வெள்ளி, டிசம்பர் 23, 2011

பேசு மனமே பேசு! - 3

பேசு மனமே பேசு! - 3

ஃபோனில் தொழில்நுட்ப முன்னேற்றம் மிகத் தெளிவாகத் தெரிந்தாலும், பேசுதல் என்று யோசிக்கையில் முன்னேற்றம் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. முதலில் அளவு. இளவயதில் பேசுவதற்கு ஆசை அதிகம்; பேச விஷயமும் அதிகம் இருந்தது. அரை மணி, ஒரு மணி நேரம் பேசிவிட்டு, 'அப்படி என்னதான் பேசினீங்க?' என்ற அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல், சமாளிப்பதற்காக 'நாங்க என்ன பேசினா என்ன?' என்று எதிர்க் கேள்வி கேட்டுத் தப்பித்ததுண்டு. இப்போது யாராவது தெரிந்தவர் ஃபோன் செய்தால் 'நான் சௌக்கியம்; நீங்க சௌக்கியமா?' என்று கேட்டு ஒரு நிமிஷத்தில் ஃபோனை வைத்து விடுகிறேன். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று பேசுவதற்கு விஷயம் அதிகம் இல்லை.

கடந்த இருபது வருடங்களில் அதுவும் குறிப்பாக கடந்த பத்து வருடங்களில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் குடும்பங்களில் எந்த விதமான விஷயங்கள் செய்தியாக வரும் என்று யூகிப்பதில் தேர்ச்சி வந்து விட்டது. எனக்கு ஞான திருஷ்டி வந்து மற்றவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று தெரிகிறது என்று நான் சொல்லவில்லை. யார் யார் எந்தெந்த மாதிரியான விஷங்களைச் செய்தியாக ஃபோனில் கூப்பிட்டு சொல்வார்கள் என்று யூகிக்க முடிகிறது என்று சொல்கிறேன். முதலில் இதில் ஒரு சந்தோஷம் வந்தாலும், நாளாக நாளாக இது ஃபோனில் பேசுகின்ற சுவாரசியத்தைக் குறைத்து விட்டது. இதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தவுடன், மற்றவர்களும் நாம் ஃபோன் செய்யும் போது இதே போல சரியாக யூகிப்பார்களோ என்று தோன்ற ஆரம்பித்தது. அந்த மாதிரியான யோசனை வந்ததிலிருந்து நான் ஃபோன் செய்வது குறைய ஆரம்பித்தது. வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற பழமொழியின் பொருள் கொஞ்சம் வேறு விதமாகப் புரிந்தது.

தவிர அலுவலகத்தில் ஃபோனில் பேசுவது அதிகமாகிப் போனது. முதன் முதலாக லிப்டனில் வேலை செய்யும் போது, செலவுச் சிக்கனம் என்று பார்த்துப் பார்த்துப் பேசியது போக இப்போது வேலையில் சகட்டு மேனிக்குப் பேச வேண்டிய கட்டாயம். அதிலும் கடந்த ஆறு/ஏழு வருடங்களில் சராசரியாக தினமும் 3 மணி நேரம் ஃபோனில்! இதில் நான் பேசுவது குறைவு; இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதில் செல்லும். முக்கால்வாசி நேரம் இந்த 'கான்ஃப்ரன்ஸ் கால்' என்று ஐந்திலிருந்து ஐம்பது பேர்கள் வரை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஒரே ஃபோன் காலில்! வீட்டுக்கு வரும் போது ஃபோன் மணி அடித்தாலே எரிச்சல் வரும்!

இந்த மாதிரியான ஃபோன் கால்களில் மனது பேசுகின்ற விஷயத்திலிருந்து தாவி வேறெங்காவது அலைபாய்வதைத் தவிர்க்க முடியாது. சிலர் குரலைக் கேட்டாலே தூக்கம் வரும்; சில சமயம் சிலரின் பேசும் விதம் நம்மை அறியாமலேயே மற்ற விஷயங்களை யோசிக்க வைக்கும். முகம் தெரியாமல், குரலை மட்டும் கேட்கையில், அதிலும் அனேகம் பேர் பேசும் பொழுது, கவனம் அதிகம் தேவையாக இருக்கிறது; ஆனால் அப்போது தான் மனமும் எங்காவது சென்று விடுகிறது. ஃபோனில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்கையில், அவரின் குரல், பேச்சை மட்டும் வைத்து அவர்களை மதிப்பீடு செய்வது தாமாக வர ஆரம்பித்தது. ஒருவரை நேரில் பார்க்காமல், அவருடன் பழகாமல், அவர் தரம், நாணயம் பற்றி எல்லம் அவர்களின் பேச்சை மட்டும் வைத்துக் கொண்டு முடிவுக்கு வருவது சரியல்ல என்று தெரிந்திருந்தாலும், அந்த மாதிரியான நிர்ணயங்களுக்கு மனது தாமாகச் சென்றது. இதே போன்று என் பேச்சை, குரலை மட்டும் வைத்து என்னைப் பற்றி மற்றவர்கள் எடை போடலாம் என்ற யோசனை வந்ததிலிருந்து தெரியாதவர்களோடு பேச நாட்டம் குறைந்து போனது.

தெரிந்தவர்கள் கூப்பிட்டால் என்ன விஷயமாக இருக்கும் என்ற யூகம்; தெரியாதவராக இருந்தால் அவர் யாரோ? எப்படியோ? என்ற மதிப்பீடு - இரண்டுமே தேவையில்லாதது என்று தெரிந்திருந்தாலும் தவிர்க்க முடியவில்லை. மற்றவர்கள் பேசுகையில் எனக்குள்ளேயே நடக்கும் சம்பாஷணையைத் தவிர்க்கத் தெரியாததால், பேசுவதே குறைந்து போனது. நினைத்துப் பார்க்கையில் இளவயதிலும் மற்றவர்கள் பேசுவதைக் கேட்ப்பதை விட, நான் பேசுவதில் தான் எனக்கு நாட்டம் இருந்தது. ஆனால் என் பேச்சைக் கேட்க யாராவது வேண்டுமே! அதற்காக அவர்கள் பேச்சை நான் கேட்பது ஒரு விதமான 'கொடுக்க வாங்கல்' விஷயமாகிப் போனது. மற்றவர்களின் பேச்சை கேட்க விரும்பிப் ஃபோன் செய்ததை விட, நான் பேசுவதைக் கேட்க யாராவது வேண்டும் என்பதற்காகப் ஃபோன் செய்தது தான் அதிகம். இப்போது அந்த மாதிரியான எண்ணம் குறைந்து போனதால், நானாக முயன்று ஃபோன் செய்வது குறைந்து போனது.

ஃபோனில் பேச நாட்டம் குறைந்தாலும், நேரில் பார்க்கையில் தெரிந்தவர்களுடன் பேசுவதில் நாட்டம் குறையவில்லை. முகம் பார்த்து நேரில் பேசுவதில் இருக்கும் நிறைவும் திருப்தியும் ஃபோனில் கிடைப்பதில்லை என்பது ஒரு முக்கிய காரணம். இது முன்னேற்றமா இல்லையா என்று தெரியவில்லை. அதே சமயத்தில் கருத்துப் பறிமாற்றம் என்று பார்த்தால் சிறுவயதில் இருந்ததை விட இன்னாளில் அதிகம், இணையத்தின் தயவில். முகம் தெரியாதவர் ஃபோனில் பேசுவதைக் கேட்பதைக் காட்டிலும், எழுதுவதைப் படிப்பது சுலபமாக இருக்கிறது.

மாடு சாப்பிட்டுவிட்டு நிதானமாக அசை போடுவது போல இணையத்தில் எழுதியதைப் படிப்பதில் ஒரு சௌகரியம். ஃபோனில் பேசுகையில் உடனுக்குடன் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இணையத்தில் அந்த நிர்பந்தம் இல்லை. இரவில் தூக்கம் கலைந்து நடு இரவில் வேதாந்தமும் படிக்கலாம் அல்லது அரசியலும் படிக்கலாம். யாரையும் தொந்திரவு செய்ய வேண்டாம். இப்போது என் செல் ஃபோனில் இதைச் செய்ய முடிகிறது. அந்த விதத்தில் முன்னேற்றம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ட்விட்டர் போன்ற தளங்களில், 'எனக்குப் பல் வலி' அல்லது 'கடைக்குப் போகிறேன்' என்றெல்லாம் எழுதுகிறார்கள். நான் தினசரி வாழ்க்கையில் என்ன செய்கிறேன் என்பது பற்றி தெரிந்து கொள்ள யாரும் இருப்பதாகத் தெரியவில்லையாதலால் இன்னமும் அது போன்ற தளங்களில் எனக்கு கணக்கு இல்லை. அதே போல மற்றவர்களின் தினசரி வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள எனக்கு விருப்பமில்லாததால் அம்மாதிரியான தளங்களுக்கு அதிகம் செல்வதும் இல்லை. தொழில் நுட்ப முன்னேற்றம் நிச்சயம் மனதை அதிகம் பேச வைத்திருக்கிறது. இந்தப் பேச்சினால் முன்னேற்றம் வந்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் நாளாகும் என்றுதான் தோன்றுகிறது.

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

பேசு மனமே பேசு! - 2

பேசு மனமே பேசு! - 2

சி.ஏ. படிப்பு முடிந்து ஹிந்துஸ்தான் லீவரில் வேலை கிடைத்தது. பதினெட்டு மாதங்கள் டிரெயினிங் - ஊர் ஊராகப் பயணம். முதல் முறையாக மகன் வீட்டை விட்டு வெளியூர் போகிறானே என்ற கவலை அம்மாவிற்கு. சமாதானமாக 'வாரா வாரம் தவறாமல் பக்கத்து வீட்டுக்குப் ஃபோன் செய்கிறேன்' (வீட்டில் அப்போது ஃபோன் கிடையாது) என்று சொல்லி பம்பாய் கிளம்பினேன். அப்போது ஆரம்பித்தது, வாரமொருமுறையாவது ஃபோனில் பேச்சு என்று - இன்று வரை தொடர்கிறது. அம்மாவும், அப்பாவும் என் வீட்டிற்கு வந்து தங்கும் நாட்கள் தவிர, ஒவ்வொரு வாரக் கடைசியிலும் இரண்டு நிமிடங்களாவது பேசி விடுவது என்று! பேசுவதற்கு உருப்படியான சமாசாரம் ஏதும் இல்லாது போனாலும் 'உன் குரலையாவது கேட்கணும்டா!' என்று சென்டிமென்டலாக அம்மா சொன்னதால் பதினேழு வருடங்களாகத் தொடர்ந்து வருவதற்கு ஃபோன் தான் காரணம்.

டிரெயினிங் முடிந்து சண்டிகரில் போஸ்டிங். ஒரு வீட்டின் அவுட் ஹவுசில் குடியிருந்தேன். ஒரு சிறு அறை, படுக்கையறை, சமையல் மற்றும் குளியலறை. வேலை நிமித்தம் வீட்டில் ஃபோன், எஸ்.டி.டி. வசதியுடன். நான்காவது மாதம் ஃபோன் பில்லைப் பார்த்ததும் மயக்கமே வந்து விட்டது - ரூபாய் இருபதாயிரத்துக்கும் கொஞ்சம் அதிகம். பில்லை சரிபார்க்கலாம் என்றால் அந்த நாட்களில் எண்ணிக்கை வாரியாக பட்டியல் கிடையாது. அப்புறம் தான் தெரிந்தது, எஸ்.டி.டி. இருக்கும் வீட்டுக் காரர்கள் தொலைபேசி வாரிய ஊழியர்களை சரியாக 'கவனிக்கவில்லை' என்றால், மற்ற வீட்டு தொலை தூரக் கட்டணமெல்லாம் நம் வீட்டு ஃபோனிற்கு வந்து விடும் என்று. இது பரவலாகத் தெரிந்திருந்த ரகசியமானதால் அலுவலத்தில் பில்லை கட்டிவிட்டு, எஸ்.டி.டி. இணைப்பை மட்டும் துண்டித்து விட்டோம். இந்த பில் தகிடுதத்தம் பரவலாகிப் போனதால், பின் நாளில் எல்லா எக்சேஞ்களையும் மாற்றி, எண் வாரியாக கட்டண விவரம் தரும் முறையைக் கொண்டு வந்தார்கள்.

எண்பதுகளின் இறுதியில் இந்தியாவில் பரவலாக வந்த ஒரு விஷயம் 'எஸ்.டி.டி. பூத்' என்று தனியாரால் இயக்கப்பட்ட தொலை தூர இணைப்பகங்கள். சண்டீகரில் வசிக்கையில் (92-94) இந்த மாதிரியான ஒரு தொலை தூர இணைப்பகத்தில் எனக்கு 'கணக்கு' இருந்தது. நான் வீட்டிலிருந்தே அவர்களுக்கு ஃபோன் செய்து சென்னையின் எண்ணைக் கொடுத்தால் அவர்கள் அங்கிருந்து இணைப்புக் கொடுப்பார்கள். முதலில் கொஞ்சம் 'டெபாசிட்'; பின் மாதா மாதம் அவர்களுக்கான கட்டணத்துடன் 'அக்கவுண்ட்' செட்டில் பண்ண வேண்டும். இந்த முறையில் சேதாரம் அதிகம் இல்லை. 94 மே மாதம் காசியாபாத் (உ. பி.) வரும் வரை இந்த முறையில் தான் தொலை தூர ஃபோன் பேச்சு.

உத்திரப் பிரதேசத்தில் வேறு விதமான பிரச்சனை. அரசு அலுவலக ஊழியருக்கு எப்போதெல்லாம் பணத் தட்டுப்பாடு வருகிறதோ அப்போதெல்லாம் நம் வீட்டு ஃபோன் வேலை செய்யாது. அவர் வந்து கை வைத்ததும் வேலை செய்ய ஆரம்பிக்கும்; அதற்காக அவர் கையில் ஏதாவது வைக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது நடக்கும் விஷயம் இது. பண்டிகைக் காலங்களில் மாதத்தில் இரண்டு தடவையாவது இந்தத் தடங்கல் வரும். 94 கடைசியில் வேலை மாறி ஆஸ்திரேலியா சென்றேன். சிட்னியிலிருந்து திருச்சிக்கு வாரக் கடைசியில் அம்மாவுக்கு ஃபோன். பரமக்குடியில் முதல் முதலாக அடுத்த தெருவுக்கு தூக்க முடியாமல் தூக்கி மூன்று எண்கள் சுற்றி பேசியதில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பேச எடையும் கயறும் (அதான் சார் wire) இல்லாத ஃபோனில் பத்து எண்கள் அழுத்திப் பேச முடிந்த முன்னேற்றத்தை நான் காண கிட்டத்தட்ட இருபது வருடம் ஆனது.

சிட்னியிலிருந்து திரும்பி டில்லி வந்த போது முதல் முறையாக செல் ஃபோன் இந்தியாவில் அறிமுகம். ஒரு குட்டி செங்கல் அளவு, கனம்; ஆனால் கருப்பு நிறம். அதற்காக தனி பாட்டரி, அதை மின் இணைப்பில் பொருத்தி புத்துயிர் கொடுக்க தனியாக இன்னுமொரு சாதனம். அந்நாளில் தச்சர்கள் மரத்தை இழைப்பதற்காக ஒரு கருவி வைத்திருப்பார்களே, அது போல இருக்கும். நான்கு மணி நேரம் மின் இணைப்பில் வைத்திருந்தால், ஃபோனும் நான்கு மணி நேரம் உயிரோடு இருக்கும்! நாள் முழுவதும் வேண்டுமென்றால், இரண்டு பாட்டரிகளை முதல் நாள் இரவு உயிர்ப்பித்து வைத்திருக்க வேண்டும். இந்த எல்லா உபகரணங்களையும் சேர்த்தால் முன்னாளின் கருப்பு ஃபோன் அளவுக்கு எடை! இருந்தாலும் 'என்னே தொழில்நுட்ப வளர்ச்சி' - எங்கிருந்து வேண்டுமானாலும் பேச முடிகிறதே!

இந்த ஆகஸ்ட் மாதம் கூகுளின் நெக்சஸ் ஃபோன் வாங்கினேன். இதில் பேச மட்டும் செய்ய வேண்டாம். பாட்டு கேட்கலாம்; படம் பிடிக்கலாம்; புத்தகம் படிக்கலாம்; இணையத்தில் மேயலாம். இன்னம் எத்தனை எத்தனையோ விஷயங்கள். ஆனால் தடவிக் கொடுத்துத் தான் வேலை வாங்க வேண்டும். அந்தக் காலத்தில் சினிமாவில் கோபத்தைக் காட்ட வேகமாக ஃபோனை வைப்பார்கள்; இப்போது என்னதான் கோபம் இருந்தாலும் மெதுவாக அழுத்தத் தான் வேண்டும். கையளவே இருக்கிறது; இருந்தாலும் ஏகத்துக்கு வேலை செய்கிறது!! முதல் முதலாக கல் அளவில் பார்த்த செல் ஃபோனுக்கும், இதற்கும் எத்தனையோ வித்தியாசம்; இந்த மாற்றத்திற்கு கிட்டத்தட்ட இருபது வருடங்கள்.

பேச உதவும் கருவியில் நாற்பது வருடங்களில் நான் கண்ட முன்னேற்றம் அதிகம். என்ன பேசினேன், யாருடன் பேசினேன் என்பதிலும் நிறைய மாற்றங்கள். அதைப் பற்றி அடுத்த பதிவில்.

வியாழன், செப்டம்பர் 08, 2011

பேசு மனமே பேசு! - 1

பேசு மனமே பேசு! - 1

ரொம்ப நாட்கள் (வருடம்) தள்ளிப் போட்டு ஒரு வழியாக சென்ற மாதம் புத்தம் புதிதாக ஒரு 'ஸ்மார்ட் ஃபோன்' வாங்கி விட்டேன் - கூகுள் நெக்ஸஸ் - எஸ்! உபயோகிக்க ஆரம்பித்து மூன்று வாரங்களாகி விட்டது; இன்னமும் உபயோகிக்கும் விதம் முழுவதுமாகப் புரியவில்லை. போனில் எக்கச்சக்கமான விஷயங்கள் - இணையத்தில் தேடுவதில் ஆரம்பித்து, புத்தகம் படிக்க, சுடோக்கு விளையாட, வழி தேடி வரைபடம் பார்க்க என்று ஏகப்பட்ட சமாசாரங்கள். இப்படி எதையாவது செய்து கொண்டிருக்கையில், வீட்டிலிருந்து ஃபோன் வந்தால் சடாரென்று எடுத்து பதில் சொல்லமுடியாமல், தட்டுத் தடுமாறி, தடவித் தடவி 'ஹலோ' என்றால் எதிர் முனையில் 'ஃபோனெடுக்க என்ன இத்தனை நேரம்?' என்று கேள்வி! இந்தத் தொலை பேசி, தொல்லைப் பேசியாகி விட்டது.

தமிழில் தொலைபேசி என்ற அழகான வாக்கியம் இருந்தாலும், ஃபோன் என்று சொல்லிப் பழகிவிட்டது. எஸ்.வி. சேகர் ஒரு நாடகத்தில் சொல்லுவார் 'ஓ பிராமிஸ் இப்போது தமிழ் வார்த்தையாகி விட்டதா' என்று; எனக்கு ஃபோன் தமிழ் வார்த்தையாகி விட்டது. இதனால் ஒரு உபயோகம்: வாய்ப்பாடில் வரும், அ, ஆ, இ, ஈ தமிழ் வார்த்தைகளுக்கு (அணில், ஆடு, இலை, ஈக்கள்), ஃ என்பதற்கு அஃது தவிர இன்னுமொரு தமிழ் வார்த்தை சேர்க்கலாம்! நிறைய தமிழ்ப் பிரியர்கள் இது சரியல்ல என்று சொன்னாலும், இந்தப் பதிவில் ஃபோன் என்றே குறிப்பிடுகிறேன்!

என் வாழ்க்கையில் முதல் முதலாக வந்த பரிச்சயம் பரமக்குடியில் இருந்த பெரியப்பா வீட்டு கறுப்பு ஃபோன். தூக்க முடியாத கனம் (அப்போது எனக்கு நான்கு, ஐந்து வயது). பெரியப்பா வக்கீலாக இருந்தார்; வீட்டு போர்டிகோ தாண்டி, அவருடைய வீட்டு அலுவலகம். வீட்டின் முதல் அறைக்கும், அலுவலகத்திற்கும் இடையே ஒரு ஜன்னல். அந்த ஜன்னலுக்கு அருகிலே சிறு மர மேடை; அந்த மேடையில் ஃபோன். ஜன்னலில் கீழ்ப் பாகத்தில் கம்பிகனின் இடைவெளி அதிகம் - ஃபோனின் ரிசிவரை ஜன்னலின் வழியாக எடுக்க வசதியாக இருப்பதற்காக. வீட்டுப் ஃபோனின் எண் 234 - இதை எண்களைச் சுற்றும் தகட்டின் நடுவே பதித்திருப்பார்கள். அந்த ஃபோன் வாசனையே தனி. ஃபோனை இணைத்திருக்கும் வயர் பிளாஸ்டிக் கருப்பு நிறம்; அதை ஒரு விதமான சிகப்பு நிற நூலால் உரை மாதிரி போட்டு சுற்றி வைத்திருக்கும். ஒவ்வொரு எண்ணைச் சுற்றும் போதும் வரும் சப்தமும் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

பெரியப்பாவின் குமாஸ்தா. வேலை விஷயமாக மானாமதுரை, மதுரை என்றெல்லாம் டிரங்கால் போட்டுப் பேசுவார். 'அலோ. அலோ' என்று அவர் அலறுவதைக் கேட்பதே ஒரு தமாஷ் தான்! அவர் பேசுகையில் எதிர் முனையில் என்ன பேசியிருப்பார்கள் என்று தெரியாது; ஆனாலும் நானும் என் பெரியப்பா பிள்ளையும் அவர் பேசும் தோரணையை காப்பியடித்து ("அப்படியா?", "ஆமா", "அலோ, அலோ") அவர் இல்லாத போது கற்பனையாக ஃபோன் பேசுவோம். ஒரு தடவை கணம் தாங்காமல் கீழே போட்டு விட்டேன்; நல்ல வேளை உடையவில்லை. இருந்தாலும், அதன் பின்னால் நாங்கள் விளையாட அந்தப் ஃபோனை உபயோகிக்க அனுமதியில்லை. இரண்டு தீப்பெட்டிகளை நூலால் கட்டி கற்பனை ஃபோன் பேசுவோம். பின்னால் மன்னார்குடியில் பள்ளியில் படிக்கையில் இந்த ஃபோன் சமாசாரம் எப்படி இயங்குகிறது என்பது பற்றிப் புரிந்தது.

பட்டுக்கோட்டை, மன்னார்குடி வாசத்தில் ஃபோன் ஒரு அரிதான விஷயமாகவே இருந்தது. மற்ற உறவினர்களுடன் தொடர்பு கடிதம் மூலமாகத்தான். இந்தக் "கடுதாசி" பற்றி தனிப்பதிவு இன்னொரு நாள்! திருச்சியில் கல்லூரியில் படிக்கையில், அப்பாவின் தயவில் ஸ்டேட் பாங்க் வட்டார அலுவலகத்தில் "ஹாட் லைன்" ஃபோன் பார்க்க முடிந்தது. மற்ற வட்டார, தலைமை அலுவலகங்களோடு நேரடித் தொடர்பு கொள்வதற்காக (திருச்சியிலிருந்து மதுரை,சென்னை போன்ற இடங்களுக்கு) நேரடி இணைப்புகள். ஒரு அறையில், போதிய பாதுகாப்போடு (காவலுக்கு ஒருத்தர், எல்லா ஃபோன் கால்களையும் எழுத ஒரு நோட்டு!) வரிசையாக தனித்தனி ஃபோன்கள்; ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊருக்கு. ஹார்லிக்ஸ் விளம்பரப் பையன் பாணியில் 'சுற்ற வேண்டாம்; அப்படியே பேசிடுவேன்!' வகை. எந்த எண்ணையும் சுற்ற வேண்டாம்; நேரடியாக ரிசீவரை எடுத்தால் அடுத்த ஊரில் மணியடிக்கும்.

கல்லூரிப் படிப்பு முடிந்து சென்னையில் சி.ஏ. படிக்கும் போது தணிக்கை உத்தியோகம். வேலைக்காக மற்ற நிறுவனங்களுக்கு செல்கையில் ஃபோன்களின் அருகாமை அதிகரித்தது. அந்த அருகாமை மற்றவர்களோடு பேச வேண்டும் என்ற தேவையையும் தோற்றுவித்தது. ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொரு விதமான 'பாலிசி'. அனேகமாக எல்லோருமே ஒரு விதத்தில் ஃபோன் உபயோகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இருந்தாலும் 'ஆடிட்டர் ஆபிஸ்' என்ற அந்தஸ்த்தை கிட்டத்தட்ட அனைவருமே துஷ்பிரயோகித்தோம்! நான் சேர்ந்த வருடத்தில் என்னோடு மூன்று பேர்கள் எங்கள் ஆடிட்டரிடம் வேலைக்கு சேர்ந்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் - ஒருவர் பாடி,மற்றொருவர் மவுண்ட் ரோடு, இன்னுமொருவர் ஆழ்வார்ப்பேட்டை. மாலையில் எல்லோருமே நுங்கம்பாக்கம் ஹை ரோடில் சி.ஏ. இன்ஸ்ட்டிட்யூட்டில் சி.ஏ. வகுப்புக்கு செல்வோம். தினம் ஒரு முறையாவது ஃபோனில் ஒருவரோடு ஒருவர் பேசுவோம் - ஓசியில் கிடைத்ததால்! அப்போதெல்லாம் 'கான்ஃப்ரன்ஸ்' வசதி கிடையாது. புலி, ஆடு, புல்லுக்கட்டு கதை போல மூன்று, நாலு முறை பேச வேண்டியிருக்கும்!

ஆனால் நினைத்த போதேல்லாம் பேச முடியாது. அனேகமாக ஃபோன், அக்கவுண்டண்ட் மேசையில் தான் இருக்கும். அவர் இல்லாத போது பேசுவது வசதி; அவர் இருந்தால், கொஞ்சம் பேச்சைக் குறைக்க வேண்டியிருக்கும். அவருக்கு கோபம் வந்து ஆடிட்டரிடம் வத்தி வைத்தால் பிரச்சனையாகிவிடும் என்று சீனியர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தார்கள். இருந்தாலும், ஃபோனின் அருகாமை, பேச்சை அதிகரித்தது. வீட்டில் ஃபோன் இல்லாது போனாலும், மற்ற அலுவலக எண்களைக் குறித்து வைத்துக் கொள்ள முதல் முதலாக டெலிஃபோன் டைரியை உபயோகித்தேன் - 1988ல். அந்த சிறு பாக்கெட் புத்தகத்தில் உள்ள அனைத்து எண்களும் இப்போது மாறிவிட்டது. இருந்தாலும்,சென்டிமென்டாக அந்த அரக்குக் கலர் டைரி இன்னமும் என்னிடம் இருக்கிறது! 89ல் முதல் முதலாக சுற்றும் ஃபோனைத் தவிர, பட்டன் அழுத்தும் ஃபோன் பார்த்தேன்! கனம் குறைவான அதே சமயத்தில் விரைவாக எண்ணை அழுத்த முடிகிறதே என்று ஒரே சந்தோஷம்!

வேலையில் இருக்கையில் வந்த ரூ. 20,000 ஃபோன் பில், முதல் முதலாக 96ல் வாங்கிய'செல் ஃபோன்' (கல்) பற்றி அடுத்த பதிவில்.

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

ஆடல் காணீரோ?

ஆடல் காணீரோ?

இந்த ஆகஸ்ட் மாதம் வித்தியாசமானது.

முதல் வார இறுதியில் மகளுடன் (எட்டு வயது) பத்து நாள் லண்டன் பயணம். என் மனைவியின் அண்ணன் குடும்பத்துடன் (அவர்களுக்கு ஏழு வயதில் பெண்) விடுமுறைக்காக கொஞ்சம் சுற்றலாம் என்று எண்ணிக் கொண்டு போய்ச் சேர்ந்தோம். இரண்டாம் நாள் செஸ்ஸிங்க்டன் சென்று குழந்தைகளோடு சேர்ந்து, உடம்பை ஆட்டி வைத்த விளையாட்டு சமாசாரங்களில் (ரோலர்-கோஸ்டர், ரங்க ராட்டினம், இத்யாதி) சுற்றி விட்டு களைத்துப் போய் வீடு வந்து தொலைக்காட்சியைப் பார்கையில் லண்டன் கலவரம் பற்றிச் சொன்னார்கள். குழந்தைகளோடு சந்தோஷமாக ஆடலாம் என்று பார்த்தால், தெருக்களில் வேறு விதமான ஆட்டம். இரண்டு நாட்களுக்கு வேறு எங்கும் போகாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம். பொழுது போவதற்காக குழுந்தைகள் இரண்டும் 'வீ' (Wii) பெட்டியின் தயவில் டென்னிஸ், கோல்ஃப் என்று விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக தெருக்களில் ஆட்டம் குறைந்ததும், மறுபடியும் சுற்றக் கிளம்பினோம். நாளைக்கு ஒருமுறையாவது மழை வந்தது - அரை மணி அல்லது ஒரு மணி நேரம் மழை பெய்து முடிந்ததும் சில்லென்று காற்றுடன் சுள்ளென்று வெயிலும் அடித்தது. மொத்தத்தில் வருண தேவன், சூரிய தேவன், வாயு தேவன் என்று அனைவரும் கொஞ்சம் விளையாடினார்கள்! இரண்டு நாள் வீட்டிலேயே இருந்தாலும், மற்ற நாட்களில் தினமும் ஆடிக் களைத்ததில் திரும்பி வந்தவுடன் வீட்டில் கொஞ்சம் அமைதி. பத்து நாள் பயணம் பறந்து போனதே தெரியவில்லை.

விமானம் ஏறி மகளுடன் நாடு திரும்புகையில் இறங்குவதற்கு ஒன்றரை மணி நேரம் இருக்கையில், இருக்கைப் பட்டியை (seat belt) கட்டிக் கொள்ளுமாறு அறிவித்தார்கள் - காரணம் வெளியே பலத்த காற்றுடன் கூடிய மழை! அதுவரை பறப்பதையே உணரவில்லை, அவ்வளவு சொகுசாக இருந்தது; திடீரென்று செஸ்ஸிங்டன் ரோலர்-கோஸ்டர் போல தூக்கித் தூக்கிப் போட்டது. விமானி திறமையுடன் நூவர்க் வந்து இறக்கியவுடன், பயணிகள் (நானும்தான்) கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். சிறு வயதில் இந்தியா ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டில் நாற்பதாவது ஓவரில் தடுமாறுகையில் வந்த டென்ஷன், பின் ஒரு வழியாக நாற்பத்தொன்பதாவது ஓவரில் வெல்லுகையில் வரும் நிம்மதி கலந்த சந்தோஷம் போல இந்த விமானப் பயணம் அமைந்தது. வீடு வந்து சேர்ந்து இரண்டு நாட்களுக்கு அதிகம் தூங்கி ஆட்டக் களைப்பைப் போக்கிக் கொண்டோம், நானும் என் மகளும்.

மூன்றாம் வாரம் எப்போதும் போல அலுவலக வேலை - இரண்டு வார விடுமுறையில் சேந்து விட்ட விஷயங்களை ஒரு மாதிரியாக முடித்து விட்டு வார இறுதியில் வீட்டில் சேர்ந்த வேலைகளைக் கொஞ்சம் செய்ய முடிந்தது. இருபத்து மூன்றாம் தேதி அலுவலகத்தில் வழக்கம் போல தொலைபேசியில் கதையளந்து கொண்டிருக்கையில் திடீரென்று மேஜை, நாற்காலி எல்லாம் ஆடுவது போல ஒரு பிரமை. காலையில் ஒன்றும் சாப்பிடாமல் அவரசமாக வேலைக்கு வந்து விட்டதால் தலை சுற்றுகிறதோ என்று நினைத்துக் கொண்டிருக்கையில், தொலைபேசியில் எதிர் முனையில் சத்தம் - அங்கும் நாற்காலி ஆடுவதாக. அறைக்கு வெளியே சென்று பார்த்தால், மொத்த தளத்திலும் உள்ள சக ஊழியர்கள் எழுந்து ஒருவரை ஒருவர் பீதியுடனும், பிரமிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்புறம் தான் தெரிந்தது அது நிலநடுக்கம் என்று. வாஷிங்டனில் இருந்து பாஸ்டன் வரை உணர்ந்ததாக அப்புறம் தெரிய வந்தது.

வீட்டில் மகளுக்கு ஆயிரம் கேள்வி, நில நடுக்கம் பற்றி. பாதிக் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை; இணையத்தில் (கூகுளுக்கு நன்றி) தேடித் தேடி ஒரு வழியாக அவளை திருப்தி செய்தேன். அப்படித் தேடியதில் நான் தெரிந்து கொண்ட சொல்ப விஷயங்கள்: பூமி தன்னைத் தானே சுற்றும் வேகம் (பூமத்திய ரேகையின் அருகில்) கிட்டத்தட்ட மணிக்கு ஆயிரம் மைல். இது பந்து, அல்லது பம்பரம் ஒரே இடத்தில் தன்னைத் தானே சுற்றுவது போல. பூமி சூறியனை சுற்றும் வேகம் மணிக்கு கிட்டத்தட்ட 66/67 ஆயிரம் மைல்கள்! இந்த வேகத்தில் சுற்றினாலும், அதன் மேலே இருக்கும் கட்டடங்கள், மரங்கள், மலைகள் பூமியிலிருந்து பறந்து போகாமல் ஸ்திரமாக இருக்கின்றன. பூமிக்குள் இருக்கும் கற் படுகைகள் (tectonic plates) கொஞ்சம் திரும்பினாலும், நிலநடுக்கம் வந்து விடுகிறது! ஒரு விதத்தில் பூமியின் ஆட்டம் அபாரம் – அந்தரத்தில், நிற்காமல் அதி வேகத்தில் நடக்கும் ஆட்டம். கொஞ்சம் தாளம் பிசகினாலும், நமக்கு நடுக்கம்தான்!

மகளுக்கு நிலநடுக்கம் பற்றி விளக்கி விட்டு தொலைக்காட்சியைப் பார்க்கையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகிக் கொண்டிருந்த புயல் பற்றிச் சொன்னார்கள். அது சும்மா கடலிலேயே இருக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை நோக்கி வர ஆரம்பித்தது. எல்லா நிலையங்களிலும் ஐரீன் புயல் பற்றியே பேச்சு - எங்கேல்லாம் போகும், என்ன பாதிப்பு வரும் - ஒவ்வொருவரும் தனக்குத் தோன்றியவைகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். வட கரோலினா மாநிலத்தில் நாட்டினுள் புகுந்த புயல் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு, வட கிழக்கு என்று நகர்ந்து வந்து கொண்டிருந்தது. சனிக்கிழமை (29) மதியத்திலிருந்து மழை பெய்ய ஆரம்பித்தது. எடிசனுக்குப் புயல் வந்த போது ஞாயிறு அதிகாலை - மிக பலமான காற்று - வீட்டுக்கு வெளியே பெரிய மரங்கள் ஆடுவதைப் பார்க்கையில் பயமாகத்தான் இருந்தது. அவ்வப் போது மின்சாரம் நின்று போனது! வீட்டின் பின்புறம் ஆறு போலத் தண்ணீர். போதாக்குறைக்கு வீட்டு அடித்தளத்தில் (basement) தண்ணீர் வர ஆரம்பித்தது! நான், என் மனைவி, என் மாமனார் என்று ஒரு சிறு குழு; நீரகற்றும் வேலையில் இரண்டு/மூன்று மணி நேரம் செலவழித்து சாமான்கள் சேதமாகாமல் ஒரு வழியாக சமாளித்தோம். சிறு வயதில் வில்லிவாக்கதில் (1975/76 என்று நினைப்பு) புயலினால் ரெட் ஹில்ஸ் ஏரி உடைந்து வீட்டிற்குள் தண்ணீர் வந்தது நினைப்புக்கு வந்தது. அப்போது இரண்டு நாளைக்கு மொட்டை மாடியில் கிரசின் ஸ்டவ்வில் பொங்கல் வைத்து சாப்பிட்டோம்! இப்போது அந்த அளவுக்கு தண்ணீர் வரவில்லை என்ற சந்தோஷம்; அதே சமயத்தில் தொலைக்காட்சியில் புயலினால் வந்த சேதத்தைப் பார்க்கையில் வருத்தமும் வந்தது.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் எத்தனை விதமான ஆட்டங்கள். மாத ஆரம்பத்தில் மன மகிழ்ச்சிக்காக நாமே முயன்று செய்த, மற்றவர்களுக்கு இன்னல் தராத ஆட்டங்கள் - (ரங்க ராட்டினம், 'வீ' போன்றவை). மற்றவர்களை துன்புறுத்தும் தாளம் தவறிய ஆட்டங்கள் - லண்டன், லிபியா கலவரங்கள். தொலைக்காட்சியில் அடிபட்டு தடுமாறிக் கொண்டிருந்த மாணவனுக்கு உதவி செய்வது போல வந்து அவன் பையில் இருந்தவற்றை எடுத்துக் கொண்டு சென்ற கொடுரம்; க்ராய்டன் பகுதியில் வீட்டை முற்றிலுமாக நெருப்பில் இழந்த குடும்பத்தினரைப் பார்த்ததை நினைக்கையில் இப்பவும் வருத்தம் வருகிறது. இயற்கையின் ஆட்டங்கள் - லண்டனில் ஒரே நாளில், மழை, வெயில், காற்று என்று மாறி, மாறி வந்தது மனதிற்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. அந்த ஆட்டம் ஒரு விதமான நளினமான நடனம் போல இருந்தது. அதே இயற்கை நிலநடுக்கமாகவோ, புயலாகவோ ஆடிய போது பயம்தான் வந்தது. மாத ஆரம்பத்தில் நினைத்தும் பார்க்கவில்லை இந்த மாதத்தில் இத்தனை ஆட்டங்கள் நடக்கும் என்று. இப்போது யோசித்தால், தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நடிகர் பாலையா சொன்ன 'அடேங்கப்பா! ஆட்டம் ஜாஸ்தியாயிருக்கே!' வசனம் நினைப்புக்கு வருகிறது. இது போன்று எத்தனை விதமான ஆட்டங்களை வாழ்க்கையில் பார்க்கப் போகிறோமோ என்று நினைத்தால் பிரமிப்பும் பயமும் தான் வருகிறது. ஆட்ட நாயகனான தில்லையரசன் தான் தாளம் தப்பாமலிருக்க அருள வேண்டும்.

செவ்வாய், ஜூலை 12, 2011

இலக்கு – 10

இலக்கு – 10

வளர்ச்சி உயிரினங்களின் இயல்பு. தாமாக வளரும் உடலுறுப்புகளையும், அவ்வாறு வளராத திறன்களையும் முயன்று வளர்த்திக் கொள்வது தவறாகத் தோன்றவில்லை. வளர்ச்சியடைவது தவறாகத் தோன்றாவிட்டாலும், எது வளர்ச்சி என்று அறுதியிட்டுக் கூறுவது அவ்வளவு சுலபமான விஷயமாகத் தோன்றவில்லை. காலப் பயணத்தில் முன்பிருந்த நிலையை விட தரம் உயர்ந்தால் அது வளர்ச்சியின் அடையாளம். முன்னாளில் படித்த ஒரு ஆங்கிலப் பழமொழி: ‘Life is change. Growth is optional. Choose wisely.’ "வாழ்க்கை மாற்றங்கள் நிரம்பியது. வளர்ச்சி நம் இஷ்டத்திற்கு விடப்பட்டது. அறிவுணர்ந்து தேர்ந்தெடு!"

கவிஞர் கண்ணதாசன் தன்னுடைய 'காலக் கணிதம்' என்ற கவிதையில் இவ்வாறு எழுதியிருக்கிறார்:
“கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை”.

மனித வாழ்க்கையில் நிரந்தரமான ஒன்று மாற்றம் - அது வளர்ச்சியை நோக்கிச் செல்லாத போது ஏமாற்றம் தான். மாற்றம் இல்லாமல் இருக்க முடியாது. இந்த மாற்றம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் விதமாக நாம் மாற்ற முயல வேண்டும். இலக்காக வளர்ச்சியைக் கருதும் போது ஒரு பொறுப்பு வருகிறது. மாற்றங்கள் விதியின் விளைவு என்று எடுத்துக் கொண்டாலும், அதன் திசையை, வளர்ச்சியைத் நிர்ணயிக்கும் கருவியாக என் முடிவுகள், நடப்புகள் அமைய வேண்டும் என்ற தூண்டுதல் வருகிறது.

அதே சமயத்தில் எப்படி வளர்கிறோம் என்பது முக்கியமானது. உடலளவில் 'இயக்க ஊக்கிகள்' என்றழைக்கப்படும் ஊக்க மருந்துகள் (Steroids) உடலுறுப்புகளில் உடனடி வளர்ச்சியைத் தந்தாலும் பின்னாளில் அதிகமான உடலுபாதைகளைத் தருவதை நாம் காண்கிறோம். குறைவளிக்கும் பக்க விளைவுகள் தராத வழிமுறைகள் தரும் வளர்ச்சியே உன்னதமானது. முன்பு எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள்:


முன்னேற்றம் வேண்டி நாகரீகமானேன்
மாறியபின் வந்தது தெளிவு
நாகரீகத்தில் இல்லை முன்னேற்றம்.

வளர்ச்சி என்று கருதி தவறான வழிமுறைகளை அறியாமல் தேர்ந்தெடுப்பது சகஜம். இதைத் தவிர்க்க அறிவை வளர்ப்பது அவசியம். ஆதலால் இங்கு வளர்ச்சிக்கு அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. எந்த விஷயத்தையும் அறிந்து கொள்ளுதல் தவறு என்று வாதிட முடியாது. என்னைப் பொருத்தவரையில் வளர்ச்சியும் அறிதலும் ஒன்றை ஒன்று ஒத்திப் பிணைந்திருக்கின்றன. இரண்டுமே ஒரு உயிரின் வாழ்வுக்கு அத்தியாவசமானது. இவைகளை இலக்காகத் கொள்ளுதல் தவறில்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது: "அறிவு வளர்ச்சி பிறப்பில் தொடங்கி இறப்பில் தான் முடிய வேண்டும்". ‘Intellectual growth should commence at birth and cease only at death.’

இந்த அறிவு வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை சிந்திக்கையில், பாரதியாரின் ஒரு பாடல் - அறிவே தெய்வம் என்ற தலைப்பில் எழுதியது - நினைப்புக்கு வருகிறது.

“ஆயிரந் தெய்வங்க ளுண்டென்று தேடி
அலையு மறிவிலிகாள் - பல்
லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள் - எத
னூடுநின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?”

அறிவே தெய்வம் என்று பாரதி எழுதியதற்கும், 'அனுபவமே தெய்வம்' என்று பொருள் வருமாறு கண்ணதாசன் எழுதியதற்கும் (நீ மணி நான் ஒலி) அதிக வித்தியாசம் இல்லை. அனுபவம் அறிவாக மாறுகிறது. அதே சமயத்தில் அனுபவம் மட்டுமே அறிவாக மாறுவதில்லை. இம்மானுவேல் கன்ட் சொன்னது: 'நம்முடைய அறிவனைத்தும் அனுபவத்தில் தொடங்கினாலும், அனுபவத்தால் மட்டுமே விளைந்ததாகக் கருத முடியாது'. [That all our knowledge begins with experiences, it by no means follows that all arises out of experience – Immanuel Kant in Critique of Pure Reason]. அனுபவத்தால் தோன்றிய அறிவை ஆராய்ந்து, அசைபோட்டு, உறுமாற்றி ஞானமாக்கி வைப்பதும் அறிவுதான்.

முதல் இலக்கான 'வாழ்தல்' சரியா, அதனை அடையும் முறை சரியா என்ற கேள்விகளை விட இரண்டாம் இலக்கான மகிழ்ச்சி சரியா அதனை அடையும் முறை சரியா என்ற கேள்விகள் கடினமானதாக இருக்கின்றன. இதைப் பற்றி யோசிக்கையில் என் அறிவு, அனுபவப் பற்றாக்குறை நிதர்சனமாகத் தெரிகிறது. இந்தக் கேள்விகளுக்கு பதில் தேட ஆரம்பிக்கையில் வளர்ச்சியும் வருகிறது. பதில் தேடும் பயணத்தில், பதில் கிடைக்கையில், அறிவும் வளர்கிறது. மொத்தத்தில் இந்தப் பதிவுத் தொடரை எழுத ஆரம்பித்து, சுய தேடலில் கேள்விகள் கேட்டு, பதில் தேடிப் படித்த புத்தகங்களால் என்னுள் ஒரு வளர்ச்சியையும், அதனால் ஒரு மகிழ்ச்சி வந்ததையும் உணர்கிறேன்.

இந்த அறிவை, வளர்ச்சியை இலக்காக நான் எடுத்துக் கொண்டது தவறு என்று வாதிட எந்தக் காரணமும் தோன்றாததால், இவைகள் சரியான இலக்குகள்தான் என்று கருதுகிறேன். இவைகளை அடையும் முறைகளில் சரி எது என்று யோசிக்கையில், இந்தவிதமான குறிப்பிட்ட முறைதான் சிறந்தது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மாறாக எந்த விதமான செய்கைகளைச் செய்து வளர்ச்சியையோ அறிவையோ பெறுதல் சரியல்ல என்று குறித்துச் சொல்ல முடிகிறது.

வளர்ச்சியாலும், பெற்ற அறிவினாலும் என்னுடைய கடமைகளில் குறைவு வந்தால் இந்த வளரச்சியை, அறிவை அடைந்த முறை சரியான ஒன்றாக இருக்க முடியாது. அதே போல வந்த வளர்ச்சியாலும், அறிவாலும், என்னால் மற்றவர்களுக்குக் கிடைத்து வந்த உதவியும், சந்தோஷமும் குறைந்து போனால் அந்த வளர்ச்சியில், அறிவில் முழுமை இல்லை; அதை அடைந்த முறை சரியல்ல என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் எந்த விதமான வளர்ச்சியாலும், அறிவாலும் எனக்கு மட்டும் மகிழ்ச்சி வராமல், மற்றவர்களுக்கும் ஆதாயம் (அது அவர்களின் மகிழ்ச்சியாகவோ அல்லது வேறு விதமான உதவியாகவோ இருக்கலாம்) உண்டானால் அந்த வளர்ச்சியில், அறிவில் முழுமை இருக்கிறது; அதை அடைந்த முறை சரி என்று சொல்லலாம்.

வாழ்தலில் ஆரம்பித்து, மகிழ்ச்சி, வளர்ச்சி என்று மொத்தமாகப் பார்க்கும் போது அனைத்திலுமே என்னோடு மட்டும் நின்று விடாமல் மற்றவர்களின் சுக-துக்கங்களையும், இன்னமும் சொல்லப் போனால் மற்ற உயிரினங்களின் வாழ்வு, மகிழ்ச்சி, வளர்ச்சியைப் பேணும் விதமாக என் இலக்கையடையும் வழிமுறைகள் அமைய வேண்டும் என்று புரிகிறது. இந்த இலக்குகளை அடையும் வழிமுறைதான் என் வாழ்க்கை என்று பார்க்க ஆரம்பித்தால் புத்தர் சொன்னது போல பிற உயிர்களுக்கு இன்னல் தராத வாழ்க்கையை நடத்த முடியும் என்றும் தோன்றுகிறது. அம்மாதிரியான வாழ்க்கையில் ஒரு முழுமையையும், திருப்தியையும் அடைய முடியும் என்றும் நம்பிக்கை வருகிறது.

என் இலக்குகளை அடையும் வழிமுறைகள் சரியாக அமைந்து விட்டால் என் மகிழ்ச்சியும் மற்ற உயிர்களின் மகிழ்ச்சியும் ஒன்றாகி விடுகிறது; எனக்கும் மற்ற உயிர்களுக்கும் ஒரு பிணைப்பைப் பார்க்க முடியும். இதனால் 'நான்' என்ற குறுகிய உணர்வு குறைந்து, என் ஒருவனின் சுக-துக்கங்களுக்காக மட்டும் வாழாமல் இருக்க முடியும் என்றும் தோன்றுகிறது. இது ஒருவிதத்தில் 'தன்னையே வெல்லும் விதம்'! பாரதியாரின் ஆத்ம ஜெயம் என்ற கவிதையிலிருந்து சில வரிகள்:

"என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ -
தன்னைவென் றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்று முணர்ந்தபின்னும்
தன்னைவென் றாளும் திறமை பெறாதிங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?"

என் வாழ்வு, என் மகிழ்ச்சி, என் வளர்ச்சி என்று இலக்குகளை வரையறுக்க ஆரம்பித்தாலும், விவேகானந்தர் சொன்னது போல அதை அடையும் முறை பற்றி சிந்தித்ததில் சரியான முறையில் அந்த இலக்குகளை அடைய 'நான்' என்ற உணர்வு குறைவது அவசியம் என்று தெரிகிறது. இதை எந்த அளவுக்கு நான் அடையப் போகிறேன் என்று தெரியாது - காலம் தான் சொல்ல வேண்டும். இருந்தாலும், இதை எனக்குள்ளே யோசித்து, நானே உணர்ந்ததே ஒரு விதத்தில் திருப்தி தரும் விஷயம். இதுவும் ஒரு வளர்ச்சிதான். இன்னமும் வளர ஆசை!!!

இப்பதிவுடன் இந்தத் தொடர் நிறைந்தது.

சனி, மே 28, 2011

இலக்கு - 9

என்னுடைய இலக்காக நான் கருதும் "மகிழ்ச்சி"க்கும் சிதப்பிரக்ஞன் விளக்கத்தில் வரும் "ஆனந்த"த்திற்கும் வேறுபாடு இருந்தாலும் அடிப்படையில் சில ஒற்றுமைகளைக் காண்கிறேன். இரண்டிலுமே மற்றவர்களுக்கு எந்த விதமான கஷ்டமோ, தொந்திரவோ வர வாய்ப்பில்லை. மற்றவர்கள் மனம் நொந்து வரும் மகிழ்ச்சியில் நிறைவு இல்லை. அது மட்டுமல்ல, மனதில் இந்த மகிழ்ச்சியை, ஆனந்தத்தை அனுபவித்த பிறகு, அடைந்தவர் மனதில் எந்த விதமான குற்ற உணர்வோ, மனக்கசப்போ, தன்னிறக்கமோ வருவதில்லை. அனுபவித்த பிறகு மனதில் திருப்தியும் நிறைவும் தராத மகிழ்ச்சி முழுமையானதில்லை. இந்த இரண்டு குணாதிசயங்களும் இந்த மகிழ்ச்சியின் தூய்மையை, உன்னதத்தை உணர்த்துகிறது.

'அர்த்தமுள்ள இந்து மதம்' தொடரில் கவிஞர் கண்ணதாசன் எழுதியது: "யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதனின் உணர்வுகளை இந்து மதம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறது". மதத்தை விடுத்து பொது வாழ்க்கையின் தத்துவமாகப் பார்க்கையில் பக்க விளைவுகள் இல்லாத மகிழ்ச்சி உயர்வானதாகவே தோன்றுகிறது. அதிலும், மற்றவர்களுக்கும், தமக்கும் குறைவுதரும் பக்க விளைவுகள் (negative side effects) இல்லாத செயல்கள் அரிதாக இருக்கையில் அந்த மாதிரி செயலால் மகிழ்ச்சியும் வந்தால் அது சிறந்த விஷயம்தான். இந்த மாதிரியான நிறைவான மகிழ்ச்சியை அடைவதை இலக்காகக் கொள்வது தவறில்லை என்றே நான் எண்ணுகிறேன்.

நான் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட "மகிழ்ச்சி" எல்லாமே இதுவரை அனுபவித்த வாழ்க்கையில் இருந்துதான். இந்த எடுத்துக்காட்டுகளை (தம்ஸ் அப் படப் புத்தகம், ராமநாதபுரம் கல்கி, ஆனந்த விகடன் படக் கதைகள்) இலக்காக நான் கருதும் "மகிழ்ச்சி" உணர்வை விவரிப்பதற்காகக் குறிப்பிட்டிருந்தாலும், மகிழ்ச்சிக்காக இது போன்ற விஷயங்களை மட்டுமே தேடுகிறேன் என்று அர்த்தம் இல்லை. படிக்கும் எவரும் அவர்களுடைய வாழ்க்கையில் தொடர்பு படுத்திக் கொள்ள வசதியாக இருக்குமாறு பொதுவான உதாரணங்களைத்தான் தந்திருக்கிறேன். இந்த விஷயங்களில் கிடைத்த மகிழ்ச்சிக்கும், சிதப்பிரக்ஞன் ஆனந்தத்திற்கும் நான் புரிந்து கொண்ட முக்கிய வித்தியாசம் புலன்களின் தொடர்பு. இதுவரை நான் அனுபவித்த மகிழ்ச்சிக் கணங்கள் வருவதற்கு என் புலன்களின் தேவை மிகவும் முக்கியம்.

ஆனால் மகிழ்ச்சியை உணர்வதற்கு அனைத்துப் புலன்களும் தேவையாக இல்லை. சொல்லப் போனால் முழுதாக உணர சில புலன்கள் தடையாக இருந்ததால், மூளை தாமாகவே தேவையில்லாத புலன்களின் தன்மாத்திரை விஷயங்களை தடை செய்திருக்கிறது. தம்ஸ் அப் படப் புத்தகத்தை புரட்டும் ஆர்வத்தில், அந்த மகிழ்ச்சியை உணரும் தருவாயில், அம்மா கூப்பிட்டதை காதில் வாங்காதவாறு மூளை கண் பார்க்கும் படத்தில் ஊன்றிப் போனது. மனதுக்கு இன்பம் தரும் இசையைக் கேட்கையில் கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கும் மனிதர்கள் ஏராளம். மனிதர்களுக்கு ஐந்து புலன்கள் இருந்தாலும் சாதாரணமான புலன்களின் மகிழ்ச்சியை உணரவே மற்ற புலன்கள் தடையாகி விடுகின்றன.

ஆசை என்பது புலன்களின் தேவையை நிரப்பும் உணர்வு; புலன்களின் பசி. ஆசையை பூர்த்தி செய்து வரும் மகிழ்ச்சிக்கு புலன்களின் தொடர்பு இன்றியமையாதவாக மாறி விடுகிறது. சிதப்பிரக்ஞன் விளக்கத்தில் 'ஆசையைத் துறந்து வரும் மகிழ்ச்சியே உன்னதமானது' என்று பொருள் வருகிறது. புலன்கள் இல்லாமல் எப்படி மகிழ முடியும் என்ற கேள்வி முன்னாளில் இருந்தது. மகிழ்ச்சியின் உச்சமாக 'ஆனந்தத்தை' அடைய எல்லாப் புலன்களையும் தாண்டி வர வேண்டும் என்பதை ஒரு சாத்தியமாக இப்போது உணர ஆரம்பித்திருக்கிறேன். சாதாரண புலன்களின் மகிழ்ச்சியின் உச்சத்தை உணர மற்ற புலன்கள் தடையாகின்ற போது, உன்னதமான மகிழ்ச்சியை அடைய அனைத்துப் புலன்களும் தடையாக இருக்க வாய்ப்புண்டு. இருந்தாலும் எப்படி அதை அடைவது என்பதில் இன்னமும் தீர்மானமான வழி தெரியவில்லை.

தனக்கோ, மற்றவருக்கோ மனதிலும், உடலிலும் குறைவுதரும் பக்க விளைவுகள் இல்லாத மகிழ்ச்சி உன்னதமானது; ஆனந்தமானது. இதை அடைவதை இலக்காகக் கொள்வது தவறில்லை என்றே தோன்றுகிறது. இதை அடைய புலன்களைத் தாண்டிய சிந்தனையில் வழியிருக்கும் என்றும் தோன்றுகிறது. இந்த வழியை அடைவது என் வளர்ச்சியிலும், அறிதலிலும் தான் இருக்கிறது - அதனால் தான் இவையிரண்டும் என் இலக்குகள். மேலும் அடுத்த பதிவில்.

ஞாயிறு, மே 08, 2011

இலக்கு - 8

இலக்கு - 8

மனதுக்குப் பிடித்த பாடலைக் கேட்பதில் வரும் சுகத்துக்கும், இந்த குறிப்பிட்ட சில தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளில் (தம்ஸ் அப் படப் புத்தகம், ராமநாதபுரம் கல்கி, ஆனந்த விகடன் படக் கதைகள்) வந்த மகிழ்ச்சிக்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு. இந்த வித்தியாசத்தைக் குறிப்பிட்டு விவரிக்க முடியாத போதிலும் ஒரு விதமான திருப்தியை, முழுமையைக் காரணமாகச் சொல்லலாம். நான் இலக்காகத் தேடுவது இந்த இரண்டாம் வகை, முழுமை தரும், திருப்தி தரும் மகிழ்ச்சி. தினசரி வாழ்க்கையில் சுகங்கள் அதிகமாக வந்தாலும், இது போன்ற நிறைவு தரும் மகிழ்ச்சிகள் அதிகம் இல்லை. இது புலன்களில் இருக்கிறதா, அல்லது பார்க்கும் (கேட்கும், நுகரும்) பொருளில் இருக்கிறதா, அல்லது புலன்கள் வாயிலாக அறியும், உணரும் அறிவில் இருக்கிறதா?

வில்லியம் ஜேம்ஸ் டுரன்ட் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபலமான வரலாற்றாசிரியர் (William James Durant - 1885 - 1981). இவருடைய ஒரு படைப்பு கல்லூரியில் படிக்கும் போது எனக்கு அறிமுகமாயிற்று. இவர் எழுதிய 'நாகரீகத்தின் கதை' - பதினொன்று அத்தியாயங்கள் - ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்களுக்கு மேல். இன்னமும் முழுதாகப் படித்து முடிக்கவில்லை - ஏழு அத்தியாயங்கள் படித்திருக்கிறேன், மற்றவைகளை முழுவதுமாக முடிக்கவில்லை. அவர் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றி விபரமாக எழுதியிருந்தாலும், ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ, குறிப்பிட்ட அந்த அத்தியாய வரலாற்றை ஒட்டி தன் சொந்தக் கருத்துகளை, தன் மன பிரதிபலிப்பை எழுதியிருப்பார். அது மிகவும் யோசிக்க வைக்கும் விதமாக இருக்கும். அப்படி அவர் எழுதிய ஒரு கருத்து 'அழகு' சம்பந்தப்பட்டது. ஒரு நாகரீகத்தின் கலை, இசை பற்றி எழுதிவிட்டு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: "ஒரு மலர் அழகாக இருப்பதால் அது நமக்கு மகிழ்ச்சியளிப்பதில்லை; மாறாக அம்மலரைப் பார்ப்பதால், நுகர்வதால் நமக்கு வரும் மகிழ்ச்சியின் பொருட்டு அதை அழகு என்று வர்ணிக்கிறோம்."

வெளியுலக பொருள்களைப் பற்றிய அறிவு, அதன் தர நிர்ணயம், அது நமக்கு அளிக்கும் உணர்ச்சி போன்ற எல்லாமே நம் மன உணர்வுகளின் பிரதிபலிப்பால் வருகிறது என்ற கருத்தை இதற்கு முன்னமே பல தத்துவ ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள். இது போன்ற கருத்தை பழந்தமிழ் நூல்களிலும் காணலாம். உதாரணமாக திருமூலரின் "மரத்தில் மறைந்தது மாமத யானை" - மனம் மரமாகப் பார்க்கையில் மாமத யானை மறைகிறது; யானையாகப் பார்க்கையில் மரம் மறைகிறது. அது மரமா, மதயானையா என்பது மனதைப் பொறுத்தது. மனத்தைப் பொறுத்துத்தான் மற்றவைகள் இருக்கின்றன என்றால், இலக்கான என் மகிழ்ச்சி சரி, தவறு என்று எப்படி நிர்ணயிப்பது?

ஸ்காட்லாந்தின் டேவிட் ஹூயூம் (David Hume - தத்துவ ஆசிரியர் 1711 - 1776) எழுதிய "கிளை விதி" (Hume's Fork Principle) பற்றிக் குறிப்பிடலாம். அவரின் சித்தாந்தப்படி எந்த ஒரு கருத்தும் மூன்று வகைகளுக்குள் அடங்கும். 1. அந்த கருத்து சரி, தவறு என்ற நிலை சம்பந்தப்பட்ட நிர்ணய வகை (உதாரணம்: நான் இன்று காலை வாழைப் பழம் சாப்பிட்டேன் - இது ஒரு நடந்த நிகழ்ச்சி - சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம்). 2. அனுபவத்தை ஒட்டிய கருத்துகள் (உம்: எனக்கு இந்த அறை குளிர்ச்சியாக இருக்கிறது) 3. அறிவுக்கு அப்பாற்பட்டவை - இவை நடப்பை ஒட்டிய சரி/தவறு கணிப்பிலோ அல்லது அனுபவத்தை ஒட்டியோ இருக்காது (உம்: ஒற்றைக் கொம்புள்ள குதிரைகளின் கொம்பில் விஷமுண்டு. இந்த விதமான கருத்து சரி/தவறு என்று சொல்ல முடியாது; அனுபவத்திலும் உணர முடியாது). என் மகிழ்ச்சி என்பது ஒரு விதத்தில் கருத்து. அது எந்த வகைப் பிரிவுக்குள் அடங்கும்?

ராபர்ட் பிர்சிக் (Robert M Prisig - Zen and the art of motorcycle maintenance) எழுதிய பிரபலமான புத்தகத்தில் 'சிந்தனையில், கருத்தில் தரம் என்பது என்ன?' என்று ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு பதிலாக விளக்கமும் எழுதியிருக்கிறார். அவரின் விளக்கப்படி, சிந்தனையில், கருத்தில் தரம் என்பது சிந்திக்கும் நிலை தாண்டி உணரப்படுவது. அதனால் இந்தத் தரத்தை சிந்தனையால் வரும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இதைப் பற்றி மேலும் எழுதுகையில் இந்த விளக்கத்திற்கும் 'எனக்குத் தெரியாது' என்று சொல்வதற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்கிறார். இந்த விளக்கம் "தரம்" சம்பந்தப் பட்டது - "மகிழ்ச்சி" பற்றி அல்ல. இதையும், ஜேம்ஸ் டுரன்ட்டின் 'அழகு' பற்றிய விளக்கத்தையும் சேர்த்துப் பார்த்தால், 'மகிழ்ச்சி'யும் விளக்கம் தாண்டி உணரப்படும் விஷயம் போலத் தோன்றுகிறது. எனக்கு ஒரு விஷயம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மனதில் இன்பத்தை அளிக்கிறது என்று உறுதியாக முன்னமே விளக்க முடியவில்லை. இம்மாதிரி மகிழ்ச்சி தந்த கடந்த கால நிகழ்ச்சிகளை 'இந்தக் காரணத்தால் தான் மகிழ்ச்சி வந்தது' என்றும் கணித்துக் கூற முடியவில்லை.

டேவிட் ஹூம் எழுதிய கிளைத் தத்துவத்தின் படி என்னுடைய 'மகிழ்ச்சி என்கிற கருத்து' சரி/தவறு வகையில் அடங்கும் என்று தோன்றவில்லை. இது நிச்சயம் அனுபவம் சம்பந்தப்பட்டது; ஆனால் என்னால் விவரிக்க முடியாமல் போவதால், அறிவுதாண்டிய மூன்றாம் பிரிவில் சேருமோ என்றும் கேள்வி வருகிறது. இது அனுபவம் சம்பந்தப்பட்ட இரண்டாம் பிரிவில் வந்தாலும், அல்லது அறிவு தாண்டிய மூன்றாம் பிரிவில் வந்தாலும், 'சரி/தவறு' என்ற நிர்ணயம் இதற்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது. அதே சமயத்தில் விவேகானந்தர் சொன்ன 'இலக்கு சரி என்ற நிர்ணயம் வந்து விட்டால், இலக்கை அடையும் முறை தான் முக்கியம், இலக்கையே மறந்தாலும் பாதகமில்லை' என்ற வழிமுறையை நடைப்படுத்துவது கடினமாகிறது. மொத்தத்கில் "என்னுடைய இலக்கு மகிழ்ச்சி என்று நினைப்பது சரியா, தவறா" என்ற கேள்விக்கு என்னிடம் இந்தச் சமயத்தில் தீர்மானமான பதில் இல்லை.

கீதையில் இரண்டாம் அத்தியாயத்தில் அர்ஜுனன் 'சிதப்பிரக்ஞன் என்பவனின் விளக்கம் என்ன?' என்று கேட்கையில், கிருஷ்ணன் இம்மாதிரி விடையளிக்கிறார்.
प्रजहाति यदा कामान्सर्वान्पार्थ मनोगतान् ।
आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते ॥५५॥
"அர்ஜுனா! எப்பொழுது இந்த மனிதன் மனதிலுள்ள எல்லா ஆசைகளையும் அறவே துறக்கிறானோ, மேலும் ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆனந்தமாக இருக்கிறானோ, அப்பொழுது அவன் சிதப்பிரக்ஞன் என்று கூறப்படுகிறான்" (இது கீதாப்ரஸ், கோரக்பூர் வெளியிட்ட தத்வவிவேசனீ தமிழ் விரிவுரையிலிருந்து).

இதே பாடலுக்கு பாரதியார் தன் மொழிபெயர்ப்பில் இவ்வாறு விளக்கமளித்திருக்கிறார்:
ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களையனைத்தும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.

இந்த விளக்கங்களில் இரண்டு விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன - ஒன்று ஆசையைத் துறப்பது பற்றியது, இரண்டு ஆனந்தமாக இருப்பது. இந்த விளக்கங்களைப் படித்து நான் உணர்ந்து கொண்டது, ஆனந்தமாக இருப்பது சரி, எப்படி அந்த ஆனந்தம் வருகிறது என்பதுதான் முக்கியம்.

என்னுடைய இலக்கான மகிழ்ச்சிக்கும் இங்கு குறிப்பிட்ட ஆனந்தத்திற்கும் என்ன வித்தியாசம்? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளி, ஏப்ரல் 15, 2011

இலக்கு - 7

இலக்கு - 7

வாழ்தலும் மகிழ்தலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. வாழ்வதற்காக உணவை உண்டாலும், அதைத் தெரிவு செய்வதில் ருசி, மணம் போன்ற குணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உணவை எரிபொருள் என்று மட்டும் நாம் நினைப்பதில்லை. அதனால் மனதிற்கு திருப்தியும், சந்தோஷமும் வருமா என்றும் யோசிக்கிறோம். ஆரோக்கியம் மட்டுமே இலக்காகக் கொண்டு எப்போதும் உணவைத் தேர்ந்தெடுப்பதில்லை. உடம்புக்கு நல்லது; ஆரோக்கியம் தரும் என்று உணர்ந்திருந்தாலும் அதன் சுவை, மணம் காரணமாக உணவைத் தவிர்த்திருக்கிறேன். அதே போல ஆரோக்கியத்துக்கு அவ்வளவாக துணை போகாவிட்டாலும், சுவைக்காக உணவை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அனேகமாக எல்லோருமே வாழ்க்கையில் சில சமயங்களில் இந்த மாதிரி சுவையைப் பிரதானமாகக் கருதி உணவைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

உலகில் உள்ள பெரும்பான்மையான மதங்களில் உணவைப் பிரதானமாக்கி வந்த பண்டிகைகள் இருக்கின்றன. இவை உணவை உண்ணும் விதமாகவோ, அல்லது உணவை விலக்கும் விதமாகவோ இருக்கலாம். வாழ்தல் பற்றி எழுதுகையில் சேர்க்க வேண்டியவைகளும் (உணவு) விலக்க வேண்டியவைகளும் (விஷம்) ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்று குறிப்பிட்டிருந்தேன். பெரும்பான்மையான பண்டிகைகள் - அது எந்த மதம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி - உணவில் எதைச் சேர்க்க வேண்டும், எதை விலக்க வேண்டும், அல்லது எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்று குறிப்பிடும் விதமாகவே இருக்கின்றன. உணவு சம்பந்தப்படாத பண்டிகைகள் விகிதாசாரப்படி குறைவு.

எப்படி உணவு வயிற்றுப் பசியைத் தீர்த்து உடல் உறுப்புகளுக்கு சக்தியளிக்கிறதோ, அதே போன்று வேறு விதமான 'உணவுகள்' மற்ற புலன்களின் பசியைத் தீர்க்கின்றன. உடலின் மகிழ்ச்சியென்பது இம்மாதிரிப் புலன் பசித் தீர்வினால் வருகிறது. இசை (அல்லது சித்திரம்) காதின் (அல்லது கண்ணின்) பசி தீர்ப்பதால் வரும் உணர்வு மகிழ்ச்சி. வள்ளுவரின் குறள் நினைப்புக்கு வரலாம்:
செவிக்கு உணவில்லாத போது சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.
இந்த மகிழ்ச்சியை நாடாதவரை நான் சந்தித்ததில்லை; நானும் நாடித் தேடுகிறேன். இந்த நாட்டம் தவறா? இந்தக் கேள்விக்கு தீர்மானமாக உடனேயே பதில் அளிக்க முடியும் என்று தோன்றவில்லை.

இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் முன் இந்த புலன் சம்பந்தப்பட்ட மகிழ்ச்சி எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்று கொஞ்சம் பார்ப்போம். இராமநாதபுரத்தில் வடக்கு வீதியில் வசிக்கையில் (முதலாம் வகுப்பு வரை அங்குதான் வாசம்) உணவு (பொரிவகைகள் - முட்டைப்பொரி மற்றும் அரிசிப் பொரி) மற்றும் உறவு (அப்பா, அம்மா, தம்பி, பாட்டி) தவிர்த்து மகிழ்ச்சி தந்த இரண்டு விஷயங்கள் இன்னமும் நினைப்பில் இருக்கின்றன. கதை மற்றும் பாட்டு. வாராவாரம் வீட்டில் ஆனந்த விகடன், கல்கி வாங்குவார்கள். நம் வீட்டில் ஒன்று, அடுத்த வீட்டில் மற்றொன்று. படித்துவிட்டு மாற்றிக் கொள்வோம். எனக்கு அப்போது நான்கு அல்லது ஐந்து வயது. படத்தோடு இருக்கும் தொடர், துணுக்குகளை எழுத்துக் கூட்டிப் படிப்பேன். புரிந்தது என்றும் சொல்ல முடியாது; படித்ததில் அதனால் மகிழ்ச்சி வந்தது என்றும் சொல்ல முடியாது. பாட்டியைப் படித்துக் காட்டச் சொல்லி பின் கதையாகச் சொல்லச் சொல்வேன். கதையில் வரும் பாத்திரங்களைப் போல மரப்பாச்சி பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவேன். இந்த மாதிரி கதைகளைக் கேட்டு விளையாடியதில் வந்த சந்தோஷம் மகிழ்ச்சி வித்தியாசமானது; முழுமையானது.

அதே போல சில பாட்டுகள், அம்மா பாடியதாலோ, வீட்டில் வானொலியில் கேட்டதாலோ (காலம் சென்ற MS சுப்புலக்ஷ்மி அவர்களின் பாவயாமி ரகுராமம் மற்றும் பாப்பா பாப்பா கதை கேளு) இன்னமும் நினைப்பில் இருக்கிறது. இந்தப் பாட்டுகளைக் கேட்டதில், கதைகளைக் கேட்டதில் வந்த ஒரு மகிழ்ச்சி, மற்றும் திருப்தியை வெறும் புலன்களின் பசித் தீர்வு என்று ஒதுக்கி விட முடியவில்லை. இதே போன்ற சந்தோஷத்தை பின்னாளில் மன்னார்குடியில் பள்ளியில் படிக்கும் போதும் அனுபவித்ததுண்டு. ஆனால் அது திரைப்படப் பாடலிலோ அல்லது கதை கேட்டதிலோ, அல்லது திரைப்படம் பார்த்ததிலோ வரவில்லை. இந்தியா கிரிக்கட்டில் உலகக் கோப்பையை வென்ற பின் (1983) குளிர்பான (Thumbsup) விளம்பரத்திற்காக படப் புத்தகங்கள் வெளியிட்டது. சினிமா பிலிம் சுருள் பாணியில் கபில் தேவ் பந்து வீசுவதும், கவாஸ்கர் ஹூக் செய்வதும் ஒவ்வொரு வினாடிப் படங்களாக எடுத்து (கருப்பு வெள்ளை) புத்தகமாக தந்தார்கள். உள்ளங்கை அளவே இருக்கும் அந்தப் புத்தகங்களை வேகமாகப் புரட்டிப் பார்க்கையில் நிஜமாகவே ஓடி வந்து பந்தெரிவது போல இருக்கும். இந்தப் புத்தகங்களை தினமும் இருபது தடவையாவது பார்த்திருப்பேன் - அப்போது வந்த மகிழ்சியிலும் ஒரு விதமான திருப்தி இருந்தது. இப்போது தொலைக் காட்சியில் விளையாட்டை வண்ணத்தில் பார்த்தாலும், அந்த கருப்பு வெள்ளை புத்தகத்தைப் புரட்டியதில் வந்த மகிழ்ச்சி, திருப்தி இல்லை. புலன்களின் பசி தீர்ந்தாலும் மகிழ்ச்சி இல்லை.

வளர வளர இந்த மாதிரி முழுமை தந்த திருப்தியான மகிழ்ச்சி வெகு அரிதாகவே வந்தது. இந்த புலன் சம்பந்தப்பட்ட மகிழ்ச்சி, அதன் எதிர்பார்ப்பு பற்றி நான் படித்த பகவத் கீதை, பெட்ரண்ட் ரஸ்ஸல், வில்லியம் ஜேம்ஸ் மற்றும் இன்ன பிற படைப்புகளிலிருந்து நான் புரிந்து கொண்டவைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வியாழன், மார்ச் 24, 2011

இலக்கு – 6

இலக்கு – 6

வாழ உணவு அவசியம். உணவில்லாமல் வாழ முடியும் என்று நிரூபித்தவர்களை நான் சந்தித்ததில்லை. உணவைப் பெற அனேக வழிகள் இருக்கின்றன. மாதவனூர் வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் எனக்கும் என் குடும்பத்துக்கும் தேவையான உணவில் பத்து சதவிகிதம் கூட எடிசனில் தயாரிக்கப்படுவதில்லை. பாலுக்கு மாடு இல்லை; வீட்டைச் சுற்றியுள்ள மரம், செடிகளில் உண்ணபதற்கான காய், கனிகள் இல்லை. வீட்டில் கிணறு கிடையாது; நெல் வயல் இந்த மாநிலத்திலேயே இல்லை. ஆனால் உணவைப் பெறும் விதத்தில் வசதிகள், வகைகள் அதிகம். இதில் முக்கியமான வசதி நேரம், மற்றும் சக்தி சம்பந்தப்பட்டது. என்னளவில் நேரம்/சக்தி அதிகம் செலவாகாமல் உணவைப் பெற முடிகிறது. எனக்கு பதிலாக வேறு சிலருடைய உழைப்பில் தயாரான உணவை, என் சொந்த உழைப்புக்கும் நேரத்திற்கும் பதிலாக, பணத்தை மாற்றாகத் தந்து எனக்கும் என் குடும்பத்துக்கும் தேவையான அளவில் பெறுகிறேன். இதில் எது சரி, எது தவறு என்று எப்படி நிர்ணயிப்பது?

சிறு வயதில் உயிரியல் பாடம் படிக்கையில் 'உணவுச் சுழற்சி' பற்றி படித்ததுண்டு. தாவரங்களைத் தின்னும் விலங்குகள், பறவைகள்; அந்த விலங்குகளை, பறவைகளைத் தின்னும் விலங்குகள், பின் அந்த விலங்குகள் இறந்து அதன் உடல் உரமாக மண்ணுக்கு செல்வது என்றெல்லாம் படமும், அம்புக் குறியும் போட்டு விளக்கியிருப்பார்கள். ஒரு விதத்தில் மண்ணும், தாவரமும், விலங்கினமும் ஒன்றையொன்று எப்படிச் சார்ந்திருக்கிறது என்பது அந்தப் பாடம் படிக்கையில் புரிந்தது. மொத்ததில் மனிதனுக்கு மரத்தைப் போன்று தண்ணீர், சூரியன் தயவோடு மட்டும் உணவைத் தயாரிக்க முடியாது – மற்ற தாவர, விலங்கினத்தைச் சார்ந்து தான் இருக்க முடியும். அதனால் நானே பயிரிட்டு உண்பதற்கும், மற்றவர் பயிரிட்டதை பணத்திற்கு மாற்றாகப் பெற்று உண்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அதே போல தாவரத்தை மட்டும் உண்டு வாழும் மானுக்கும், மானை உண்டு வாழும் புலிக்கும் இடையில் அதன் உணவு உண்ணும் முறையால் மட்டும் சரி, தவறு என்று நிர்ணயிக்க முடியும் என்றும் தோன்றவில்லை. தாவரத்தை உண்பது மானின் இயல்பென்றால், மானை உண்பது புலியின் இயல்பாகிறது.

உணவைத் தேர்ந்தெடுக்கும், பெறும் முறையில் எது சரி, எது சரியல்ல என்ற நிர்ணயம் கடினமானதாக இருந்தாலும், உணவை விரயம் செய்வது சரியல்ல என்பது தெளிவு. அதனால் உணவு விரயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உணவு விரயம் பலவகைப்படும். சாப்பிட்டு முடித்தவுடன் மிச்சம் மீதி நிறைய இருந்து அதைக் குப்பையில் எறிவதில் விரயம் தெளிவாகத் தெரிந்தாலும், மற்ற வகை விரயங்கள் அவ்வளவு தெளிவாகத் தெரிவதில்லை. சிறு வயதிலிருந்தே வீட்டில் பெரியவர்கள் கண்டிப்பினால் உணவை வீணாக்காமல், சமைப்பதிலும், பறிமாறுவதிலும், அளவு பார்த்து இருக்கக் கற்றுக் கொண்டாலும், வேறு விதமான விரயங்களைப் பற்றி சமீப காலங்களில் தான் யோசனை அதிகரித்திருக்கிறது.

உணவு ஒரு எரிபொருள், சக்தி! பள்ளியில் படிக்கும் போது, இயற்பியல் பாடங்களில் இந்த "Law of conservation of Energy" (சக்தி பேணுகை விதி?) பற்றி படித்திருக்கிறேன். சுருக்கமாகச் சொல்லப் போனால் இதைப் பற்றி நான் புரிந்து கொண்டது இதுதான். பிரபஞ்சத்தில் சக்தியை உண்டாக்கவோ, அழிக்கவோ முடியாது. இங்குள்ள மொத்த சக்தியைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. சக்தியை (அல்லது ஆற்றலை) ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற முடியும். இந்த மாறுதலில் சக்தியின் ஒரு பகுதி உபயோகிக்க முடியாத வெப்பமாகவோ அல்லது வேறு விதமான சக்தியாகவோ வெளிப்படலாம். இதை சக்தி விரயம் என்றழைக்கலாம். அந்த மாதிரி விரயமாகும்/மாறும் சக்தியும் பிரபஞ்சத்திலேயே இருப்பதால், மொத்த சக்தியில் கூடுதலோ, குறைவோ இல்லை. இதைப் படிக்கும் போது கீதா சாரம் நினைவுக்கு வரும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “பொருளும் ஒரு விதமான சக்தியே - Mass is a form of Energy” - என்று நிரூபித்திருக்கிறார். ஒரு இயந்திரத்தின் உயர்வு அது எந்த அளவுக்கு சக்தி விரயமில்லாமல் இயங்குகிறது என்பதைப் பொறுத்துத்தான் நிர்ணயிக்கப் படுகிறது. உதாரணமாக ஒரு லிட்டர் டீசலுக்கு பத்து கிலோமீட்டர் செல்லும் பேருந்தின் திறத்தை விட, ஐம்பது கிலோமீட்டர் செல்லும் பேருந்தின் திறம் உயர்ந்தது. ஒரு விதத்தில் அந்த ஒரு லிட்டர் டீசலின் மதிப்பும் ஐம்பது கிலோமீட்டர் சென்ற பேருந்தினால் உயர்கிறது!


வாழ்வதற்காக உணவைச் சேர்க்கையிலும் இதே விதிதான் - சாப்பிட்ட உணவின் சக்தி என் மூலமாக வெளிப்படுகிறது. என் மூலமாக வெளிப்படும் சக்தி எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு சாப்பிட்ட உணவின் சக்தியின் வெளிப்பாடு உயர்கிறது. இல்லையென்றால், அந்த சாப்பாட்டின் சக்தி விரயம்தான்! கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள் நினைப்புக்கு வரலாம்:
“தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால், தீபத்தின் பெருமையன்றோ?
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால், தீபமும் பாவமன்றோ?”

வாழ்கையை உபயோகமாக எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி எத்தனையோ பெரியவர்கள் எழுதிவிட்டார்கள்; இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் எழுதிய ஒரு கட்டுரை என்னை நிரம்பவும் யோசிக்க வைத்த ஒன்று. அதில் ஒரு பகுதியின் தமிழ் மொழியாக்கம் இங்கே: "வாழ்க்கை என்பது வெகு சிலரே அடையக் கூடிய இலக்கை நோக்கிய ஒரு இரவு நேர, கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் சூழ்ந்த, வலி மிகுந்த, களைப்புதரும் நெடுந்தூர நடைப் பயணம். இதில் நம்மோடு நடப்பவர்கள் என்றுமிருக்கும் மௌனமான மரண விதியின் ஆணையின் கட்டுண்டு ஒருவர் பின் ஒருவராக நம் கண்ணிலிருந்து மறைவர். அவர்களின் சுக துக்கங்களில் உதவ நமக்கிருக்கும் அவகாசம் குறைவு. அந்த அவகாசத்தை அவர்களுக்கு ஒளிகாட்டுவதற்கோ, கருணையினால் அவர் துயர் துடைப்பதற்கோ, என்றும் தளரா பாசத்தால் மகிழ்விக்கவோ, தளரும் மனத்துக்கு தைரியம் அளிப்பதற்கோ அல்லது நம்பிக்கையூட்டுவதற்கோ பயன்படுத்துவோம்." [Bertrand Russell – Mysticism and Logic and Other Essays – A Free Man’s Worship]

வாழ்கையை உபயோகமாக நடத்துவது என் உணவின் மதிப்பை உயர்த்தும்; வாழ்தல் என்ற இலக்கை அடைய நான் எடுத்துக் கொண்டிருக்கிற முறை சரியா என்ற நிர்ணயிக்கவும் அது உதவும். நான் உண்ட, உண்கிற உணவின் மதிப்பை உயர்த்தியிருக்கிறேனா என்று தெரியவில்லை; இருந்தாலும், இந்தக் கேள்வியைக் கேட்க ஆரம்பித்ததே என் வாழ்க்கையின் சுய தேடலில் ஒரு திருப்புமுனை என்று தோன்றுகிறது. மற்ற புலன்களின் பசித் தேவை பூர்த்தி, அதன் வழிமுறை பற்றி அடுத்த வாரம்.

வியாழன், மார்ச் 10, 2011

இலக்கு - 5

இலக்கு - 5

இலக்குகளை பற்றி நான் முதன் முதலாக யோசிக்க ஆரம்பித்தது கல்லூரியில் படிக்கும் காலத்தில் - இருபது வருடங்களுக்கும் முன்பாக! இந்த யோசனை இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சில வருடங்கள் கழித்து வேறு ஏதாவது இலக்காகத் தோன்றலாம்; அல்லது இந்த நான்கு இலக்குகளில் சில இல்லாமல் போகலாம். இன்றைய தேதியில் இவை நான்கும் என் இலக்குகள். இவைகளை நான் தனித்தனியாக நான்கு இலக்குகளாகப் பார்ப்பதில்லை. ஒருவிதத்தில் இவையனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. புரிந்து கொள்ள எளிதாக இருப்பதற்காக நான்காகப் பிரித்து விவரித்திருந்தாலும், இவை நான்கும் ஒரு முழுமையை நோக்கிச் செல்ல உதவுவதாகவே நான் எண்ணுகிறேன்.

கல்லூரியில் படிக்கும் போது ராமகிருஷ்ணா மடம் பதிப்பித்த விவேகாநந்தர் உரைகளை, புத்தகங்களை விரும்பிப் படித்திருக்கிறேன். அவர் 1900ல் அமெரிக்கா வந்த பொழுது தந்த உரைகள் (லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா) ஒன்றில் இந்த மாதிரி குறிப்பிட்டிருக்கிறார்: "பெரும்பான்மையான மக்கள் இலக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இலக்குதான் முக்கியம்; அதை அடையும் முறை, வழி முக்கியமல்ல என்று கூறுவது தவறு. சரியான இலக்கை நிர்ணயித்தபின் நாம் அதை அடையும் வழியில், முறையில் கவனம் செலுத்த வேண்டும். இலக்கைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்காமல் அதை அடையும் வழிமுறையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் இலக்கை அடைய முடியும். வழியும், முறையும் சரியாக இருந்தால் இலக்கை மறந்தாலும் பாதகமில்லை; இலக்கைத் தாமாகவே சென்றடையலாம்!". இது என்னை மிகவும் கவர்ந்த ஒரு விளக்கம். பின்னாளில் பகவத் கீதை உரைகளைப் படிக்கையில், சிதப்பிரஞ்ஞன் பற்றிய விளக்கத்தையும் இந்த உரையின் தொடர்ச்சியாகப் பார்க்கத் தோன்றியது. மூலத்தைப் பொருத்தே விளைவு - பாதையைப் பொருத்தே பயணம்.

இந்தக் கருத்து தொடர்பான கவியரசர் கண்ணதாசனின் திரைப்பாடல்:
"பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்? அதில்
பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்"
(வாணி ஜெயராம் குரலில், எம். எஸ். விஸ்வநாதனின் இசையில், அபூர்வ ராகங்கள் திரைப்படப் பாடல் - முழுப்பாடலும் அருமை!)

என் வாழ்க்கையின் சுய தேடலில் இரு நிலைகள். என் இலக்கு(கள்) என்ன? அவை சரியா? இது முதல் நிலை. சரியான இலக்குகள் நிர்ணயமான பின் அவைகளை அடையும் முறை, வழி சரியானதா? இது இரண்டாவது நிலை. நான் முன்பெழுதிய நான்கு இலக்குகளையும் சரியா என்றும், அதை அடைய நான் எடுத்த, எடுத்துக் கொண்டிருக்கிற வழிகளைப் பற்றியும் சுயவிசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறேன். இந்த சுயதேடல்/விசாரணை இன்னமும் முடியவில்லை; எப்போது முடியும் என்றும் தெரியவில்லை.

முதலாவதாக 'வாழ்தல்'. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று சொல்வதைப் போல 'நான் வாழ்வது' என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்று தோன்றுகிறது. இதில் சரி/தவறு என்று பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. இந்த இலக்கு தவறு என்று வாதிட எந்த விதமான காரணமும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த 'வாழ்தலுக்கு' உள்ள முறை பற்றி, இந்த இலக்கை அடைய நான் எடுத்த, எடுத்துக் கொண்டிருக்கிற முடிவுகளில், வழியில் எது சரி, எது சரியல்ல என்பதில் அனேக குழப்பம். இந்த 'வாழ்தல்' இலக்கின் முதல் பாகம் பசித் தேவைப் பூர்த்தி. உணவைப் பெறும் முறையில் ஏகப்பட்ட மாற்றம்; காலத்தின் போக்கில் இது மாறிக் கொண்டே வருகிறது.

அறுபது, எழுபது வருடங்களுக்கு முன் என் தாத்தா, பாட்டி (அம்மா வழி) ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிப்பட்டினம் அருகிலுள்ள மாதவனூர் கிராமத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் வாழ்ந்த முறைக்கும் இப்போது எடிசனில் நான் வாழும் முறைக்கும் நிறைய வித்தியாசம் - முக்கியமாக உணவு, வாழ்க்கை வசதி சம்பந்தப்பட்ட விஷயங்களில். அப்போது மாதவனூர் கிராமத்தில் மின்சாரம் கிடையாது. சிறிய தெரு; ஓட்டு வீட்டிற்கு எதிராக மாட்டுத் தொழுவம். பாலுக்காக நான்கு, ஐந்து பசு மாடுகள்; வயலுக்கும், வண்டித் தேவைக்கும் சில எருதுகள். ஒரு கன்றுக் குட்டியாவது எப்போதும் தொழுவத்தில் இருக்கும்! வீட்டின் கொல்லையில் மாதுளம், எலுமிச்சை மற்றும் தென்னை மரங்கள்; சில கொடிகள் (பறங்கி, பூசணி, மல்லி), கீரைப்பாத்தி. கிணறு தாண்டி கத்திரிக்காய் செடி பார்த்ததாக நினைவு. தெருமுனை தாண்டி கொஞ்ச தூரத்தில் ஊரணி (சிறு குட்டை). துணி துவைக்க, மாடு குளிக்க மற்றும் இதர தண்ணீர் உபயோகத்திற்கு. சமையலுக்கும், குடிநீருக்கும் வீட்டுக் கொல்லைக் கிணறு. ஊரணிக்கருகே நிறைய கருவேல மரங்கள், சகதி என்று ஒரு குழப்பமான வாசனை. இன்னமும் கொஞ்ச தூரத்தில் வயல். மாதத்தைப் பொறுத்து பச்சை நாற்றுகள் அல்லது முற்றிய கதிர்கள்.

வீட்டிற்குத் தேவையான உணவு அனேகமாக கிராமத்திலேயே உருவானது - கருப்பட்டி உட்பட. வண்டி கட்டி டவுனுக்கு (தேவிப்பட்டினம் அல்லது எப்போதாவது திருவாடானை) சென்று வருகையில் தாத்தா சர்க்கரை, ஓலைப்பெட்டியில் மிட்டாய்/பட்சணங்கள் அல்லது பிஸ்கட் என்று வாங்கி வருவார். வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த உணவுப் பொருட்களை சேகரிப்பது, பெறுவது எப்படி என்றும் தெரியும். தாத்தா, பாட்டி இருவருமே பால் கறக்க, பசுவைப் பாதுகாக்க (தவிடு, தண்ணீர் காட்டுவது, பசுவை ஊரணிக்கு ஒட்டிச் சென்று குளித்து விடுவது) எல்லாம் தெரியும். சிறு வயதில் தாத்தா வயலிலும் வேலை செய்திருப்பதாகச் சொல்லக் கேள்வி. மாச்சட்டியில் விளக்கெண்ணை விளக்கு வைத்து, மை தயாரித்த கதையும் பாட்டி/அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். மொத்தத்தில் என் கணிப்பில் கிட்டத்தட்ட 75 சதவீத உணவுத் தேவைகளை கிராமத்திலேயே அவர்களே தயாரித்துக் கொண்டார்கள்.

அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

சனி, பிப்ரவரி 26, 2011

இலக்கு - 4

இலக்கு - 4

வாழ்க்கை என்று பார்க்கும் போது இதன் ஆரம்பமும், முடிவும் இங்குதான் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மருத்துவப் பார்வையில், அல்லது ஒரு நாட்டு சட்ட ரீதியாக ஒரு உயிரின் தொடக்கமும், முடிவும் (இறப்பு) வரையறுக்கப்பட்டு விவரிக்கப்பட்டாலும், அது முழுமையான ஒன்று என ஒப்புக்கொள்ள முடியவில்லை. சிவவாக்கியர் அந்நாளில் கேட்டது:
"பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?
பிறந்து மண்ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?"

அவரே வேறொரு பாட்டில் இன்னமும் சொல்கிறார்:
"உடம்பு உயிர் எடுத்ததோ, உயிர் உடம்பு எடுத்ததோ
உடம்பு உயிர் எடுத்தபோது, உருவம் ஏது செப்புவீர்
உடம்பு உயிர் இறந்தபோது உயிர் இறப்பது இல்லையே
உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே!"

வளர்வதில் திறன் சம்பந்தப்பட்ட அறிவு வளர்ச்சியையும் சேர்த்துப் பார்த்தாலும், அதையும் தவிர பேரறிவாய், ஞானத்தைத் தேடும் எண்ணம் வருகிறது. இதை வளர்ச்சி என்று கூறி நிறுத்த முடியவில்லை. இந்தப் பேரறிவு வாழ்தல், மகிழ்தல், வளர்தல் இவைகளைப் பற்றி மட்டுமல்லாமல் இவைகளையும் தாண்டி ஒரு முழுமையை நோக்கிச் செல்லும் விஷயமாகவே எண்ணத் தோன்றுகிறது. ஒரு உயிரின் பயணம் இந்த பூமியில் பிறப்பதில் தான் ஆரம்பிக்கிறது என்று உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. அதே போல அந்தப் பயண முடிவும் இறப்பில் நின்று விடுகிறது என்றும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் பயணத்தில் ஒரு துண்டு, பகுதி 1968ல் பிறந்து ஆரம்பித்து இருக்கிறது. அதற்கு முன்னம் செய்த பயணம் நினைப்பில் இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கல்லூரிப் படிப்பு முடிந்து இந்துஸ்தான் லீவரில் பணிபுரிய ஆரம்பித்த காலத்தில் அலெக்ஸ்பாண்டியன் தயவில் 'பெரி மேசன்' கதைகள் அறிமுகமாயிற்று. அதில் ஒரு கதையில் 'பிறப்பு-இறப்பு' தொடர்பாக பேசிக் கொண்டு வருகையில், எப்படி நினைப்பு இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பற்றியும் பெரி மேசன் விளக்குவதாக வரும். அந்தக் கதை (பெயர் உட்பட) மறந்து விட்டாலும், இந்தப் பகுதி மட்டும் நன்றாக நினைப்பில் இருக்கிறது. நாம் தூங்கி எழுகையில் நம் தூக்கத்துக்கு முன்னால் நடந்த அனைத்து விஷயங்களும் மறந்து விடும் என்று ஒரு வைத்துக் கொள்வோம். அப்படி நடந்தால் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒரு பிறப்பு போலத் தெரியும். கற்றுக் கொண்ட விஷயங்களையே மறுபடி கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அதே போல ஒரு உயிர் பிறக்கும் போது முன் பயணங்களைப் பற்றி மறந்து விடுகிறது என்பது போல இந்தப் பகுதியில் விளக்கம் வரும்.

இந்தக் கதையில் வந்த இந்தப் பகுதியால் பின்னாளில் நிறைய யோசித்திருக்கிறேன் - அதைப் பற்றி பின்னால். இந்த யோசனைகளில் ஒரு குறிப்பிட்ட விஷயம், நினைப்பு, அதன் முக்கியத்துவம். வளர்ச்சியில் ஒரு திறனைக் கற்றுக் கொள்ளுகையில், அது கார் ஒட்டுவதாக இருக்கலாம், அல்லது பியானோ வாசிப்பதாக இருக்கலாம், அந்தத் திறனைப் பற்றிய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூளை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறது. இதற்கு புலன்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியம். பியானோ வாசிக்கையில், வரும் ஒலியை தரம் பிரித்து உணரவே பயிற்சி வேண்டியிருக்கிறது, முதல் மாதத்திலிருந்து இரண்டாம் மாதத்திற்கு என் செவியில் பெரிய வளர்ச்சி இல்லை; ஆனால் இந்தப் பயிற்சியில் செவியும், மூளையும் சேர்ந்து ஒலியின் தரம் பிரிப்பதில் முன்னேற்றம் அடைகிறது. நினைப்பு என்று ஒன்று இல்லையென்றால் இந்த தரம் பிரிக்கும் அறிவு தேக்கி வைக்கப்பட்டிருக்காது.

நினைப்பு திறனைப் பற்றிய அறிவை தேக்கி வைக்கும் பாத்திரம். அந்தப் பாத்திரத்தில் எதைத் தேக்கி வைப்பது என்பது என் முடிவைப் பொறுத்தது. இது வளர்ச்சிக்கு முக்கியம். அதே சமயத்தில் என் முடிவோடு சம்பந்தப்படாமல் என் உடல் இயங்கத் தேவையான திறனை, அறிவை அதுவாகவே சேர்த்து வைத்திருக்கிறது, எனக்குத் தெரியாமலேயே - உதாரணம்: என் இதய இயக்கம். இருதயம் பற்றி அறிந்து கொண்டதே பள்ளியில் படிக்கும் போதுதான். இப்போது அதன் இயக்கம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது, இருந்தும் இயங்கம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. எனக்குள் இயல்பாக இயங்குவதைப் பற்றி அறிந்து கொள்ளவும் என் முயற்சி தேவையாயிருக்கிறது. ஒரு இருதய மருத்துவர், இருதயத்தைப் பற்றி அறிந்து கொள்ள நான்கிலிருந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. இதேபோல மூளை, கண், கால் என்றெல்லாம் அறிந்து கொள்ள நிறைய வருடங்கள் ஆகும். என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவே என் வாழ்நாள் போதாது. இத்தனையும் சேர்த்து வைக்க என் நினைப்பு பாத்திரமும் போதாதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அறிவை, திறனைப் பெருக்கிக் கொள்வதில் நேரம், முயற்சி என்று எத்தனை செலவழித்தாலும், ஒவ்வொரு அறிவும் நிச்சயமாகத் தரும் பாடம் 'எனக்கு அறிந்து கொள்ள வேண்டியது அதிகம்' என்பதுதான்.

சரி இது எல்லாமே தெரிந்து கொண்டு விடுகிறேன் என்றூ ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம். அப்படித் தெரிந்து கொண்டாலும் முழுமை வரும் என்று தோன்றவில்லை. கவிஞர் கண்ணதாசன் சொன்னது:
"ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
மனிதன் இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்".

பத்திரகிரியார் சொன்னது:
“ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம்?”

இந்தத் திறன் சம்பந்தமான அறிவுகளையெல்லாம் தாண்டி, மூல காரணத்தை, இந்த 'ஏன்' என்ற கேள்விக்கான விடை தரும் அறிவை ஞானம் என்றழைக்கலாம். இந்த மூலத்தை, அறிந்தே அறியும் அறிவை, அறிந்து கொள்ள ஆசை! மீண்டும் பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல்களில் இருந்து ஒரு பாடல்:

“அறிவை அறிவால் அறிந்தே அறியும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பது இனி எக்காலம்?”

இன்னமும் அந்த ஞானம் வரவில்லை - அதனால் இந்த 'அறிதல்' என்னுடய இலக்குகளில் ஒன்று.

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

இலக்கு - 3

இலக்கு - 3

"வாழ்தல்", "மகிழ்தல்" இலக்குகளைப் பற்றி விபரமாக எழுதுவதற்கு முன்னால் அடுத்த இலக்குகளைப் பற்றியும் சொல்லி விடுகிறேன். பிறப்பதற்கு முன்னாலேயே கருவிலேயே தொடங்குகிற ஒரு செயல் வளர்ச்சி. விந்துவும், முட்டையும் ஒன்றாகி வந்த ஒரு செல், இரண்டாகி, நான்காகி, வளர ஆரம்பிக்கிறது. பிறந்த பின்னும் தொடர்கின்ற இச்செயல் இறப்பு வரை நடக்கின்ற விஷயந்தான். உடலளவில் ஆரம்பித்த இந்த வளர்ச்சி, ஒரு நிலையில் அறிவு, திறன், கலை என்றெல்லாம் உள்ளடக்கி பெரிதாகிறது. உலகில் உள்ள உயிரனைத்திற்கும் வளர்ச்சி பொது. வளர்ச்சியே வளர்ந்து வரும் திறத்தை, தன்னளவில் வளர்வதோடு மட்டுமல்லாமல் தன் இனமே வளர்வதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதை, பரிணாம வளர்ச்சி என்றழைக்கிறோம்!

ஒரு உயிர் உருவாகிப் பின் பிறந்ததே கரு வளர்ச்சியில் வந்ததுதான். இந்த ஆரம்ப வளர்ச்சியில் அந்த உயிரின் பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது:
"நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா?
இல்லை என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?"

ஆனால் "வாழ்தல்" ஆரம்பித்த பிறகு காலம் செல்லச் செல்ல நானெடுக்கும் முடிவுகள், என் செயல்களின் விளைவுகள் என் வளர்ச்சியை, அதன் திசை, வேகத்தைப் பாதிக்கிறது என்று தெரிகிறது. அது மழையில் நனைந்தால் ஜலதோஷம் வருவதில் ஆரம்பித்து, உணவில், உடற்பயிற்சியில் ஒழுங்கில்லாத காரணத்தால் சக்கரை வியாதி வருவது வரை அனேக விஷயங்களில் வெளிப்படுகிறது. அதே சமயத்தில் என் முடிவுகளோ, விருப்பங்களோ நேரடியாக சம்பந்தப்படாமல் வளரும் விஷயங்களும் இருக்கின்றன. குழந்தையாயிருக்கையில் நான் முடிவெடுத்து என் முடி வளரவில்லை; இப்போது நான் விரும்பினாலும் வளர மாட்டேன் என்கிறது!

வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் என்ன வித்தியாசம்? ஏன் இரண்டு இலக்குகளாகப் பார்க்க வேண்டும்? இவ்வுடலைப் பொறுத்தவரை வாழ்தல் இல்லாமல் வளர்தல் இல்லை. வாழ்வதற்காக நாம் எடுக்கும் முடிவுகளில், செயல்களில் வளர்ச்சி தானாக வருகிறது. உதாரணம் - வாழ்வதற்காக உணவு வேண்டும்; உண்பதனால் உடல் தானாக வளருகிறது. உடலைப் பொறுத்தவரை வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் வித்தியாசம் அதிகமாகத் தெரியாவிட்டாலும், அறிவு, திறன் சம்பந்தப்பட்ட விஷங்களில் வித்தியாசம் நிச்சயம் தெரிகிறது. ஒரு திறனைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அதை செயலாக்குவதாலேயே வளர்ச்சி வருகிறது. வெறுமனே வாழ்வதற்கு அந்தத் திறன் தேவையில்லாமல் இருக்கலாம்; அந்தத் திறனைக் கற்க வளர்ச்சியோ, மகிழ்ச்சியோ காரணமாக இருக்கலாம்!

இந்த வளர்ச்சியில் முக்கியமான ஒரு விஷயம் காலம், நேரம். எப்படி காலம் ஒரு அம்பு போல முன்னோக்கி மட்டும் செல்கின்றதோ அதே போல வளர்ச்சியும் ஒரே திசையிலேயே நடக்கிறது. பள்ளியில் படிக்கையில் மனப்பாடம் செய்து (பரீட்சைக்கு கட்டாயம் வரும்!) எழுதிய இரண்டு உயிர் வளர்ச்சி பற்றிய பாடங்கள் இன்னமும் நினைப்பில் இருக்கிறது. ஒன்று கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சி ஆவது; இரண்டு தவளையில் வளர்ச்சிப் பருவம், நிறைய படங்களுடன் (அதனால் ஐந்து அல்லது பத்து மதிப்பெண் கேள்வியாக வரும்). முட்டை, தலைப்பிரட்டை, வாலுள்ள தவளை, பெரிய வாலில்லாத தவளை எல்லாம் ஒரு குட்டையைச் சுற்றி இருப்பதாக வரைந்திருக்கிறேன் (தவளை உருளைக்கிழங்கு போலத் தான் தெரியும், நான் வரைந்தால்). இதில் முட்டை காணோம், தலைப்பிரட்டை காணோம் என்று ஒவ்வொரு பருவத்தை மட்டும் பார்த்தால் வளர்ச்சியில்லை; மொத்தமாக முட்டையிலிருந்து தலைப்பிரட்டை, அதிலிருந்து தவளை என்று பார்த்தால் வளர்ச்சி தெரியும்.

வண்ணத்துப் பூச்சி, தவளையைப் பொறுத்தவரை இந்த வளர்ச்சி, உடல் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. புழுவாக கூட்டில் வாசம் செய்ய ஆரம்பித்தாலும், வண்ணங்கள் நிறைந்த இறக்கைகளுடன் பூச்சியாக வெளியே வருகிறது. கால்களில்லாமல், நீரில் நீந்திவந்த தலைப்பிரட்டை, நீரிலும், நிலத்திலும் வாசம் செய்யவும், நீந்தவும், தவ்விச் செல்லவும் கால்களோடு தவளையாக வளர்வதும் பிரமிக்க வைக்கும் அதிசயம்தான். இந்த மாற்றத்தில், வளர்ச்சியில் ஒரு நோக்கம், முழுமை தெரிகிறது. என் உடல் வளர்ச்சியில், மாற்றத்தில் இந்த மாதிரி பிரமிக்க வைக்கும் விதமாக மாற்றம் வந்ததில்லை. அதே சமயத்தில் இது வரை அனுபவித்து, உணர்ந்து, அறிந்து கொண்ட விஷயங்களை, என் அறிவில், மனதில் வந்த வளர்ச்சியை சற்று பின் தள்ளி நின்று மொத்தமாகப் பார்க்கையில் நிச்சயம் பிரமிப்பு வருகிறது. இன்னமும் வளர வேண்டும் என்கிற உந்துதலும் இருக்கிறது.

குழந்தையாக இருக்கையில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் வயது ஆக ஆக மாறுகின்றதோ, அதே போன்ற மாற்றம் வளர்ச்சிக்கும் வருகின்றது. இந்த மாற்றம் ஒரு விதமான இழப்பை ஒத்திருக்கிறது. எப்படி வண்ணத்துப்பூச்சி புழுவை இழக்கிறதோ, தவளை தலைப்பிரட்டையை இழக்கிறதோ, அதே போல நானும் என் வளர்ச்சியில் நிறைய இழந்திருக்கிறேன். அறிவால், அறியாமையை, அந்த அறியாமை தந்த வெகுளித்தனத்தை இழப்பதையும் இந்த வகையில் சேர்க்கலாம்.

யோசித்துப் பார்க்கையில் இழப்பதற்கு தைரியம் இல்லாத போது வளர்ச்சிக்கான வாய்ப்பும் குறைகிறது. முதன் முதலில் பள்ளியில் விட்டு விட்டு அம்மா வீடு திரும்பிச் சென்றவுடன் மனதில் வந்த பயம் தொடர்ந்திருந்தால், படிப்பு என்பதே ஒரு மாதிரியாகத் திரும்பியிருக்கும். வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் இந்த 'இழக்கும் தைரியம்' ஒரு முக்கியமான வித்தியாசம் என்று கருதுகிறேன். 'வாழ வேண்டும்' என்று நோக்குகையில் இம்மாதிரியான 'இழக்கும் தைரியம்' தேவையாயிருக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு. ஆனால் வளர்வதற்கு இது தேவையான ஒன்றாகி விடுகிறது.

சுற்றுப்புற சூழ்நிலைகள் காலப் போக்கில் மாறிக் கொண்டே வருகிறது. இது வரை கற்ற கல்வியும், திறனும், அறிவும், காலம் முடியும் வரை துணைக்கு வரும் என்று முடிவெடுத்து நிறுத்திவிட முடியாது என்று தோன்றுகிறது. இவை வளரவில்லை என்றால் வாழ்தலும் பாதிக்கப்படும். அதனால் வளர்ச்சி என்பது எனக்கு மட்டுமல்ல, என் சந்ததிக்கும் அத்தியாவசமாகி விடுகிறது. இந்த வளர்ச்சியில் என்னுடைய ஆக்கபூர்வமான சம்பந்தம், முடிவுகள் பெரும் பங்கு வகிப்பதால், “வளர்தல்” என் இலக்குகளில் ஒன்று.

மேலும் அடுத்த வாரம்.

வெள்ளி, பிப்ரவரி 11, 2011

இலக்கு - 2

இலக்கு - 2

அதே குழந்தை பசி நீங்கியபின் தெரிவிக்கும் உணர்வு சந்தோஷம் - சிரிப்பின் மூலமாக. வளர வளர பசி நீங்கியதால் மட்டும் அது சிரிப்பதில்லை. ஒரு கிலுகிலுப்பை, பொம்மை என்றெல்லாம் அதன் தேவை வளர ஆரம்பிக்கிறது. யோசிக்க, பேச தெரிய ஆரம்பிக்கும் முன்னமே, பசி நீங்கியவுடன் வேறெதையோ தேட ஆரம்பிக்கும் தன்மை வந்து விடுகிறது. தன்னைத் தூக்கி கொஞ்ச வேண்டும், பாட்டு கேட்க வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டுக் கேட்கத் தொடங்கும் முன்னமே அதன் புலன்களுக்கு சுகம் தரும் விஷங்களைத் தேடத் துவங்குகிறது. இந்த 'சுகம் தேடல்' புலன்களில் ஆரம்பித்தாலும், வளர வளர புலன்களைத் தாண்டி, சிந்தனை, நினைப்பு போன்ற மனது/மூளை சம்பந்தப்பட்ட சமாசாரங்களையும் உள்ளடக்க ஆரம்பிக்கிறது. இந்த மாதிரி 'சுகம் தேடல்' தேவைகளின் பூர்த்தியில் கிடைக்கும் உணர்வை "மகிழ்ச்சி" என்று சொல்லலாம்.

மகிழ்ச்சியின் முதலாவது நிலை புலன்கள் தெரிவிக்கும் உணர்ச்சிகளால் வரும் சுகம், இதம். பண்டைய நூல்களில் நம் உடம்பின் ஐந்து புலன்களை ஞானேந்திரியம் என்றும் (செவி, கண், மூக்கு, நாக்கு, மெய்), இந்தப் புலன்கள் மூலமாக அறியப்படும் உணர்வுகளை தன்மாத்திரை (சப்தம், ரூபம், கந்தம், ரசம், ஸ்பரிசம்) என்றும் குறிப்பிடுகிறார்கள். ஞானேந்திரியங்களின் வேலை, எந்தப் பொருளையும், தன்மாத்திரைகளாக விவரித்து மூளைக்கு அனுப்புவதுதான். ஒரு உயிருக்கு ஒரு சமயத்தில் எந்த தன்மாத்திரை இதம் அளிக்கிறதோ, அதுவே 'மகிழ்ச்சியின்' காரணமாகிறது. சிலருக்கு சில புலன்களின் உணர்ச்சி தரும் சுகம், மற்ற புலன்களின் உணர்ச்சிகளால் வரும் சுகத்தை விட அதிகமாக இருக்கும்; அதனால் முக்கியத்துவமும் மாறலாம். சிலருக்கு சங்கீதம், சிலருக்கு சாப்பாடு - சந்தோஷம் எதில் தான் வரும் என்று சொல்ல முடியாது! இந்த சுகங்களில் ஒன்று பெரியது மற்றொன்று சிறியது என்றெல்லாம் தரம் பிரிக்க முடியாது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது "மகிழ்ச்சி" என்பது ஒரு கூட்டுப் பொருள் - இதற்கு புலன், புலனுக்கு இதம் தரும் மற்றொரு பொருள், புலனின் உணர்வைப் புரிந்து கொண்டு ரசிக்கும் மனம்/மூளை, என்று மூன்றும் சேர்ந்தால் தான் மகிழ்ச்சி. இந்த மூன்றும் ஒருவருக்கு எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதே போல இந்த மூன்றும் இரண்டு மனிதர்களுக்கு ஒன்றே போல இருப்பதில்லை. ஒவ்வொருவரைப் பொறுத்து இது மாறுபடும். சிறுவயதில் மன்னார்குடியில் கோடையில் பனிக்கட்டியைக் கையில் எடுக்கையில் வந்த சுகம், மகிழ்ச்சி இப்போது முழங்கால் அளவு பனியை வீட்டு வாசலில் இருந்து எடுத்துப் போடுகையில் எனக்கு நிச்சயமாக இல்லை!

இந்த முதல் நிலை மகிழ்ச்சியிலும் இரு பிரிவுகள். ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்பட்டுத் தரும் தன்மாத்திரை மகிழ்ச்சி - ஒரு பிரிவு, ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்படாத மகிழ்ச்சி - மற்றொரு பிரிவு. சுருக்கமாக சொல்லப்போனால், ஞானேந்திரியங்களின் நேரடியான துணையில்லாமல் தன்மாத்திரைகள் தரும் இதத்தை மூளை அடைந்தால் வரும் மகிழ்ச்சி, முதல் மகிழ்சியின் ஒரு மாறுபட்ட பிரிவு. உதாரணமாக நல்ல பாட்டைக் கேட்கையில் வரும் மகிழ்ச்சி முதலாம் பிரிவு - காது கேட்டு, பொருள் புரிந்து, மனம் மகிழ்கிறது. இரவு படுக்கையிலே விளக்கணைத்து விட்டு, உறக்கம் வரும்முன், கேட்ட பாட்டில் மனதைக் கவர்ந்த இடங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வது இரண்டாம் பிரிவு. காது கேட்பதற்கு பாட்டு இல்லையென்றாலும், கேட்ட போது ஏற்பட்ட உணர்வை மனது/மூளை நினைவாலே வரவழைக்கிறது. ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்படாத தன்மாத்திரை உணர்வு!

நேரடியாக சம்பந்தப்படாது போனாலும், ஞானேந்திரங்கள் இல்லாமல் தன்மாத்திரை பற்றி மூளை தாமாக அறிய முடியாது. தன்மாத்திரை உணர்வை மூளை அடைய வேண்டுமானால் ஞானேந்திர்யங்கள் அவசியம் தேவை. நினைப்பாலே மூளை தன்மாத்திரை தரும் உணர்ச்சியை புதிதாக உண்டு பண்ண முடியாது; ஏற்கனவே அனுபவித்திருந்த ஒரு உணர்வின் நினைப்பிலிருந்துதான் உருவாக்க முடியும். ஞானேந்திரியம் இல்லையென்றால் தன்மாத்திரையும் இல்லை. இந்த ஞானேந்திரியங்கள், அவை உணரும் பொருள்கள் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன - ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை - ஒரு உயிருக்கு. இந்த சம்பந்தம் பற்றி நான் எழுதிய ஒரு கவிதை இங்கே:

வண்ணமிங்கு இலையென்றால் பார்வை தேவையில்லையே
பார்வையிங்கு இல்லையென்றால் வண்ணமுந்தான் இல்லையே

சப்தமிங்கு இலையென்றால் செவியின் தேவையில்லையே
செவியுமிங்கு இல்லையென்றால் சப்தமுந்தான் இல்லையே

வாசமிங்கு இலையென்றால் நாசியின் தேவையில்லையே
நாசியிங்கு இல்லையென்றால் வாசமுந்தான் இல்லையே

சுவைகளில்லை என்றுபோனால் நாவின் தேவையில்லையே
நாவுமிங்கு இல்லையென்றால் சுவைகளுந்தான் இல்லையே

தீண்டப்பொருளும் இல்லையென்றால் உணர்வின் தேவையில்லையே
உணர்வும் அற்றுப்போனாலே தீண்டுதலிங்கே இல்லையே

மகிழ்ச்சியின் இரண்டாவது நிலை எந்தப் புலனுமே சம்பந்தப் படாத - வெறும் நினைவு/மூளை/மனது சம்பந்தமான விஷயம். அதாவது, தன்மாத்திரை தாண்டிய சுகம், மகிழ்ச்சி. உதாரணம் - ஒரு கடினமான புதிரை மனதினுள் ஆராய்ந்து, விடை கண்டுபிடிக்கையில் வரும் மகிழ்ச்சி. ஒருவிதத்தில் இது வசதியான மகிழ்ச்சி - காரணம் இதிலிருக்கும் சுதந்திரம். புலன்கள் தாமாக மகிழ்சியைத் தர முடியாது - அதற்கு இதம் தரும் பொருளும் வேண்டும். பொருள் மட்டும் இருந்தால் போதாது, அதை உணரும் புலனும் வேண்டும். ஆனால் மனதிலே நினைவாலே தோன்றும் மகிழ்ச்சிக்கு நம் நினைவு, மனம் மட்டும் போதும்.

சிவவாக்கியர் சொன்ன சொல் நினைப்புக்கு வருகிறது:
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே!

இந்த முக்கியத்துவம் மாறுபட்டாலும், சுகத்தை, மகிழ்ச்சியை மொத்தமுமாகத் துறந்தவர்களை நான் பார்த்ததில்லை. புலன்கள் சம்பந்தப்படாத மனது, நினைவு தொடர்பான சுகங்களை அறிந்து கொள்ள ஆரம்பிக்கையில், புலன்கள் சம்பந்தமான தேவைகளில், சுகங்களில் செலவிடும் நேரம் குறைகிறது. இருந்தாலும் இந்த "மகிழ்ச்சி தேடுதல்” (சுருக்கமாக “மகிழ்தல்” என்று அழைக்கலாம்) இறப்பு வரை ஒருவருக்கு உந்துதலாக இருக்கிறது.

இதனால் என்னளவில் "மகிழ்தல்" வாழ்வின் இரண்டாம் இலக்கு. இதைப் பற்றி மேலும் அடுத்த வாரம்.

இலக்கு - 1

வெள்ளி, பிப்ரவரி 04, 2011

இலக்கு - 1

இலக்கு - 1

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான இலக்குகள் இருக்கலாம்; இருக்கின்றன. தினசரி வாழ்க்கையில் அன்றாட காரியங்களில் ஆரம்பித்து (ஏழு மணி வண்டி பிடிக்க வேண்டும்) வார/மாத/தொலைநோக்கு பார்வைவரை (ஒருமுறையாவது தாஜ்மகால் பார்க்க வேண்டும்), பல விதமான இலக்குகள். ஆனால் மொத்த வாழ்க்கைக்கும் இலக்கு என்ன என்று யோசித்தால் வெகு சிலருக்கே விடை கிடைக்கிறது. இதிலும் இரு நிலைகள் - என் ஒருவனுடைய வாழ்விற்கு என்ன இலக்கு? மொத்த மனித வர்க்கத்திற்கு/பிறவிக்கு ஒரு இலக்கு உண்டா? அல்லது இந்த வாழ்க்கை என்பது இலக்கற்ற, ஒருவிதமான வேதியல், உயிரியல் சம்பந்தப்பட்ட பரிணாம வளர்ச்சி மட்டும்தானா? நாளாக நாளாக கேள்விகள், அதுவும் சமீபகாலத்தில் இந்த மாதிரிக் கேள்விகள் தொடர்பான யோசனைகள் அதிகமாகி விட்டன. இதை மத்திய வயதுப் பிரச்சனை – mid life crisis – என்று கருதி ஒதுக்க முடியவில்லை. இந்தத் தொடரில் என் யோசனையில் தோன்றிய எண்ணங்களை, பிரதிபலிப்புகளைப் பதிய உத்தேசம்.

உயிர் வாழத் தேவையான விஷயங்கள் (காற்று, உணவு போன்ற சமாசாரங்கள்) இல்லை (அல்லது குறைவு) என்றால் இந்த 'இலக்கென்ன?' கேள்விக்கு விடை எளிது. அந்த மாதிரி சமயங்களில் வாழ்க்கையின் இலக்கு 'உயிர் வாழத் தேவையான விஷயங்களைப் பெறுவது'. எப்போது ஒரு விஷயம் 'தேவை' என்று நினைக்கிறோமோ அப்போது அது இலக்காகிறது. இந்த தேவைகளைப் பற்றி மாஸ்லோ என்பவர் ஒருவிதமான வகைப்படுத்திய சித்தாந்தத்தைச் சொல்ல, அதைப் பற்றி நிறையப் பேர் எழுதிவிட்டார்கள். இதில் அந்த சித்தாந்தம் சரி என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்; சரியல்ல என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்! தேவைகளை இந்த மாதிரி வகைப்படுத்துவதில் எனக்கு அதிக நாட்டமில்லை. வகைப்படுத்துவதால் புரிந்து கொள்வது எளிதாக இருந்தாலும், இந்த வகைகள் எல்லொருக்கும் தொடர்ச்சியாக வருவதாகத் தோன்றவில்லை. தேவைகளை இந்த மாதிரி வகைப்படுத்துவதற்கு பதிலாக மனதில் தோன்றும் உணர்வுகளை வைத்து விவரித்தால், 'இலக்காக எதை நினைக்கிறோம்' என்பது புரிபடலாம்.

குழந்தையாய் பிறக்கையிலே இருக்கும் உணர்வுகள், வளர்ந்து மனிதனாக மாறுகையில் நிச்சயமாக மாறுபடுகின்றன. குழந்தையாய் இருக்கையிலே பசிக்காக அழுவது இயல்பாக வருகிறது. குழந்தைக்கு தேவை என்ன என்று பகுத்தறிந்து சொல்ல வராவிட்டாலும், அதன் உடலில், மூளையில் இருக்கும் இயல்பான செயல்பாடு அழுகையை வரவழைத்து தனக்கு வேண்டிய தேவையை ஒருவிதமாய் தெரியப் படுத்துகிறது. இந்த பசி விஷயம் பிறந்ததில் ஆரம்பித்து, இறக்கும் வரை தொடர்கிறது - இதனால் ஒரு விதத்தில் முதல் இலக்காக, தேவையாக, 'பசி' வந்து விடுகிறது. இங்கே பசி என்பதை 'உணவுத் தேவை' என்பதோடு மட்டும் நிறுத்தாமல், உயிர் வாழ அத்தியாவசியமான எல்லாவிதமான தேவைகளையும் - காற்று, நீர் உட்பட - உணர்த்தும் விதமாகவே உபயோகிக்கிறேன். இதனால் என் கருத்தில் “பசித் தேவை பூர்த்தியே” முதலாவதாக வரும் இலக்கு!

குழந்தை வளர வளர சுற்றுப்புற சூழ்நிலைகள் புரிய ஆரம்பிக்கின்றன. தன் உடலுக்கு எதெது தீங்கு விளைவிக்கும் என்றும் புரிய ஆரம்பிக்கிறது. பசிக்கு பால் தேவை, ஆனால் பால் சூடாக இருந்தால் ஒரு உறிஞ்சலுக்குப் பிறகு நிறுத்திவிடத் தெரிகிறது. வாழ்க்கையில் உடலுக்கும், உயிருக்கும் வரக்கூடிய அபாயங்கள் புரியப் புரிய அந்த அபாயங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற தேவையும் தெரிய ஆரம்பிக்கிறது. இவைகளை தனியாக வகைப்படுத்தாமல் 'பசித் தேவை பூர்த்தி'யின் ஒரு பாதியாகவே கருதுகிறேன். எப்படி தேவை என்று கருதி "சேர்க்க வேண்டியவை" பட்டியலிட ஆரம்பிக்கிறோமோ, அதே போல "சேர்க்கக் கூடாதவை" என்று ஒரு பட்டியலும் தயாரிக்க ஆரம்பிக்கிறோம்.

இந்தப் பட்டியல் வாழ்க்கையில் நம் அறிவும் அனுபவமும் வளர வளர பெரிதாகிக் கொண்டே வருகிறது. சேர்க்க வேண்டியது - உணவு; விலக்க வேண்டியது - விஷம்; என்ற ரீதியில் உடல், உயிர் காக்கும்/ தாக்கும் சமாசாரங்களை நம் அறிவு நினைவில் தேக்க ஆரம்பிக்கிறது. உடலுக்கும், உயிருக்கும் வரும் அபாயமெல்லாவற்றையுமே 'விலக்க வேண்டியவை' என்ற பட்டியலில் சேர்க்கலாம். ஒரு தேவையை முழுதாகப் புரிந்து கொள்ள சேர்க்க வேண்டியதைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது; விலக்க வேண்டியவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். சேர்ப்பதும், விலக்குவதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. உணவு சேர்க்க வேண்டியவை பக்கம் இருந்தாலும், அளவு அதிகமானாலோ, தரம் குலைந்து போனாலோ அதே உணவு விலக்க வேண்டியவை பக்கம் தானாக சென்றுவிடும். வளர வளர இந்த "பசித் தேவை பூர்த்தி" இலக்கு மாறாவிட்டாலும், இந்தத் தேவையின் புரிதல் பெரிதாகி முழுமையை நோக்கி வளர்கிறது. இந்தப் புரிதல் இறக்கும் வரை தொடர்கிறது. இதையே "வாழ வேண்டும்" அல்லது சுருக்கமாக "வாழ்தல்" என்றழைக்கலாம்.

இறைவன் (அல்லது இயற்கை) வீணாக எதையும் செய்வதாகத் தோன்றவில்லை. ஒரு உயிரைப் பிறக்க வைத்ததற்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அதனால் இந்த வாழ்க்கை என்பது இலக்கற்ற, ஒருவிதமான வேதியல், உயிரியல் சம்பந்தப்பட்ட பரிணாம வளர்ச்சி மட்டும்தான் என்று எண்ணி வாழ முடியவில்லை. என் பிறப்பின் காரணம் தெரியவில்லை. அந்தக் காரணம் தெரிந்தால் இவ்வாழ்கையின் முக்கியமான இலக்கும் தெரிந்துவிடும். அந்தக் காரணம் தெரியும் வரை, பிறந்த அந்த உயிரை தொடர்ந்து வாழ்ந்திருக்க என்ன தேவையோ அதுவே முதல் இலக்காகிறது. அதனால் என்னளவில் முதல் இலக்கு "வாழ்தல்"!

முன்பு எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள்:

இலக்கை நோக்கிப் பயணித்தேன்
பயணத்தில் வந்தது தெளிவு
இப்போது பயணமே இலக்கு!

அடுத்த வாரம் தொடர்கிறேன்.

வெள்ளி, ஜனவரி 28, 2011

மறு பிரவேசம்

தந்தனத்தோம் கோமாளி (மறுபடி) வந்தேனுங்க.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் (2006ல்) லாவோட்ஸேயின் கவிதைகள் மூலத்தை தமிழில் எழுத ஆரம்பித்தேன். மொத்தம் 81 கவிதைகள் - 51 கவிதைகள் முடிந்த சமயத்தில் வேலை மாற்றம் - எழுத நேரம் குறைந்து போய், இந்த மொழி மாற்ற வேலை நின்று போயிற்று. சென்ற வருட இறுதியில் மறுபடி வேலை மாற்றம். மறுபடி கொஞ்சம் நேரம் கிடைக்க முனைப்பாக மீதம் இருக்கும் கவிதைகளையும் மொழி மாற்றம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். வாரம் ஒன்றாக பதிய உத்தேசம். இன்று ஆரம்பித்தாகிவிட்டது - 'வழி' தளத்தில். இன்னும் முப்பது வாரத்தில் மொத்தமும் முடிந்துவிடும்.

சென்று பார்த்து, படித்து எப்படியிருக்கிறது என்றூ சொல்லுங்கள்.