செவ்வாய், டிசம்பர் 27, 2005

தெரியாமல் தெரிந்தது

சென்ற வாரம் இராமநாதன் ‘தத்து(பி)த்துவம் - 2: பிஸியாலஜி’ என்ற தலைப்பில் நம் உடலினுள் இருக்கும் அறிவைப் பற்றி எழுதியிருந்தார். நம்மால் வார்த்தைகளால் சொல்ல முடியாவிட்டாலும், உடலினுள் நடக்கும் நிறைய விஷயங்கள் (உதாரணமாக 'பார்ப்பது') சிக்கலானவை; இந்த மாதிரி செயல்கள் (உள் அறிவுகள்) நமக்கு வார்த்தைகளால் (வெளி அறிவு) விளக்க முடியாமல் ஒரு விதமான 'கம்யூனிகேஷன் கேப்' இருக்கிறது என்றும், இந்த 'பார்டிஷண்' பற்றி கவலைப்படவேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

அவர் பதிவில் கூறியிருந்த சில விஷயங்கள் பற்றி நான் யோசித்ததுண்டு. அந்த மாதிரி யோசித்தவைகளை (குருட்டு யோசனையை) ஒரு பதிவாகவே போட்டு விட்டேன்.

நமக்கு தெரிந்த அறிவை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று புற அரிவு (தெரிந்து தெரிந்தது - வெளியறிவு); நம்மால் வார்த்தைகளால் விளக்க முடிந்தால் அது இவ்வகையைச் சாரும். இரண்டாவது உள்ளறிவு (தெரியாமல் தெரிந்தது) - இராமநாதன் எழுதிய 'பார்ப்பது' இந்த வகையைச் சாரும். நம்முடலில் நம் வெளியறிவின் ஆணையை எதிர்பாராமல், இருதயம் துடிப்பது, நுரையீரலில் காற்றிலிருந்து பிராணவாயுவைப் பிரித்து இரத்தத்துடன் கலப்பது போன்ற காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த மாதிரி காரியங்களில் ஏதாவது சின்னத் தடங்கல்கள் வந்தால் கொஞ்சம் மாற்றிக் கொண்டு (கொட்டாவி - நம்முடலின் பிராணவாயு அளவைக் கூட்டிக் கொள்ள என்று படித்ததாக ஞாபகம்) தொடர்ந்து தொந்தரவில்லாமல் நடத்திக்கொள்ளும் சாமர்த்தியமும் உண்டு. இதெல்லாம் நம் புற அறிவுக்கு தெரிந்திருக்கவேண்டும் என்றில்லை; நிறையப் பேருக்கு இது தெரியாது (நான் உள்பட). அதே சமயத்தில் நம்முடலில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறபடியால், நமக்கு இது பற்றித் தெரிந்திருக்க வேண்டும்; இந்த அறிவு நம் உடலின் ஒரு பாகத்தில் பதிந்திருக்க வேண்டும்.

இந்த உள்ளறிவில் இருக்கும் விபரங்கள் நம் புற அறிவோடு சேராமல் ஒரு தடுப்பு இருக்கிறது. இந்த தடுப்பைப் பற்றி - முக்கியமாக இந்த தடுப்பை நீக்குவது பற்றி தெரிந்துவிட்டால் எவ்வளவோ நல்லதாகப் போய்விடும். என் மருத்துவ நண்பர் ஒருவர் சொன்னது - 'யார் வேண்டுமானாலும் மருந்து கொடுத்துவிடலாம்; வியாதி என்ன என்று தெரிந்து கொண்டுவிட்டால். அங்கே தான் சிக்கலே ஆரம்பம்'. இந்த 'Diagnosis’ சிக்கலுக்கு நாம் ஒரு தீர்வு கொண்டுவந்து விடலாம். நாம் மருத்துவரிடம் போய் 'கண் மங்கலாகத் தெரிகிறது, வலிக்கிறது' என்றெல்லாம் சொல்வதற்குப் பதிலாக 'Na+ (sodium) stay open in photoreceptor when LIGHT is being absorbed' என்று சொல்லலாம் :-] (நன்றி இராமநாதன்!)

இது முதல் கட்டம் - நாம் 'எப்படி' என்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளலாம் (கண் எப்படிப் பார்க்கிறது? காது எப்படிக் கேட்கிறது). அடுத்த கட்டமாக பிற உயிர்களில் உள்ள சில சக்திகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் (நம்மை விட நாய் ஏன் அதிகமாக மோப்பம் பிடிக்கிறது?); அடுத்து தாவரம் (எப்படி சூரிய ஒளியிலிருந்து உணவு தயாரிப்பது?).

இந்த மாதிரி 'எப்படி' கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்தால் 'ஏன்' என்ற கேள்விக்கும் விடை கிடைக்கலாம் (காது ஏன் சில ஒலியலைகளை மட்டும் கேட்கிறது?) இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் தேடத் தேட நம் புற அறிவும் வளரும்; நமக்கும் நன்மையுண்டாகும் - உண்மைதானே? ஆகையால் இந்த உள்ளறிவு - வெளியறிவு தடுப்பின் கதவு எங்கே? எப்படித் திறப்பது என்று யாராவது ஆராய்ந்து சொன்னால் தேவலை.

இங்கே இலக்கு 'பார்ப்பது'. அதை நான் எப்போதோ அடைந்துவிட்டாலும், 'பார்ப்பது' என்ற பயணத்தை ஆராய்ந்ததில் சில சிந்தனைச் சந்தோஷங்கள்.

வெள்ளி, டிசம்பர் 16, 2005

ஒரு தெற்குப் பயணம்!

சென்ற வாரம் ஒரு ஜோலியாக முதல் முறையாக தெற்குப் பக்கம் (தெற்கு கரோலினா) சென்று வந்தேன். முதல் நாள் மாலை வீட்டம்மாவின் உதவியுடன் காரில் ரயில் நிலையத்தை அடைந்து, நியூஜெர்ஸி ட்ரான்சிட் தயவால் நூவர்க் விமான நிலயத்திற்கும் (பெரிய ரயிலிலிருந்து குட்டி மோனோ ரயில் மாறி) நேரத்தோடு போய் சேர்ந்தேன். வழக்கமான பாதுகாப்பு பரிசோதனை (கோட், பெல்ட், காலணி கழற்றி, மாட்டி) எல்லாம் முடித்து, இருக்கை வரிசையை கூப்பிடும் வரை காத்திருந்து போய் உட்கார்ந்து, ஒரு சுகமான பயணம். ஒன்றரை மணி நேரத்தில் சார்லெட் சென்றாயிற்று.

அங்கிருந்து ஃப்ளாரென்ஸ்க்கு ஒரு குட்டி விமானம் - டாஷ் 8 வகை. மொத்தமே பதினைந்து வரிசை தான் இருக்கும். இறக்கைகளில் பெரிய விசிறி (ப்ரொபெல்லர்); ஒரு கயற்றால் கட்டிப் போட்டிருந்தார்கள். படிக்கட்டுக்கு (கதவு தான் - திறந்தால் படி) அருகிலேயே இந்தப் பிரம்மாண்டமான விசிறி இருந்ததால், கயற்றால் கட்டியிருந்தது ஒரு தைரியத்தைக் கொடுத்தது. தெற்கில் உள்ளவர்கள் பேசும் ஆங்கிலம் புரிவது கஷ்டமாயிருந்தது. பதிலுக்கு ஒரே அல்ப சந்தோஷம் நான் பேசியதும் அவர்களுக்குப் புரியவில்லை என்பது தான்.

அதிகம் பிரயாணிகள் இல்லை என்பதால், விமானப் பணியாளர் கிடுகிடுவென்று தலைகளை எண்ணி (நம்மூரில் ஆம்னி பஸ் இரவில் ஏதாவது ஒரு இடத்தில் சாப்பிட நிறுத்தி பின் கிளம்புகையில், கிளீனர் வந்து எண்ணுவாரே அது போல்) தன் பேப்பரில் சரிபார்த்து, காக்பிட்டில் உள்ள பைலட்டிடம் 'ரைட்' கொடுத்தார். அவரும் ஒரு முறை வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு இவரிடம் ஏதோ சொல்ல, விமானப் பணியாளர் முதல் மூன்று வரிசைகளில் அமர்ந்திருந்தவர்களை பின் வரிசைகளுக்கு போகச் சொன்னார். மொத்தம் பதினைந்து பேர்தான் பயணம் என்பதால், விமானத்திற்கு பின் பாரம் வேண்டும் என்று இவ்வாறு செய்வதாகச் சொன்னார். எனக்கு கிராமத்திலிருந்து டவுனுக்கு வண்டி கட்டிக் கொண்டு போனது ஞாபகம் வந்தது. வைக்கோலை எல்லாம் சரி பண்ணி, ஜமுக்காளம் போட்டு (சாய்ந்து கொள்ள சிவப்பு குஷண் எல்லாம் இருக்கும், சின்னச் சின்ன கண்ணாடிகள் தைத்து), ஏறி உட்கார்ந்தால், பெரியவர்கள் வந்தவுடன், வண்டிக்காரர் நம்மை எழுப்பி, கொஞ்சம் 'முன்னேவா - பின்னே போ' என்றெல்லாம் பாரம் சரி பண்ணியது நினைவுக்கு வந்தது.

இருபது நிமிடப் பிரயாணம் என்பதால் கடலை, காப்பி எல்லாம் கிடையாது. ஃப்ளாரன்ஸ் போய் இறங்கினால் ஒரே மழை. என்னிடம் ஒரே ஒரு கைப்பெட்டிதான்; எடுத்துக் கொண்டு சற்று மெதுவாக ஓடி (தண்ணீர் வழுக்கும் என்று பயம்) விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டேன். முன் கதவைத் திறந்து கொண்டு நாம் வந்தால், பின் கதவை (விமானத்தின் தொப்பை) திறந்து பொட்டியை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். பெரிய பெட்டி கொண்டுவந்தவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டம். எல்லாப் பொட்டிகளையும் இறக்கும் வரை காத்திருப்பதா (மழையில் பொட்டி நனைந்து கொண்டிருந்தது வேறு கவலை), அல்லது பேசாமல் ஓடிப் போய் பொட்டியைத் தூக்கிக் கொண்டுவருவதா என்று யோசித்துக் கொண்டு ஒதுங்கி இருந்தார்கள்.

அங்கிருந்து காரில் ஹார்ட்ஸ்வில் பயணம். 40 நிமிடப் பயணம் எனக்கு ஒரு மணி ஆயிற்று - இரவில் திருப்பம் தெரியாமல் தவறாக 6 மைல் போய் திரும்பியதால். மறுநாள் மாலை ஜோலியெல்லாம் முடித்து வெயிலிலேயே திருப்பம் - கார் (இந்த முறை 35 நிமிடங்களில் வந்தாயிற்று), குட்டி விமானம் (திரும்பும் போது மொத்தமே 12 பேர் தான் விமானப் பணியாளரையும் சேர்த்து - மறுபடி முன் பாரம் பின் பாரம் தமாஷ்), பெரிய விமானம், மோனோ ரெயில், பெரிய ரெயில், வீட்டம்மா கார் என்று குளிரில் நடுங்கிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு (ஒரே பசி), குழந்தைகளோடு அரை மணி விளையாடி, படுத்துத் தூங்கினால் எட்டு மணி கழித்துதான் எழுந்திருந்தேன். இருந்தும் அலுப்பு போகவில்லை. யோசித்துப் பார்த்தால், சிறு வயதில் மாதவனூரிலிருந்து வண்டி கட்டி தேவிப் பட்டணம் போய், பஸ்ஸில் இராமனாதபுரம், பின் குதிரை வண்டியில் பஸ் ஸ்டாண்டிலிருந்து வடக்கு வீதி வீட்டுக்கு போனதிலிருந்த களைப்பை விட மிக அதிகமாக இருந்தது ஏன் எனப் புரியவில்லை.

வியாழன், டிசம்பர் 15, 2005

திருமுகம் சொல்வதென்ன?

கணிப்பொறியெல்லாம் வெச்சு ஆராச்சியெல்லாம் பண்ணி படத்தில அவங்க மகிழ்ச்சியா இருக்காங்களா இல்லையான்னு சொல்லியிருக்காங்க. 83 சதவீதம் மகிழ்ச்சி, 9 சதவீதம் அருவெறுப்பு, 6 சதவீதம் பயம் மற்றும் 2 சதவீதம் கோபம் இருக்காம் இவங்க முகத்துல.

இந்த மூன்று முன்னாள் இந்திய பிரதம மந்திரிகள் உணர்ச்சிகளையும் ஆராய்ந்து சொன்னாங்கன்னா தேவலாம்.

திரு நரசிம்ம ராவ்

திரு வி.பி. சிங்

திரு தேவ கவுடா

அவங்க சொல்லாட்டாலும் நீங்க என்ன சொல்லுறீங்க?

செவ்வாய், டிசம்பர் 13, 2005

எலிக்குள் மனிதன்!

ஆராச்சிக்காக 2000-ம் ஆண்டில் விஞ்ஞானிகள் எலியின் மூளைக்குள் மனித செல்களைப் புகுத்தியிருக்கிறார்கள். ஸ்டெம் செல் ஆராச்சித் தடை அமெரிக்காவில் ஒரு முக்கியமான பிரச்சனை - கடந்த தேர்தலில் இது மிகவும் அதிகமாகப் பேசப்பட்ட ஒன்று. இப்போது சான் டியாகோவில் உள்ள சால்க் பல்கலைக் கழகத்தில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. இந்த செய்தி ஒரு விட்டலாச்சார்யா படம் பார்ப்பது போல் இருக்கிறது.

இது சரியா தவறா என்ற வாதத்தை தவிர்த்து பல கேள்விகள் எழுகின்றன. ஒரு மூளை எப்போது 'எலி' யிலிருந்து 'மனிதன்' ஆகிறது? 50% - 50% எலி, மனித செல்கள் இருந்தால் அது என்ன? சதவீத கணக்கில் 10% மனிதன் 90% எலி செல்கள் மூளையில் இருப்பது, 100% எலி செல்கள் இருப்பதை விட எலிக்கு அதிகம் உதவுமா? உதாரணமாக எலிகள் பூனைக்கு பயப்படும். மனித செல்கள் இருந்தால் அந்த பயம் போய்விடுமா? அப்படிப் போய்விட்டால் அது எலிக்கு நல்லதா?

மூளைக்குள் மனித செல்கள் இருந்தால் அந்த எலியின் சிந்தனை மாறுமா? மனம் என்று ஒன்று வருமா? அல்லது மாறுமா? அந்த எலிக்கு ஒரு ஆண் மீதோ அல்லது பெண் மீதோ பாசம், காதல் வருமா?

ஒரு மனித மூளை எலியின் உடலில் மாட்டிக்கொள்வது நல்லதா? சரியா? இந்த மாதிரி ஆராய்ச்சிகளினால் வரும் நன்மை, தவிர்க்கமுடியாத பக்க விளைவுகளால் வரும் தீமைகளை விட அதிகமா?

பதில் தெரியவில்லை!

திங்கள், டிசம்பர் 12, 2005

எனக்கு கேட்கத்தான் தெரியும்!

"நீ கேட்காதே - நானே கேட்கிறேன்! எனக்கு கேட்கத்தான் தெரியும்!"

திருவிளையாடலில் தருமி சொல்லும் பிரபலமான வசனம். நகைச்சுவையுடன் அலுவலகத்திலும், படிக்கும் போது பள்ளி/கல்லுரியிலும் உபயோகித்த வசனம். இப்போது அதற்கு ஒரு புது அர்த்தம் வந்திருக்கிறது! மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இந்த மாதிரி சொன்னால் அதற்கு காரணமே தனி!! ஒவ்வொரு கேள்வியும் வருமானம் தான்!

பிரச்சனைகளுக்கு தீர்வான பதில்களை எதிர்பார்க்கும் மக்களுக்கு, பிரச்சனைகளை எடுத்து வைக்குமாறு இருக்கும் கேள்விகளையே கேட்பதற்கு பணம் வாங்குவது ஒரு விதமான முன்னேற்றம்தான். இதில் எல்லாக் கட்சிக்காரர்களும் இருப்பதுதான் ஜனநாயகமோ?

கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதிலேதையா?

சனி, டிசம்பர் 03, 2005

எந்த சட்டம் நியாயம்?

சமீபத்தில் ஸ்ரீகாந்த் மீனாட்சி அபு சலேம் இந்தியாவுக்கு விசாரணைக்காக கொண்டு வரப்பட்டதைப் பற்றி எழுதியிருந்தார் (குற்றம் இங்கே, தண்டனை எங்கே?) . இந்த வாரம் இராமநாதனும், ஷ்ரேயாவும், சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தியதற்காகான குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியக் குடிமகனைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

இந்த வழக்குகளில் முக்கியமான பிரச்சனை 'எந்த சட்டம் செல்லும்?' என்பதுதான். குற்றம் நடைபெற்ற நாட்டு சட்டமா? அல்லது, குற்றமிழைத்தவர் நாட்டு சட்டமா? அபு சலேம் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும், அவருக்கு இந்திய சட்டத்தில் கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்காது - அதாவது குற்றம் நடந்த நாட்டு நீதி/தண்டனை கிடைக்காது! வான் ஙுவென்க்கு கிடைத்தது குற்றம் நடந்த நாட்டு நீதி/தண்டனை. எது சரி?

எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும், மெக்ஸிகோ நாட்டு போதை மருந்து கடத்தும் கூட்டங்களுக்கு எதிராக அமெரிக்க அரசு நிறைய நடவடிக்கைகள் எடுத்தது. அதில் மெக்ஸிகோ நாட்டு சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் உண்டு. 1992ல் அமெரிக்க உயர் நீதி மன்றம் 6க்கு 3 என்ற பெரும்பான்மையில் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்க ஏஜென்ட்களால் கடத்தி வரப்பட்ட ஹம்பர்டோ அல்வாரிஸ்-மக்கெய்ன் மீதுள்ள "குற்றச்சாட்டை விஜாரித்து தீர்ப்பளிக்கும் உரிமை, மெக்ஸிகோ சட்டத்திற்கு விரோதமாக கடத்தப்பட்டதால் குறைந்துவிடாது" என்று தீர்ப்பளித்தது. அப்போது தலைமை நீதிபதி சமீபத்தில் காலமான வில்லியம் ரென்குயிஸ்ட் இதை ஆதரித்து தீர்ப்பளித்தார். விபரங்களுக்கு: http://www.crf-usa.org/bria/bria10_4.html

அதாவது, அமெரிக்க சட்டத்திற்கு எதிராக ஒருவர் செயல்பட்டதாக ஒருவர் மீது குற்றமிருந்தால் அவர் எந்த நாட்டிலிருந்தாலும், அவரை அமெரிக்க உளவுப் பிரிவோ அல்லது எந்த ஒரு அரசு சம்பந்தப்பட்ட ஊழியரோ குற்றம் சாட்டப்பட்டவரை கடத்தி வந்தால், அமெரிக்க நீதிமன்றங்கள் அந்த வழக்குகளை விசாரிப்பதோ அல்லது தீர்ப்பு வழங்குவதோ தவறில்லை; குற்றம் சாட்டப்பட்டவரை கடத்துவது தவறில்லை. இந்த தீர்ப்பின் உண்மையான விளக்கம், நாடுகளுக்கு இடையே இருக்கும் ஒப்பந்தங்கள் (அபு சலேமுக்கு இந்த மாதிரி ஒப்பந்தம் தான் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது) மீறப்படலாம் என்பதுதான். கடத்தல் குற்றம்; ஆனால் குற்றம் விசாரிக்கவே கடத்த வேண்டிய நிலை கொஞ்சம் பயமூட்டத்தான் செய்கிறது.

உலகம் முழுவதற்கும் ஒரு பொதுப் படையான சமூக சட்டம் வந்தால் இது போன்ற பிரச்சனைகள் அதிகம் வராது. அந்த மாதிரி ஒரு நிலை வருமா? ஒரு நாட்டுக்குள்ளேயே பொது சட்டம் கொண்டுவர முடியவில்லை - மதங்களின் ஆக்கிரமிப்பு, ஓட்டுக்காக அரசியல்வாதிகளின் பாரபட்சம் என்பவை எல்லா நாட்டிலும் இருந்து வருகிறது. அதுவரையில் இந்த மாதிரி குழப்பங்கள் இருந்து கொண்டு தான் இருக்கும்.

வியாழன், டிசம்பர் 01, 2005

தாடகையும் தாரகையே!

விஷ்ணுசித்தரைப் பற்றி (குமரன்) படித்து விட்டு, செய்திகளைப் படிக்கையில் 'எண்ணை உழல்' முதலில் வந்தது - அதனால் இந்தக் கவிதை!

தாடகையும் தாரகையே பெற்றவருக்கு
பெற்றவரும் மற்றவரே இதயமற்றவருக்கு

காதலியும் அம்புலியே செங்கவிக்கு
வெண்ணிலவும் பணியாரமே எம்பசிக்கு

மருந்தே விருந்தாகும் நோயாளிக்கு
விருந்தே மருந்தாகும் பாட்டாளிக்கு

திருமால்தான் தெய்வம் நம்மாழ்வாருக்கு
தரும்'மால்'தான் தெய்வம் ஆள்பவருக்கு!