ஞாயிறு, ஜூன் 14, 2009

இரயில் - 6

இரயில் - 6

ரயில் என்ற வார்த்தை எனக்கு உணர்த்திய இன்னுமொரு பரிமாணம் 'வலிமை'. ரயில் சம்பந்தப்பட்ட (பெரும்பான்மையான) பொருள்கள் திடத்தில், சக்தியில் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். உதாரணமாக வீட்டில் இருக்கும் மின் விளக்கு/மின் விசிறியின் சுவிட்சை இயக்க (அழுத்த) வேண்டிய விசையை விட, ரயில் பெட்டியில் இருக்கும் சுவிட்சை இயக்க அதிக விசை தேவை. வீட்டில் நாற்காலியில் இடித்துக் கொண்டால் வரும் வலியை விட, ரயில் நிலையத்தில் உள்ள இருக்கையிலோ அல்லது ரயில் பெட்டியிலுள்ள இருக்கையிலோ இடித்துக் கொண்டால் வரும் வலி அதிகம்.

சாலை போட உபயோகிக்கும் சரளைக் கல்லை விட ரயில் தண்டவாளம் போட உபயோகிக்கும் சரளைக் கல் வலிமை அதிகம். ஜன்னல் கம்பியிலிருந்து ஆரம்பித்து தண்டவாளம் வரை கிட்டத்தட்ட அனைத்து பாகங்களும் அதை ஒத்த மற்ற வாகன பாகங்களோடு பார்க்கையில் பெரிதாகவோ, வலிமையாகவோ தான் இருக்கும். ஐம்பது சரக்குப் பெட்டிகளை இரண்டு டீசல் என்ஜின்கள் இழுத்துச் செல்வதைப் பார்க்கையில் அந்த வலிமையை நினைத்து வியந்தது அதிகம். இந்த வலிமை சம்பந்தமான ஒரு கதை என் அப்பா சொன்னது (அவருக்கு அவர் தாத்தா சொன்னது).

கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் ஒப்பிலியப்பன் கோவிலின் மூலவர் விக்கிரகம் முதலில் அத்தி மரத்தில் செய்ததாம். கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன், ஒப்பிலியப்பன் கோவிலுக்கு அருகில் இருக்கும் பவுண்டரீகபுரம் கிராமத்தில் இருந்த அண்ணு அய்யங்கார் கனவில் ஒப்பிலியப்பன் வந்து தான் மயிலம் பக்கத்தில் இருக்கும் ஒரு குளத்தில் இருப்பதாகவும், தன்னை எடுத்து வந்து நிர்மாணிக்க வேண்டும் என்று கட்டளையிட்டாராம். மயிலம் உளுந்தூர்பேட்டைக்கும், விழுப்புரத்திற்கும் இடையே உள்ள இடம்; அப்போது விருத்தாசலம் அருகே இருந்த இரயில் நிலையம்.

இவரும் கொஞ்சம் பணம் சேர்த்து மயிலம் சென்று அங்கிருந்த உள்ளூர் மக்கள் உதவியுடன் குளத்திலிருந்த கல்லை எடுத்து விருத்தாசலம் ரயில் நிலையம் சென்றார். வழியில், கல்லின் கனம் தாளாமல், பல முறை வண்டியின் அச்சு முறிந்து போக, புது வண்டி, புது அச்சு என்றெல்லாம் மாற்றி மாற்றி மிகவும் சிரமப்பட்டு விருத்தாசலம் வந்தடைந்தார். நடந்த கதையெல்லாம் சொல்லி ரயில் பார்சல் ஆபீசில் கல்லை கும்பகோணம் அனுப்பி வைத்து விட்டு, இவரும் ஊர் வந்து சேர்ந்தார்.

கும்பகோணம் வரும் வழியில், ரயில் சரக்குப் பெட்டியும் கல்லின் கனம் தாளமல் சக்கர அச்சு முறிந்து போக, ரயில்வேயிலிருந்து இவருக்கு ஆயிரக் கணக்கில் அபராதத் தொகையுடன் நோட்டீசு வந்து விட்டது. இது நடந்தது சுதந்திரத்திற்கு முன்னால்; ரயில் நிர்வாகம் ஆங்கிலேய அரசின் கையில். வட்டாரத் தலைமயகம் திருச்சியில், ஒரு ஆங்கிலேயர் தான் தலைமை. இவரிடமோ கையில் அபராதத் தொகை கட்ட பணமில்லை.

அண்ணு அய்யங்காரும் திருச்சிக்கு சென்று நிலைமையை விளக்கினார். விருத்தாசலம் ரயில் நிலையம் வருவதற்குள் பலமுறை மாட்டு வண்டி அச்சு முறிந்ததையும், இதை விபரமாக விருத்தாசல ரயில் நிலையத்தில் விளக்கியதையும் சொல்லி, ஒரு சரக்கு ரயிலின் வலிமையை, அதன் பளு தாங்கும் திறமையை, கிராமத்தில் வசிக்கும் தம்மால் எப்படி ஊகிக்க முடியும் என்று கேட்டாராம். இதை வட்டார அலுவலக நிர்வாகியும் ஒப்புக் கொண்டு, அபராதத் தொகையை ரத்து செய்ததோடு இல்லாமல், கல்லை கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கும் மன்னிப்புக் கோரி கடிதம் எழுதினாராம். இப்பொதும் ஒப்பிலயப்பன் கோவில் சென்று வழிபடும் போதெல்லாம், இந்தக் கதை நினைப்புக்கு வரும்.

ரயில் நிலையம் சம்பந்தமான வாசனை பற்றிய விஷயங்கள் அடுத்த பதிவில்.

முந்தைய பதிவுகள்:
இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5

2 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

ஒப்பிலியப்பன் கதை புதியது ரங்காண்ணா. காஞ்சிபுரம் வரதராசர் அத்தி மரத்தால் ஆனவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒப்பிலியப்பனைப் பற்றி இன்று தான் அறிந்தேன்.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி குமரன். சமீபத்தில் ஒப்பிலியப்பன் பற்றி பக்தி விகடனில் ஒரு கட்டுரை வந்தது என்று கேள்விப்பட்டேன்; இன்னமும் படிக்கவில்லை.

ரங்கா.