திங்கள், ஜூலை 20, 2009

யோசிக்கும் மொழி - 2

யோசிக்கும் மொழி - 2

அலுவலக அல்லது தினசரி வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றி யோசிப்பதற்கும், குழந்தை பசி பற்றி யோசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவதற்கு மொழி அவசியம் தேவை; இரண்டாவது வகைக்கு பேசும் மொழி தேவையில்லை. உடல் உறுப்புகள் தங்களுக்குள் ஏதோ ஒரு வகையில் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டிருக்கிறது. அது எந்த மொழி என்று தெரியவில்லை; ஆனால் இது நாடு, மதம் பொறுத்து மாறாமல், உலகம் முழுதும் உள்ள மனித வர்கத்திற்கு பொதுவாக இருக்கும் என்று தோன்றுகிறது. இது மற்ற விலங்குகளுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை.

அசை போடும் வகையில் நினைப்பில் வெறும் வார்த்தைகள் மற்றும் வருவதில்லை. என் அனுபவத்தில் நினைப்பில், ஸ்பரிசம், வாசனை, வெப்பம்/குளிர் போன்ற மற்ற புலன் சம்பந்தப்பட்ட விஷயங்களும் சேர்ந்தே வருகின்றன. ஒரு நிகழ்ச்சியின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட புலன்களின் அனுபவம், அதே உணர்ச்சியினை அனுபவிக்கும் போது அந்த நினைப்பைக் கொண்டு வருகிறது. இதில் மொழியும் அடங்கும்; ஆனால் நினைப்புக்கு மொழி அத்தியாவசியம் என்று தோன்றவில்லை.

ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை கொஞ்சம் சுவாரசியமானது. இதில் கொஞ்சம் விடை தேடும் வகையில் யோசனையும் சேர்ந்தே இருப்பதால், மொழி தேவைப்படுகிறது. ஆழ்ந்த வினாக்கள் மேலறிவுக்கு மட்டும் புலப்படுவதில்லை; இந்த அடித்தள அறிவு (குழந்தையின் பசி அழுகை போல) மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது. நான் படித்த வரையில் (நிச்சயம் கொஞ்சம் தான்), ஞானிகளின் அனுபவங்கள் வார்த்தைகளால் மட்டும் விபரிக்க முடியாததாகவே இருக்கிறது. உதாரணமாக, இந்த சுயதரிசனம், சுயவிமர்சனம் பற்றி ஆராய்ந்து எழுதிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கும், அவருக்கு நேர்ந்த அனுபவங்களை முழுவதுமாக விபரிக்க கடினமாகவே இருந்திருக்கிறது.

இவர் மட்டுமல்ல, மற்ற ஞானிகளுக்கும் அனுபவங்களை விபரிப்பது கடினமாகவே இருந்திருக்கிறது. மொழியால் விபரிக்க முடியாத அளவுக்கு, இவர்கள் எவருக்கும் மொழிப்பிரச்சனை இருந்ததில்லை; காரணம் அனுபவத்தை விபரிக்கும் வகையில் எந்த மொழியுமே இன்னமும் வளரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

பழங்கதைகளில், அது இந்திய புராணங்களாகட்டும் அல்லது கிரேக்க மற்று ஐரோப்பியக் கதைகளாகட்டும், பறவை - விலங்குகளோடு பேசும் சக்தி படைத்த மனிதர்களைப் பற்றி அதிகம் கதைகள் உண்டு. இந்த விலங்கு மொழியும் ஒரு விதமான புலன்களின் தகவல் பறிமாற்றமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. கருத்துகளை, எண்ணங்களை மற்ற சக மனிதர்களோடு பறிமாறிக் கொள்ள உதவும் வாய் மொழியில் அதிக சக்தி செலவழித்ததால், மனிதர்களுக்கு இந்த புலன்களின் தகவல் பறிமாற்ற மொழி மறந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

மொத்தத்தில் மனித மூளை இயக்கத்திற்கு வாய்மொழி அவசியம் இல்லை; அதே சமயத்தில் விடை தேடும் வகையில் வரும் யோசனைகளுக்கு வாய் மொழி நிச்சயம் உதவுகிறது (தேவை) என்பது என் கணிப்பு.

உங்களுக்குத் தோன்றுவதை கருத்தாகப் பதியலாம்.

பி.கு.: சென்றவாரம் பிட்ஸ்பர்க் சென்று பாலாஜி தரிசனம் செய்ததால், இணையத்தில் பதியவில்லை.

1 கருத்து:

M.Abdul Khadar சொன்னது…

உங்களின் இப் பதிவு எனக்கு இருந்து வந்த சில ஐயங்களை அகற்ற உதவியது. நன்றி.