ஞாயிறு, ஜூன் 07, 2009

இரயில் – 5

இரயில் – 5

வில்லிவாக்கத்தில் ஒரு வருடத்திற்குப் பிறகு தேவர் தெருவிலிருந்து, தாமோதரப் பெருமாள் காலனிக்கு மாற்றி வந்தோம். அதிலும், வீட்டிற்குப் பின்புறம் தண்டவாளங்கள் தான். அதிலும் அம்பத்தூர் செல்லும் பாதை தவிர, பாடி வீல்ஸ் இன்டியா தொழிற்சாலையை ஒட்டி, ரயில் வண்டிகளுக்கு பூச்சு அடிக்கும் நிலயத்திற்கு செல்வதற்கான இன்னுமொரு பாதையும் உண்டு. இந்த பெயிண்ட் அடிக்கும் நிலையத்திற்கு செல்வதற்காக முழுவதும் முடிக்கப்படாத வண்டிப் பெட்டிகளை அழைத்துச் செல்வதற்காக சின்ன டீசல் இன்ஜின்கள் இயங்கும்.

இந்த இன்ஜின்கள் மொத்தம் இரண்டு வகை (அப்போது). டீசல் மற்றும் கரி. டீசலில் பெரிசு, சிறிசு உண்டு. இந்த சிறிசு அம்பத்தூர் - பீச் லோகல் வண்டிக்கு அதிகம் உபயோகிப்பார்கள். கரி இன்ஜினில் இரண்டு வகை - முகம் தட்டையான வகை; மற்றும் முகம் ஒரு கூம்பு போல முடிந்த வகை. மின் வண்டி அப்போது இந்த தடத்தில் கிடையாது. ஒவ்வொரு இன்ஜின் சப்தமும் தனி.

கரிவண்டி நிலையத்தை விட்டு கிளம்புவது, ஒரு அழகான கர்நாடக சங்கீதப் பாட்டின் ஆரம்பம் போல. ஸ்வரம் நிதானமாக ஆரம்பித்து, ஒரு சீராக வேகம் எடுக்கும். நிலையத்தின் வெளியே கொஞ்ச தூரத்தில் சாலை தண்டவாளத்தைக் கடக்கும்; அதற்கு முன்பாக அனேகமாக அனைத்து வண்டிகளும், ஓசை (விசில்) எழுப்பி விட்டுத்தான் செல்லும். இந்த விசிலும் ஒரு விதமான தாளத்தோடுதான் - கரிவண்டிகள் அனேகமாக இரண்டு விசில் அடிக்கும், ஒரு சின்னது, தொடர்ந்து கொஞ்சம் நீளமான விசில். இந்த சின்ன விசில் முடிவதற்கு முன் பெரியது ஆரம்பித்துவிடும் - இரண்டுக்கும் நடுவில் நிசப்தம் இருக்காது.

இந்த இன்ஜின் சக்கரங்கள் அளவும், சக்கரங்களுக்கு இடையே உள்ள தூரமும் வண்டிப் பெட்டிகளில் இருக்கும் சக்கரங்களை விட மாறுபட்டது. நீராவிப் பெட்டியிருந்து (அதான் பிஸ்டன் இருக்கும் டப்பா) வரும் இரும்பு உருளை இரண்டு அல்லது மூன்று பெரிய சக்கரங்களோடு (ஆரங்கள் உள்ள சக்கரங்கள்) இணைந்திருக்கும். நீராவி இந்த இரும்பு உருளையைத் தள்ளும் போது அந்த விசை ஒரு சக்கரத்திற்கு மட்டும் செல்லாமல் இந்த இரண்டு/மூன்று சக்கரங்களுக்கும் செல்லத்தான் இந்த அமைப்பு. இதில் சமயத்தில் நிலையத்திலிருந்து கிளம்புகையில் இன்ஜின் சக்கரத்தில் தண்டவாளத்தோடு அதிக பிடிப்பு இல்லாமல், சக்கரம் ஒரே இடத்தில் வேகமாகச் சுற்றுவதைப் பார்க்கலாம். அப்போது வரும் சப்தம் (கிட்டத்தட்ட அபஸ்வரம்) நிச்சயாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

அந்த நான்கு வருடங்களில் வெவ்வேறு விதமான சப்தங்களையும் அந்த வண்டிகளையும் கேட்டு/பார்த்து, அடையாளம் காண்பதில் தேர்ச்சி வந்தது. அதிலும் தாமோதரன் காலனி வீட்டில் மொட்டைமாடி - அதனால் வண்டிகளைப் பார்ப்பதும் கேட்பதும் அதிகமானது. அப்போது நாங்களாய் தென்னங் குறும்பையில் இரண்டு தென்னங்குச்சியை சொருகி (ஒரு பெரிய குச்சியை வளைத்து - ஆங்கில தலைகீழ் U, நடுவில் இரண்டாவது சின்ன குச்சியை சொருகி, மூன்றாவது குச்சியை இந்த குறும்பைக் குச்சிகளுக்கு இடையே நுழைத்து சுழற்றினால் ஒரு விதமான கிலுகிலுப்பை சத்தம் - Rattler) சுழற்றினால் வரும் சத்த தாளத்தை ரயில் வண்டியின் தாளத்தை ஒட்டி வரவழைப்பது ஒரு விளையாட்டு.

இது தவிர ஒரு ஊதல் - புல்லாங்குழல் போல. அதில் ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி, தண்ணீரில் நனைத்து, அந்த குச்சியை குழலின் உள்ளே மேலும் கீழும் அசைத்து, ஊதலின் சப்தம் மாறுவதை (சப்தம் கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயி என்று மாறும்) கேட்போம். இந்த மேலிருந்து கீழ் அசைவை ஒரு தாள வேகத்தோடு செய்தால் கரிவண்டிகள் எழுப்பும் முன்னால் சொன்ன அந்த இரண்டு விசில் போல வரும். இந்த விசில் சப்தம் ஏன் அளவில் வேறுபடுகிறது என்று புரிந்தது, மன்னார்குடியில் திரு ஸ்ரீதரன் அவர்கள் இசைக் கவை பற்றி சொல்லிக் கொடுத்த போது கொஞ்சம் புரிந்தமாதிரி இருந்தது. ஊதுபத்தி டப்பாவை (ஒரு உருளை அட்டை) காதில் வைத்து ரயில் ஊதலைக் கேட்கையில் தெரிந்த வித்தியாசத்த்தை விவரிப்பது கடினம்; இசைக் கவைப் பாடம் நிச்சயம் உதவியது.

முந்தைய பதிவுகள்
இரயில் - 1
இரயில் - 2

இரயில் - 3
இரயில் - 4

கருத்துகள் இல்லை: