுமதி பண்ணும் நாடகவும் இருந்தது. சமீப காலங்களில் கென்யா, இலங்கை போன்ற நாடுகள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. 2004ல் இந்தியாவின் டீ உற்பத்தி 4.3% குறைந்திருக்கிறது – முக்கிய காரணங்கள் தட்பவெப்ப நிலை மாறுதல் மற்றும் அஸ்ஸாமில் கிட்டத்தட்ட 70 தோட்டங்கள் மூடப்பட்டது. ஏற்றுமதியில் க்ரீன் டீ உற்பத்தியினால் சீனா முன்னணிக்கு வந்திருக்கிறது. விபரங்களுக்கு இங்கே. இந்தியாவில் விளையும் டீ உலக உற்பத்தியில் கால் பங்குக்கும் சிறிது அதிகம். இணையத்தில் டீ பற்றி அனேகச் செய்திகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டீ பற்றிய ஒரு ப்ளாக்.

பொறுமையாக இத்தனை பதிவையும் படித்தவர்களுக்கு என் அனுதாபம் கலந்த நன்றி :-).

தேநீர் – 12; தேநீர் – 11; தேநீர் – 10; தேநீர் – 9; தேநீர் – 8; தேநீர் – 7; தேநீர் – 6; தேநீர் – 5; தேநீர் – 4; தேநீர் – 3; தேநீர் – 2; தேநீர் – 1

ஞாயிறு, டிசம்பர் 03, 2006

தேநீர் – 12

மார்க்கெட்டிங்

தோட்டத்தில் வளரும் செடியிலிருந்து இலையைப் பறித்து டீத் தூளாகவும் செய்து தருவது டீ எஸ்டேட் என்று சொல்லப்படும் தோட்டங்களே. இருபது வருடங்களுக்கு முன்பு வரை, தோட்டங்களே நேரடியாக டீயை பருகும் மக்களுக்கு விற்பனை செய்ததில்லை. தோட்டங்கள் ஏலத்தின் மூலமாக டீத்தூள்களைக் கலந்து பொட்டலம் கட்டி விற்கும் நிறுவனங்களுக்கு விற்பதை மட்டுமே செய்து வந்தன. இந்த பொட்டலம் கட்டுவது தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய விஷயம் என்று சொல்ல முடியாது. இதைப் புரிந்து கொண்ட தோட்டங்கள், இந்த டீத்தூளை நாமே ஏன் பொட்டலம் போட்டு நேரடியாக விற்கக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தன. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்தியாவில் டீத்தூள் பொட்டலம் போடும் நிறுவனங்கள் அதிகம் இல்லை. பெரிய அளவில் மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள்; பிராண்டு என்று பார்த்தால் இருபது/முப்பது இருக்கும்.

இப்போது எத்தனையோ வகைகள் வந்து விட்டன. நிறைய தோட்டங்கள் ‘தோட்டத்து தேயிலையின் புத்துணர்வு’ என்று தங்களிடமே தோட்டம் இருக்கிறது என்ற ஒரு விஷயத்தை வித்தியாசமாகக் காட்ட ஆரம்பித்தன. பொட்டலம் போடும் வியாபாரம் இருக்க முக்கிய காரணம், இயற்கையின் படைப்பில் வரும் வித விதமான தேயிலைகளை இன்னமும் அதிகமான எண்ணிக்கையில் கலவையாக்க முடியும் என்பதால் தான். இரண்டே தோட்டங்கள் இருந்தால் கூட, இந்த இரண்டையும் எத்தனை விகிதாசாரத்தில் கலக்கிறோம் என்பதிலேயே நாம் நிறைய வகைகளை (பிராண்ட்) உருவாக்க முடியும். இந்த ஒரு சமாசாரத்தில் தான் மொத்த பொட்டல வியாபாரமும் அடங்கியிருக்கிறது.

மூன்று, நான்கு தோட்டத்திலிருந்து தேயிலையை வாங்கி கலந்து கொடுக்கிறேன் என்று நான் சொன்னால் யாரும் என்னிடம் வர மாட்டார்கள். அதற்காக எனக்கு மார்க்கெட்டிங் பிரிவின் ‘அறிவு’ தேவை. அவர்கள் உங்களிடம் வந்து இந்த டீ குடித்தால் களைப்பு போகும், புத்துணர்வு வரும், என்று சொன்னால், நீங்கள் வந்து கொஞ்சம் போணி பண்ணுவீர்கள். அதற்காகத்தான் இந்தப் பிரிவு.

இவ்வளவுதானா என்று நினைக்க வேண்டாம். ஒரு பெரிய நிறுவனத்திற்கு பத்து, இருபது பிராண்டு தேவை. இவைகளுக்குள் முரண்பாடு வராத மாதிரி, அதே சமயம் ஒவ்வொரு வகையும் (பிராண்டு) ஒரு தனி விசேஷத்தை சொல்வது போலவும் கதை கட்டுவது அவ்வளவு எளிதல்ல. முடிந்தால் மற்ற நிறுவன பிராண்டை கொஞ்சம் மட்டம் தட்டி, சொந்த பிராண்டை கொஞ்சம் தூக்கிப் பேசினால் விற்பனை பெருகலாம். இதற்காக இவர்கள் செய்யும் செலவுதான் எத்தனை. இந்தப் பிரிவு மட்டும் இல்லையென்றால், நாட்டில் பெரிய அளவில் பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கும் – அது சுவரில் டீப்பொட்டலப் படம் வரைபவரிலிருந்து, வீட்டில் நீங்கள் டீ குடித்துக்கோண்டே ஆவலாகப் பார்க்கும் தொலைக்காட்ச்சித் தொடர் வரை.

ஒரு கலவைக்கு எந்த மாதிரி குணம் இருக்கிறது என்பதை நிர்ணயித்து (குணம் என்பது பொதுவான சொல் – அது சுவை, மணம், நிறம், அது தரும் உணர்ச்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்), அந்த குணத்தை மக்கள் மனதிலே பதியுமாறு விளம்பரங்கள் தயாரிப்பது, போட்டிகள் நடத்துவது போன்றவை மார்க்கெட்டிங் பிரிவின் வேலை. இந்த விளம்பரங்களுக்கு வெளி நிறுவனங்களை அணுகி, அங்கு இருக்கும் கவிஞர்கள், கலைஞர்களின் திறமையால் ஒரு துண்டுப் படத்தையோ, பாடலையோ, அந்தக் கலவையின் குணத்தை பறைசாற்றும் விதமாக தருவிப்பது என்பது ஒரு பெரிய விஷயம். அது டீத்தோட்டத்தில் ஓடும் பி.டி. உஷாவா (கண்ணன் தேவன் டீ), அல்லது தபலா வாசிக்கும் ஜாகீர் ஹூசேனா (தாஜ் மஹல் டீ) என்றெல்லாம் நிர்ணயிப்பது இவர்கள் தான்.

மற்ற நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இதில் ஒரு பெரிய வித்தியாசம், இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை. ஒரு விளம்பரம் முக்கியமான மொழிகள் அத்தனையிலும் வருவது நலம் - அது செலவையும் குறைக்கும், இந்தியா முழுவதும் டீயை விற்க உதவும். இந்த மாதிரி ஒரு பிரச்சனை அனேகமாக மற்ற நாடுகளில் கிடையாது. பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்க உதவுமாறு ஒரு சிறு கவிதை எழுதுவது ரொம்பவும் கஷ்டம். இதற்காகவே இந்திய மார்க்கெட்டிங் பிரிவுக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்.

சமயத்தில் சில விளம்பரங்கள் ஒரு மொழியில் மட்டும் பிரபலமாவதும் உண்டு. இதில் எனக்குப் பிடித்த ஒரு விளம்பரக் கவிதை:

Dip – Dip
Add the Sugar; and the milk
And its ready to sip
Do you want it stronger? Dip a little longer
Dip – Dip – Dip
And its ready to sip

உங்களுக்குப் பிடித்த டீ விளம்பரங்களை பின்னூட்டமிடுங்கள்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 11
தேநீர் – 10
தேநீர் – 9
தேநீர் – 8
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

புதன், நவம்பர் 29, 2006

தேநீர் – 11

தொழிற்சாலையில் இருந்து மொத்த வினியோகஸ்தர்களுக்கு பொட்டலங்களை அனுப்புவதும் ஒரு கலை தான். இதில் இருப்பவர்களை தூங்க விடாமல் பயமுறுத்தும் விஷயம் ஒன்றுதான்: போக்குவரத்து நிறுத்தம் (TRANSPORT STRIKE). இதைத் தவிர இவர்கள் கவலைப்படுவது பொட்டல இருப்புக்கு மட்டும்தான். ஆனால் முதன் முதலாக இந்தப் பிரிவில் தொழில் கற்ற பொழுது நான் நிரம்பவும் யோசித்து ஆச்சரியமாகப் பார்த்தது இவர்கள் ஒரு வண்டிக்கு (சின்ன லாரி, டிரக், பெரிய லாரி என்று பல வகை உண்டு) தகுந்த மாதிரி எத்தனை விதமான பொட்டலங்களை அனுப்ப முடியும் என்று வெகு எளிதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் எந்த வழியாகப் போனால் அதிகமான மொத்த வினியோகஸ்தர்களை குறைந்த தூரத்தில், சீக்கிரமாக அடையலாம் என்றும் சொன்னதுதான். கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்.

ஆலையில் பொட்டலங்களை அட்டை டப்பாவில் போட்டுத்தான் (CARTONS) அனுப்புவார்கள். இந்த அட்டை டப்பாக்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்காது – உயரம், அகலம், நீளம் எல்லாமே வெவ்வேறு வகை. ஒவ்வொரு வண்டிக்கும் சில குணங்கள் உண்டு. இத்தனை உயரத்துக்கு மேல் போகக் கூடாது; இத்தனை எடைக்கு மேல் போகக் கூடாது என்றெல்லாம் விதிகள் உண்டு. ஒரு மொத்த வினியொகஸ்தர் கேட்கும் வகைகள் இந்தமாதிரி அட்டை டப்பா கணக்கில் தான் இருக்கும். இதில் பெரிய வினியொகஸ்தர்கள் சமயத்தில் ஒரு லாரி டீ கேட்பார்கள். அது ரொம்ப சுலபம்; ஏற்றி அனுப்ப வேண்டியதுதான். ஆனால் அதிகபட்சமான ‘தேவை சீட்டுகள்’ (DEMAND SHEETS) கால் வண்டி, அரை வண்டிதான் வரும். குறைந்த செலவில் இதை அனுப்ப வேண்டுமென்றால், இரண்டு, மூன்று வினியொகஸ்தர்களுக்கான டீயை ஒரு பெரிய வண்டியில் அனுப்பி, ஒவ்வொரு இடத்திலும் அவர்களுக்கு வேண்டியதை இறக்கிவிடுமாறு பார்த்துக் கொள்வது தான்.

கேட்க எளிதாக இருந்தாலும், செய்வது அவ்வளவு சுலபமாக இதை செய்ய முடியாது. எந்த வினியொகஸ்தர்களுக்கு முதலில் அனுப்புவது, இரண்டாவது எங்கே? போன்ற கேள்விகளுக்கு விடை தேவை. இதைப் பொறுத்து வண்ண்டியில் டீயை ஏற்ற வேண்டும். கடைசியாக நிறுத்தும் இடத்திற்கான பொட்டலங்களை முதலில் ஏற்ற வேண்டும். அப்போதுதான் முதல் இடத்தில் உள்ள பொட்டலங்களை இலகுவாக இறக்கலாம். ஓவ்வொரு இடத்திலும், தேவையில்லாமல் அட்டைப் பெட்டிகளை இறக்கி ஏற்றினால் செலவும் அதிகம், நேரமும் விரயம். டீசல் விற்ற (விற்கிற) விலையில் செல்லும் வழியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம், செலவைக் குறைக்க.

இதில் அத்தனை வினியோகஸ்தர்களின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது. எதையாவது குறைக்க நேரிடும். அவர்கள் கேட்கின்ற வகை இருப்பில் இருக்காது; இரண்டு நாள் கழித்துத்தான் பொட்டலம் போடுவதாக திட்டம் இருக்கும். அல்லது வண்டியின் உயரத்தாலோ, அல்லது எடையாலோ சில டப்பாக்களை ஏற்ற முடியாமல் போகலாம். எதை விடுப்பது அல்லது எடுப்பது என்ற முடிவும் அவ்வளவு சுலபமானதல்ல. விற்பனைப் பிரிவைப் பொறுத்தவரை எதையுமே விட முடியாது. டீ இருப்பில்லை என்று சொல்வது பொட்டலப் பிரிவுக்கு பிடிக்காது. இந்த அனுப்பும் பிரிவில் இருப்பவர்களுக்கு உயரத்தாலோ, எடையாலோ அனுப்ப முடியவில்லை என்று சொல்லப் பிடிக்காது. காரணம் அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு தன்மானப் பிரச்சனை - வண்டியைத் தேர்வு செய்வது அவர்கள் கையில்தானே இருக்கிறது. மற்றவர்கள் அவர்களைக் கேட்கலாமே 'ஏன் பெரிய வண்டியை எடுக்கவில்லை?' என்று! ஆகையால் வண்டியின் அளவு சரியில்லை என்று சொல்ல மாட்டார்கள்.

இத்தனையும் ஒரு மாதிரி சமாளித்து அனுப்ப நினைக்கையில் அவர்களுக்கு அதிகம் வெறுப்பேற்றும் விஷயம் - ஆலையில் உள்ள கணக்கர்கள். அவர்கள் இந்தப் பயணத்துக்கு தேவையான சீட்டு மற்றும் இதர ஆவணங்களைப் பெற்றுத்தான் வண்டியை அனுப்ப வேண்டும். இல்லையென்றால் ஏதாவதொரு செக் போஸ்டில் வண்டியை நிறுத்திவிடுவார்கள்; சேதம் அதிகமாகி விடும். வண்டியில் எந்த டப்பாவை ஏற்றுவது என்ற முடிவை சரியான நேரத்துக்குள் தெரிவிக்கவில்லை என்றால் கணக்கர்கள் வீட்டுக்கு சென்றுவிட வாய்ப்பு உண்டு. இதுவும் ஒரு பிரச்சனை.

'ஏன் வண்டி வரவில்லை' என்று தொலைபேசியில் கத்தும் விற்பனைப் பிரிவு, 'வண்டியில் ஏற்ற சில வகைகள் இன்னமும் தயாரில்லை' என்று சொல்லும் பொட்டலப் பிரிவு, 'வண்டியில் என்ன ஏற்றப்போகிறாய்? நான் வீட்டுக்குப் போக வேண்டாமா?' என்று கோபிக்கும் கணக்கர், இவர்களுக்கிடையே, வண்டியின் உயரம்/கொள்ளளவு பற்றியும், போகும் வழி பற்றியும் யோசித்து 95% சரியான சமயத்திற்குள் டீயை அனுப்பும் இந்தப் பிரிவில் உள்ளவர்களையும் நான் மதிப்போடுதான் பார்த்தேன்!

முந்தைய பதிவுகள்
தேநீர் – 10
தேநீர் – 9
தேநீர் – 8
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

திங்கள், நவம்பர் 27, 2006

தேநீர் – 10

பொட்டலம் போடுவதிலேயே இவ்வளவு விஷயம் இருக்கிறதே என்று நினைத்தீர்களானால், பொட்டலம்போடுவதற்கான திட்டம் தீட்டுவது இதை விட சிக்கலானது. முதலில் இருப்பையும் (STOCK), எதிர்பார்ப்பையும் (DEMAND) சேர்க்க வேன்டும். இது திருவிளையாடல் தருமி கேட்டு (சேராதிருப்பது?) இறைவன் சொல்லும் பதிலைப் (அறிவும் பணமும்) போன்றது – இரண்டும் சேராது!

தொழிற்சாலையில் டீத்தூள்களை மூன்று வித நிலைகளில் வகைப் படுத்துவார்கள். முதலாவது கொள்முதல் செய்த டீ (UNBLENDED); இரண்டாவது கலவை (BLENDED); மூன்றாவது பொட்டலம் (PACKED). உற்பத்தி சங்கிலியில் (PROCESS CHAIN) நான்கு பிரிவுகள் – கொள்முதல் பிரிவு (PURCHASE), கலவை (BLENDING), பொட்டலம் (PACKING), அனுப்பும் பிரிவு (DISPATCH OR LOGISTICS).

 கொள்முதல் டீ இருப்புக்கு, கொள்முதல் பிரிவே பொறுப்பு.
 கலவைப் பிரிவின் கடமை, கலவையின் இருப்பு நிலைமை.
 பொட்டலங்களின் இருப்பு நிலையே, ப்ளோர் சூப்பர்வைசரின் தலையே.

(“அப்பா என்ன ஒரு சந்தம்! எங்கேயோ போயிட்டடா ரங்கா!!” என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது)

எல்லோரையும் திருப்திப் படுத்த யாராலும் முடியாது. ஒவ்வொரு பிரிவுக்கும் இலக்குகள் உண்டு – தங்கள் பிரிவின் செலவைக் குறைப்பது இதில் முக்கியமானது. உதாரணமாக பொட்டலங்களை அனுப்பும் பிரிவில் (LOGISTICS) அவர்கள் எத்தனை வேகமாக அனுப்புகிறார்கள் என்பது ஒரு முக்கியமான இலக்கு. ஒரு ‘தேவையை’ (DEMAND) பூர்த்தி செய்ய அவர்களுக்கு ‘தேவைச் சீட்டில்’ (DEMAND SHEET) இருக்கும் அத்தனை விதமான பொட்டலங்களும், தயாராக இருந்தால் தான் சீக்கிரம் அனுப்ப முடியும். இந்த தேவை சீட்டில் எந்த விதமான பொட்டலங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு ஆலையில் ஐம்பதுக்கும் மேலான பொட்டல வகைகள் உண்டு. அனைத்துமே தயாராக இருப்பில் இருக்காது.

ஒரு பேச்சுக்காக பொட்டலப் பிரிவு (ப்ளோர் சூப்பர்வைசர் - அவர்தானே பொட்டல இருப்புக்கு பொறுப்பு!) இதற்கு ஒத்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதை செயலாக்குவதற்கு, அவருக்கு கலவைப் பிரிவின் தயவு தேவை. பொட்டலங்கள் தயாராவதற்கு ஒரு நாள் முன்பாக அவருக்கு அந்தக் கலவை வேண்டும் (பொட்டலம் போடுவதற்கு நேரம் வேண்டுமே). இதற்கு கலவைப் பிரிவு ஒத்துக்கொள்ள வேண்டுமானால் அவர்களுக்கு கொள்முதல் டீத்தூள் இன்னமும் முன்னதாக வேண்டும். அதற்கு வாங்கும் பிரிவு ஒத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஏலம் தினமும் நடக்காது – வாரத்துக்கு ஒரு முறை (அல்லது இரண்டு முறை). ஏலத்தில் இன்று எடுத்தாலும், டீத் தூள் ஆலைக்கு வருவதற்கு நேரம் ஆகும். இது தவிர ஒவ்வொரு பிரிவிலும் உள்ள சரக்கின் விலையின் பொறுப்பு அந்தந்தப் பிரிவின் இலக்கை பாதிக்கும் – இலக்கைத் தாண்டி அதிகமாக இருப்பு வைத்துக் கொள்ளக் கூடாது. எப்படி இத்தனை பிரிவுகளையும் ஒருங்கிணைத்து செல்வது? மொத்தத்தில் ஒரு குழாயடி நிலைமை – அதே போல சண்டைகளும் உண்டு. ஓரே வித்தியாசம்: அனைவரும் கொஞ்சம் பதவிசாக, நாசூக்காக திட்டுவார்கள்.

ஒவ்வொரு பிரிவிலும், அந்தப் பிரிவின் மூலப் பொருள் இருப்பு நிலை, பிரிவின் உற்பத்தி நேரம், அந்தப் பிரிவின் இறுதிப் பொருளின் இருப்பு நிலை மதிப்பீடு, எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொண்டு, அந்த அந்தப் பிரிவின் வேலையை திட்டமாகத் தீட்டுவது ஒரு நிரந்தர புலி-ஆடு-புல்லுக்கட்டு விளையாட்டுதான். ஆலையின் மேலாண்மையில் இருப்பவருக்கு வரும் தலைவலி பற்றி சொல்லவே வேண்டாம். இந்தப் பிரிவுகளில் இந்த மாதிரி திட்டம் தீட்டுபவர்களைப் பார்த்தால் ஒரு தனி விதமான மதிப்பு. எப்படித்தான் பைத்தியம் பிடிக்காமல், இரத்த அழுத்தம், மாரடைப்பு என்றெல்லாம் வராமல் இத்தனை காலம் இந்த வேலையை செய்கிறார்கள் என்று எனக்கு மிகுந்த வியப்பு கலந்த மதிப்பு. எந்த போதி மரத்துக்கும் போகாமல் அந்த சிறு வயதில் (இப்போது நான் பெரிசு ; அப்போது நான் சிறுசுதானே) எனக்கு வந்த ஞானம்: “வாழ்க்கையில் பிரச்சனைகளுக்காக கவலைப்பட்டு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் இழப்பு நிச்சயம்” என்பதுதான்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 9
தேநீர் – 8
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

வெள்ளி, நவம்பர் 24, 2006

தேநீர் – 9

பொட்டலம் எடையில் விற்றாலும், பெரும்பான்மையான பொட்டல இயந்திரங்களில் டீ கொள்ளளவைக் கொண்டு நிரப்பப்படும். தரத்தை (முக்கியமாக சரியான எடை இருக்கிறதா என்று பார்க்க) கண்காணிக்க கட்டப்பட்ட பொட்டலங்களை மாதிரிக்கு எடுத்து (ஒரு மணிக்கு ஐந்து என்பது போல) எடை பார்த்து குறிப்பெடுப்பார்கள். இந்த மாதிரி வேலையை நானும் செய்திருக்கிறேன்! ஒரு தொழிற்சாலை முழுதும் நடந்து வந்து, ஒவ்வொரு இயந்திரமாய்ப் போய் மாதிரி எடை பார்ப்பது - அதுவும் ஒரு 8 மணி நேர ஷிப்டில் செய்வது என்றால் வெறுத்து விடும் (எனக்கு அப்போது 23 வயது). எடையைத் தவிர, பொட்டலம் பிய்ந்து போகாமல் சரியாக இருக்கிறதா, பசை வழிந்து பொட்டலத்தை நாசமாக்காமல் இருக்கிறதா, மற்றும் பொட்டலம் செய்த தேதி/மாதம்/வருடம் ஒழுங்காகப் பதிவாயிருக்கிறதா என்றும் சோதிக்க வேண்டும். இயந்திரத்தை இயக்குபவர்கள் என்னை திருவிளையாடல் தருமி நக்கீரரைப் பார்ப்பது போல வேறு பார்ப்பார்கள்; 'வந்துவிட்டான் குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் பிரகஸ்பதி' என்று கண்ணாலேயே சொல்வார்கள்.

இந்த மாதிரி சரியாக கட்டப்பட்ட பொட்டலங்களை ஒரு அட்டை டப்பாவில் (CARTON என்று சொல்வார்கள்) போட்டு, ஒரு காகித டேப்பால் ஒட்டி அருகிலுள்ள கன்வேயர் பெல்ட்டில் போட்டு அனுப்பி விடுவார்கள். ஒரு ஷிப்டுக்கு இவ்வளவு பொட்டலம் போட்டால் இத்தனை பணம்; அதற்கு மேல் போனால் இவ்வளவு அதிகப் பணம் என்றெல்லாம் ஊதிய நிர்ணயம் உண்டு. இந்த ஊதிய கணக்கு விஷயம் அவ்வளவு நேரானதல்ல. யூனியன் ஒப்பந்தத்தைப் புரிந்து கொள்ளவே ஒரு அசாத்திய திறமை வேண்டும். சில வகைகளுக்கு மூன்று ஷிப்டையும் சேர்த்து ஊதியம் நிர்ணயிப்பார்கள். சில இயந்திரங்களில் முதல் இரண்டு ஷிப்டுகளிலேயே மொத்த பொட்டலமும் கட்டப்பட்டு, மூன்றாவது ஷிப்டில் வருபவர்கள் சீட்டாடுவதை நான் பார்த்திருக்கிறேன். இப்போது எப்படி என்று தெரியாது!

இந்த தர நிர்ணயம் செய்பவரின் மதிப்பீடு ஊதிய நிர்ணயத்திற்கும் எடுத்துக் கொள்வதால், இயந்திரத்தை இயக்குபவர்களுக்கு இவர்களைக் கண்டாலே பிடிக்காது. அனேகமாக அத்தனை இயந்திர இயக்குனர்களும் பெங்காலியைத் தவிர வேறு எதுவும் பேச மாட்டார்கள். சொல்ப பேர் ஹிந்தி பேசுவார்கள். எனக்கு வங்காள மொழி தெரியாது; ஹிந்தி அரை குறை.

தமிழ்நாட்டில் பள்ளியில் படிக்கும் போது ஹிந்தி பிரசார் சபா மூலமாக தேர்வு எழுதியது தான். படத்தைப் பார்த்து 'மேஜ் பர் க்யா ஹை? மேஜ் பர் தவாத் ஹை' என்று சொல்லத் தெரியும்; பேசியதில்லை. கொஞ்சம் முயற்சி செய்தால் தட்டுத் தடுமாறி தப்பும் தவறுமாய் ‘ஆம் கே பேடு பர் கும்ஹடே’ கதையை சொல்லத் தெரியும் (ஒரு வழிப்போக்கன், மாமரத்தடில் படுத்துக் கொண்டு ‘இத்தனை பெரிய மாமரத்தில் சிறு மாங்காயைக் காய்க்க வைத்துவிட்டு, கீழே இருக்கும் சிறு கொடியில் பெரிய பூசணிக்காயை வைத்தானே இறைவன்’ என்று கேலி செய்வான். ஒரு மாங்காய் அவன் தலையில் விழும். ‘இறைவன் எதையும் தெரிந்து தான் செய்திருக்கிறான்; பூசணிக்காய் விழுந்தால் என் தலை என்னவாயிருக்கும்?’ என்று யோசித்து அவன் ஞானம் பெறுவான்). வானொலியில் கிரிக்கெட் வர்ணனையில் 'அக்லி கேந், டப்பா கானே கே பாத்', பின்பு தொலைக்காட்சியில் ராமாயணம் காண்பிக்கையில் அதில் வரும் 'பரந்து, கிந்து, விராஜியே' - இதெல்லாம் தெரியும்.

இதையெல்லாம் வைத்துக் கொண்டு பார்வையாலேயே திட்டும் இவர்களிடம் - அதுவும் மூன்றாவது ஷிப்டில், நடு ராத்திரியில் - என்ன பேசுவது? இந்த இரண்டு வார தர நிர்ணயப் பணி முடிந்ததும் 'அப்பாடா - விடுதலை' என்று இருந்தது.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 8
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

வியாழன், நவம்பர் 23, 2006

தேநீர் – 8

அடுத்ததாக CTC வகை. CTC வகைகள் இரண்டு வகைகளிலும் - பாப்புலர், பிரீமியம் – வரும். இந்த டீத் தூள்களை உன்னிப்பாகப் பார்த்தால் ஒரு விதமான உருண்டை போலத் தெரியும். இதை ஒரு ஊசியால் நெம்பினால் நீளமான இலை போல விரியும். அழுத்தினால் இவைகள் பொடியாக வாய்ப்பு உண்டு. இவற்றை பிளாஸ்டிக் பைகளில் பொட்டலம் போடுவது சுலபமானது. காகிதப் பொட்டலமும் போடலாம் – பொட்டலம் போடும் இயந்திரம் உயர் தரமானதாக இருந்தால். பிளாஸ்டிக் பொட்டலம் போடும் மிஷினையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பிளாஸ்டிக் தாள் ஒரு உருளையாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இயந்திரத்தின் மேலே டீத்தூள் இருக்கும். இயங்கும் போது, பிளாஸ்டிக் தாளை ஒரு பை போல மடித்து, டீத்தூளை அளந்து கொட்டி, பின் சூடான கம்பியின் மூலம் பிளாஸ்டிக் பையை உருக்கி ஒட்டி பையை அனுப்பும். ஆங்கிலத்தில் இதை HEAT SEALING என்று சொல்வார்கள். இதிலும் வெப்பம் இருந்தாலும், இயந்திர அமைப்பினால் டீத்தூளுக்கு பாதிப்பு இருக்காது. இந்தப் பிளாஸ்டிக் பைகள் ஒரு மாலை போல வந்து கொண்டிருக்கும். பத்து, பத்தாக எண்ணி, இயந்திரத்தை இயக்குபவர்கள் அதை பிரித்து, காகித அட்டை டப்பாக்களில் போட்டு மூடி அனுப்புவார்கள்.

முழு இலை தேயிலை வகைகள் விலை அதிகம். அவற்றின் தனி சிறப்பு மணம்தான். ஆதலால் இந்த வகைகளை காற்றுப் புகாத வகையிலேயே பொட்டலம் போடுவார்கள். அது மர டப்பாவோ அல்லது தகர டப்பாவோ – உள்ளே காற்று செல்லக் கூடாது. காகிதப் பொட்டலங்களும் உண்டு. இது சாதாரணக் காகிதமாய் இருக்காது – அலுமினியப் பூச்சுடன் கூடிய உயர் வகைக் காகிதம். காகித அட்டையின் தரமும் உயர்வாகவே இருக்கும். இந்த டப்பா வகைகள் ரொம்பவும் அதிகம் செய்ய மாட்டார்கள். மற்ற வகைகள் மாதிரி இவைகள் டன் கணக்கில் விற்காது - வாங்க ஆளும் பணமும் வேண்டுமே! பொட்டலம் போட உபயோகிக்கும் இயந்திரத்தை நன்கு கண்காணிப்பார்கள். தவிர தேர்ந்த தொழிலாளிகள் மட்டுமே இந்த வகைகளுக்கு பொட்டலம் போட வருவார்கள். தரக் குறைவும், இழப்பும் இருக்கக் கூடாது என்பதற்காக.

நான் அப்போது இந்த ‘டிப் டிப்’ வகை பொட்டலங்களை உருவாக்குவதைப் பார்க்கவில்லை; சில வருடங்கள் கழித்து வேறு ஒரு ஆலையில் தான் பார்த்தேன். காகித பொட்டலங்களின் இயந்திரங்களுக்கும், இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. ‘டிப்’ பையும் ஒரு விதமான காகிதத்தில் தான் செய்யப் படுகிறது. இயந்திரமே காகிதப் பையில் டீத்தூளைப் போட்டு, நூலை வைத்து, ஸ்டேப்லரால் பின்னைக் குத்தி அனுப்பி விடும். ஐம்பதோ, நூறோ வந்தவுடன், ஒரு டப்பாவில் போட்டு அனுப்பி விடுவார்கள்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

செவ்வாய், நவம்பர் 21, 2006

தேநீர் – 7

இந்தப் பொட்டலங்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். காகிதம், பிளாஸ்டிக் மற்றும் இதர வகைகள் (மர டப்பா, இரும்பு/தகரம் டப்பாக்கள் போன்றவை). காகிதப் பொட்டலங்களில் அனேக வகைகள் உண்டு – முழுவதும் காகிதத்தால் ஆன பொட்டலத்திலிருந்து, காகிதத்தை மற்ற பொருட்களோடு சேர்த்து பொட்டலம் தயாரிப்பது வரை. இதில் சிறு வயதில் எனக்குப் பிடித்தது தோரணம் போல தொங்க விடப்படும் சிறு காகிதப் பொட்டலங்கள். உள்ளங்கை அளவே இருக்கும் சிறு காகிதப் பையில் டீத்தூள் இருக்கும், இந்தப் பைகளை மாவிலைத் தோரணம் போல ஒரு கயிற்றால் கட்டி கடைக் காரர்கள் தொங்க விட்டிருப்பார்கள். காகிதப் பையில் ஐந்து பைசா, பத்து பைசா சித்திரங்கள் இருக்கும். இந்தக் காகிதப் பைகளில் முக்கியமான இரண்டு விஷயங்கள் – செலவு குறைவு; ஆனால் சுவையையும், மணத்தையும் அதிகம் பாதுகாக்காது.

டீ வகைகளை விற்பனையில் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிப்பார்கள் – பாப்புலர் (POPULAR) மற்றும் பிரீமியம் (PREMIUM). வித்தியாசம் விலையில்; முதலாவது விலை குறைவு, வரும் லாபமும் குறைவு. டீத்தூள் தயாரிக்கும் முறையில் மூன்று வகைகள் – டஸ்ட் (DUST), CTC (CUT/TURN/CURL), மற்றும் முழு இலை (WHOLE LEAF) வகை. டஸ்ட் வகைகள் காகிதப் பொட்டலம் தான் – வெகு அரிதாக வேறு ஏதாவது வகையில் பொட்டலம் கட்டுவார்கள். CTC வகைகள் பெரும்பான்மையாக பிளாஸ்டிக்; முழு இலை வகைகள் அதிகமாக விற்பனையாவது உயர்தரக் காகிதம், மற்றும் இதர வகைகள் – டப்பாக்களில் (மரம், இரும்பு/தகரம் போன்றவை). இதுமாதிரி அமைவதற்கும் பொட்டலம் போடும் முறையும், அந்த டீத்தூள்களின் இயல்பும் ஒரு காரணம். அனேகமாக ‘பாப்புலர்’ என்று வகைப்படுத்தப்படும் குறைந்த விலைத் தேயிலைகள் இந்த மாதிரி காகிதப் பொட்டலங்களில்தான் வரும்.

காகிதப் பொட்டலம் போடும் இயந்திரங்கள் பொட்டலத்தை மடிக்கும் போது வரும் அழுத்தம் டீத்தூளையும் கொஞ்சம் பாதிக்கும். CTC மற்றும் முழு இலை வகைகள் இந்த அழுத்தத்தில் உடைய, பொடியாக வாய்ப்புக்கள் உண்டு. காகிதப் பொட்டலங்களின் உற்பத்தி செலவும் சற்று குறைவு. ஆதலால் டஸ்ட் டீ வகைகளை காகிதப் பொட்டலங்களில் போடுவது செலவையும் குறைக்கும் (பாப்புலர் வகைகளுக்கு இது முக்கியம் – டஸ்ட் டீ வகைகள் அனேகமாக பாப்புலர் வகைகள் தான் விலையில்), பொட்டல இயந்திரங்களினால் தரக் குறைவும் வராது.


இதிலேயே கொஞ்சம் அதிகம் விலைபோகும் தேயிலைக்கு, காகித டப்பா/பொட்டலத்திற்குள் அலுமினியப் பூச்சுடன் உள்ள தாளை வைத்து, அதனுள் டீத் தூளை வைத்து பொட்டலம் கட்டுவார்கள். இது காற்றுப்புகா வண்ணம் இருக்குமாதலால், சுவையும் மணமும் கொஞ்ச நாள் அதிகம் இருக்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் காகிதத்தை ஒட்டப் பயன்படுத்தப்படும் கோந்து. இந்த பசை சரியான அளவோடு இருப்பதோடு இல்லாமல், உள்ளே இருக்கும் டீத்தூளின் சுவையையோ, மணத்தையோ பாதிக்காமல் இருக்க வேண்டும். பொட்டலம் கட்டும் இயந்திரங்களில் இந்தப் பசை வைக்கப் பட்டிருக்கும். காகிதம் வெறும் தாளாகவே இயந்திரத்தில் வரும்; இயந்திரமே தாளை மடித்து பொட்டலம் ஆக்கி, டீத்தூளைப் போட்டு, பசை தடவி ஒட்டி விடும். பார்க்க மிகவும் அழகாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

ஞாயிறு, நவம்பர் 19, 2006

தேநீர் – 6

கலவை நிர்ணயம் செய்த பிரிவிலிருந்து, கலவையின் விகிதங்கள் - எந்தெந்த லாட்டிலிருந்து எத்தனை டீ டப்பாக்களை சேர்க்க வேண்டும் என்ற விபரம் - கலவை கலக்கும் பிரிவுக்கு வரும். இதை தயாரிப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல; முதலில் தொழிற்சாலையில் எத்தனை டப்பாக்கள் வந்திருக்கின்றன, அதன் எடை எவ்வளவு, தொழிற்சாலையின் பொட்டல இருப்பு நிலை, பொட்டல திட்டத்திற்கு எத்தனை டீ வேண்டியிருக்கும் என்று எல்லாவற்றையும் யோசித்து, இந்த 'கலவைக் காகிதம்' – Blend Sheet, தயாரிக்கப்படும். சரி இது வந்துவிட்டால், அத்தனை டப்பாவையும் எடுத்துக் கவிழ்த்தால் கலவை தயார்தானே என்று எண்ண வேண்டாம்.

கலவை நிர்ணயம் செய்ய அரைக் கிலோ டீ போதும். இது தொழிற்சாலையில் பொட்டலம் போட வரும் போது அரை டன் - அதாவது 500 கிலோவாகக் கூட மாறும். வீட்டில் பூச்சு வேலை செய்யும் போது கலவை போடுவது கொஞ்சம் எளிதாகத் தோன்றும். கொத்தனார் ஒரு பாண்டில் (பாண்டு - ஒரு குழிவான இரும்புத் தட்டு) கொஞ்சம் சிமின்ட், கொஞ்சம் மணல் என்று போட்டு, தண்ணீர் விட்டு கலந்து எளிதாகப் பூசிவிடுவார். இதே ஒரு தளத்திற்கான கான்க்ரீட் கலவை என்றால், பத்து பதினைந்து உதவியாளர்கள் (சித்தாள்), ஒரு தலைமைக் கொத்தனார் மற்றும் அவருடைய உதவிக் கொத்தனார்கள், ஒரு கலவை மிஷின், பல மூட்டை சிமின்ட், லாரி மணல், என்றெல்லாம் விரிவாகப் போகும். அதே போல தொழிற்சாலையில் டீ கலவை போடும் போது, ஆள் பலம், இயந்திர பலம் எல்லாமே பெருகியிருக்கும்; அதனால் நிறைய விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும்.

முதலில் தோட்டத்திலிருந்து ஏலத்தில் எடுத்த டீயை டப்பாக்களிலிருந்து (Chest) எடுத்து சேகரிப்பது. இது வரும் மர டப்பாக்களில் சமயத்தில் காலி டப்பா எடையை விட அதிகமாக ஆணிகள் இருக்கும்! சில சமயம் ஒரு தகரப் பட்டியாலும் டப்பாவை சுற்றி இறுக்கிக் கட்டியிருப்பார்கள்; தகரம் ஆதலால், இதில் துரு இருக்க வாய்ப்பு உண்டு. இந்த ஆணிகள் அனைத்தையும் எடுத்து விடுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. தப்பித் தவறி ஒரு ஆணி பொட்டலத்திற்குள் வந்துவிட்டால் மிகப் பெரும் பிரச்சனை வந்துவிடும். ஆதலால், முக்கியமான ஒரு வேலை மர டப்பாக்களில் உள்ள ஆணிகளை எடுப்பது.

முதலில் மூடியை ஒரு கம்பியால் நெம்பி எடுத்துவிட்டு, அந்த டப்பாவை அப்படியே ஒரு இயந்திரத்தில் கவிழ்த்து விடுவார்கள். அத்தனை டீயும், ஒரு இரும்பு உருளையில் வந்து சேரும். இந்த உருளைக்கு வரும் வழியிலும், உருளையிலும் பலமான சக்திவாய்ந்த காந்தங்கள் இருக்கும்; இந்த உருளை உருளும் போது, தப்பித் தவறி வந்திருந்த ஆணிகள் மற்றும் இரும்புத் துகள்களை கவர்ந்து விடும் - வெறும் டீ மட்டும், உருளையிலிருந்து டீ சேகரிக்கப்படும் பெரிய பாத்திரங்களுக்கு செல்லும். கிராமத்தில் அரிசியை சுத்தப்படுத்த நாம் எந்த முறையைக் கையாள்கிறோமோ, அதே விதி இங்கும் உபயோகப்படுத்தப் படுகிறது. எப்படி முறத்தால் அரிசியைப் புடைப்போமோ, அதே போல சீராக ஆடும் இரும்புத் தளங்கள் மூலமாக டீயை அனுப்புவார்கள். இந்த ஆட்டத்தில் டீயுடன் வந்திருக்கும் மணல் துகள்கள் மற்றும் இதர பொருட்களை சலித்து எடுத்து விடும்; வெறும் டீ மட்டும் பெரிய பாத்திரங்களில் சேகரிக்கப்படும்.

கலவை செய்யத் தேவையான டீ வகைகள் அதிகமாக இருந்தால் இந்த உருளையின் நேரமும் அதிகமாகும் - கலவை சீராகக் கலப்பதற்கு. அதே போல ஒரு கலவைக்கு அதிகமான அளவு வேண்டியிருந்தாலும், கலக்கும் நேரம் அதிகமாகும். இதில் கவனிக்க வேண்டிய இன்னுமொரு விஷயம் வெப்பம். இயந்திரங்கள் வேலை செய்யும் போது உராய்வால் வெப்பம் வருவதை தவிர்க்க முடியாது. வெப்பம் அதிகமாகி விட்டால் டீத்தூளைக் கருக்கிவிடும்; ருசி குறைந்துவிடும் ஆதலால், இந்தப் பகுதியில் இயந்திரத்தை வெகுநேரம் இயக்க முடியாது. இதற்காகவே டீப் பொட்டலம் கட்டும் ஆலைகளில் இரண்டு அல்லது மூன்று இயந்திரங்களை டீ சுத்தம் செய்து கலக்க வைத்திருப்பார்கள். ஒரு லோடு முடிந்ததும், இயந்திரத்திற்கு கொஞ்சம் ஓய்வு - அதன் சூடு தணிக்க! அப்போது இரும்புத் துகள்களையும், ஆணிகளையும் எடுத்துவிட்டு, அதை சுத்தம் செய்து விடுவார்கள்.

இப்படியாக கலக்கப் பெற்ற டீ ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து, சின்னப் பொட்டலங்களாக மாறும் கதையை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

வியாழன், நவம்பர் 16, 2006

தேநீர் - 5

இப்படி ஒரு வழியாக தேயிலைத் தோட்டத்திலிருந்து கிளம்பி, ஏலத்தில் கூவாமல், விரல், கை தூக்கி, தலையாட்டி எடுக்கப்பட்டு, மூன்று பேரால் மதிப்பிடப்பட்டு தொழிற்சாலையில் வந்திறங்கிய தேயிலைத் தூள்/இலை பொட்டலம் ஆவதற்குமுன் தேற வேண்டிய இன்னுமொரு தேர்வு - கலவை (அதாங்க BLENDING). நாம் கடையில் வாங்கும் டீப் பொட்டலம் ஒரே ஒரு தோட்டத்திலிருந்து வரும் ஒரே வகை டீயாக இருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு. காரணம் ஒரு பிராண்ட் என்று வரும் போது, அதனுடைய சுவை, மணம், நிறம் போன்ற குணங்கள் ஒரே சீராக இருக்க வேண்டும். ஒரு தோட்டத்தில் இந்த அளவு தேயிலை வளர வாய்ப்பில்லை. அதனால் எல்லா வகை (BRAND) டீப் பொட்டலங்களும் ஒரு குறிப்பிட்ட கலவைதான்.

இதைப் பற்றி சொல்வதற்கு முன்னால் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பௌதீக விளக்கம் - பல்க் டென்சிடி - (உள்ளடர்த்தி?). ஒரு லிட்டர் குவளையில் நீங்கள் வேர்க்கடலையை நிரப்பி, மற்றொரு லிட்டர் குவளையில் கோலிக்குண்டுகளை நிரப்பி இரண்டையும் எடை பார்த்தால், அனேகமாக கோலிக்குண்டுகள் இருக்கும் தட்டு கீழே போகும். கோலி, கடலை இரண்டும் ஒரு லிட்டர் அளவு தான் இருந்தாலும் அவற்றின் உள்ளடர்த்தி வேறுபடுவதால் இந்த விளைவு - கோலிக்குண்டின் எடை அதிகம். சரி இதற்கும் டீக்கும் என்ன சம்பந்தம்? இருக்கே! ஒவ்வொரு தோட்டத் தேயிலையும் இந்த உள்ளடர்த்தியில் வேறுபடும். டீப் பொட்டலங்களை நாம் எடை போட்டு வாங்கினாலும், ஒரு பொட்டலத்தில் டீ குறைவாக - அதாவது பத்து ஸ்பூனுக்கு பதிலாக ஒன்பது ஸ்பூன் டீ இருந்தால், உடனே நமக்கு கோபம்தான் வரும். டீக் கம்பெனியில் இருந்து ஆரம்பித்து, தெருமுனையில் இருக்கும் டீ விற்ற பெட்டிக்கடைக்காரர் வரை எல்லோரையும் திட்டித் தீர்த்திருப்போம் - ஏமாற்றுகிறார்கள் என்று. அந்த டீப் பொட்டலத்தை எடை போட்டுப் பார்த்தால் ஒன்றும் குறைவு இருக்காது - அளவு குறைந்ததற்கு காரணம் அந்த டீ வகை உள்ளடர்த்தி அதிகமாய் இருப்பதால் தான். என்னதான் பௌதீக விளக்கமெல்லாம் கொடுத்தாலும், வீட்டில் டீ போடும் அம்மாவின் முடிவுக்கு அப்பீலேது? அதனால் எல்லாக் கம்பெனியும், பௌதீகப் பாடம் எடுப்பதற்கு பதிலாக, இந்த டீக் கலவை கலப்பதற்கு முன்பாக ஒரு சாம்பிள் எடுத்து, இந்த உள்ளடர்த்தியை நிர்ணயம் செய்வார்கள். பொட்டலத்தில் எடையும், அளவும் கொஞ்சம் சீராக இருக்குமாறு வருவதற்கு உள்ளடர்த்தி ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருந்தால் நலம் என்று இதை நிர்ணயிப்பார்கள்.

ஆக ஒரு கலவைக்கு வேண்டிய முக்கியமான மூன்று குணங்கள்: சுவை, உள்ளடர்த்தி, விலை! இந்த சுவையில் நீங்கள் மணம், நிறம் போன்ற டீத் தன்மைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு விலை இருக்கும். மக்கள் மனதில் இந்த பிராண்ட் பற்றிய ஒரு நிர்ணயமும் இருக்கும் - இதன் மணம் நன்றாக இருக்கும், ஆனால் ஒன்றரை ஸ்பூன் போட வேண்டியிருக்கும் - என்றெல்லாம் வீட்டில் சொல்வார்கள். அந்த குறிப்பிட்ட பிராண்ட் கலவை செய்யும் போது, அதற்கு ஏற்ற சுவையும் (மணம், நிறம் உட்பட), உள்ளடர்த்தியும், விலையும் (அதாவது உற்பத்தி செய்ய ஆகும் செலவு - COST) வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உள்ளடர்த்தி மிகவும் குறைந்து போனால், பொட்டலத்தின் அளவை விட அதிகம் டீ போட வேண்டிய நிலை வந்து, பொட்டலம் கட்டுவதில் பிரச்சனை வரும்.

ஒரு கலவைக்கு இத்தனை தோட்டத் தேயிலைதான் என்று வரையறை கிடையாது - எத்தனை வேண்டுமானாலும் கலக்கலாம். ஆனால் கலவையில் தேயிலை வகைகள் அதிகம் ஆக ஆக, கலக்கும் நேரமும் அதிகமாகும். காரணம் கலவைகள் செஸ்ட் அளவில் நடக்கும்; ஒரு செஸ்ட் நாற்பது கிலோவுக்கும் அதிகம் - பொட்டலம் 250 கிராம்! ஒவ்வொரு பொட்டலத்திலும் சீரான கலவை வருவிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. வீட்டில் ஒரு டப்பா ரவா லாடு செய்ய ரவையும் சக்கரையும் கலப்பதிலேயே சமயத்தில் குளறுபடி வந்து, லாடு ரவையாகவோ, அல்லது சக்கரையாகவோ வந்து சேரும்! தொழிற்சாலையில் ஒரு லாரி நிறையா 250 கிராம் பொட்டலம் கட்ட வேண்டும் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இது எவ்வளவு கடினமான விஷயம் என்று புரியும்!
கிட்டத்தட்ட புலி, ஆடு, புல்லுக்கட்டு கதைதான்! இது சரியாக வரவில்லை என்றால் நஷ்டம் தான் - அது சுவை சரியில்லாததாலோ, அல்லது உற்பத்தி செய்யும் செலவு விற்கும் விலையை விட அதிகமாவதாலோ, அல்லது பொட்டலம் கட்டுவதில் பிரச்சனை வருவதாலோ இருக்கலாம். தொழிற்சாலையில் இந்த கலவையை நிர்ணயிப்பது ஒரு முக்கியமான வேலை என்பதை இன்னும் விபரமாகச் சொல்லத் தேவையில்லை.

இப்படியாக பதம் நிர்ணயம் செய்யப்பட்டு இந்த கலவை விகிதாசாரம் தொழிற்சாலையில் உள்ள சூப்பர்வைசருக்குப் போகும். அவரின் பொறுப்பு, அரைக் கிலோவிற்கு இவர்கள் செய்த கலவையை, ஒரு லாரி, அல்லது இரண்டு லாரி அளவுக்கு செய்து, பொட்டலம் போட அனுப்புவது! இதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

முந்தைய பதிவுகள்

தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

செவ்வாய், நவம்பர் 14, 2006

தேநீர் – 4

ஒரு வழியாக எலத்தை முடித்து விட்டு தொழிற்சாலை வந்து சேர்ந்தோம். மறு நாள் அவர் சொன்ன மாதிரியே என்னை டீ டெஸ்டிங் பிரிவுக்கு அழைத்து சென்று நடப்பதை விளக்கினார். இந்த ருசி பார்க்கும் பிரிவில் நிறைய டீ குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். சொல்லப்போனால் இது ஒரு கொடுமையான வேலை - முக்கியமாக டீயை ருசித்துக் குடிப்போருக்கு. முதலில் இங்கு டீ வெறும் டீத் தண்ணீர்தான் – அதாவது தேத்தண்ணீர் (நன்றி குமரன்) - சக்கரை, பால் போன்று எதுவும் கலந்திருக்காது. இரண்டாவதாக, ஒரு பெரிய ஸ்பூன் அளவுக்கு தேத்தண்ணீரை எடுத்து வாயில் வைத்து கொஞ்சம் கொப்பளிப்பது போல செய்து, துப்பி விடுவார்கள். அந்த கொஞ்ச நேரத்தில் அந்த டீயின் சுவையை நிர்ணயம் செய்து மார்க் கொடுப்பார்கள். ஒரு சமயத்தில் இருபதிலிருந்து நாற்பது கோப்பைகள் வரை தேத்தண்ணீர்கள் சாம்பிளாக இருக்கும்.

இந்த மாதிரியான சுவை நிர்ணயம் செய்ய ஒருவர் மட்டும் போதாது, அந்தப் பிரிவில் இருக்கும் அதிகாரிகளில் குறைந்தது மூன்று பேராவது அதே சாம்பிள்களை சுவைத்து தனித் தனியே மதிப்பெண்கள் போடுவார்கள். அப்புறமாக அதை கொஞ்சம் அலசிப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவார்கள். இந்த மாதிரி சுவை நிர்ணயம் செய்யும் அதிகாரிகள் சுவைப்பதற்கு முன்னால் கொஞ்ச நேரத்திற்கு (ஒன்று அல்லது இரண்டு மணி நேரம்) சுவை தூக்கலான பண்டம் எதுவும் சாப்பிட மாட்டார்கள்; புகை பிடிக்க மாட்டார்கள்.

இந்த சுவை பார்க்கும் இடமே கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு பெரிய அறையில் மேசையில் அத்தனை சாம்பிள்களும் (கோப்பையில் டீத் தண்ணீராக) வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சாம்பிளுக்கும் சமயத்தில் இரண்டு கோப்பைகள் (அல்லது மூன்று கோப்பைகள் கூட) இருக்கும். சுவை பார்க்கும் அதிகாரி ஒரு வெள்ளைத் துணியை முன்புறம் கட்டிக்கொண்டு படு சீரியசாக மூஞ்சியை வைத்துக் கொண்டு வருவார். சிலருக்கு சத்தம் இருக்கக் கூடாது - அதனால் கதவெல்லாம் மூடியிருக்கும். அவருக்கு துணையாக இரண்டு பேர் வருவார்கள். ஒருவர் கையில் ஒரு காகிதக் கத்தை (அட்டையோடு); அதில் அவர் ருசிபார்ப்பவர் சொல்லும் எண்ணை அல்லது ரகத்தைக் குறித்துக் கொள்வார். அந்த காகிதக் கத்தையில் அனைத்து சாம்பிள் நம்பரும், அது எந்த இடத்திலிருந்து வந்தது என்றும் எழுதியிருக்கும். ஆனால் ருசிபார்ப்பவருக்கு சாம்பிள் நம்பர் எழுதியிருக்கும் கோப்பை லேபிள் மட்டும் தான் தெரியும்.

கூட வரும் மற்றொருவர் கையில் ஒரு பெரிய பாத்திரம் இருக்கும். திருவிளையாடல் படத்தில் ஹேமநாத பாகவதராக வரும் பாலையா வெற்றிலை துப்புவதற்காக, அவர் சிஷ்யர் ஒருவர் ஒரு பாத்திரத்தை எடுத்து வருவாரே - நினைவிருக்கிறதா? அதே போலத் தான் இவரும் பாத்திரத்தை எடுத்து வருவார். ருசிபார்ப்பவர் வரிசையாக இருக்கும் கோப்பைகளில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் விட்டுக் கொண்டு கொஞ்சம் கொப்பளித்து, இந்த பாத்திரத்தில் துப்பிவிட்டு ஒரு எழுத்தையும், எண்ணிக்கையையும் சொல்வார்; அதை மற்றொருவர் குறித்துக் கொள்வார். இந்த அதிகாரி அத்தனை கோப்பையையும் முடித்தவுடன், அதே பிரிவிலுள்ள மற்றொரு அதிகாரி இதே போல ருசிபார்த்து சொல்வார். இது போல குறைந்தது மூன்று முறை நடக்கும். பின் அத்தனை முடிவையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். மூன்று பேரும் ஒரே மதிப்பு தந்திருந்தால் வேலை சுலபம். சமயத்தில் இருவர் ஒரே மதிப்பு தந்திருப்பார்; ஒருவர் கொஞ்சம் மாற்றி மதிப்பு தந்திருப்பார். அவர் மறுமுறை அந்த சாம்பிளை ருசிபார்த்து மற்றவர்களோடு ஒத்துக் கொண்டால் பெரும்பான்மை மதிப்பு செல்லும். மூவருமே ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தலைமை ருசிபார்க்கும் அதிகாரி வந்து ருசிபார்த்து அவர் தரும் நிர்ணயமே முடிவாகும். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கே எக்கச்சக்க டென்ஷன்! இத்தனைக்கும் எனக்கு டீ சாப்பிட அவ்வளவாகப் பிடிக்காது - அதுவும் பால், சக்கரை இல்லாமல்! ருசிபார்ப்பவருக்கும் எண்ணிக்கையை அலசி ஆராய்பவருக்கும் எப்படி இருந்திருக்கும்!!

இந்த மாதிரி ருசிபார்க்கப் படும் தேநீர் சாம்பிள்கள் வருவதை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். ஏலத்திற்கு வரும் தோட்டத் தேயிலை, பின் தொழிற்சாலையில் பிளண்ட் என சொல்லப்படும் கலவை நிர்ணயம் செய்யும் போது பிராண்ட் (வகை) ருசி வருகிறதா என்று நிர்ணயம் செய்ய வருபவை, பின் மற்ற நிறுவன பிராண்ட்கள், அதிலும் புதிதாக வந்த வகைகளின் சுவை நிர்ணயம் செய்ய வருபவை. இவற்றில் உள்ள முக்கியமான வித்தியாசம் - முதல் வகையில் வருபவை ஒரு தோட்டத் தேயிலை, இரண்டாம் மூன்றாம் வகையில் பல தோட்டத் தேயிலை வகைகள் கலந்திருக்கும். அதைத் தவிர சில வகைகளில் டீ மசாலா எல்லாம் வேறு கலந்திருப்பார்கள். இப்படி வாரத்திற்கு நூற்றுக்கும் மேல் சுவை பார்ப்பது என்பது என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் கடினமான வேலைதான். என்னை 'ருசிபார்க்கிறாயா' என்று கேட்டார்கள் - 'வேண்டாம்' என்று வேகமாகத் தலையாட்டிக் கொண்டே சொன்னேன்...சிரித்துக் கொண்டே 'சரி' என்று சொல்லிவிட்டார்கள்.

அடுத்த பதிவில் கலவை போடுவது பற்றி.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

ஞாயிறு, நவம்பர் 12, 2006

தேநீர் – 3

முன் குறிப்பு:
சென்ற பதிவின் பின்னூட்டத்தில் குமரன் தேநீர் என்பதே சரி என்று விளக்கியிருந்தார். ஆகையால் இப்போதிலிருந்து தேனீர் தேநீர் ஆகிறது!

வாழ்க்கையில் அதற்கு முன் ஏலத்திற்கு சென்றதில்லை; ஆகையால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு. போதாக் குறைக்கு எனக்கு பயிற்சி தரும் அதிகாரி திருப்பித் திருப்பி எக்கச்சக்கமான விதிகளை (அதான், தலையாட்டாதே, கை தூக்காதே) வேறு சொல்லி கொஞ்சம் பயத்தையும் கிளப்பி விட்டார். கையில் ஏற்கனவே தயார் பண்ணிய திட்டப் பட்டியல், பேனா, கணக்குப் பொறி (அதான் Calculator) என்று அவரோடு ஏலம் எடுக்கச் சென்றேன். கொஞ்சம் பெரிய ஒரு அறை, வரிசையாக மேஜை-நாற்காலிகளோடு. அறையே சமதளமாக இல்லாமல் படிப் படியாக உயர்ந்து கொண்டு போனது - திரையரங்கு போல. அந்த அறையில் டீத்தூளே இல்லை. வந்திருந்த அனைவரிடமும் ஏலத்தில் வரும் டீ பற்றிய விபரம் - காகிதக் குப்பை!

டீ வாங்க ஏலத்திற்கு வந்திருந்தாலும், டீயை நேரில் பார்க்க முடியாது; வெறும் காகித விபரம்தான்! டீத்தூளை 'செஸ்ட்' (Chest) என்று சொல்லப்படும் தக்கையான மர டப்பாக்களில்தான் வைத்திருப்பார்கள். ஒரு டப்பா கிட்டத்தட்ட நாற்பதிலிருந்து நாற்பத்திமூன்று கிலோ வரை இருக்கும். ஏலம் எடுக்கக் குறிப்பிடும் அளவு ஒரு 'லாட்' (Lot) - ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை டப்பாக்கள் 'லாட்' என்று சொல்லப் படும்; அது பத்து டப்பாவாகவும் இருக்கலாம், அல்லது கொஞ்சம் அதிகமோ, குறைவாகவோ இருக்கலாம். அது டீத் தோட்டத்தைப் பொறுத்தது. குறைந்தபட்ச விலையில் ஏலம் ஆரம்பிக்கும்; சிலர் தலையை ஆட்டுவார்கள் - விலை ஐம்பது பைசா ஏறும். சிலர் கையைத் தூக்குவார்கள் - விலை இன்னும் ஏறும். ஏலம் விடுபவர் எப்படி விலையை ஏற்றுகிறார் என்று - சில சமயம் ஐந்து பைசா; சில சமயம் ஐம்பது பைசா - கடைசி வரையில் பிடிபடவில்லை.

என் பயிற்சி அதிகாரி வாங்கியதை எழுதி, கணக்குப் பார்த்து அவரிடம் காட்டிக் கொண்டிருந்தேன் - கூடிய மட்டும் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்து கொண்டே! எனக்கு ஒரு கெட்ட பழக்கம் - பேனா மூடியை வாயில் கடித்துக் கொண்டிருப்பேன். பேனாவைத் தூக்கினால் எங்கே நான் அதிகம் விலை கேட்கிறேன் என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்து மூடியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன்; எழுதியவுடனேயே பேனாவை மேஜையில் வைத்து விடுவேன் - கையில் இருந்தால் தானே பிரச்சனை என்று! இருபத்தி இரண்டு வயதில் ஆடாது அசங்காது உட்கார்ந்திருப்பது என்பது கொஞ்சம் கடினமான வேலை! ஒரு வழியாக ஏலம் முடிந்து வருகையில் 'டீ சாப்பிடுகிறாயா' என்று கேட்டார் - 'வேண்டாம்; காப்பிதான்’ என்று சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டே 'ஒரு சின்ன ஏலத்திற்கு வந்ததற்கே டீ வேண்டாம் என்கிறாயே, உன்னை அடுத்ததாக டீ டேஸ்டிங் டிபார்ட்மென்ட்டுக்குத் தான் அனுப்ப வேண்டும்' என்றார்! தோராயமாக கணக்குப் பண்ணியதில் அந்த ஏலத்தில் 10 லக்ஷம் ரூபாய்க்கு மேல் மொத்த விற்பனை ஆகியிருக்கும் என்று தோன்றியது - இது சின்ன ஏலமாம்!! வாழ்க்கையில் அதுவரை சில்லறையையே அதிகமாய்ப் பார்த்தறியாத சின்னப் பையனிடம் பத்து லக்ஷம் ரூபாய் ஏலத்தை 'சின்னது' என்று வர்ணித்த அந்த அதிகாரியின் முகத்தை இன்னமும் மறக்க முடியவில்லை!

ருசிபார்க்கும் படலம் அடுத்த பதிவில்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 2
தேநீர் – 1

பின் குறிப்பு:
சென்ற பதிவில் சொல்ல மறந்த ஒரு விஷயம். 'டஸ்ட்' மற்றும் CTC தவிர முழுஇலை (Whole Leaf) வகையும் உண்டு. இது டார்ஜிலிங் பகுதியில் மற்றும் சில குளிரான மலைப் பகுதிகளில் வளரும் வகை. இந்த வகையை வென்னீரில் ஊற வைத்து (Brew) பருக வேண்டும். நம்மூரில் செய்வது போல இதை தண்ணீரோடு கொதிக்க வைத்தால் சுவையாக இருக்காது.

வியாழன், நவம்பர் 09, 2006

தேனீர் – 2

என்னுடைய பயிற்சியில் நான் செல்லாத இடம் - டீ எஸ்டேட் தான். நேராகப் போகாவிட்டாலும், டீ வளர்க்கும் முறை, இலை பறித்து டீ யாக அந்த இலைகளை மாற்றுவதை சித்திரப் படமாகப் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் நேரில் இன்னமும் பார்க்கவில்லையே என்ற குறை இருக்கத்தான் செய்கிறது.

டீ யில் நிறைய வகைகள் உண்டு. சிலவற்றிற்கு மணம் கூடுதலாக இருக்கும்; சிலவற்றிற்கு ருசி கூடுதலாக இருக்கும். இது ஒரு வசதி; எல்லோருக்கும் ஒரே சுவை பிடிக்கும் என்று சொல்ல முடியாதே. இப்படிப் பலவகைகள் இருந்தால் தான், பல கம்பெனிகள், பல வகைகள் (பிராண்டு), என்று எல்லோரும் கொஞ்சம் பணம் பண்ணலாம். சில டீ வகைகள் கனமாக இருக்கும்; சிலவற்றிற்கு இலை பெரிசு. இந்த டீ இலைகளை காய வைத்து, அதை ஒரு மாதிரியாக பொடி பண்ணினால் அதை 'டஸ்ட்' டீ என்பார்கள். இதே இலையை சீராக வெட்டி, முறுக்கி, சுருட்டினால் அது சி.டி.சி. (CTC = Cut, Turn, Curl) வகை. டீ வாங்கும் போது இது பற்றியெல்லாம் தெரியாது. கடையில் வாங்கும் போது, கடைக்காரர் விலை அதிகமான ஒரு வகையைக் காண்பித்து 'இது சி.டி.சி' என்று பெருமையாக சொன்னபோது, 'அப்படின்னா என்னாங்க?' என்று கேட்கக் கூச்சப்பட்டு, 'அப்ப அதே கொடுங்க' என்று ஜம்பமாய் பெருமையோடு வாங்கி வந்திருக்கிறேன்! வேலைக்கு சேர்ந்து, கல்கத்தாவில் கிதேர்புர் தொழிற்சாலையில், இது பற்றி 'ப்ளோர் சூப்பர்வைசர்' ரமேஷ் விளக்கியவுடன், 'அடச்சே - இதுக்காகவா அப்போது அதிகம் பைசா கொடுத்தேன்' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

முதலில் டீ ஏலம் பற்றி. ஏலத்திற்கு முன்னாலேயே, ஒவ்வொரு கம்பெனிக்கும், அந்த ஏலத்தில் வரும் டீ வகைகள் (எந்த தோட்டம், என்ன ரகம், எத்தனை கிலோ, குறைந்தபட்ச விலை) பற்றி விபரமாக செய்தி வந்து விடும். இதோடு, டீ தொழிற்சாலையில் உள்ள டீ இருப்பு நிலை, வரும் வார/மாத டீ திட்டம் (அதாங்க எந்த பிராண்ட் டீ எத்தனை பொட்டலம் போட வேண்டும் என்கிற பிளான்) எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, டீ வாங்கும் பிரிவில் உள்ள அதிகாரிகள் ஒரு திட்டம் தீட்டுவார்கள். அதில் ஏலத்திற்கு யார் போவது என்றும் முடிவெடுப்பார்கள். வழக்கமாக ஏலம் எடுக்கச் செல்லும் அதிகாரிக்கு 'உதவி' என்ற பெயரில் நான் கல்கத்தாவில் டீ ஏலத்திற்கு சென்றேன்.

இந்த ஏலத்திற்கு செல்லும் முன், எத்தனை கிலோ டீ வாங்க வேண்டும், எத்தனை ரூபாய் வரை செல்லலாம், எந்த எந்த வகை டீ வாங்க வேண்டும் என்றெல்லாம் டீ வாங்கும் பிரிவின் அதிகாரிகள் கலந்தாலோசித்து உருவாக்கிய திட்டத்தைப் பற்றி எனக்கு விளக்கினார், ஏலத்திற்கு செல்லும் அதிகாரி. இது ஒரு லேசான விஷயம் இல்லை. எல்லாவற்றிற்கும் - அதாவது, வாங்க வேண்டிய அளவு, வகை, விலை - குறைந்தபட்சம், அதிகபட்சம் என்றெல்லாம் ஒரு அட்டவணை போட்டு எடுத்துக் கொள்வோம். என் வேலை, டீ வாங்கும் அதிகாரி ஏலம் எடுத்தவுடன், எடை, விலை எல்லாவற்றையும் குறித்துக் கொண்டு, கணக்குப் போட்டு மொத்த திட்டத்தின் படி இருக்கிறோமா, இல்லையா என்று சரிபார்த்துக் கொண்டிருப்பது. இதை விட எனக்கு அந்த அதிகாரி சொன்ன ஒரு கண்டிப்பான விதி - 'தப்பித் தவறிக்கூட தலையை ஆட்டாதே, கையைத் தூக்காதே (மூக்கு அரித்தாலும் சொரியாதே!), ஒரு சிலையைப் போல இரு' என்பதுதான். ஒன்றும் புரியாவிட்டாலும், தலையை வேகமாக ஆட்டி விட்டு அவரோடு சென்றேன்.

அடுத்த பதிவில் நான் ஏலத்திற்குப் போன கதை.

முந்தைய பதிவு

தேனீர் – 1

புதன், நவம்பர் 08, 2006

தேனீர் – 1

இப்போதெல்லாம் காப்பிக்கு பதிலாக ஒரு நாளைக்கு ஒரு கோப்பை தேனீர் குடிக்கிறேன். டீ, சாய், சாயா என்றெல்லாம் பாசமாக அழைக்கப் படும் தேனீருக்கும், தேனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. சொல்லப் போனால் இரண்டும் எதிரெதிர் - ஒன்று கசக்கும், மற்றொன்று இனிக்கும். ஒன்றை சூடாகத்தான் குடிக்க வேண்டும், மற்றொன்றை அப்படியே குடிக்கலாம் (தேன் கூட்டிலிருந்து - தேனடையிலிருந்து - எடுத்த பிறகுதான்). இருந்தாலும், பால் கலக்காத தேனீரில், தேனைக் கலந்து குடித்தால் ஜலதோஷத்திலிருந்து விடுதலை என்று சொல்வார்கள். நான் பரிசோதனை செய்து பார்த்ததில்லை.

சிறுவயதில் வீட்டில் டீ கிடையாது; காப்பிதான். கொஞ்சம் வளர்ந்து பள்ளியில் படிக்கும் காலத்தில் வீட்டில் டீ வந்தது. அதுவும் 'டஸ்ட்’ டீ. காரணம் பட்டுக்கோட்டையில் வசிக்கும் போது அருகே ஒரு தூரத்து உறவினரும் பட்டுக்கோட்டைக்கு உத்தியோக மாற்றலாகி வந்தார். அவர் ப்ரூக்பாண்ட் கம்பெனியில் வேலை செய்ததால், வீட்டிற்கு வந்த போது டீயின் பெருமைகளை சொல்ல, முதல் முதலாக என் வாழ்வில் நுழைந்தது டீ. பாத்திரத்தில் தண்ணீரை வைத்து, டீத்தூளைப் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, பால், சக்கரை கலந்து குடித்தோம். இருந்தாலும், இது வழக்கமாக ஆகாமல், உறவினர் வீட்டிற்கு வரும்போது அவருக்கு கொடுப்பதற்காக என்று மட்டும் டீ உபயோகப்பட்டது. அப்போது தெரியாது, இந்த டீதான் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பொருளாக மாறப் போகிறது என்று.

அக்கவுன்டன்சி (C.A.) முடித்து முதல் வேலை ஹின்துஸ்தான் லீவரில் மேலாண்மை பயிற்சியாளராக (அதாங்க Management Trainee) சேர்ந்தேன். மும்பாயில் சேர்ந்த உடனேயே என்னை லிப்டன் நிறுவனத்திற்கு மாற்றினார்கள். அப்போது லிப்டனில் இருந்த இரண்டு பெரிய பிரிவுகள் - டீயும், எண்ணை சம்பந்தமான (டால்டா, வனஸ்பதி, மில்கானா மற்றும் இன்ன பிற பொருட்கள்) பிரிவும் தான். இதைத் தவிர மாட்டு/கோழித் தீவனப் பிரிவும் இருந்தது. இந்த பதினெட்டு மாத பயிற்சியில் பெரும்பான்மையான காலத்தை தேனீர்ப் பிரிவிலேயே கழித்தேன். ஏலத்தில் டீ வாங்குவது, பின் தொழிற்சாலையில் 'ப்ளெண்ட்' (Blend) என்று சொல்லப் படும் கலவை நிர்ணயிப்பது, கலப்பது, பொட்டலம் கட்டுவது (அதாங்க Packing), பின் பொட்டலத்தை வினியோகஸ்தர்களுக்கு எந்த வழியாக அனுப்பி வைப்பது (Logistics), எப்படி கொள்முதல் வினியோகஸ்தர்களிடமிருந்து (C&FA), டிஸ்ட்ரிபியூட்டர்கள் (Distributors) என்று சொல்லப்படும் சிறு வினியோகஸ்தர்களுக்கு, பின் அங்கிருந்து கடைகளுக்கு அனுப்புவது, இந்த மொத்த விஷயத்தையும் எப்படி கண்காணித்து கணக்கு எழுதுவது (Accounting) என்று ஒவ்வொன்றாகப் பயிற்சி.

கம்பெனியின் வியாபார ரகசியங்களைத் தராமல், இங்கு சில பகுதிகளாக தேனீர் பொட்டலம் பிறக்கும் கதையையும், சில சுவாரசியமான சங்கதிகளையும் தரலாம் என்று எண்ணம். முன்பு என் பதிவுக்கு வந்து காப்பி குடித்த (படித்த) அனைவரும் இந்த தேனீர் கடை(தை)க்கும் வருவீர்கள் என்று நம்புகிறேன்.

பின் குறிப்பு: இது ஒரு நினைவஞ்சலி அல்ல; இந்த தொடர் முடிந்ததும் டீ குடிப்பதை நிறுத்துவதாக இல்லை.

ஞாயிறு, அக்டோபர் 15, 2006

ரோடு

இந்த வருடமும் ரோடு போட்டாயிற்று. நியூஜெர்சி வந்ததிலிருந்து ஒவ்வொரு வருடமும் கோடை முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பிக்கும் போது இது ஒரு வேலை. வீட்டு கராஜிலிருந்து, சாலை வரை இருக்கும் 'டிரைவ் வே'க்கு (Drive way) 'சீலர்' (Sealer) (அதாங்க - தார்) போட வேண்டும். இது குளிர்காலத்தில் பனி படிந்து சாலை குலையாமல் இருக்க உதவும். இதை நாமே செய்தால், ஒருவிதமான திருப்தி (செலவும் குறைவு!); ஒரு உடற்பயிற்சி போலவும் ஆயிற்று என்று நான் தான் செய்வது வழக்கம். இதற்கு தேவையெல்லாம், இரண்டு டப்பா தார், ஒரு நீண்ட கழியின் முனையில் ரப்பர் சட்டம் (தமிழில் இழுப்பான் என்று சொல்ல ஆசை - சரியா என்று தெரியவில்லை).

இந்த முறை தார் போடுகையில், சண்டீகரில் தார் ரோடு போட்டுக் கொண்டிருந்த பணியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. 1993ல் சண்டீகரில் இருந்த போது, பஞ்சாபி தெரியாது, ஹிந்தியும் தட்டுத் தடுமாறித்தான் வரும். ஒரு ஞாயிறு வெளியே சென்று விட்டுத் திரும்பும் போது, சண்டீகருக்கு சற்று வெளியே, புது தார் சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். காரெல்லாம் பக்கத்திலுள்ள குண்டுக் குழியுமாய் இருந்த மண் சாலையில் மெதுவாக ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது.

இந்தப் பணியாளர்களெல்லாம், பக்கத்திலேயே குடிசை போட்டுக் கொண்டு, வேலை செய்து கொண்டிருந்தார்கள். சாலை போட்டுக் கொண்டிருந்த பணியாளர்களில் ஒருவர் தமிழில் ஏதோ சொல்ல, ஒரே சந்தோஷம். வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தி விட்டு, இறங்கி, கொஞ்ச நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் சேலம், திருநெல்வேலி பக்கத்திலிருந்து வந்தவர்கள்.

வேலை கிடைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே வந்தவர்கள். இவர்களில் சிலர் தமிழ்நாட்டிலிருந்து வெளியே வந்து 30 வருடங்கள் ஆகி விட்டன. கர்நாடகம், ஆந்திரா, மஹாராஷ்டிரம் என்றெல்லாம் இடம் பெயர்ந்து சண்டீகருக்கு வந்து விட்டார்கள். இந்தக் குழுவில் இருந்தவர்கள் ஒரு 7 அல்லது 8 குடும்பங்கள்; மற்றும் சிலர் இந்தக் குடும்பங்களில் திருமணம் செய்து கொண்டவர்கள். அனேகமாக நடுவயது பணியாளர்கள் (ஆண், பெண் இருவருமே) அனைவரும் ஆறு அல்லது ஏழு மொழிகளில் பேசுகிறார்கள். ரோடு போடுவது, கட்டிடம் (முக்கியமாக, அணை அல்லது ஒரு பெரிய கட்டிடம் கட்ட; குட்டி வீடு எல்லாம் கட்ட வருவதில்லை) கட்டுவது போன்றவற்றையே பணியாக ஏற்கிறார்கள்.

காண்டிராக்ட் எடுத்தவர்கள் இவர்களை அணுகி இரண்டிலிருந்து எட்டு மாதங்களுக்கு மொத்தமாய் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்கிறார்கள். எப்போதும் ஒரு விதமாய் நகர்ந்து கொண்டே இருப்பதால், இவர்கள் குடியிருப்பில் இருக்கும் சாமான்களும் குறைவாக வைத்திருக்கிறார்கள். இரண்டு வேலைகளுக்கு இடையே சில சமயம் மூன்று மாதங்கள் வரை விடுப்பும் வருகிறது. அப்போதெல்லாம், சிலர் சொந்த ஊருக்கு சென்று அங்கு இருக்கும் மற்ற உறவினர்களைப் பார்த்து விட்டு வருகிறார்கள். இந்த மாதிரி விடுப்பில் செல்லும் போது சிலரின் திருமணமும் முடிந்து, குடும்பத்தோடு இந்தக் குழுவில் வந்து சேர்கிறார்கள். வேறு சிலர் பிற மாநிலங்களில் வேலை செய்யும் போது, அங்கு கூட வேலை செய்தவர்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கியும் விடுகிறார்கள்.

இவர்கள் குழந்தைகளும் இவர்களோடேயே இடம் இடமாய் மாறி வருவதால், தொடர்ந்து ஒரு பள்ளியில் படிப்பது என்பது அதிகம் இல்லை. இவர்கள் குழுவிலேயே சிலர் குழந்தைகளுக்கு எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுக்கிறோம் என்றார்கள்; இருந்தும் இது மிகச் சீராக நடப்பதாகத் தெரியவில்லை. சண்டீகரில் சில குழந்தைகளும் இவர்களுக்கு வேலைக்குத் துணையாக இருப்பதைப் பார்த்தேன்; வருத்தமாக இருந்தது. இப்போது பதினான்கு வயது வரை சிறுவர்/சிறுமியரை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று சட்டம் வந்திருக்கிறது; இது இவர்களுக்கு எவ்வளவு தூரம் உதவும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

மன்னார்குடியில் சாலை போடு பணியாளர்களுக்கு அனேகமாக காலில் செருப்பு இருக்காது; இருந்தாலும் வெறும் சான்டல் செருப்புதான். சிலர் சாக்குப் பைகளை காலில் சுற்றி கயிறால் கட்டி நடப்பார்கள். சூடான (கொதிக்கும்!) தார் தரையில் எப்படித்தான் நடப்பார்களோ என்று இருக்கும். சண்டீகரில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. செருப்பும், பூட்சுகளும் உபயோகத்தில் இருந்தன.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அருகே இருந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், காரில் இருந்த ஆரஞ்சுப் பழங்களை கொடுத்து விட்டு வந்தேன். தமிழ் மக்களைப் பார்த்து பேசிய மகிழ்ச்சி, வேலைக்காக மாநிலம் விட்டு வெகுதூரம் வந்து கஷ்டப் படுவதையும், குழந்தைகளுக்கு படிக்க முடியாமல் வேலை செய்வதையும் பார்த்ததில் வருத்தம், என்று ஒரு குழப்பமான உணர்வோடு என் ரூமுக்கு வந்து சேர்ந்தேன். மற்ற மக்களுக்கு நல்ல வழி (சாலை) ஏற்படுத்தி விட்டு, தங்களுக்கு ஒரு வழி கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளி, செப்டம்பர் 29, 2006

ஆறு வார்த்தைக் கவிதைகள்!

1. கோழி
கூண்டிலே கோழி
காய்ச்சலோ இல்லையோ
கொல்லத்தான் போகிறார்கள்!

2. வள்ளலின் கொடை
முல்லைக்குப் பெருமை
வள்ளலின் தேராம்.
தேருக்கோ வருத்தம்தான்!

3. ஜனநாயகப் போர்
போரிட்டு வென்ற ஜனநாயகம்
ஓட்டுக்கும் ஆட்சிக்கும் ஆள்தானில்லை.

பிகு: காப்பி குடிப்பதை நிறுத்தி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப் போகிறது. வித்தியாசமும் தெரியவில்லை; சபலமும் வரவில்லை.

ஞாயிறு, செப்டம்பர் 03, 2006

காப்பி – 9

காப்பியின் காரணமாக எனக்குள் எழுந்த உணர்ச்சிகள் அதிகம். முதலில் என்னை வெறுப்பேற்றும் சில விஷயங்கள். சிலர் காப்பி அருந்தும் போது 'சர்ர்ர்'ரென்று உறிஞ்சுவார்கள். எனக்கு, சிறு வயதில் மாதவனூர் கிராமத்தில், மாட்டுக்கு தவிட்டுத்தண்ணீர் காட்டுகையில் அது நாக்கை நீக்கி உறிஞ்சிக் குடிக்கும் நினைவுதான் வரும். நிச்சயம் எனக்கு கோபம் வரும்; கட்டுப் படுத்திக் கொள்வேன். இரண்டாவதாக சிலர் காப்பியை நிரம்பக் குடித்துவிட்டு, மிக அருகே நின்று பேசுவார்கள். அவர்கள் வார்த்தையெல்லாம் காப்பி மணம். இதுவும் எனக்கு கோபத்தை வரவழைக்கும் ஒரு விஷயம். இந்த இரண்டைத் தவிர இப்போதெல்லாம் வரும் மற்ற உணர்ச்சிகள் ஒரு விதமான சந்தோஷமும், ஆச்சரியமும் தான். நான் விரும்பிக் குடிக்கையிலே சந்தோஷம்; இந்தக் காப்பி சம்பந்தமான நினைவுகள் தரும் ஆச்சரியம்.

மன்னார்குடியில் இந்தக் காப்பிக்காக, சீக்கிரமே எழுந்து, பால் காரர் தெரு முனையில் வரும் போதே மடக்கி பால் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அவசரமாக வருவோம். காப்பியின் மேல் அவ்வளவு ஒரு பற்று (வெறி). இது எனக்கு மட்டுமல்ல; தெருவில் உள்ள முக்கால்வாசி வீடுகளில் அந்த சொசைட்டி பால் தான். பால் வர கொஞ்சம் தாமதமாகிவிட்டால், தெரு முனையில் ஒரு பெரிய கும்பலே பாத்திரங்களோடு காத்திருக்கும்! எல்லொருக்கும், காலைக் காப்பியின் மேல் அவ்வளவு ஒரு பிடிப்பு. பண்டிகைக் காலங்களில், பால் தட்டுப் பாடு காரணமாக, பால் காரர் கொஞ்சம் கடுபிடியாக இருப்பார். மற்ற நாளில் அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பு மறைந்து, கோபம் தெரியும். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு வாசலில் தான் வந்து பால் வாங்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்! தெருவில் அனேகம் பேர் முகத்தில் கோபம் தான் தெரியும். அதைப் பார்க்கும் போது ஒரு டம்ளர் காப்பி எப்படி மனிதர்களை மாற்றுகிறது என்று மிக நன்றாகத் தெரிந்து கொள்ளலாம்.

சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது காப்பி சூடாக இல்லை என்றலோ, அல்லது பாலோ, சக்கரையோ குறைவு (அல்லது அதிகம்) என்றோ அம்மாவோடு சண்டை போட்டிருக்கிறேன், கோபித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் குற்ற உணர்வும், அதிக வருத்தமும் வருகிறது - இப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று. இப்போது, முதல் வேளை போட்ட காப்பி (சமயத்தில் முதல் நாள் மாலை பொட்டதாக் கூட இருக்கும்), அதிகமாக இருந்து விட்டால், அதிகம் யோசிக்காமல், அதை எடுத்து, பால் கலந்து, மைக்ரோவேவ் செய்து சாப்பிடுகிறேன். இதை 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்று எடுத்துக் கொள்வதா, அல்லது, நான் வளர்ந்து கொஞ்சம் மனிதனாயிருக்கிறேன் என்று எடுத்துக் கொள்வதா என்று தெரியவில்லை.

அலுவலகத்தில் எத்தனை முறை “I am not in a good mood; I need coffee” என்று ஒரு சாக்கு வார்த்தையைக் கேட்டிருப்பேன்! சிறு குழந்தையாக் இருக்கையில் யாரும் காப்பி குடித்ததில்லை. அப்போது மட்டும் மூடு நன்றாக இல்லையா என்ன? இந்த காப்பி பழக்கமும், மூக்குப் பொடி அல்லது புகையிலை போடும் பழக்கமும் ஒன்றே! மனித உடம்பில், மனத்தில் ஒரு தேவையை ஏற்படுத்திக் கொண்டு, அந்த தேவைக்கு கடைசியில் அடிமை போலாகி, தேவை பூர்த்தியாகாத போது கோபம் வந்து, அதனால் கூட இருப்பவர்களின் நிம்மதியையும் குலைத்து தன்னையும் வருத்திக் கொள்வது ஒரு விதமான பைத்தியக்காரத்தனம். இதை நானும் செய்திருக்கிறேன். உணர்ந்து ஒப்புக் கொள்ள கொஞ்ச வருடங்கள் ஆகி விட்டன. இருந்தாலும், இந்த வஸ்து தந்த சந்தோஷங்களை பொய் என்று ஒதுக்கவும் முடியவில்லை. அதன் விளைவே இந்தத் தொடர்.

இப்போது மனம் கொஞ்சம் பக்குவப் பட்டு இருக்கிறது. இதற்காக 'வீட்டிலே யாருக்கும் காப்பி கிடையாது; இருந்தால் தானே குடிக்கிறோம்' என்றெல்லாம் கிளம்பப் போவதில்லை. அது 'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்னும் நரியின் கதைதான். சென்ற பதினெட்டு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக சக்கரையை நிறுத்தி, அளவையும் குறைத்து, இப்போது ஒரு நாளைக்கு ஒரு கோப்பை என்று வந்திருக்கிறேன். ஒரு முடிவுரை போல் காப்பியைப் பற்றி பதிந்து விட்டு, பழக்கத்தை விட்டு விடலாம் என்று எண்ணம். இந்தப் பதிவோடு, காப்பி தொடரும் முடிகிறது - ஒரு விதத்தில் என் காப்பிக் கடையும் மூடுகிறது. இதில் வருத்தம் இல்லை :-) உணர்ந்து, அறிந்து எடுத்த முடிவு - ஆகையால் ஒரு விதமான அமைதியும் முழுமையும் தெரிகிறது.

பின்னூட்டமிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

முந்தைய பதிவுகள்
காப்பி - 8
காப்பி - 7
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1

சனி, செப்டம்பர் 02, 2006

காப்பி – 8

இந்தக் காப்பி வெறும் குடிக்கும் திரவமாக மட்டும் இல்லை. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இது ஒரு சமூக கலாச்சார விஷயம். வீட்டுக்கு வருபவர்களுக்கு அனேகமாக முதல் உபசாரம் - 'காப்பி சாப்பிடுகிறீர்களா?' என்பது தான். கிராமங்களில் இன்னமும் நிறைய பேர் 'மோர் குடிக்கிறீகளா?' என்று கேட்டாலும், காப்பி குடிப்பதை விசாரிப்பவர்கள் அதிகம். காப்பி திரவமாதலால், 'குடி' என்கிற வார்த்தைதான் சரியானது. ஆனால் தமிழ்நாட்டில் காப்பிக்கு ஒரு முக்கியத்துவம் - அதனால் 'சாப்பிடு' என்கிற வார்த்தையை அதிகம் பேர் உபயோகிக்கிறார்கள். டீயையும் 'சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்பவர் அதிகம் இருப்பினும், விகிதாசாரத்தில் (என் கணக்குப் படி) காப்பியை விட அது குறைவுதான். சிறு வயதில் இந்த மாதிரி ஒரு உபசரிப்பில், மதுரையில் ஒரு வீட்டில், சுக்கு காப்பி குடித்திருக்கிறேன்; ஜிவ்வென்று மிக வித்தியாசமான ருசி.

கல்யாணப் பரிசு படத்தில் கூட, அக்கம் பக்கத்து பெண்களை மனைவி வீட்டிற்கு அழைத்தபோது டணால் தங்கவேலு இப்படித்தான் கூறுவார்: "காப்பி கீப்பி சாப்பிடறீங்களா? என்னத்துக்கு வீட்டில சாப்பிட்டு வந்திருப்பீங்க". தமிழ் திரைப்படங்களில் காப்பி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இரு கோடுகள் படக் கதையே ஜெமினி கணேசன் சௌகார் ஜானகியிடம் காப்பி கேட்டு வாங்காவிட்டால் வந்திருக்காது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு படத்தில் பாடிய பாடலில் டி.ஏ. மதுரம் இந்த மாதிரி பதில் பாட்டு பாடுவார்:
"பட்டனத் தட்டி விட்டா
இரண்டு தட்டுல இட்டிலியும்,
காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்".

இது போல இன்னுமொரு பழைய பாடலில் (திரைப் படம் மறந்து விட்டது) இந்த வரிகள் வரும்:
“மாப்பிள்ளை டோய், மாப்பிள்ளை டோய், மணியான மதறாசு மாப்பிள்ளை டோய்
காப்பியில பல் தேய்க்கிற மாப்பிள்ளை டோய், கோப்பையில தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்"
இங்கே அமெரிக்காவில் பெரும்பான்மையானா வீட்டிலே உள்ள ஆண்களுக்கு இவ்வரிகள் பொருந்தும். இன்னும் எத்தனையோ படங்களில் காப்பி ஒரு முக்கியமான இடம் பிடித்திருக்கிறது.


காப்பி சம்பந்தப் பட்ட விளம்பரங்களில் மனதிற்கு மிகவும் பிடித்து, நினைவில் இன்னமும் பசுமையாக இருப்பது, உசிலை மணியின் "பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு" நரசுஸ் காப்பிதான். இதைத் தவிர, 'பில்டர் காப்பியா?" என்று வியந்து கேட்கும் அம்மணியின் முகபாவம் (ப்ரூ), அரவிந்த்சாமி வரும் காப்பி விளம்பரம் (ப்ரூ?) இதெல்லாமும் நினைவில் இருக்கிறது. கும்பகோணத்தில் ஒரு முறை தீபாவளி சமயத்தில் (எண்பதுகளில்), ஒரு பிரபலமான காப்பிக் கடையில், ஒவ்வொரு முறை காப்பி வாங்கியவுடன் ஒரு கூப்பன் தந்து (எடைக்குத் தகுந்த மாதிரி), ஒரு குறிப்பிட்ட அளவு கூப்பன் சேர்ந்தவுடன் 'எவர்சில்வர் டம்ளர் டபரா தருகிறோம்' என்று சொல்லி விளம்பரப்படுத்த, விடுமுறைக்காக கும்பகோணம் சென்றிருந்த நாங்கள் காப்பிப் பொடி வாங்கி, கூப்பனை உறவினரிடம் டம்ளருக்காகக் கொடுத்து வந்தது ஞாபகம் இருக்கிறது.

காப்பி முதன் முறையாக எப்போது மனிதர்களால் அருந்தப் பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை. மறைந்த என் பாட்டி சிறுமியாக இருக்கும் போது அவர் தாத்தவே காப்பி குடித்திருக்கிறார் என்பது அவர் (பாட்டி) சொல்லித் தெரியும். சூடான காப்பி டம்ளரை, தன் அங்கவஸ்திரத்தால் (என் பாட்டியின் தாத்தா) பிடித்துக் கொண்டு சாப்பிடுவாராம். எனக்குத் தெரிந்த வரையில் வேறு எந்த ஒரு தாவரத்தையும் இப்படி சாப்பிடுவதில்லை. ஒரு பழத்தின் கொட்டையை எடுத்து, உலர்த்தி, வறுத்து, அரைத்து, அதில் வென்னீரை ஊற்றி, பின் அந்த கொட்டையின் பொடியை விலக்கி, வெறும் தண்ணீரை, அப்படியோ, அல்லது பால், சக்கரை கலந்தோ சாப்பிடுவது என்பது மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு சான்று. மற்ற கொட்டைகளை உணவாக எடுத்துக் கொண்டாலும் (உ.ம். பலாக் கொட்டை, மாங்கொட்டை) இது போன்று ஒரு விஸ்தாரமான முறையில் எந்தத் தாவரத்தையும் மனிதன் உண்பதாகத் தெரியவில்லை. டிகாஷன் போட்ட பொடித் தூளை, மற்ற தாவரத்துக்கு உரமாகவும், அல்லது பாத்திரம் தேய்ககவும் இப்போதும் நிறையப் பேர் உபயோகப் படுத்துகிறார்கள்.

இந்த காப்பி தாவரத்தில் எக்கச்சக்க வகைகள் இருந்தாலும், மூன்று பிரிவுகளாகப் பிரிப்பார்கள் - அந்தப் பயிர் வளரும் சூழ்நிலையைப் பொறுத்து. 'அராபிகா' என்னும் பிரிவு அதன் மணத்துக்காக உயர்ந்தது என்று கூறுவார்கள். கடல் மட்டத்திற்கு 600 - 2000 மீட்டர் உயரத்தில் வளரும். பதினைந்திலிருந்து இருபது டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் வளரும். 'ரொபஸ்டா' எனப்படும் பிரிவு கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரம் வரை வளரும். 20 டிகிரி செல்ஸியஸ்க்கும் அதிகமான வெப்பம் தாங்கும். இந்த்ப் பிரிவு தான் இன்ஸ்டன்ட் பொடி தயாரிக்க மிகவும் உகந்தது. மூன்றாம் பிரிவில் 'லைபேரிகா' எனப்படும் மிகக் கசப்பான வகை; மழை வெப்பம், இரண்டும் தாங்கும். காப்பி வளரும் நாடுகளில் பிரேசில் தான் முதலிடம் என்று நினைவு.

இன்ஸ்டன்ட் காப்பி தயாரிக்கும் முறையைக் கண்டு பிடித்தது யார் என்பதில் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. 1906ல் ஜ்யார்ஜ் சி. வாஷிங்டன் தான் கண்டு பிடித்தார் என்று சிலரும், 1901ல் சர்டோரி கடோ என்னும் ஜப்பானிய விஞ்ஞானி சிகாகோவில் இருக்கையில் கண்டு பிடித்தார் என்றும் சொல்கிறார்கள். எது சரி என்று எனக்குத் தெரியவில்லை; யாராயிருந்தாலும், அவர்களுக்கு என் நன்றி!

இந்த துக்கடா விஷயங்களே பதிவைப் பெரிதாக்கி விட்டதால், அடுத்த பதிவில் காப்பி குடிக்கும் மக்களைப் பார்த்து நான் பெற்ற அனுபவங்களைத் தருகிறேன்.

முந்தைய பதிவுகள்
காப்பி - 7
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1

வியாழன், ஆகஸ்ட் 31, 2006

காப்பி – 7

அப்படி இப்படி என்று அமெரிக்கா வந்தது 1997ல். வந்த முதல் வருடத்தில் வெறும் இன்ஸ்டன்ட் காப்பிதான் - டேஸ்டர்ஸ் சாய்ஸ். சுலபமாக ஒரு பீங்கான் கப்பில் பாதி தண்ணீர், பாதி பால், முக்கால் ஸ்பூன் சக்கரை, முக்கால் ஸ்பூன் காப்பிப் பொடி போட்டு, மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைத்தால் காப்பி தயார். நானும் என் மனைவி மட்டும் தான் வீட்டில், வேலைக்கு போகும் அவசரம் வேறு. அதனால் பில்டர் என்றெல்லாம் யோசிக்கக் கூட இல்லை. இந்த திடீர் தயாரிப்பிலும், கொஞ்சம் மாற்றங்கள் செய்தால், சுவை கூட வருவது போலத் தோன்றும். முதலில் தண்ணீரில் காப்பிப் பொடியைப் போட்டு மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைக்க வேண்டும். பின் தனிப் பாத்திரத்தில் (கண்ணாடி) பாலை கொஞ்சம் பொங்கும் வரை கொதிக்க வைத்து (ஒரு கப் பாலுக்கு கிட்டத்தட்ட மூன்று நிமிடம்), வெளியே எடுத்து ஆறியவுடன் பாலின் மேலிருக்கும் ஏட்டை எடுத்து விட வேண்டும். பின் இருக்கும் இன்ஸ்டன்ட் டிகாஷனையும், பாலையும் கலந்து சக்கரை போட்டு குடித்தால், கிட்டத்தட்ட பில்டர் காப்பி நினைவுக்கு வரும். இந்த முறை வார இறுதியில் பொழுது போகாமல் இருக்கும் போது தான் - மற்ற சமயங்களில் ஒரு நிமிடக் காப்பிதான்.

ஒரு வருடம் கழித்து இன்ஸ்டன்ட் போரடித்தவுடன், ஒரு காப்பி பில்டர் (மின்சார இயக்கம்) வாங்கினோம் - நான்கு கப் அளவில். பில்டரின் பின் பக்கம் மூடியைத் திறந்து தண்ணீர்; மேல்பக்கம் திறந்து, அங்கு இருக்கும் அறையில் முதலில் ஒரு தாளை வைத்து (பேப்பர் பில்டர்), வெறும் காப்பிப் பொடி (ஒரு கப்புக்கு ஒரு ஸ்பூன்) போட்டு, மறக்காமல் பில்டரின் அடியில் கண்ணாடிப் பாத்திரத்தையும் வைத்து, ஸ்விட்சைத் தட்டினால் மூன்று நிமிடங்களில் டிகாஷன் ரெடி. பின் அதில் பாலை ஊற்றி (பாலைக் காய்ச்சுவது நின்று போய், நேரே குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து ஊற்றுவது வந்து விட்டது), இன்னமும் சூடு வேண்டுமானால் முப்பது விநாடி மைக்ரோவேவ் செய்து குடிப்பது வழக்கத்திற்கு வந்தது. இந்த மின்சார பில்டரிலும் ஏகப்பட்ட வகைகள். ஒரு முறை கண்ணாடிப் பாத்திரம் தவறி விழுந்து உடைய வேறு ஒன்று வாங்கப் போனால், அந்த விலைக்கு புது பில்டரே வாங்களாம் என்று தோன்றி வேறு பில்டர் வாங்கினோம்.

இந்த மின்சார பில்டர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும். ஐந்து டாலரிலிருந்து நூற்றைம்பது டாலர் வரை பில்டர்கள் பாத்திருக்கிறேன் - அதைவும் விட அதிகமான விலையில் இருக்கின்றன என்றார் நண்பரொருவர். சில வெறும் காப்பி மட்டும் தான், சில காப்பசினோ, எஸ்பிரசோ என்று தினுசு தினுசாகக் கொடுக்கும். பில்டரில் கீழே டிகாஷன், சில மிஷினில் மேலே டிகாஷன் என்றெல்லாம் வகைகள். சாதாரண பில்டர்களுக்கு அனேகமாக தாள் தான் (பேப்பர் பில்டர்). சில டாலர் கடைகளில் ஒரு டாலருக்கு சீனாவில் செய்த பிளாஸ்டிக் பில்டர்கள் கிடைக்கும். முக்கால் வாசி பிராண்ட் பில்டர்களுக்கு அந்த பிராண்ட் கண்ணாடிப் பாத்திரம் தான் வேண்டும், டிகாஷனை எடுத்துக் கொள்ள - அதில் நிறைய காசு பண்ணுகிறார்கள். இன்னம் சிலவற்றுக்கு தாள் கூட அதே பிராண்டில் தான் வாங்க வேண்டும் (விலை மற்ற சாதாரண தாள்களை விட அதிகம்). பில்டர் ரிப்பேர் செய்யும் இடம் என்று எங்கும் நான் பார்த்தது இல்லை. வேலை செய்யவில்லை என்றால் தூக்கி குப்பையில் போட வேண்டியதுதான். கொஞ்ச நாட்களில் தண்ணீரில் இருக்கும் உப்பு படிந்து எப்படியும் ஒன்று அல்லது இரண்டு வருடத்துக்குள் மாற்ற வேண்டியிருக்கும் (உங்கள் வீட்டில் Water Softener இருந்தால் இன்னும் கொஞ்சம் அதிக நாள் வரும்).

நடுவில் ஒரு ஐந்து ஆறு மாதத்திற்கு, கடையிலிருந்து வறுத்த காப்பிக் கொட்டை வாங்கி ஒரு குட்டி மின்சார அரவை இயந்திரத்தில் அரைத்து காப்பி போட்டுக் குடித்தோம். இரண்டு பேர்தான் என்பதால் அது கொஞ்சம் போரடித்து, மறுபடி பொடியாகவே வாங்க ஆரம்பித்தோம். அந்த அரவை இயந்திரத்தில் சமயலுக்கு வேண்டிய பருப்பு, மிளகாய் எல்லாம் அரைத்துக் கொண்டிருந்தோம், அது ஒரு ‘நாள் இயங்க மாட்டேன்’ என்று நிற்கும் வரை. வெவ்வேறு பிராண்ட் காப்பிப் பொடி - வெவ்வேறு நாட்டுப் பொடி என்றெல்லாம் பரிசோதனை பண்ணிப் பார்த்துவிட்டு, இப்போது காஸ்ட்கோவில் போய் கொலம்பியா பொடி (பெரிய டப்பா) வாங்கி வருவது என்று வழக்கமாகிவிட்டது.

வீட்டில் இப்படி என்றால் வெளியே காப்பி குடிப்பது என்பது முதலில் உற்சாகமாக இருந்தது. அமெரிக்காவில் முதல் முறையாக வெளியே கடையில் காப்பி குடித்தால் முதலில் தாக்குவது அளவுதான் - உண்மையிலேயே ரொம்பப் பெரிசு. அதுவும் முக்கால் வாசி இடங்களில் அவர்கள் தருவது வெறும் டிகாஷன் தான். அதுவும் விளிம்பு வரை தந்துவிடுவார்கள். தனியாக வெளியே நாமே போய் பாலும் (அல்லது கிரீமோ), சக்கரையும் போட்டு ஒரு குச்சியால் சுற்றி சுற்றிக் கரைத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் எப்போது ஒரு கோப்பை வாங்கி இரண்டாகப் பகிர்ந்து தான் குடிப்பது வழக்கம். அதே சமயத்தில் கிட்டத்தட்ட அரை லிட்டர் காப்பி (அதுவும் கறுப்பு காப்பி - டிகாஷன்) குடிக்கும் பேர்வழிகளையும் பார்த்திருக்கிறேன்.

இதிலே காப்பியோடு கலந்து கொள்ள என்று எத்தனையோ சாமான்கள். சிலவற்றை (உ.ம். சின்னமன்) போட்டுக் கொண்டால், குடிப்பது காப்பியா, பாயசமா, அல்லது கஷாயமா என்று தெரியாமல் போய் விடும். நாங்கள் வந்த புதிதில் இந்த ஸ்டார்பக்ஸ் இவ்வளவு பிரபலம் இல்லை. இப்போது எங்கு பார்த்தாலும், அது தான். என்னவோ தெரியவில்லை நான்கு, ஐந்து முறை போய் குடித்த பிறகு (அப்பாடி என்ன விலை!) மறுமுறை போக ஆசை வரவில்லை.

நாங்கள் அரிசோனாவில் இருந்த போது நண்பர் ஒருவர் சொன்னது: "மாணவனாக வரும் போது டங்கின் டோனட், அல்லது தெருக் கடைகளில் காப்பி; பின் வீட்டிற்கு வந்தவுடன் இன்ஸ்டன்ட், அப்புறம் பில்டர், பின் கொட்டை அரைத்து பில்டர் காப்பி, கொஞ்ச நாளில் காடலாக் எல்லாம் பார்த்து, கூப்பன் சேகரித்து, கப்பசினோ மிஷின். இது ஒரு பரிணாம வளர்ச்சி. அப்புறம் டாக்டர் பார்த்து, ட்ரைகிளசரைட், சக்கரை என்றெல்லாம் பயமுறுத்த, சக்கரை இல்லாத காப்பி, ஒரு வேளை மட்டும் காப்பி, பின் மிஷினைப் பார்த்தாலே எரிச்சல் என்று முடியும்". இதற்காகவே நான் கப்பசினோ மிஷின் வாங்கவில்லை. ஆனால் இந்த வருட ஆரம்பத்தில் டாக்டர் ட்ரைகிளசரைட் என்று சொல்லிவிட்டார்! நானும் இந்த பரிணாம வளர்ச்சியிலிருந்து தப்ப முடியாதோ என்று தோன்றுகிறது!

அடுத்த பதிவில் காப்பி குடிக்கும் மக்களைப் பார்த்து நான் பெற்ற அனுபவங்கள்.

முந்தைய பதிவுகள்
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1

புதன், ஆகஸ்ட் 30, 2006

காப்பி – 6

கல்லூரிப் படிப்பு முடித்து அக்கவுன்டன்சி (சிஏ) படிக்க ஆரம்பித்தேன். தணிக்கைக்காக வெவ்வேறு ஊர்களுக்கு செல்லும் வாய்ப்பு வந்தது. சோளிங்கர், பொள்ளாச்சி, மும்பாய், தில்லி, மொராதாபாத், ராம்பூர், என்று பல இடங்கள் சென்றேன். ஒவ்வொரு இடத்திலும் காப்பியின் சுவை மாறுபட்டது. வடக்கே அதிகமாக இன்ஸ்டன்ட் தான். பின் வேலையில் சேர்ந்ததும், பிரயாணம் இன்னும் அதிகமாயிற்று. கல்கத்தா, பீகார், சண்டீகர், ஈடா (உ.பி.), ஹைதராபாத் (காட் கேசர்) என்று இன்னும் எத்தனையோ. ராம்பூர், ஈடா போன்ற இடங்களில் பெரிய லோட்டாவில் காப்பி; பீகாரில், கல்கத்தாவில் சில இடங்களில், மண்குடுவையில் காப்பி. இங்கேயெல்லாம் அதிகமாக கிடைப்பது தேனீர்தான். மசாலா, இஞ்சி எல்லாம் ஒரு துணியில் வைத்து குழவியால் நசுக்கி, அந்த துணியையும் டீயோடு கெட்டிலில் போட்டு கொதிக்க வைத்துக் கொடுப்பார்கள். வித்தியாசமான சுவையோடு ஜிவ்வென்று நன்றாக இருக்கும். காப்பியை மட்டும் இந்த மாதிரி கலக்காமல் வெறும் காப்பியாகவே தருவார்கள்.

டீ குடிக்கும் கண்ணாடி டம்ளரிலோ, அல்லது லோட்டாவிலோ தந்துவிட்டால், சக்கரையைக் கரைப்பது ஒரு வித்தைதான். காப்பியும் சுடும்; டம்ளர்/லோட்டாவில் கிட்டத்தட்ட விளிம்பு வரை இருக்கும். அந்த மண்ணின் மைந்தர்கள் சாப்பிடும் விதத்தைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது ‘எப்படி அந்த லோட்டாவைப் பிடித்து சுழற்றியவாறே சக்கரையைக் கரைப்பது’ என்பது தான். பூமத்திய ரேகைக்கு வடக்கே தண்ணீரின் சுழற்சி பிரதக்ஷணமானது (கடிகாரம் போல் - கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு). அதனால் காப்பி லோட்டாவையும் அப்படியே பிரதக்ஷணமாக சுற்றினால் கீழேயும் சிந்த வாய்ப்பு குறைவு; சக்கரையும் கரையும். இந்த சுழற்சி விதியை கொரியோலிஸ் விசை - Coriolis Force - என்பார்கள்.

முதல் முறையாக சிட்னி சென்றதும், காப்பியை ஒரு டம்ளரில் எடுத்து வழக்கம் போல் சுற்றிப் பார்த்தேன்; பின் வலமிருந்து இடமாக - கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு - என்றும் சுற்றிப் பார்த்தேன். கொஞ்சம் வித்தியாசம் இருக்கத் தான் செய்தது. கடிகார சுழற்சியில் காப்பி சற்று தளும்பியது; ஆனால் வலமிருந்து இடமாக சுற்றிய போது சீராக இருந்தது. பூமத்திய ரேகைக்கு வடக்கேயும், தெற்கேயும் இருந்து பார்த்தவர்கள் (துளசி கோபால் போல) வேறு யாரேனும் இதை செய்து பார்த்து நான் சொன்னது எத்தனை தூரம் சரி என்று சொல்லவும். ஒருவர் என்னைப் போல், வலக்கைப் பழக்கம் உள்ளவரா அல்லது இடக்கைப் பழக்கம் உள்ளவரா, என்பதும் இந்த சுழற்சியை பாதிக்கும் என்று நினைக்கிறேன்; ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்த விதி பற்றி தெரியாமலேயே ராம்பூரில் இருந்த கிழவர் லோட்டாவை சுற்றி சுற்றி டீ சாப்பிட்டது இன்னமும் நினைவில் இருக்கிறது.

காட்கேசரில் (ஹைதராபாத்) ப்ரூக் பான்ட் (இப்போது லீவர் இந்தியா) ஆலைக்கு தணிக்கைக்காக சென்ற போது அங்கு இன்ஸ்டன்ட் காப்பி தயாரிக்கும் முறை பற்றி நேராகப் பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டேன். இரண்டு முறைகள் உண்டு – freeze drying and spray drying. இதில் காட்கேசரில் நடந்தது spray drying முறை. சுறுக்கமாக சொன்னால், முதலில் காப்பிக் கொட்டைகளை சுத்தம் செய்து, வறுத்து, ஒரு வகையில் டிகாஷன் போடுவார்கள் - மிகவும் அடர்த்தி மிகுந்ததாக இருக்கும். பின் இந்த டிகாஷனை ஒரு நன்கு பாதுகாக்கப்பட்ட, சுத்தமான (மூடியிருக்கும்; உள்ளே விட மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்) அறையின் மேலிருந்து சிறு குழாய் வழியாக விடுவார்கள். பக்க சுவற்றில் இருக்கும் குழாய்களிலிருந்து வெப்பமான காற்று வரும். மேலிருந்து சொட்டும் திரவத்தில் இருக்கும் ஈரப்பதத்தை இந்தக் காற்று உறிஞ்சிவிட, போடி போல காப்பி கீழே அறையின் தரையில் படியும். இதை சேகரித்து, காற்று புகாதவண்ணம் பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். இந்த வர்ணனையில் நிறைய நுணுக்கமான விபரங்களை வேண்டுமென்றே விட்டு விட்டேன்; எனக்கு தெரியாத விஷயங்களும் மிக அதிகம். இந்த மாதிரி ஆலையை நிர்மாணிப்பது கடினமானது; செலவும் அதிகம். உலகிலேயே இன்ஸ்டன்ட் காப்பி தயாரிக்கும், லாபம் தரும் சின்ன ஆலை இந்தியாவில் தான். வருடத்திற்கு ஆயிரம் டன் (அதாவது பத்து லட்சம் கிலோ) பொடி தயாரிக்கும் ஆலை.

சிட்னியில் அலுவலகத்தில் முக்கால் வாசிப் பேர் தங்கள் மேசையிலேயே குட்டி பில்டர் வைத்திருந்தார்கள். முதன் முதலாக பில்டரின் மேல் புறத்திலிருந்து டிகாஷன் எடுப்பதை அங்கேதான் பார்த்தேன் (மனதில் உறுதி வேண்டும் விவேக் போல: 'என்னடா இந்த விஞ்ஞான முன்னேற்றம்; அப்பல்லாம் பொடி மேல இருக்கும், டிகாஷன் கீழ இருக்கும். இங்க என்னடான்னா கீழ பொடி, மேல டிகாஷன்!’). பில்டர் வெறும் கண்ணாடி டம்ளர் - பொடியைப் பொட்டு, வென்னீரை விட்டு, கண்ணாடிப் டம்ளரோடு கொடுக்கப் பட்டிருக்கும் ஒரு ஜல்லடை தட்டை (நீண்ட தண்டோடு இருக்கும்) மெதுவாக டம்ளரில் அழுத்த, மேலே டிகாஷன், கீழே பொடி. பின்பு போய் பாலையோ, அல்லது பவுடரையோ கலந்தால் காப்பி ரெடி. இங்கேதான் முதன் முதலாக பாலை கொதிக்க வைத்து கலக்காமல், அப்படியே கலப்பதை பார்த்தேன்.

டிகாஷன் போடும் முறையில் தான் முன்னேற்றமே தவிர, சுவை கொஞ்சம் சுமார்தான். எனக்கு 'சிறு வயதிலிருந்தே பழகி விட்டதால் எனக்கு அதிகம் பிடிக்கவில்லை; கொஞ்ச நாள் இருந்து விட்டால் இதுதான் பிடிக்கும்' என்று சிட்னியிலே பல வருடம் தங்கிவிட்ட என் உறவினர் சொன்னார். எனக்கு என்னமோ அது நம்மூர் காப்பி போல இல்லை என்றுதான் தோன்றியது.

அடுத்த பதிவில் அமெரிக்க வாசத்தில் நான் அனுபவித்த காப்பி கணங்களைத் தருகிறேன்.

முந்தைய பதிவுகள்
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2006

காப்பி – 5

சிறு வயதில் கல்யாணத்திற்கு போவதென்றால் படு குஷி. விதவிதமான சாப்பாடு, விளையாட்டு, முக்கியமாக எப்போது வேண்டுமானாலும் காப்பி! இந்தக் கல்யாணக் காப்பியின் ருசியே தனி. இருபது வருடங்களுக்கு முன்னால், தஞ்சாவூர் ஜில்லாவில் கல்யாணத்திற்கு கோட்டை அடுப்பு என்று ஒன்று போடுவார்கள். ஒன்று, ஒன்றரை அடி அகலமும், இரண்டு அடி ஆழமும் இருக்கும். நீளம் எத்தனை அண்டாக்களை வைத்து சமையல் நடக்கும் என்பதைப் பொறுத்து - ஒரு பத்து, பதினைந்தடியாவது இருக்கும். இந்த வாய்க்கால் போன்ற குழியின் மேல் அண்டா போன்ற பெரிய பாத்திரங்களை வைத்து, கீழே குழியில் விறகை எரித்து சமைப்பார்கள். அடுப்பில் முதலாவதாக ஆரம்பித்து, கடைசியாய் முடிப்பது காப்பியைத்தான். ஒரு அண்டாவில் வென்னீர் கொதிக்கும், அருகிலேயே பால். பெரிய பாத்திரத்தில், நல்ல வெள்ளைத்துணியைக் கட்டி, காப்பிப் பொடி போட்டு, டிகாஷன் இறங்கிக் கொண்டிருக்கும். சில சமயம் ஸ்பெஷலாக ஒரு பெரிய பித்தளை பில்டர் - ஒரே சமயத்தில் கால் கிலோ பொடி போடும் அளவு பெரிசு - ஒரு மூலையில் டிகாஷன் இறக்கிக் கொண்டிருப்பார்கள். கேட்டால் அது மாப்பிள்ளைக்கும், சம்பந்திக்கும் என்று சொல்வார்கள்.

இந்த கல்யாணக் காப்பியில் ஒரு பிரச்சனை என்னவென்றால், நமக்கு வேண்டிய தனிப் பாணியில் காப்பி கிடைக்காது. ஒரு வாளியிலோ, அல்லது கூஜாவிலோ போட்டு, எல்லோருக்கும் வினியோகம் செய்வார்கள். அதிலே ஏற்கனவே பாலும், சக்கரையும் கலந்திருப்பார்கள். கொஞ்சம் அதிகம் பாலோ, டிகாஷனோ வேண்டுமென்றால் அடுக்களையில் யாரையாவது தெரிந்து வைத்திருப்பது நல்லது. சிறு வயதிலேயே சட்ட திட்டங்களில் எங்கு ஓட்டை இருக்கிறது என்று பார்ப்பதில் நானும், என் ஒன்றுவிட்ட சகோதரனும் மிகுந்த ஆர்வம் காட்டுவோம். இருவருக்குமே காப்பி பிடிக்கும். இருவரும் யோசித்து, அடுக்களைக்கு சென்று, இல்லாத இரண்டு சம்பந்தி மாமாக்களுக்கு சக்கரை இல்லாத காப்பி வேண்டும் என்று கேட்டு, அவர்கள் அந்த ஸ்பெஷல் காப்பியைக் கொடுக்க, அதை நான் எடுத்து வந்தேன். இதே சமயத்தில் காப்பிக்கு கொஞ்சம் சக்கரை வேண்டும் என்று என் கஸின் வாங்கி வர, இருவருக்கும் சூப்பர் காப்பி. இந்த தகிடுதத்தம் எவரும் அறியாமல், குறைந்தது நான்கு கல்யாணங்களுக்கு தொடர்ந்தது.


புதிதாகப் போட்ட டிகாஷனில் கலந்த காப்பிக்கும், முன்னமேயே போட்டு அது ஆறிப் போய், மறுமுறை சுடவைக்கப்ப்பட்ட காப்பிக்கும் வித்தியாசம் உண்டு. கல்யாணத்தில், எப்போது பார்த்தாலும், அடுப்பு எரிந்து கொண்டிருப்பதாலும், அவர்கள் சூடு செய்யும் முறை கொஞ்சம் வித்தியசமானதாலும், அதைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம். முன்னமேயே போட்ட காப்பி ஆறிவிட்டால், அதை நேரடியாக அடுப்பில் சுட வைக்கக் கூடாது. வென்னீரைக் கொதிக்க வைத்து, அதில் காப்பியிருக்கும் பாத்திரத்தை வைத்து காப்பியை சூடாக்க வேண்டும். கல்யாணத்தில், காப்பியைப் போட்டு ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து விடுவார்கள். வினியோகிக்க வருபவர் அந்தக் காப்பியை ஒரு வாளியிலோ, கூஜாவிலோ எடுத்துக் கொண்டு வருவார். சூடு ஆறாமலிருக்க, அந்தப் பாத்திரத்தை அதை விட ஒரு பெரிய அண்டாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, மூடி வைத்து விடுவார்கள். இந்த வென்னீர் அண்டா அடுப்பில் இருக்கும்; ஆகையால் காப்பியும் எப்போதும் சூடாக இருக்கும். இது ஓரளவு காப்பி மணத்தினைப் பாதுகாப்பதால் அவ்வளவாக வித்தியாசம் தெரியாது.

ஆனால் காப்பியை சாப்பிடுகையில் வித்தியாசம் கொஞ்சம் தெரியும் - சாப்பிடுபவருக்கு காப்பியின் வெவ்வேறு ருசிகள் புரிந்திருந்தால். புதிதாகப் போட்ட காப்பியின் சூடும் சுவையும் வாய் முழுதும், முக்கியமாக நாக்கின் நுனியிலிருந்து, அடி வரை தெரியும். மறுமுறை சுடவைக்கப் படும் போது, சுவை கொஞ்சம் குறையும்; சூடும் முழுவதுமாகப் பரவாது. முக்கியமாக நுனிநாக்கில் காப்பியின் சூடு தெரியும்; முழுங்குகையில், வாயில் இருக்கும் கடைசி காப்பி தொண்டைக்குள் இறங்குகையில், அடி நாக்கில் சூடு தெரியாது. இது கிட்டத்தட்ட காப்பியின் வெளிப்புறம் சுடுவது போலவும், உட்புறம் சூடு இழந்து விட்டது போலவும் தோன்றும் (காப்பி திரவம், அதனால் உள் - வெளி என்பது கிடையாது என்றாலும், இதை வேறு எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை). இது விறகு அடுப்பினால் மட்டும் வருகிறது என்றில்லை; இங்கு 'மைக்ரோவேவ்' ஓவனில் வைத்து எடுத்தாலும், அதே நிலை தான். இது காப்பியின் தன்மை என்று நினைக்கிறேன். காப்பிக் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் டிகாஷன் கொஞ்ச நேரம் கழித்து வேறு நிலையை அடைகிறது; அதை மறு முறை மாற்ற இயலாது என்பது என் கருத்து. யாராவது விஞ்ஞானி ஆராச்சி செய்து சொன்னால் தேவலை.

காப்பி சாப்பிடுவதற்கு முன்னால் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் காப்பியின் சுவையை மாற்றுகிறது. இது முக்கியமாக கல்யாணத்திலும், ஓட்டல்களிலும் அனுபவித்திருக்கிறேன். காப்பிக்கு முன்பாக இனிப்பை சாப்பிட்டால், காப்பி அதிகம் கசக்கும் என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். அதே போல காப்பிக்கு முன்னால் அதிகமான காரம் சாப்பிட்டிருந்தால், சூடான காப்பி நாக்கில் உள்ள சுவை உணரும் செல்களைத் தாக்கும். இது எரியும் உணர்ச்சியை ஏற்படுத்தும். சமயத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தால் இரண்டு மூன்று வேளைகளுக்கு காப்பியின் சுவை வேறுபட்டு இருக்கும். அதே போல அதிகமான சூடோடு காப்பியை குடித்தால், நுனி நாக்கில் சுட்டு விடும்; இதனால் சிறு கரும் புள்ளிகளை நுனிநாக்கில் பார்க்கலாம். இது சரியாக 24 மணி நேரம் ஆகலாம். அது வரை காப்பியின் சுவை கோவிந்தா!

காலைக் காப்பியின் சுவை, நீங்கள் என்ன பற்பொடி, அல்லது பற்பசை உபயோகிக்கிறீர்கள் என்பதைப் பொருந்த்தது. நீங்கள் தினம் காலையில் பல் துலக்கிய பின்னால் தான் காப்பி குடிக்கிறீர்கள் என்றால் ஒரு நாள் இதை செய்து பாருங்கள். பற்பசையோ, பல் பொடியோ உபயோகிக்காமல், வாயை நன்கு தண்ணீரால் (முடிந்தால் வெது வெதுப்பான வென்னீரில்) கொப்பளித்து அலம்பி, பின் காப்பியை பருகிப் பாருங்கள். சுவை அதிகமாகத் தெரியும். பற்பசைகளில் இருக்கும் ப்ளோரைட் போன்ற சமாசாரங்கள், மற்றும் 'மௌத் பிரஷ்னர்' எனப்படும் வாசனை வஸ்துகள் வாயில் தங்கி விடுகின்றன. இவை நாக்கின் சுவையறியும் செல்களின் திறனை பாதிக்கிறது. ஆதலால், காப்பியின் சுவையும் மாறுகிறது. சிறு வயதில் ஒரு பரிசோதனை போல கோபால் பல்பொடி, வீக்கோ வஜ்ரதந்தி, கோல்கேட் பவுடர், கோல்கேட் பேஸ்ட், பினாகா (பின்னாளில் இதுவே சிபாகா), போர்ஹான்ஸ் என்றெல்லாம் உபயோகித்து காப்பி சாப்பிட்டு, வரும் வித்தியாசத்தை ஆராய்ந்திருக்கிறேன். இவைகளில் எதையாவது ஒன்றைத்தான் உபயோகிக்க வேண்டும் என்றால், வீக்கோ வஜ்ரதந்திக்குத் தான் என் ஓட்டு. இது எதுவுமே வேண்டாம் என்று வென்னீர் கொப்பளித்து காப்பி குடிப்பது அதை விட அருமை. குடித்து கொஞ்ச நேரம் கழித்து பல் துலக்கிக் கொள்ளலாம்.

அடுத்த பதிவில் இந்தியாவில் வேலை காரணமாக நான் சென்ற இடங்களில் குடித்த காப்பி பற்றியும், காப்பி பொடி (இன்ஸ்டன்ட்) தயார் செய்த ஒரு ஆலையில் தணிக்கைக்காக சென்றது பற்றியும் தருகிறேன்.

முந்தைய பதிவுகள்
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1