வெள்ளி, நவம்பர் 24, 2006

தேநீர் – 9

பொட்டலம் எடையில் விற்றாலும், பெரும்பான்மையான பொட்டல இயந்திரங்களில் டீ கொள்ளளவைக் கொண்டு நிரப்பப்படும். தரத்தை (முக்கியமாக சரியான எடை இருக்கிறதா என்று பார்க்க) கண்காணிக்க கட்டப்பட்ட பொட்டலங்களை மாதிரிக்கு எடுத்து (ஒரு மணிக்கு ஐந்து என்பது போல) எடை பார்த்து குறிப்பெடுப்பார்கள். இந்த மாதிரி வேலையை நானும் செய்திருக்கிறேன்! ஒரு தொழிற்சாலை முழுதும் நடந்து வந்து, ஒவ்வொரு இயந்திரமாய்ப் போய் மாதிரி எடை பார்ப்பது - அதுவும் ஒரு 8 மணி நேர ஷிப்டில் செய்வது என்றால் வெறுத்து விடும் (எனக்கு அப்போது 23 வயது). எடையைத் தவிர, பொட்டலம் பிய்ந்து போகாமல் சரியாக இருக்கிறதா, பசை வழிந்து பொட்டலத்தை நாசமாக்காமல் இருக்கிறதா, மற்றும் பொட்டலம் செய்த தேதி/மாதம்/வருடம் ஒழுங்காகப் பதிவாயிருக்கிறதா என்றும் சோதிக்க வேண்டும். இயந்திரத்தை இயக்குபவர்கள் என்னை திருவிளையாடல் தருமி நக்கீரரைப் பார்ப்பது போல வேறு பார்ப்பார்கள்; 'வந்துவிட்டான் குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் பிரகஸ்பதி' என்று கண்ணாலேயே சொல்வார்கள்.

இந்த மாதிரி சரியாக கட்டப்பட்ட பொட்டலங்களை ஒரு அட்டை டப்பாவில் (CARTON என்று சொல்வார்கள்) போட்டு, ஒரு காகித டேப்பால் ஒட்டி அருகிலுள்ள கன்வேயர் பெல்ட்டில் போட்டு அனுப்பி விடுவார்கள். ஒரு ஷிப்டுக்கு இவ்வளவு பொட்டலம் போட்டால் இத்தனை பணம்; அதற்கு மேல் போனால் இவ்வளவு அதிகப் பணம் என்றெல்லாம் ஊதிய நிர்ணயம் உண்டு. இந்த ஊதிய கணக்கு விஷயம் அவ்வளவு நேரானதல்ல. யூனியன் ஒப்பந்தத்தைப் புரிந்து கொள்ளவே ஒரு அசாத்திய திறமை வேண்டும். சில வகைகளுக்கு மூன்று ஷிப்டையும் சேர்த்து ஊதியம் நிர்ணயிப்பார்கள். சில இயந்திரங்களில் முதல் இரண்டு ஷிப்டுகளிலேயே மொத்த பொட்டலமும் கட்டப்பட்டு, மூன்றாவது ஷிப்டில் வருபவர்கள் சீட்டாடுவதை நான் பார்த்திருக்கிறேன். இப்போது எப்படி என்று தெரியாது!

இந்த தர நிர்ணயம் செய்பவரின் மதிப்பீடு ஊதிய நிர்ணயத்திற்கும் எடுத்துக் கொள்வதால், இயந்திரத்தை இயக்குபவர்களுக்கு இவர்களைக் கண்டாலே பிடிக்காது. அனேகமாக அத்தனை இயந்திர இயக்குனர்களும் பெங்காலியைத் தவிர வேறு எதுவும் பேச மாட்டார்கள். சொல்ப பேர் ஹிந்தி பேசுவார்கள். எனக்கு வங்காள மொழி தெரியாது; ஹிந்தி அரை குறை.

தமிழ்நாட்டில் பள்ளியில் படிக்கும் போது ஹிந்தி பிரசார் சபா மூலமாக தேர்வு எழுதியது தான். படத்தைப் பார்த்து 'மேஜ் பர் க்யா ஹை? மேஜ் பர் தவாத் ஹை' என்று சொல்லத் தெரியும்; பேசியதில்லை. கொஞ்சம் முயற்சி செய்தால் தட்டுத் தடுமாறி தப்பும் தவறுமாய் ‘ஆம் கே பேடு பர் கும்ஹடே’ கதையை சொல்லத் தெரியும் (ஒரு வழிப்போக்கன், மாமரத்தடில் படுத்துக் கொண்டு ‘இத்தனை பெரிய மாமரத்தில் சிறு மாங்காயைக் காய்க்க வைத்துவிட்டு, கீழே இருக்கும் சிறு கொடியில் பெரிய பூசணிக்காயை வைத்தானே இறைவன்’ என்று கேலி செய்வான். ஒரு மாங்காய் அவன் தலையில் விழும். ‘இறைவன் எதையும் தெரிந்து தான் செய்திருக்கிறான்; பூசணிக்காய் விழுந்தால் என் தலை என்னவாயிருக்கும்?’ என்று யோசித்து அவன் ஞானம் பெறுவான்). வானொலியில் கிரிக்கெட் வர்ணனையில் 'அக்லி கேந், டப்பா கானே கே பாத்', பின்பு தொலைக்காட்சியில் ராமாயணம் காண்பிக்கையில் அதில் வரும் 'பரந்து, கிந்து, விராஜியே' - இதெல்லாம் தெரியும்.

இதையெல்லாம் வைத்துக் கொண்டு பார்வையாலேயே திட்டும் இவர்களிடம் - அதுவும் மூன்றாவது ஷிப்டில், நடு ராத்திரியில் - என்ன பேசுவது? இந்த இரண்டு வார தர நிர்ணயப் பணி முடிந்ததும் 'அப்பாடா - விடுதலை' என்று இருந்தது.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 8
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

2 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

ரங்கா,

சிரிப்புத் தேனீர் நல்லா இருக்கு.:-)0
மறுபடி மஹாபாரதம்,ராமாயணம் ப்பாக்கிற ஃபீலிங்.
முன்னாலே இருக்கிற பதிவுகளையும் பார்த்துவிட்டு
வருகிறேன்.

ரங்கா - Ranga சொன்னது…

அவசியம் மற்ற பதிவுகளையும் படித்து சொல்லுங்க :-)

ரங்கா.