திங்கள், மே 29, 2006

வண்ணங்கள்

சென்ற வாரம் எங்க வீட்டம்மா என்னை மாடியிலிருந்து 'பச்சை'ப் பையை எடுத்துத் தரச் சொன்னாங்க. நான் கொண்டு வந்த பின் அது 'பச்சை' இல்லை, 'நீலம்' என்று சொல்லி திருப்பித்தர நான் மறுமுறை பத்து படி ஏறி 'நீல'ப் பையை எடுத்துக் கொண்டு வந்தேன். எனக்கு கண்ணில் ஏதும் கோளாறு இல்லை (அப்படித்தான் சென்ற வருடம் மருத்துவர் சொன்னார்). அப்புறம் எப்படி பச்சைக்கும் நீலத்திற்கும் உனக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று கேட்பீர்கள் என்று தெரியும். விஷயம் இதுதான். இரண்டு பைகளுமே பச்சைக்கும் நீலத்திற்கும் இடையே இருக்கும் ஒரு குழப்பமான கலர். ஒரு மாதிரியாகப் பார்த்தால் பச்சை; கொஞ்சம் தள்ளி நின்று வேறு கோணத்தில் பார்த்தால் நீலம். ஒரு விதத்தில் நாங்கள் இருவருமே சரிதான் - எங்களின் தனித்தனிக் கோணங்களில். இதை மாடு அசைபோடுவது போல அலுவலகத்திற்கு காரை ஓட்டிக்கொண்டுவரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன்.

முதன் முதலில் ஒளி அலைகளைப் பற்றி விபரமாக அறிந்து கொண்டது மன்னார்குடி தேசிய மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் போதுதான். அறிவியல் ஆசிரியர் திரு. சேதுராமன் (தற்போது அவர் தான் தலைமை ஆசிரியர்) அனுபவித்து பாடம் சொல்லிக் கொடுத்தது, எனக்கு அறிவியலில் ஒரு தனி விருப்பம் வருவதற்குக் காரணம். ஒளியும் ஒரு வித அலை தான் (ஒளிக்கு துகளின் தன்மையும் உண்டு). இந்த அலைகள் பல விதமானவை. ஒரு முக்கியமான அளவுகோல் "அலைநீளம்" ஆகும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் ஒரு அலை ஒரு முறை மேலே எழுந்து, கீழே போய், மறுபடியும் தொடங்கிய நிலைக்கு வரும் தூரத்தை அலை நீளம் என்று கூறுவார்கள்.

ரேடியோ அலைகளின் அலைநீளம் மிக அதிகம் - 570 மீட்டர் வரை போகும். காமா அலைகளின் அலைநீளம் மிக மிகக் குறைவு - மீட்டரில் அளந்தால் தசமப் புள்ளிக்குப் பிறகு பனிரெண்டு பூஜ்யம் போட்டு ஒன்று போட்டால் வரும் தூரம் - அதாவது ஒரு மில்லி மீட்டரில் நூறு கோடியில் ஒரு பங்கு! நாம் கண்ணால் பார்க்கும் ஒளி அலைகள் இந்த காமா அலைகளின் நீளத்தை விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமானவை (அதாவது ஒரு மில்லி மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு). இந்த தூரத்தை நானோ மீட்டர் என்று கூறுவார்கள். நாம் பார்க்கும் ஒளி அலைகளின் அலைநீளம் 400ல் இருந்து 700 நானோ மீட்டர்கள். முழுப் பட்டியலுக்கு பதிவின் முடிவிற்கு செல்லவும்.

இந்த ஒளி அலைகளின் பங்கு - மொத்த அலைகளின் விஸ்தீரணத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, ரொம்பவும் சின்னது. அதாவது மொத்த அலைகளில் பத்தாயிரம் கோடியில் ஒரு பங்கைத் தான் நாம் கண்களால் பார்க்க முடியும். பள்ளியில் படிக்கும் போது விபரீதமான கற்பனைகள் வரும். நம் கண்ணுக்கு மட்டும் மற்ற அலைநீளங்கள் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ரேடியோ டெலஸ்கோப் துணையோடு பார்ப்பதற்கு பதிலாக தொலைதூர நட்சத்திரங்களையும், கோள்களையும் கண்ணாலேயே பார்க்க முடியும், என்றெல்லாம் யோசித்ததுண்டு.

இந்த வண்ணக் குழப்பம் வந்தபின் 'ஆட்டுக்குக் கூட தாடியை அளந்து தான் வைத்தான்' என்ற பழமொழி ஞாபகம் வருகிறது. தம்மாத்தூண்டு இருக்கும் ஒளி அலைகளுக்குள்ளேயே இத்தனை வண்ணங்கள், குழப்பங்கள் - பச்சையா? நீலமா? என்று. மற்ற அலைநீளங்களையும் கண்ணால் பார்க்க முடிந்தால் எத்தனை வண்ணங்கள் இருக்குமோ? இன்னமும் எத்தனை பிரச்சனையோ? கல்யாண சேலைக்குப் பொருத்தமாக சட்டை எடுப்பதற்குள் அறுபதாம் கல்யாணமே வந்து விடும்! பார்க்க முடிகிறதே என்ற சந்தோஷம் தான் மனதில் இருக்கிறது.

அலை நீளங்கள்
ரேடியோ அலைகள் = 570 - 2.8 மீட்டர்
தொலைக்காட்சி அலைகள் = 5.6 - 0.34 மீட்டர்
மைக்ரோ அலைகள் = 0.1 - 0.001 மீட்டர்
ஒளி அலைகள் (சிகப்பு-வயலட்) = 700 - 400 நானோ மீட்டர்
அல்ட்ரா வயலட் = 0.1 - 0.0001 நானோ மீட்டர்
X அலைகள் = 0.0001 - 0.000001 நானோ மீட்டர்
காமா அலைகள் = 0.000001 நானோ மீட்டருக்கும் குறைவு

புதன், மே 10, 2006

வீடு!

நேற்று மாலையில் அலுவலகத்திலிருந்து வரும்போது அந்தப் புது வீட்டின் வாசலில் பலகை வைத்திருந்தார்கள் – For Sale - என்று. மனதிற்குள் ஒரு வருத்தம் கலந்த சந்தோஷம்.

நான் அலுவலகத்திலிருந்து திரும்பும் வழியில் ஒரு தெருவில் கடைசி வீடு அது. தெரு முனை என்பதால், மெதுவாகத்தான் திரும்ப வேண்டும்; சில சமயம் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக சில நிமிடம் நிற்கவும் வேண்டும். தினமும் பார்ப்பதால் அந்த வீட்டோடு ஒரு அன்யோன்யமான நட்பு - வீட்டோடு நட்பா என்று கிண்டலெல்லாம் வேண்டாம் - ஒரு பரிச்சயம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

முன்பு அங்கு ஒரு பழைய வீடு - ஒரு மாதிரி மரப் பழுப்பு வண்ணத்தில் - இருந்தது. வீட்டிலே யாரும் வசித்ததாகவும் தெரியவில்லை. கிட்டத்தட்ட நான்கு மாதத்திற்கு முன்னால் திடீரென்று ஒரு நாள் அந்த வீட்டின் அருகில் பெரிய பெரிய இயந்திரங்கள் - புல்டோஸர். தெருவுக்குள் போக ரொம்ப நேரமாயிற்று - வழி அதிகம் இல்லாததால். அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறு வழியில் (கொஞ்சம் சுற்று வழி) வீட்டுக்கு வந்ததால் என்ன நடந்தது என்று விபரம் தெரியாது. மறுபடியும் வழக்கமான பாதையில் வந்தால், வீடு இருந்த இடத்தில் வெறும் குழி - ஒரு குட்டி மலை போல மண்ணைக் குமித்திருந்தார்கள். ‘Free Fill Dirt’ என்ற பலகை அருகில் இருந்தது.

அடுத்த வாரம் அந்த மண்ணைக் காணோம் - பதிலாக குழியின் பக்கங்களில் கான்கிரீட் ப்ளாக்குகள் வைத்து சுவர். அடுத்த வாரம் தளம் தயார், மரச் சட்டங்கள் வந்து இறங்கின. ஒரு வாரத்திற்குள் இரு நிலைகள் கொண்ட வீட்டின் ஃப்ரேம் தயார். கிடு கிடுவென வீடு வளர்ந்தது. பின்பு வாசல் படி, ஜன்னல்கள், கராஜ் கதவுகள் என்று ஒவ்வொன்றாக வந்தது. சென்ற வார ஆரம்பத்தில் வாசல் சாலை ரெடி; பின்பு வாசல் புல்வெளி. நேற்று வீடு விற்பதற்கான பலகை. ஒரு மாதிரியான மங்கின சந்தனக் கலர் வீடு - குறைந்தது $750,000 ஆவது இருக்கும்.

அழகான வாசல் படி, உயரமான கூரை, நிதானமான அதே சமயம் ஒளி நன்றாக வரும் விளக்கு, Bay Window, என்று வீடு அழகாக இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக மனத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் அந்த பழுப்பு நிற வீட்டை நினைத்து மனம் ஏன் வருந்துகிறது என்று தெரியவில்லை.

பொதுவாக வீட்டைப் பற்றி என் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் தான் சிறுவனாக தாத்தா வீட்டில் (தஞ்சாவூர் அருகில் வழுத்தூர்) இருந்தது, வீட்டிற்கு எப்படி மண் சாந்து (களிமண்ணை அரைத்து, கடுக்காய் நீர் விட்டு, செங்கலைப் பூசுவது) பூசுவது, எப்படி ஓடு மாற்றுவது என்றெல்லாம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன் நடந்தது அவருக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. பூசுவதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருளைக் கேட்டால் வித்தியாசமாக இருந்தது - உ.ம். பசுஞ்சாணி, கடுக்காய், துவரை விதை உறை, சுண்ணாம்பு, காவி, களிமண். பெரிய பணக்காரர்கள் வீட்டில் வாசலுக்கு இந்தக் கலவையொடு முட்டையையும் அரைத்துப் போடுவார்களாம் - பளபளப்புக்காக!

நான் பார்த்து வளர்ந்த இந்தப் புது வீட்டில் பூசப்பட்டது எல்லாம் செயற்கையான பொருட்களே; வெளியில் வந்த புல் தரை கூட ஏதோ ஒரு இடத்தில் வளர்த்த புல்; இரண்டு அங்குலத் தரையோடு சேர்த்து எடுத்து வந்து கம்பளம் விரிப்பது போல் விரித்து தண்ணீர் விட்டு ஒரே நாளில் தயார் பண்ணி விட்டார்கள்.

அதனால்தான், மூன்றே மாதத்தில் சகல வசதிகளோடு அழகாக வந்துவிட்டதில் மனது சந்தோஷப்பட்டாலும், பழைய வீட்டை மனசு நினைத்து வருந்துகிறதோ? இன்னும் கொஞ்ச நாளில் அந்த பழைய வீட்டின் நினைவு முற்றிலும் மறந்து போய் இந்தப் புது வீட்டில் வைத்துள்ள ரோஜாச் செடிகளையும், புல்வெளியையும் மட்டுமே நினைவில் வைத்துக் கொள்வேனோ என்னமோ.