வியாழன், ஜூன் 02, 2005

விடியலே பூமிக்கு அழகு!

விடியலே பூமிக்கு அழகு!

இந்தத் தலைப்பு என்னதில்லை. நான் திருச்சியில் கல்லூரியில் படிக்கும் போது (1984)எதிர் வீட்டிற்கு இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்தின் வீட்டில் படித்தது. ஒரு பெரிய விஷயத்தை மூன்றே வார்த்தைகளில் அழகாகச் சொல்ல முடியும் என்று நினைத்தும் பார்த்ததில்லை.

இலங்கையில் தங்களுக்கு வந்த பெரும் கஷ்டங்களை மட்டும் நினைத்துக் கொண்டிருக்காமல், ஒரு புன்முறுவலோடு எதிர்காலத்தை நேராய் பார்க்கும் மனப்பாங்கு அந்தக் குடும்பத்தில் - தாய், ஒரு மகன், ஒரு மகள் - எல்லொருக்கும் இருந்தது. அவர்களின் நகைக் கடை அழிந்தாலும், சொத்து சேதம் ஏற்பட்டாலும், தன்னம்பிக்கையோடு வாழ்வைப் பற்றி எழுதிய வாக்கியம். இரண்டு பக்கங்களுக்கு 'ஏன் வாழ வேண்டும்? எப்படி வாழ வேண்டும்?' என்று அந்தக் குடும்பத்து உறவினர் இந்தத் தலைப்பில் தன் எண்ணங்களை இவர்களுக்கு இலங்கையிலிருந்து எழுதியது.

ஒரு புது தினத் தொடக்கம் எப்படி பூமிக்கு அழகூட்டுகிறதோ, எப்படி இருளை நீக்கி ஒளி கொடுக்கிறதோ, அதே போல வாழ்க்கையிலும் புதுத் தொடக்கங்கள் முக்கியம் என்பதை, பொருளிழந்து நாடு விட்டு நாடு பெயர்ந்த அக்குடும்பத்திற்கு மிக அழகாக விளக்கிய கடிதம். அக் கடிதத்தைப் படித்த போது 'பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்' என்ற கவிதை ஞாபகம் வந்தது.

இந்தத் தலைப்பும், கடிதமும் அப்போது புரிந்தாலும், நான் வளர, வளர, அதன் அர்த்தமும், அதன் பாதிப்பும் எனக்குள்ளே இன்னும் வளர்கின்றது. என் மகள் பிறந்த போது, அந்த தொடக்கம் என் வாழ்க்கைகு மேலும் ஒரு அர்த்தம் கற்பித்தது. முழு அர்த்தமும் புரிந்துவிட்டது என நினைத்தேன்; இரண்டாவதாக மகன் வந்த போது இன்னும் கொஞ்ஞம் புரிந்தது! முக்கியமாக உணர்ந்தது புரிதலில் முழுமை என்பதே கிடையாது என்பது தான்!

பள்ளிப் பருவத்தில் படித்த கவிதை ஞாபகம் வந்தது! எழுதியவர் பெயர் மறந்துவிட்டலும் (முதுமை காரணம்?) நன்றியுடன் அந்தக் கவிதை.

"தொடுவானத்தில் என் லட்சியக் கொடி, தொட்டுவிடுவாயா? எனக் கேள்வி
மனிதன் நடப்பது நிஜம், பறப்பது கனவுதான்
என் நினைவுகள் நடக்குமெனில் நான் நிஜத்திலே பறப்பேன்
இல்லையெனில் கவலையில்லை நான் நடந்து கொண்டே இருப்பேன்"

கருத்துகள் இல்லை: