செவ்வாய், ஜூலை 05, 2005

தொலைந்து போன தமிழ் நயம்

இப்பொதெல்லாம் திரைப்படங்களில், தொலைக்காட்சியில் (இன்னும் வானொலியில் அவ்வளவாக இந்த பாதிப்பு இல்லை), தமிழில் பேசுபவர்கள் வார்த்தைகளை உப்யோகிக்கும் முறை அவ்வளவு நன்றாக இல்லை. அந்நிய மொழிக் கலப்பு, உச்சரிப்பு மோசம் என்பது போக, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், தரக்குறைவான வார்த்தைப் பிரயோகம் என்பது மிகச் சாதாரணமாகி விட்டது. இதில் முக்கியமாக ஒரு சராசரி அரசியல்வாதியின் பேச்சை கட்சி ஈடுபாடு இல்லது வார்த்தை உபயோகத்தை மட்டும் கணித்தால் மனம் மிகவும் வருத்தப்படும்!

ஒரு மொழியின் வளர்ச்சி, அந்த மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. தற்போதைய சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் பெரும்பாலான வார்த்தைகள் ஒன்று மனதைப் புண்படுத்தும் வகையில் அநாகரீகமாகவோ, அல்லது அசிங்கமாகவோ இருப்பது ஒவ்வொரு தமிழனும் வருந்த வேண்டிய விஷயம்.

நான் பள்ளியில் படிக்கும் போது தமிழ் ஆசிரியர் திரு. வெங்கடராமன் ஒரு பழம் தமிழ் செய்யுளை உதாரணம் காட்டியது நினைவிற்கு வருகிறது. ஒருவரை அவலட்சணம், எருமை, கழுதை என்றெல்லாம் திட்டுவதற்கு பதிலாக அந்தச் செய்யுளின் முதல் வரிகள் இதோ:
"எட்டேகால் லட்சணமே
எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே..."

தமிழில் எண்களை எழுதும் போது 8க்கு 'அ'வையும், 1/4க்கு 'வ'வையும் உபயோகிப்பதைக் கொண்டு "எட்டேகால் லட்சணமே" என்றும் (அதாவது அவலட்சணம்), எமன் எறும் பரி (குதிரை - அதாவது எருமை) என்றும், மூதேவி (லக்ஷ்மியின் அக்கா என்ற முறைப்படி - பெரியம்மை) வாகனமான கழுதை என்றும் அழைப்பதாக இந்தச் செய்யுளுக்கு விளக்கம் கொடுத்தார்! திட்டுவதற்கு கூட நயமான வார்த்தைகளை உபயோகித்தனர் அக்காலத்தில்.

போன நூற்றாண்டிலே கூட பாரதியார் தன் சக மாணவன் கிண்டலாக "பாரதி சின்னப் பயல்" என்று முடிக்குமாறு வெண்பா எழுதச் சொல்ல, அவர் "கார் மேகம் போலிருண்ட காஞ்சிமதி நாதனைப் பாரதி சின்னப் பயல்" என்று முடியுமாறு எழுதினார்! (பார் அதி சின்னப் பயல் எனப் பிரித்து பொருள் கொள்ள வேண்டும்).

இப்படியெல்லம் சிலேடையும், நயமுமாய் இருந்த தமிழ்ப் பிரயோகம், இப்பொது தாழ்ந்து போனதற்கு யார் காரணம்? அரசியலா? திரைப்படமா? அல்லது நாமா? எனக்கென்னமோ இதன் முக்கிய காரணம் மக்களாகிய நாம் தான் எனத் தோன்றுகிறது.

என்னால் முடிந்தது தரக்குறைவான வார்த்தைகளை உபயோகிப்பதில்லை என்றும், அப்படி உபயோகிப்பவரை முடிந்தால் திருத்தவும், இல்லாவிடில் கண்டு கொள்வதில்லை என்றும் உறுதி!

கருத்துகள் இல்லை: