புதன், ஜூன் 15, 2005

நாகரீகமும் கலாச்சாரமும்

நாகரீகமும் கலாச்சாரமும்
(Civilization and Culture)

தமிழ் நாட்டில் கலாச்சார முன்னேற்றம் பற்றியும் அதைக் காப்பது பற்றியும் இப்போது நிறைய அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். இதில் தமிழை “வளர்ப்பது”, “காப்பது” என்ற இரண்டும் பேசுவதற்கு மிகவும் பிரபலமான விஷயங்கள். பொதுவாகவே இதைப் பற்றி அறிக்கைகளும், சுய தம்பட்டங்களும் சர்வ சாதாரணமாகி விட்டன. கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழும், அதன் நாகரீகமும், கலாச்சாரமும் தங்களால் தான் வளர்ந்து வருகிறது என்றும், தாங்கள் தான் இவ்விஷயங்களுக்கெல்லாம் பாதுகாவலர்கள் என்றும் காட்டிக் கொள்ளத் தவறுவதே இல்லை! நாகரீகத்தைப் பற்றியும், கலாச்சாரத்தைப் பற்றியும் எப்போதோ படித்த ஒரு ஆங்கிலக் கட்டுரை நினைவிற்கு வந்தது; அதனால் இந்தப் பதிவு.

இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்? நாகரீகத்தின் அடையாளமாக, வாழ்க்கையின் நிலமையை நிர்ணயிக்கும் சாதனங்களை, அமைப்புகளைக் கூறலாம். உதாரணமாக, கணிப்பொறி, தொலைபேசி போன்ற சாதனங்களும், கிராம நிர்வாக அமைப்பு (பஞ்சாயத்து), பொதுத் தேர்தல் முறை போன்ற அமைப்பு முறைகளும் ஒரு நாகரீகத்தின் வளர்ச்சியையும், அடையாளத்தையும் காட்டுகின்றன. இதில் தொழில் நுட்ப வளர்ச்சியும் அடங்கும். ஆனால் பெரும்பாலான மக்களின் மதிப்பில் தொழில் நுட்ப வளர்ச்சி மட்டுமே பெரிதாகத் தெரிகிறது. அதனால் தொழில் நுட்ப வளர்ச்சியை வைத்து நாகரீகத்தை அளக்கிறார்கள் - தவறாக!.

கலாச்சாரம் என்பது தினசரி வாழ்க்கையில், வாழும் விதத்தில், சிந்தனையில் தெரியும் தனிமனித வெளிப்பாடு. சமய, மொழி, இலக்கிய மற்றும் கலை வாயிலாக எப்படி தனி மனித உணர்ச்சிகள், சிந்தனைகள் வெளிப்படுகின்றதோ அதை கலாச்சாரம் எனக் கூறலாம்.

நிறைய விஷயங்களில் நாகரீகமும் கலாச்சாரமும் சேர்ந்தே இருக்கின்றன. ஒரு விஷயம் நாகரீகமா? அல்லது கலாச்சாரமா? என்பதை இக் கேள்வியின் மூலமாக சோதித்துப் பார்க்கலாம். "ஒரு விஷயத்தை அவ்விஷயத்திற்காக மட்டும் விரும்புகிறோமா அல்லது அவ்விஷயத்தின் மூலமாக வேறு ஒன்றை அடைய முயல்கிறோமா" என்று ஆராய்வதன் மூலம் ஒரு தெளிவிற்கு வரலாம். இது 'இலக்கிற்கும்' - 'வழிக்கும்' (End and Means) உள்ள தொடர்பைப் போன்றது. எந்த விஷயங்கள் இலக்குகளாக இருக்கின்றதோ - அதாவது நேரடியாக நம் வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றதோ, அவைகளை கலாச்சாரம் என்றும், எந்த விஷயங்கள் இலக்குகளை அடைய உதவியாக இருக்கின்றதோ அவற்றை நாகரீகம் என்றும் கூறலாம்.

கலாச்சாரம் இலக்கு - நாகரீகம் அதன் வழி!

சரி - எதற்காக இந்த விளக்கம்? முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கும் போது - அது ஒரு நாட்டின் முன்னேற்றமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு தனி மனிதனின் முன்னேற்றமாக இருந்தாலும் சரி - நாம் அனேகமாக நாகரீக வளர்ச்சியை மட்டும் பெரிதாக எண்ணுகிறோம். ஆனால் கலாச்சாரம் தான் உண்மையான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.

இப்போது இருக்கும் வாழ்க்கை முறையை ஐநூறு வருடங்களுக்கு முன்னால் இருந்த வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டால், நாம் நாகரீகத்தில் - அதிலும் முக்கியமாக தொழில் நுட்பத்தில் - முன்னேறியிருக்கிறோம் எனக் கூறலாம். அதே சமயத்தில் நாம் உண்மையாகவே கலாச்சாரத்தில் முன்னேறியிருக்கிறோம் எனக் கூற முடியுமா?

அப்போது மன்னர்கள் ஆண்டு வந்தாலும், நீதி என்பது சாதாரண மக்களுக்கும் எட்டும் உயரத்தில் இருந்தது. கண்ணகியின் கதை உடனே நினைவிற்கு வருகிறது. அதை இன்று காண முடியுமா? வருடக் கணக்கில் செயலாக்கப் படாத கைது வாரண்டோடு இருக்கும் காவல் துறை அதிகாரியைப் பற்றியும், தீர்ப்பாகாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றித்தான் படிக்கிறோம்.

மன்னர்கள் சுக போக வாழ்க்கை வாழ்ந்தாலும், பொறுப்போடு எதிர்காலத்திற்காக நிறைய காரியங்களைச் செய்து விட்டுச் சென்றார்கள் - வரலாற்றுப் பாடத்தில் எத்தனை முறை "சாலை ஓரங்களில் மரம் நட்டதையும், நீருக்கு குளம் வெட்டியதையும்" படித்து இருக்கிறோம்? அக்காலத்தோடு ஒப்பிடும் போது, இன்று கட்சிகள் மரம் வெட்டியது பற்றியும், நீர் கொண்டு வருவதற்கான ஊழல் பற்றியும் தான் அதிகம் படிக்கிறோம்.

அந்தக் காலப் படைப்புகள் அறிவை வளர்ப்பதிலும் சரி, அல்லது மனதைத் தொடும் இலக்கியத்திலும் சரி, சிறந்து விளங்கின. ஒரு திருக்குறள், ஒரு சிலப்பதிகாரம், ஒரு மணிமேகலை, அல்லது பக்தியை வளர்க்கும் பிரபந்தங்கள் - எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்றும் நிலைத்து நிற்கின்றன. ஆசிரியர்களுக்கும், புலவர்களுக்கும்தான் எத்தனை மதிப்பு இருந்தது? அதே சமயத்தில் மன்னர்கள் மற்ற மொழிப் புலவர்களைத் தண்டித்ததாகப் படித்ததில்லை. இன்று தமிழில் ஆங்கிலம் கலக்காமல் எழுதுவது குறைவு. எழுதும் ஒரு சிலர் மறைந்த போது அவர்கள் இறுதி ஊர்வலத்திற்கு ஐம்பது பேர் கூட வருவதில்லை! ஆனால் அரசியல்வாதிகள், வாக்குகளுக்காக, மற்ற மொழிகளைப் பழிப்பது மிகவும் சாதாரணமாகி விட்டது.

தினசரி வாழ்க்கை முறையை மேம்படுத்துவது நாகரீகத்தின் அடையாளம். சக மனிதனுக்குச் சங்கடம் உண்டாக்குவது நாகரீகமல்ல! இன்று அரசியலில் கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில் ஏராளமான மக்களின் தினசரி வாழ்க்கையில் சங்கடங்களை உருவாக்கி வருகிறோம். யோசித்துப் பார்த்தால் ஐநூறு ஆண்டுகளில் நாம் முன்னேறவில்லை எனத் தோன்றுகிறது.

தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் பத்திரிகைகள் நாகரீகம் என்ற பெயரில் தரக்குறைவான வாழ்க்கை விதத்தைப் பிரபலப் படுத்தி வருகின்றன. நாகரீகம் என்ற பெயரில், போலியான வாழ்க்கை விதத்தில், கலாச்சாரத்தை இழந்து வந்து கொண்டிருக்கிறோம். அதேபோல அரசியலின் தயவால் கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில் நாகரீகத்தையும் இழக்க ஆரம்பித்திருக்கிறோம்!

3 கருத்துகள்:

neyvelivichu.blogspot.com சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
neyvelivichu.blogspot.com சொன்னது…

nalla sinthanai.. eththanai per padippargaL..

namakku aatharavaana karuthukkalai sonnaal mattume adu naagarigam.. illayenRaal ???.. lol

vazhga indraya thamizhar naagarigam..

மாயவரத்தான் சொன்னது…

//அரசியலின் தயவால் கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில் நாகரீகத்தையும் இழக்க ஆரம்பித்திருக்கிறோம்!//


ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிருக்கீங்கப்பு!