செவ்வாய், ஜூலை 26, 2005

நம்பிக்கை வை!

திரு. நாரயணன் வெங்கிட்டு கவிதைப் போட்டி அறிவித்தார் - "நம்பிக்கை" என்ற தலைப்பில். அதிக பட்சம் எட்டு வரி என்று சொல்லியிருக்கிறார். "எட்டு வரியா? கஷ்டமாயிருக்குமே!" என்று யோசித்து எழுத ஆரம்பிக்க, இப்போது இருபத்தைந்து வரிகள். போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும், எழுத வருகிறதே என்று நினைத்தேன். ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு இடம் - இராக், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இலங்கை. எழுதி முடித்ததும் ஒரு பாரம் இறங்கியது போல உணர்வு. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நம்பிக்கை வை

"நம்பிக்கை வை!" திடமாக வந்தது தாத்தாவின் வார்த்தைகள்
குவைத் போரில் இறந்த வாப்பாவைப் பார்த்துத் தேம்பியழுதபோதும்
பின்பு அமெரிக்க குண்டுபட்டுக் காலிழந்த அண்ணனைத் தேற்றவும்
குடும்பத்தின் பசிபோக்க வேலைதேடி காவல்படையில் சேரவந்தவனுக்கு
இரான் போரில் கண்ணிழந்த தாத்தாவின் வார்த்தைகள் "நம்பிக்கை வை!"

"நம்பிக்கை வை!" வாஞ்சையோடு பாட்டியின் தலைக்கோதல்
'பாப்பி' பயிர்ப் போரில் குண்டுபட்டு இறந்த ஆசை அண்ணன்
கண்ணிவெடியால் கையிழந்து ஊமையான அம்மா மூலையில்
வேலைதேடிச் சென்ற அப்பா திரும்புவாரா என யோசிக்கையில்
அழுத்தமாகப் பாட்டி சொன்ன வார்த்தைகள் "நம்பிக்கை வை!"

"நம்பிக்கை வை!" நிதானமாக வந்தது பாதிரியின் வார்த்தைகள்
மனது குண்டுவெடிப்பில் காயமாகிப் படுத்திருக்கும் மகளிடம்
கையில் பிறந்தநாள் பரிசு இராக்கிலிருக்கும் மகனுக்கு அனுப்ப
கைப்பை சோதனைக்காக காத்திருக்கையில் கர்த்தரை ஜபிக்க
மறுபடி காதில் ஒலித்தது இரண்டு வார்த்தைகள் "நம்பிக்கை வை!"

"நம்பிக்கை வை!" பெரிதான எழுத்தில் சுவற்றை மூடிய துணியில்
கூட நடந்து வரும் சிறுமி, செப்டம்பர் 11ல் இறந்த அக்காள் மகள்
'தீவிரவாத எதிர்ப்புப் போர்' முடிக்கச் சென்ற ஆசைக் கணவன்
எப்போது வருவான்? எப்படி வருவான்? இந்நிலை எப்போது மாறும்?
கேள்விகளோடு நிமிர்கையில் சுவற்றில் மறுபடி "நம்பிக்கை வை!"

"நம்பிக்கையாய் இருக்கோணும்!" சொன்னது அருகிருந்த பெரியவர்
கொழும்பு கலவரத்தில் தாயிழந்து, தந்தையிழந்து
ராணுவத்தால் கற்பிழந்து, சுனாமியால் வீடிழந்து பொருளிழந்து
தற்காலிக இருப்பு என்னும் தகரத் தட்டிகளுக்கிடையே கதைக்கயில்
விசனப் பட, பெரியவர் சொன்னார் "நம்பிக்கையாய் இருக்கோணும்!"

1 கருத்து:

வெங்கி / Venki சொன்னது…

Dear Ranga,
Thanks for visiting my blog and for leaving your comment there. I am happy that you liked my poem. Its boon for me to know people like you who are great fans of my father.
Thanks once again.
Regards
Venkat Kannadasan