திங்கள், ஜூன் 12, 2006

ஒலி

சிறிது நாட்களுக்கு முன் ஒளி பற்றி 'வண்ணங்கள்' என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டேன். அதன் தொடர்ச்சியாக இந்த 'ஒலி'. மன்னார்குடியில் படிக்கும் போது (+1), 'டியூனிங் ஃபோர்க்' சம்பந்தப் பட்ட ஒரு பௌதீக சோதனை - கம்பியில் சிறு பேப்பர் துண்டுகளை தொங்க விட்டு, Tuning Forkஐ ஒரு தட்டு தட்டி, எங்கு அந்தப் பேப்பர் எழும்பி விழுகிறது என்று பார்த்து, கணக்கெல்லாம் போட்டு, அலைவரிசை கண்டுபிடிக்கும் ஒரு சோதனை - நினைவுக்கு வருகிறது. வெண்பா இலக்கணம் சொல்லித்தந்த தமிழ் ஆசிரியர் சொன்னது 'அசையில்லாமல் இசை இல்லை'; நிச்சயமாகச் சொல்லலாம் அசைவில்லாமல் ஒலியில்லை என்று. காற்றிலுள்ள அணுக்கள் மூலமாக பரவுகின்ற அதிர்வே நாம் ஒலியைக் கேட்க உதவுகிறது.

இந்த ஒலியும் ஒரு அலைதான் - ஆனால் ஒளி போல் குறுக்குவாட்டில் போகாமல் நெடுக்கு வாட்டில் போகும். இதைவிட முக்கியமான வித்தியாசம் - ஒலி செல்வதற்கு ஏதாவது ஒரு ஊடகம் - carrier - தேவை. ஒளி வெற்றிடத்திலும் செல்லும், ஒலியால் முடியாது. அது மட்டுமல்ல; ஒலி செல்லும் வேகம் ஊடகத்தைப் பொறுத்தது. திடப் பொருள்களில் மிக வேகமாகவும், திரவப் பொருள்களில் அதை விட சற்று மெதுவாகவும், வாயுப்பொருள்களில் மிக மிக மெதுவாகவும் செல்லும். ஒலியின் அலைவரிசையை ஹெர்ட்ஸ் என்று குறிப்பார்கள் Heinrich Rudolph Hertz (1857-94) நினைவாக.
மனிதக் காதுகளுக்கு 20ல் இருந்து 20,000 ஹெர்ட்ஸ் வரை அலைவரிசையுடைய ஒலிகள் கேட்கும். சில விலங்குகளுக்கு - நீர்யானை, யானை, திமிங்கிலம் போன்றவை - "இன்ஃப்ரா" என்று சொல்லப்படும் 20 ஹெர்ட்ஸ்க்கும் குறைவான அலைவரிசைகளில் வரும் ஒலியையும் கேட்கும் திறமை உண்டு. நாய், பூனை, எலிகள் - "அல்ட்ரா" என்று சொல்லப்படும் 20,000 ஹெர்ட்ஸ்க்கும் மேலான அலைவரிசைகளில் வரும் ஒலியையும் கேட்கும் திறமை உண்டு. வௌவாலின் கேட்கும் திறன் பற்றி எல்லோருக்கும் தெரியும். பாம்புக்கு காதுகள் இல்லாவிட்டாலும், மகுடியிலிருந்து வரும் ஒலி அலைகளின் அதிர்வு, நிலத்திலிருந்து, அதன் உடலில் உள்ள எலும்புகள் மூலமாக அதன் மூளைக்கு செல்கின்றது என்று படித்ததாக நினைவு.

நம் காதுக்குள் வந்த ஒலி அதிர்வு, காதுக்குள் உள்ள திரவத்தை அதிர்வடையச் செய்கிறது; பின் அந்த அதிர்வே மூளைக்கு அனுப்பப்பட்டு நம்மால் ஒலியாக உணரப்படுகிறது. நாம் பேசும் போதோ, பாடும் போதோ நம்முடைய வாயிலிருந்து வரும் ஒலிவலைகள் காற்றின் மூலமாக காதை அடையும். அதே சமயத்தில் நம்முடைய வாய் எலும்புகளில் அந்த ஒலியலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் காதை அடைந்து, பின் மூளையை அடையும் போது, நம் குரலின் அடையாளம் நமக்கு ஒருவிதமாக மாற்றிக் காட்டப்படுகிறது - இரண்டுவிதமான அதிர்வுகளின் கலவையாக (காற்றின் மூலம் வந்த அதிர்வு + எலும்பின் மூலம் வந்த அதிர்வு). இதனாலேயே நம்முடைய குரலை பதிவு பண்ணிக் கேட்கும் போது கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறது. இந்த விஷயத்தைப் பற்றி ஸ்ரீகாந்த் மீனாக்ஷி சமீபத்தில் எழுதிய பதிவு இங்கே.

காதில் எல்லா உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்தாலும், சமயத்தில் பிறர் சொல்வது நமக்கு கேட்பதில்லை; முக்கியமான காரணம் மூளை அந்த சமயத்தில் வேறு ஏதாவது ஒரு காரியத்தில் மிகவும் நுணுக்கமாக ஈடுபட்டிருப்பதுதான். ஆர்க்கிமிடிஸ் இது போன்று ஒரு புதிரை தீர்க்க முயன்று கொண்டிருக்கையில், அருகில் வந்த ஒரு வீரனுக்கு உடன் பதில் சொல்லாததால் கொல்லப்பட்டார் என்று கேள்வி. வேறு வேலையில் ஈடுபடாவிட்டாலும் வரும் ஒலி அதிர்வுகளைப் பற்றி ஒரு விதமான பரிச்சயம் இருந்துவிட்டால், மூளை செயல்பட மறந்துவிடும்.

நாங்கள் மன்னார்குடியில் இருந்த வீட்டில் ஒரு அரதப் பழசான மின்விசிறி உண்டு. அது போடும் சத்தம் மிக அதிகம். முதலில் சங்கடமாய் இருந்தாலும், சில மாதங்கள் கழித்து தூங்குவதற்கு அந்த சத்தம் தொந்தரவாயில்லை; என் மூளை அந்த சத்தத்தை நிராகரித்து செயல்பட கற்றுக் கொண்டுவிட்டது. என் வீட்டம்மாவிடம் சில நாட்களுக்கு முன் இதை விவரித்தபோது அவங்களுக்கு வந்ததே கோபம். "நான் சொல்வதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வதும் இல்லாமல், என் குரலை இனம் பிரித்து உங்கள் மூளை நிராகரித்து விடுகிறது என்று சொல்ல என்ன தைரியம்" என்று! தவறு என் மீது தான். 'பேப்பர் குப்பைகளை எல்லாம் எடுத்து வையுங்கள்' என்று இரண்டு, மூன்று முறை கூறியது என் காதில் விழவில்லை; 'ஏன் விழவில்லை' என்ற அவங்க கேள்விக்கு எப்போதும் போல் அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு பேப்பரை எடுத்து வைக்காமல் அன்றைக்கு என்று இந்த விளக்கத்தைக் கொடுத்தேன். விளக்கம் சொல்லாமல் காது சரியில்லை என்று சமாளிக்காதது என் குற்றம் தானே!

2 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

நல்ல பதிவு ரங்கா அண்ணா. அண்ணிகிட்ட ரொம்பத் திட்டு வாங்காதீங்க. :-)

அதை நான் சொல்றது அவ்வளவு நல்லா இல்லைன்னு இங்கே எனக்குத் திட்டு விழுது - எல்லாம் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க தானேன்னு. :-)

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி குமரன். 'பொய்மையும் வாய்மையிடத்தே' குறள் நினைவுக்கு வருது. :=]