ஞாயிறு, மே 31, 2009

இரயில் - 4

இரயில் - 4

ஒரு விஷயத்தை உணர்ந்து அனுபவிக்க, அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு இருந்தால் உதவியாக இருக்கும். அதே சமயத்தில் அந்த அறிவு, அல்லது ஞானம் கொஞ்சம் அதிகமாக இருந்துவிட்டால் சமயத்தில் அந்த ஞானமே அனுபவ முழுமைக்குத் தடையாக இருந்துவிடுகிறது.

சிறு வயதில் ரயில் செல்லும் ஓசையை நான் அனுபவித்து ரசித்திருக்கிறேன். பார்க்காமலேயே வண்டி கொரட்டூர் பக்கத்திலிருந்து பெரம்பூர் செல்கிறதா, அல்லது பெரம்பூர் பக்கத்தில்ருந்து கொரட்டூர் செல்கிறதா என்று சொல்வது கொஞ்சம் சுலபம். திசை மட்டுமில்லாமல், இது கூட்ஸ் (சரக்கு ரயில்); இது பாசஞ்சர்; இது எக்ஸ்ப்ரஸ்; இது பெரிய கூட்ஸ் பெட்டி; இது சிறியது என்றெல்லாம் சொல்லி தம்பியையும், அக்கம் பக்கத்து சிறுவர்களையும் போட்டி விளையாட்டுக்கு அழைத்திருகிறேன். அனேகமாக நான் தான் வெல்வேன்; அதனால் யாரும் அதிகமாக இந்த விளையாட்டுக்கு வர மாட்டார்கள்.

அப்போது யாராவது என்னை 'எப்படி உன்னால் பார்க்காமலே சரியாகச் சொல்ல முடிகிறது' என்று கேட்டிருந்தால், எனக்கு பதில் சொல்லத் தெரிந்திருக்காது. பின்னால், மன்னார்குடியில் படிக்கையில், டாப்ளர் விதி பற்றி திரு சேதுராமன் சொல்லிக் கொடுக்கையில் - இந்த வில்லிவாக்க விளையாட்டு நினைப்புக்கு வந்து 'அட இதானா அது' என்று புரிந்தது. தண்டவாள துண்டுகளுக்கு இணைப்பு கொடுக்கையில் விடும் இடைவெளியில் (வெப்பத்தில் இரும்பு விரியும் போது ரயில் தடம் புரளாமல் இருக்க), சக்கரம் செல்லும் போது வரும் ஓசை ஒருவிதமான தாளம். ரயில் பெட்டிகளின் சக்கர அமைப்பு - இரண்டு இரண்டாக இருக்கும் சக்கரங்களுக்கு இடைப்பட்ட தூரம் எப்போதும் ஒரே அளவில் இருக்கும். முதல் பெட்டியின் கடைசி சக்கரத்திற்கும், இரண்டாம் பெட்டியின் முதல் சக்கரத்திற்கும் இடைய உள்ள இடைவெளி ஒரே சீராக இருக்கும். இதனால் ரயில் செல்லும் போது சீரான தாள கதியில் ஓசை வருகிறது. 'தடக்-தடக்' என்னும் இந்த சுருதி, தம்புராவில் இரண்டு மீட்டுதல்களை ஒத்திருக்கும்.

பெரிய சரக்குப் பெட்டியில் முன்-பின் சக்கர தூரம், சிறிய சரக்குப் பெட்டியிலிருப்பதை விட அதிகம் - அதனால் இந்த தாள அமைப்பு சற்று மாறும். முதல் 'தடக்-தடக்'க்கும் இரண்டாம் ‘தடக்-தடக்'கிற்கும் அதிக இடைவெளி இருந்தால் அது பெரிய பெட்டி; இல்லையென்றால் சிறிய பெட்டி. திறந்த பெட்டியில் காற்று புகுந்து செல்லும் விதமும், மூடிய சரக்குப் பெட்டியைத் தாண்டி வரும் விதமும் பயணிகள் ரயிலுக்கும், சரக்கு ரயிலுக்கும் ஓசை வித்தியாசம் ஏற்படுத்தும்.

இந்த மாதிரி சீரான தாள ஓசைகளை கேட்க வேண்டும் என்று ஒரு வெறி; அளவு கடந்த ஆர்வம். வீட்டின் பின்புறம் குடித்தனம் இருந்தவர்கள் தயிர் கடைய ஒரு தூணில் கயற்றை வளையமாகக் கட்டி, அதில் மத்தை வைத்து, மத்தை மற்றொரு கயற்றால் சுழற்றி தயிரை கடைவார்கள். தச்சர்கள் மரத்தில் துளை போட இதே போன்று கயற்றால் சுழற்றி இயக்குவதைப் பார்த்திருக்கிறேன். இவை அனைத்திலுமே ஒரு சீரான தாள அமைப்பைக் கேட்கலாம். எங்கள் வீட்டில் மத்தை அம்மா கையால் சுழற்றுவார்கள். அதில் ஓசை சீராக வரவில்லை என்றால், அம்மாவை 'நீ சரியாக சுற்றவில்லை' என்றெல்லாம் சொல்லி வெறுப்பேத்தியிருக்கிறேன்.

நல்ல வேளை என் அம்மா கொஞ்சம் அதிகமாகவே பொறுமை சாலியாக இருந்ததால், இந்த ஆர்வம் எந்த விடத்திலும் தடங்கலில்லாமல் அதிகமான அனுபவத்தைப் பெற முடிந்தது. இந்தக் காலத்தில் இருக்கும் 'அறிவும்' 'ஞானமும்' இருந்திருந்தால், எனக்கு 'OCD – Obsessive Compulsive Disorder' இல்லை ‘ADD – Attention Deficit Disorder’ என்றெல்லாம் சொல்லி 'தெரபி' கொடுத்திருப்பார்கள். இப்படியெல்லாம் செய்யாமல், பொறுமையுடன் என்னை வளர்த்த அம்மாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.


திரு சேதுராமன் அறிவியல் வகுப்பில், டாப்ளர் விதியையும், அதன் சமன்பாடுகளையும் ரொம்பவும் விபரமாக பாடம் நடத்திய போது, அதை நன்றாகப் புரிந்து கொள்ள உதவியது இந்த சிறுவயது 'உணர்தல்' தான். அந்த அனுபவம் இல்லாமல் இந்த விதியை நான் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்க முடியாது. அறிவியலால் புரிந்தது பத்து வருடங்களுக்குப் பின்னால்; ஆனால் சிறுவயதில் இந்த வித்தியாசத்தை உண்ர்ந்ததோடு அல்லாமல் அதை அடையாளமும் கண்டு கொண்டதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் வேலை விஷயமாக வில்மிங்டன் செல்ல 'Acela’ எக்ஸ்ப்ரசில் போகையில், பெட்டியின் வாசலில் கண்ணை மூடிக் கொண்டு நின்று கொண்டு இந்த தாளத்தை ரசிக்கையில், அம்மாவின் மத்தும், டாப்ளர் விதியின் சமன்பாடும், வில்லிவாக்க ரயில் நிலையமும் தான் நினைப்புக்கு வந்தது. அனுபவத்தையும், அறிவியலையும் முழுமையாக உணர வைத்தை அம்மாவிற்கும், ஆசிரியருக்கும் நன்றி.

முந்தைய பதிவுகள்
இரயில் - 1
இரயில் - 2
இரயில் - 3

2 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

அருமையா விளக்கியிருக்கீங்க. எந்த திக்கிலிருந்து வண்டி வருகிறது என்று எப்படி சொன்னீர்கள்? ஓசை வந்த திக்கிலிருந்தா?

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி குமரன். திசை மட்டும் அல்ல. வண்டி ரயில் நிலையத்தை நோக்கி வரும் போது இருக்கும் வேகமும், நிலையத்தை விட்டு விலகும் போது இருக்கும் வேகமும் வேறு; அதனால் வரும் தாள கதியும் வேறு. இது இசைக் கவை தத்துவத்தையும் ஒட்டியது; அடுத்த பதிவில் விளக்கமாய் எழுதுகிறேன்.