திங்கள், ஜூலை 25, 2005

அது அந்தக் காலம் - இது இந்தக் காலம்!

சிறு வயதில் கேட்ட ஒரு திரைப்படப் பாடல் - அது அந்தக் காலம்; இது இந்தக் காலம். திரு. N. S. கிருஷ்ணன் பாடியது என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்னால் மன்னார்குடியில் படிக்கும் போது இருந்த வாழ்க்கைக்கும், தற்போதைய அமெரிக்க வாழ்க்கைக்கும் இடையே நிறைய மாறுதலைக் காணுகிறேன். அதன் விளைவே இந்தக் கவிதை!

அது அந்தக் காலம் - இது இந்தக் காலம்!

ரேஷன் கடையில் காத்து நின்று
சண்டை பிடித்து சாமான் வாங்கியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

'ஒன்று வாங்கினால் இரண்டாவது இலவசம்'
கூவினாலும் வாங்காமல் ஒதுங்குவது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

நடமாடும் நூலகம் ‘பழயது ஒன்று
புதியது ஒன்று’ வாங்கிப் படித்தது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

வலைத் தளத்திலிருந்து இறக்கி
வெளியில் போகையில் கேட்டுமுடிப்பது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

மின்வெட்டினாலே வாடகை சைக்கிளெடுத்து
ஒலிச்சித்திரம் கேட்கத்தெருக்கள் தாண்டியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

வசதிக்காக விரும்பும்போது கேட்டுமகிழ
சிடியை இரண்டு மூன்று காப்பி எடுப்பது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

தொலைக்காட்சியில் இரண்டாவது சேனல்
வந்ததனாலே சந்தோஷத்தில் துள்ளியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

இருநூறு சேனல் இருந்தபோதும்
சேனலை மாற்றி அலுத்துக் கொள்வது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

குச்சி ஐசுக்கு ஆலாய்ப் பறந்து
கைநிறைய வாங்கி நக்கித் தின்றது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

ப்ரீஸருக்குள்ளே ஐந்துவகை இருந்தும்
யோசித்துப் பார்த்துத் திரும்ப வைப்பது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

சிலபஸ் மாறி புதுப்புத்தகம் கிடைக்காமல்
பழைய புத்தகத்தைத் திருத்திப் படித்தது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

எதற்கும் இருக்கட்டும் வீட்டுக்கு ஒன்று
பள்ளிக்கு ஒன்றென்று இரண்டாய் வாங்குவது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

வாத்தியார் அடித்தாரென்று வீட்டில் சொல்ல,
போதாதென்று வீட்டிலும் அடி வாங்கியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

சத்தமாய் மிரட்டினாலே ‘போலீஸில்
புகார் செய்வேன்’ என பதிலுக்கு மிரட்டுவது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

திருவிழா இரவில் நண்பர்களோடு
ஓசி சினிமா பார்க்க ஓடிப் போனது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

வீட்டிலேயே திரையரங்குபோலிருந்தும்
சேர்ந்து பார்க்க நண்பர்கள் இல்லாதது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

வேலையில் சேர்ந்து மேசையோடு தேய்ந்து
நாற்பது வருடத்தில் ரிடையரானது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

பணியில் கூட வேலைபார்ப்பவர் யாரென
தெரியும்முன்பே உத்தியோகம் மாறுவது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

வானொலி வர்ணனை கேட்டு நன்றாக
விளையாடிய வீரரைக் கொண்டாடிப் பேசியது
அந்தக் காலம் அது அந்தக் காலம்

போட்டிக்கு எத்தனை பணம்வாங்கித்
தோற்றிருப்பார் என்று ஆராய்ச்சிசெய்வது
இந்தக் காலம் இது இந்தக் காலம்

4 கருத்துகள்:

பத்மா அர்விந்த் சொன்னது…

Did you go to National High School Mannargudi?

Maya சொன்னது…

ரங்கா
ரசிக்கும் படியாக எழுதியிருக்கிறீர்கள்..படித்து முடிந்ததும் பெரு மூச்சுடன் கலந்த மெல்லிய சோகத்தை உணர முடிகிறது...
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

ரங்கா - Ranga சொன்னது…

பதிவுக்கு நன்றி திரு. கிருஷ்ணன்.

குமரன் (Kumaran) சொன்னது…

பாட்டு நல்லா இருக்கு ரங்கா. :-)