ஞாயிறு, டிசம்பர் 03, 2006

தேநீர் – 12

மார்க்கெட்டிங்

தோட்டத்தில் வளரும் செடியிலிருந்து இலையைப் பறித்து டீத் தூளாகவும் செய்து தருவது டீ எஸ்டேட் என்று சொல்லப்படும் தோட்டங்களே. இருபது வருடங்களுக்கு முன்பு வரை, தோட்டங்களே நேரடியாக டீயை பருகும் மக்களுக்கு விற்பனை செய்ததில்லை. தோட்டங்கள் ஏலத்தின் மூலமாக டீத்தூள்களைக் கலந்து பொட்டலம் கட்டி விற்கும் நிறுவனங்களுக்கு விற்பதை மட்டுமே செய்து வந்தன. இந்த பொட்டலம் கட்டுவது தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய விஷயம் என்று சொல்ல முடியாது. இதைப் புரிந்து கொண்ட தோட்டங்கள், இந்த டீத்தூளை நாமே ஏன் பொட்டலம் போட்டு நேரடியாக விற்கக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தன. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்தியாவில் டீத்தூள் பொட்டலம் போடும் நிறுவனங்கள் அதிகம் இல்லை. பெரிய அளவில் மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள்; பிராண்டு என்று பார்த்தால் இருபது/முப்பது இருக்கும்.

இப்போது எத்தனையோ வகைகள் வந்து விட்டன. நிறைய தோட்டங்கள் ‘தோட்டத்து தேயிலையின் புத்துணர்வு’ என்று தங்களிடமே தோட்டம் இருக்கிறது என்ற ஒரு விஷயத்தை வித்தியாசமாகக் காட்ட ஆரம்பித்தன. பொட்டலம் போடும் வியாபாரம் இருக்க முக்கிய காரணம், இயற்கையின் படைப்பில் வரும் வித விதமான தேயிலைகளை இன்னமும் அதிகமான எண்ணிக்கையில் கலவையாக்க முடியும் என்பதால் தான். இரண்டே தோட்டங்கள் இருந்தால் கூட, இந்த இரண்டையும் எத்தனை விகிதாசாரத்தில் கலக்கிறோம் என்பதிலேயே நாம் நிறைய வகைகளை (பிராண்ட்) உருவாக்க முடியும். இந்த ஒரு சமாசாரத்தில் தான் மொத்த பொட்டல வியாபாரமும் அடங்கியிருக்கிறது.

மூன்று, நான்கு தோட்டத்திலிருந்து தேயிலையை வாங்கி கலந்து கொடுக்கிறேன் என்று நான் சொன்னால் யாரும் என்னிடம் வர மாட்டார்கள். அதற்காக எனக்கு மார்க்கெட்டிங் பிரிவின் ‘அறிவு’ தேவை. அவர்கள் உங்களிடம் வந்து இந்த டீ குடித்தால் களைப்பு போகும், புத்துணர்வு வரும், என்று சொன்னால், நீங்கள் வந்து கொஞ்சம் போணி பண்ணுவீர்கள். அதற்காகத்தான் இந்தப் பிரிவு.

இவ்வளவுதானா என்று நினைக்க வேண்டாம். ஒரு பெரிய நிறுவனத்திற்கு பத்து, இருபது பிராண்டு தேவை. இவைகளுக்குள் முரண்பாடு வராத மாதிரி, அதே சமயம் ஒவ்வொரு வகையும் (பிராண்டு) ஒரு தனி விசேஷத்தை சொல்வது போலவும் கதை கட்டுவது அவ்வளவு எளிதல்ல. முடிந்தால் மற்ற நிறுவன பிராண்டை கொஞ்சம் மட்டம் தட்டி, சொந்த பிராண்டை கொஞ்சம் தூக்கிப் பேசினால் விற்பனை பெருகலாம். இதற்காக இவர்கள் செய்யும் செலவுதான் எத்தனை. இந்தப் பிரிவு மட்டும் இல்லையென்றால், நாட்டில் பெரிய அளவில் பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கும் – அது சுவரில் டீப்பொட்டலப் படம் வரைபவரிலிருந்து, வீட்டில் நீங்கள் டீ குடித்துக்கோண்டே ஆவலாகப் பார்க்கும் தொலைக்காட்ச்சித் தொடர் வரை.

ஒரு கலவைக்கு எந்த மாதிரி குணம் இருக்கிறது என்பதை நிர்ணயித்து (குணம் என்பது பொதுவான சொல் – அது சுவை, மணம், நிறம், அது தரும் உணர்ச்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்), அந்த குணத்தை மக்கள் மனதிலே பதியுமாறு விளம்பரங்கள் தயாரிப்பது, போட்டிகள் நடத்துவது போன்றவை மார்க்கெட்டிங் பிரிவின் வேலை. இந்த விளம்பரங்களுக்கு வெளி நிறுவனங்களை அணுகி, அங்கு இருக்கும் கவிஞர்கள், கலைஞர்களின் திறமையால் ஒரு துண்டுப் படத்தையோ, பாடலையோ, அந்தக் கலவையின் குணத்தை பறைசாற்றும் விதமாக தருவிப்பது என்பது ஒரு பெரிய விஷயம். அது டீத்தோட்டத்தில் ஓடும் பி.டி. உஷாவா (கண்ணன் தேவன் டீ), அல்லது தபலா வாசிக்கும் ஜாகீர் ஹூசேனா (தாஜ் மஹல் டீ) என்றெல்லாம் நிர்ணயிப்பது இவர்கள் தான்.

மற்ற நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இதில் ஒரு பெரிய வித்தியாசம், இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை. ஒரு விளம்பரம் முக்கியமான மொழிகள் அத்தனையிலும் வருவது நலம் - அது செலவையும் குறைக்கும், இந்தியா முழுவதும் டீயை விற்க உதவும். இந்த மாதிரி ஒரு பிரச்சனை அனேகமாக மற்ற நாடுகளில் கிடையாது. பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்க உதவுமாறு ஒரு சிறு கவிதை எழுதுவது ரொம்பவும் கஷ்டம். இதற்காகவே இந்திய மார்க்கெட்டிங் பிரிவுக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்.

சமயத்தில் சில விளம்பரங்கள் ஒரு மொழியில் மட்டும் பிரபலமாவதும் உண்டு. இதில் எனக்குப் பிடித்த ஒரு விளம்பரக் கவிதை:

Dip – Dip
Add the Sugar; and the milk
And its ready to sip
Do you want it stronger? Dip a little longer
Dip – Dip – Dip
And its ready to sip

உங்களுக்குப் பிடித்த டீ விளம்பரங்களை பின்னூட்டமிடுங்கள்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 11
தேநீர் – 10
தேநீர் – 9
தேநீர் – 8
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

1 கருத்து:

வடுவூர் குமார் சொன்னது…

இதுவரை 12 பதிவு போட்டு,ஒரு டீ இலையை கூட கண்ணில் காட்டவில்லையே?
அதாங்க டீ இலையின் படம்.
:-))