ஞாயிறு, டிசம்பர் 31, 2006

ஒரு இரயில் பயணத்தில் - 3

“அப்படி இப்படின்னு 2006 முடிஞ்சு போச்சு. இந்த வருஷத்திலதான் எத்தனை மாற்றம். வருஷ ஆரம்பத்துல டெஸ்ட்ல ஹாட்ரிக் எடுத்த பதான் வருஷ முடிவுல டெஸ்ட் டீம்லேயே காணோம். சென்னையில, பங்களூரில வருஷ ஆரம்பத்தில ஆட்சி செஞ்சவங்க இப்ப இல்ல. நாம கூட வருஷ ஆரம்பத்துல அமெரிக்கா வருவோம்ன்னு நினைக்கல. இப்ப என்னடான்னா குளிர்ல நியூயார்க்ல எக்கச்சக்கத்துக்கு துணி போத்திக்கிட்டு வேலைக்கு ஓடறோம். ”

“நிறைய விஷயம் மாறவே இல்லையே. பதான் இருந்த அந்த டெஸ்ட்லயும் தோல்வி; இல்லாத வருஷக் கடைசி டெஸ்ட்லயும் தோல்வி. வருஷ ஆரம்பத்துல கர்நாடகாவோடதான் தண்ணிச் சண்டை; இப்போ கேரளாவோட கூட. எனக்கு வருஷ ஆரம்பத்துல இருந்த கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை"

“அப்படி என்ன சந்தேகம் உனக்கு?”

“குழந்தை பிறந்ததும் பெற்றவங்களை அம்மான்னு கூப்பிடறோம். இதே முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வகையில், முட்டை இட்டவுடன் அம்மாவாகுமா இல்லை முட்டை பொரிஞ்சு குஞ்சு வந்தவுடன் அம்மாவாகுமா? அதே மாதிரி முதலில் இட்ட முட்டையிலிருந்து வருவது அண்ணா/அக்காவா இல்லை முதலில் பொரியும் முட்டையில் இருப்பது அண்ணா/அக்காவாகுமா?”

“மூளையை எதுக்குத்தான் செலவழிக்கறதுன்னு உனக்கு புரிய மாட்டேங்குது. இப்போ இது ரொம்ப முக்கியமா? ஒரு வருஷமா இந்தக் கேள்வியத்தான் யோசிச்சியா?”

“தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லு; அதை விட்டுட்டு ஏன் கேள்வி கேட்கிறேன்னு விதண்டாவாதம் பண்ணாதே”

“தெரியலைப்பா; ஆளை விடு. எனக்கு வர சந்தேகம், கேள்வியெல்லாம் இல்லாத ஒண்ணைப் பத்தி யோசிக்கிற விதம் இல்லை. இருக்கிற விஷயங்களிலே வர கேள்விக்கே உனக்கு பதில் தெரிய மாட்டேங்குது. இந்த அழகுல - முட்டை வந்தா அம்மாவா? முட்டை பொரிஞ்சா அம்மாவா? - இப்படி ஒரு கேள்வி”

“நீ அப்படி என்ன கேள்வி கேட்டே எனக்கு பதில் சொல்ல வராத மாதிரி?”

“பாட்டுல ராகம் எப்படி கண்டு பிடிக்கறதுன்னு கேட்டேன்ல? நீ என்ன சொன்ன?”

“உனக்கு பாடிக் காமிச்சு, என் MP3 ப்ளேயரும் கொடுத்து கேட்கச் சொன்னேனே? இன்னுமா விளங்கல?”

"இப்படித்தான் நீ சொல்லிட்டுப் போயிடுவே. உன்னை நம்பி, உன் MP3 ப்ளேயர்ல ஒரே ராகத்துல இருக்கற பாட்டா செலக்ட் பண்ணி கேட்டேன். எல்லாப் பாட்டும் வித்தியாசமாத்தான் இருக்கு - ரெண்டு பாட்டு கூட ஒரே மாதிரி தெரியலே"

"என்ன ராகத்துல கேட்டே?"

"ராகமாலிகா. உங்கிட்ட இருக்கிறதுல அதிகமான பாட்டு அந்த ராகத்துல தான் இருக்கு. ராகமாலிகா ராகம் ரொம்ப பாப்புலரா?”

"தெரியலேன்னா கேட்டுத் தெரிஞ்சுக்கணும். இப்படி லூசாட்டம் ஏதாவது சொல்லக்கூடாது. ராகமாலிகா ராகம் இல்ல. அது நம்ப ஊர்ல சொல்ற கதம்ப மாலை மாதிரி. கதம்பம்ன்னு பூ கிடையாது. நிறைய பூக்களை கலந்து மாலையா கட்டினா கதம்பம். அதே மாதிரி நிறைய ராகங்களை உபயோகிச்சு ஒரு பாட்டு பாடினா அது ராகமாலிகா"

"ஓகோ - காலைல குடிக்கிற பஞ்ச் மாதிரியா? பஞ்ச்ன்னு ஒரு பழம் கிடையாது - ஆனா பஞ்ச்க்குள்ள நிறைய பழரசம் – சரிதானே?"

"உனக்கு சாப்பாட்டு உதாரணம் தான் கொடுக்கணும். சரி பஞ்ச் இல்ல கதம்ப சாதம் மாதிரின்னு வச்சுக்கோயேன். பாட்டுல இருக்கிற வெவ்வேறு பகுதியை வெவ்வேறு ராகத்துல பாடினா அது ராகமாலிகா."

"ஆமா - 'ராகம்: ராகமாலிகா' அப்படின்னு போட்டா வேற என்னன்னு நினைச்சுக்கிறது. பேசாமா ‘கதம்பம்’ன்னு போடலாம்ல? இதெல்லாங்கூட என்னை மாதிரி ஒரு அறிவுஜீவி வந்து தான் சொல்ல வேண்டியிருக்கு. நீ என்னடான்னா, முதலில் வந்த முட்டை அண்ணாவா, இல்லை முதலில் பொரிஞ்ச முட்டை அண்ணாவான்னு கேள்வி கேக்கற!"

“யோசிச்சுப் பாரு மனுஷங்க மட்டும் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வகையா இருந்திருந்தா எத்தனை குழப்பம், கேசு வந்திருக்கும்?"

“ஏன் இந்தக் கேள்வியோடு நிறுத்திட்டே? மனுஷனுக்கு கொம்பு முளைச்சா எப்படி இருக்கும்? அப்படின்னு ஆராய்ச்சி பண்ண வேண்டியதுதானே?”

“அதைப் பத்தியும் யோசிச்சிருக்கேனே. கொம்பை வளர்க்கலாமா இல்லையா என்பதில ஒவ்வொரு மதமும் ஒவ்வோண்ணு சொல்லும் - சில பேர் கொம்பு சாத்தானோட வடிவம்ன்னு சொல்லி வெட்டிப்பாங்க, சிலர் அது ‘கடவுள் தந்தது; வெட்டக்கூடாது’ அப்படின்னு சொல்லி வளர்ப்பாங்க. ஒரு மதம் கொம்பை மூடணும்ன்னு சொல்லும், இன்னொரு மதம் கடவுள் தந்ததை மூடக்கூடாதுன்னு சொல்லும். மதச் சண்டைகள் வருவதற்கு இன்னுமொரு காரணம் கிடைக்கும்.

சிலர் கொம்புக்கு நெயில் பாலிஷ் மாதிரி கொம்பு பாலிஷ் போட்டுப்பாங்க. சிலர் கொம்புக்கு தங்கம், வெள்ளில நகை பண்ணிப் போட்டுப்பாங்க. தொப்பி வகையில நிறைய மாற்றம் வரும்; விளையாட்டுகளில், முக்கியமா ரக்பில, ஹெல்மெட் வித்தியாசமா இருக்கும். ஸ்பெயின்ல மாட்டைக் கத்தியால குத்தி கொல்றத்துக்கு பதிலா, கொம்பால முட்டிக் கொல்லும் விளையாட்டு வரலாம். பேப்பர்ல 'கொம்பால் குத்திக் கொலை'ன்னு தலைப்பு வரும்.”

"எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். உன்னைப் போய் கேள்வி கேட்டேனே! நல்ல வேளை ஸ்டேஷன் வந்தாச்சு. இறங்கலாம் வா."

6 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

ரங்கா, தான்க்யூ.
2006த்தை சிரிப்புடன் அனுப்ப இது போதும்.;-)

சேதுக்கரசி சொன்னது…

நல்லா இருந்தது :-)

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி வல்லியம்மா ;-)

ரங்கா

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி சேதுக்கரசி ;-)

ரங்கா

தருமி சொன்னது…

ட்ரெயின்ல தனியா உக்காந்து யோசிச்சிக்கிட்டே, மடிக் கணினியில் இதுமாதிரி கற்பனை உரையாடலை எழுதுவாங்களோ...? :)

Unknown சொன்னது…

அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி