திங்கள், நவம்பர் 27, 2006

தேநீர் – 10

பொட்டலம் போடுவதிலேயே இவ்வளவு விஷயம் இருக்கிறதே என்று நினைத்தீர்களானால், பொட்டலம்போடுவதற்கான திட்டம் தீட்டுவது இதை விட சிக்கலானது. முதலில் இருப்பையும் (STOCK), எதிர்பார்ப்பையும் (DEMAND) சேர்க்க வேன்டும். இது திருவிளையாடல் தருமி கேட்டு (சேராதிருப்பது?) இறைவன் சொல்லும் பதிலைப் (அறிவும் பணமும்) போன்றது – இரண்டும் சேராது!

தொழிற்சாலையில் டீத்தூள்களை மூன்று வித நிலைகளில் வகைப் படுத்துவார்கள். முதலாவது கொள்முதல் செய்த டீ (UNBLENDED); இரண்டாவது கலவை (BLENDED); மூன்றாவது பொட்டலம் (PACKED). உற்பத்தி சங்கிலியில் (PROCESS CHAIN) நான்கு பிரிவுகள் – கொள்முதல் பிரிவு (PURCHASE), கலவை (BLENDING), பொட்டலம் (PACKING), அனுப்பும் பிரிவு (DISPATCH OR LOGISTICS).

 கொள்முதல் டீ இருப்புக்கு, கொள்முதல் பிரிவே பொறுப்பு.
 கலவைப் பிரிவின் கடமை, கலவையின் இருப்பு நிலைமை.
 பொட்டலங்களின் இருப்பு நிலையே, ப்ளோர் சூப்பர்வைசரின் தலையே.

(“அப்பா என்ன ஒரு சந்தம்! எங்கேயோ போயிட்டடா ரங்கா!!” என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது)

எல்லோரையும் திருப்திப் படுத்த யாராலும் முடியாது. ஒவ்வொரு பிரிவுக்கும் இலக்குகள் உண்டு – தங்கள் பிரிவின் செலவைக் குறைப்பது இதில் முக்கியமானது. உதாரணமாக பொட்டலங்களை அனுப்பும் பிரிவில் (LOGISTICS) அவர்கள் எத்தனை வேகமாக அனுப்புகிறார்கள் என்பது ஒரு முக்கியமான இலக்கு. ஒரு ‘தேவையை’ (DEMAND) பூர்த்தி செய்ய அவர்களுக்கு ‘தேவைச் சீட்டில்’ (DEMAND SHEET) இருக்கும் அத்தனை விதமான பொட்டலங்களும், தயாராக இருந்தால் தான் சீக்கிரம் அனுப்ப முடியும். இந்த தேவை சீட்டில் எந்த விதமான பொட்டலங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு ஆலையில் ஐம்பதுக்கும் மேலான பொட்டல வகைகள் உண்டு. அனைத்துமே தயாராக இருப்பில் இருக்காது.

ஒரு பேச்சுக்காக பொட்டலப் பிரிவு (ப்ளோர் சூப்பர்வைசர் - அவர்தானே பொட்டல இருப்புக்கு பொறுப்பு!) இதற்கு ஒத்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதை செயலாக்குவதற்கு, அவருக்கு கலவைப் பிரிவின் தயவு தேவை. பொட்டலங்கள் தயாராவதற்கு ஒரு நாள் முன்பாக அவருக்கு அந்தக் கலவை வேண்டும் (பொட்டலம் போடுவதற்கு நேரம் வேண்டுமே). இதற்கு கலவைப் பிரிவு ஒத்துக்கொள்ள வேண்டுமானால் அவர்களுக்கு கொள்முதல் டீத்தூள் இன்னமும் முன்னதாக வேண்டும். அதற்கு வாங்கும் பிரிவு ஒத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஏலம் தினமும் நடக்காது – வாரத்துக்கு ஒரு முறை (அல்லது இரண்டு முறை). ஏலத்தில் இன்று எடுத்தாலும், டீத் தூள் ஆலைக்கு வருவதற்கு நேரம் ஆகும். இது தவிர ஒவ்வொரு பிரிவிலும் உள்ள சரக்கின் விலையின் பொறுப்பு அந்தந்தப் பிரிவின் இலக்கை பாதிக்கும் – இலக்கைத் தாண்டி அதிகமாக இருப்பு வைத்துக் கொள்ளக் கூடாது. எப்படி இத்தனை பிரிவுகளையும் ஒருங்கிணைத்து செல்வது? மொத்தத்தில் ஒரு குழாயடி நிலைமை – அதே போல சண்டைகளும் உண்டு. ஓரே வித்தியாசம்: அனைவரும் கொஞ்சம் பதவிசாக, நாசூக்காக திட்டுவார்கள்.

ஒவ்வொரு பிரிவிலும், அந்தப் பிரிவின் மூலப் பொருள் இருப்பு நிலை, பிரிவின் உற்பத்தி நேரம், அந்தப் பிரிவின் இறுதிப் பொருளின் இருப்பு நிலை மதிப்பீடு, எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொண்டு, அந்த அந்தப் பிரிவின் வேலையை திட்டமாகத் தீட்டுவது ஒரு நிரந்தர புலி-ஆடு-புல்லுக்கட்டு விளையாட்டுதான். ஆலையின் மேலாண்மையில் இருப்பவருக்கு வரும் தலைவலி பற்றி சொல்லவே வேண்டாம். இந்தப் பிரிவுகளில் இந்த மாதிரி திட்டம் தீட்டுபவர்களைப் பார்த்தால் ஒரு தனி விதமான மதிப்பு. எப்படித்தான் பைத்தியம் பிடிக்காமல், இரத்த அழுத்தம், மாரடைப்பு என்றெல்லாம் வராமல் இத்தனை காலம் இந்த வேலையை செய்கிறார்கள் என்று எனக்கு மிகுந்த வியப்பு கலந்த மதிப்பு. எந்த போதி மரத்துக்கும் போகாமல் அந்த சிறு வயதில் (இப்போது நான் பெரிசு ; அப்போது நான் சிறுசுதானே) எனக்கு வந்த ஞானம்: “வாழ்க்கையில் பிரச்சனைகளுக்காக கவலைப்பட்டு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் இழப்பு நிச்சயம்” என்பதுதான்.

முந்தைய பதிவுகள்
தேநீர் – 9
தேநீர் – 8
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1

2 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

சிறுவயதில் அடிபட்டால் தன்னால் வரும் "ஞானம்" பலருக்கு!!

ரங்கா - Ranga சொன்னது…

ஆமாங்க குமார்.

கண்ணதாசன் சொன்னது போல:
"அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீயேனெனக் கேட்டேன்
ஆண்டவன் சற்று அருகு நெருங்கி
அனுபவமே நான்தான் என்றான்".

ரங்கா.