செவ்வாய், நவம்பர் 01, 2005

கௌடா vs. மூர்த்தி

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவ கௌடாவிற்கும், இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் ஸ்தாபனர் நாராயண மூர்த்திக்கும் நடந்து வரும் சர்ச்சை இன்னும் தீவிரமாயிருக்கிறது. ஒரு பொது விழாவில் பேசிய மூர்த்தி, தன் அரசியல் எதிரி கிருஷ்ணாவைப் புகழ்ந்தது பொறுக்காமல் தான் தேவ கௌடா மூர்த்திக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறார் என்று பரவலாகச் செய்தி வந்தது. இப்போது தொலைக்காட்சி பேட்டியில் (என்.டி. டி.வி.) 'பத்தாயிரம் பேர் வேலை செய்யும் நிறுவனத்திற்காக கோடிக் கணக்கில் பணம் ஏன் செலவு செய்ய வேண்டும்? அதிலும் அந்த நிறுவனத்தில் கன்னடர்கள் அதிகம் இல்லையே? இதற்கு பதில் கிராமத்தில் உள்ள ஏழைகளுக்கு அந்தத் தொகையை செலவு செய்தால் புண்ணியமாய் இருக்குமே!' என்றெல்லாம் அரசியல்வாதிகள் பேச்சு.

இந்த கௌடா - மூர்த்தி விஷய நியாய அநியாய வாதங்களைப் பார்ப்பதற்கு முன்னால் இதனோடு சம்மந்தப்பட்ட மற்ற விஷயங்களையும் சற்று பார்ப்போம்.

1. மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் மக்கள் ஏற்கனவே தாக்குதலுக்கு இலக்காகி வர ஆரம்பித்தனர். இந்த மாதிரி வழிப்பறி மற்றும் ஏமாற்றுதல்கள் 'இருப்பவர் - இல்லாதவர்களுக்கு' இடையே உள்ள பிரச்சனை என்று நினைத்தாலும், பல் நாட்டு நிறுவனங்கள், கணினி மென்பொருள் நிறுவனங்கள், மற்றும் அந்நிறுவன ஊழியர்கள் குறித்து மற்றவர்களிடையே நிலவும் அதிருப்தியும் ஒரு காரணம்.

இங்கு நான் தந்திருக்கும் நிறைய விஷயங்களைப் பற்றி அலெக்ஸ் பாண்டியன் தன் இணையத்தில் விரிவாக எழுதியிருக்கிறார்.
http://alexpandian.blogspot.com/2005/10/vs-1.html
பார்க்க: http://www.ryze.com/posttopic.php?topicid=563043&confid=366
http://www.deccanherald.com/deccanherald/oct52005/index2042432005104.asp
http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1548


2. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் மெல்லிசை நிகழ்ச்சியில் கன்னட பாடல் பாட விடாமல் அதன் ஊழியர்கள் எதிர்த்து கூச்சலிட்டு கலாட்டா செய்ததும், அதை காரணம் காட்டி தர்ணா நடந்ததும் தெரிந்த விஷயமே.
சுட்டி: http://thadagam.blogspot.com/2005/10/blog-post_112833346297857573.html

3. சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரை 'எப்படி கன்னடமில்லாத பிற மாநிலத்தவர் - குறிப்பாக மற்ற தென்னிந்தியர்கள் பெங்களூரில் அதிகமான வேலை வாய்புகளை நிறப்புகிறார்கள்'. இது ஏற்கனவே இருந்து வந்த கசப்புணர்வை அதிகரித்து விட்டது.
சுட்டி: http://tinypic.com/e8v98z.png

4. சில மாதங்களுக்கு முன்னால் பல நாடுகளுக்கு இடையே இருக்கும் ஸ்திரத்தன்மையையும், கடல் கடந்த தொலை தூர வேலையமைப்பிற்கு உகந்த சுற்றுசூழல் பற்றியும் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மையிலும், வர்த்தகத்திற்கு ஆதரவான சுற்றுச் சூழலிலும் குறைந்த எண்ணிக்கை வழங்கப்பட்டது. குறிப்பிட்ட இந்தப் பகுதியில் கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்தியாவை விட அதிக எண்ணிக்கை பெற்றன.

5. விப்ரோ நிறுவன உரிமையாளர் பிரேம்ஜி, அந்நிறுவன விஸ்தரிப்புகள் இனி பெங்களூரில் நடக்காது என்று அறிவித்து விட்டார்.
http://www.expressindia.com/fullstory.php?newsid=53698

6. பெங்களூரில் நடக்க இருந்த கணினித்துறை மாநாட்டை பல்வேறு நிறுவனங்கள் புறக்கணிப்பு செய்து, இப்போது ஒரு மாதிரியான சமரசம் ஏற்பாடகியிருக்கிறது. பெங்களூரின் உள்கட்டுமான நிலைமையே இதற்கு காரணமென்றும், அரசின் மெத்தனத்தை எதிர்த்து இந்த புறக்கணிப்பு என்றும் கூறப்பட்டது. போதாதற்கு இந்த மழையால் ஏற்பட்ட தடைகள் சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் அளவில் உள்கட்டுமான குறைகளைப் பற்றிய கேள்விகளை எழுப்பியது.
http://www.thehindubusinessline.com/2005/09/23/stories/2005092302100900.htm

இந்த மாதிரி பிரச்சனைகள் இருப்பது போதாதென்று, சொந்த ஆதாயங்களுக்காகவும், சுயநலத்திற்காகவும், மேலும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவது போல் நடந்து கொள்வது ஒரு முன்னாள் பிரதமருக்கு அழகல்ல. தேவகௌடா போன்ற அரசியல்வாதிகள் ஓட்டுக்காக உணர்ச்சிபூர்வமாக பேசுவதன் மூலம் உருப்படியாக ஏதும் சாதிப்பதில்லை. பெங்களூரின் உள்கட்டுமானத்திற்காக செலவு செய்வது, எல்லா மக்களுக்கும் உதவிதான்.

முன்னாளில் விவசாயத்தினால் மட்டும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வந்தது. பின்பு இயந்திர தொழிற்சாலைகளினால் அதன் வளர்ச்சி பெருகியது; இப்போது இது போன்ற மென்பொருள் தொழிற்சாலைகளினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மாதிரி நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் சமுதாயத்தின் மற்ற பிரிவினருக்கும் நன்மை செய்ய முடியும்.

ஒரு தனிமனிதனுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியினால் பொறுப்பிலிருக்கும் அரசு இயங்க ஆரம்பித்தால், பல்தேச நிறுவங்களிடம் 'இந்தியாவின் சமூகச் சூழல் நிச்சயமற்றது' என்ற எண்ணம் வலுக்க ஆரம்பிக்கும். இது தொலைநோக்குப் பார்வையில் நல்ல விஷயமல்ல. இது போன்ற கண்மூடித்தனமான எதிர்ப்பு 'பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தது' போல் தான்.

இந்த விவகாரத்தில் மென் பொருள் நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு. ஒரு இடத்தில் இருக்கும் போது அவ்விடத்திலிருக்கும் சமூகத்திற்கு தங்களாலான உதவிகளையும் செய்ய வேண்டும். இங்கு (அமெரிக்காவில்) நான் பணிபுரியும் நிறுவனத்தில், 'சேவை தினங்கள்' அனுசரிக்கப்படுகின்றன. மாதத்தில் இரண்டு மணி நேரமோ அல்லது எட்டு மணி நேரமோ ஒரு சமூக சேவைக்காக ஊழியர்கள், குழுவாகவும், தனியாகவும் செலவு செய்வது சகஜம். இதை நிறுவனமும் ஆதரிக்கிறது. இது போன்ற நிகழ்சிகள் இந்தியாவில் எந்த ஆளவு நடத்தப் படுகிறது, பிரசாரம் செய்யப் படுகிறது என்பது பற்றி தெரியவில்லை. அதே சமயத்தில், இது போன்ற மென்பொருள் நிறுவனங்களில் உள்ள வசதிகள் (இலவச இரவு உணவு, வேலைக்கு சென்று திரும்ப வாகன உதவி) பற்றி பத்திரிகைகளில் நல்ல விளம்பரம்.

கன்னட பாடல்களை எதிர்த்து கூச்சலிட்டது நாகரீகமில்லாதது மட்டுமல்ல, விபரீதமானதும் கூட. ஒரு பக்கம் இந்த நிறுவனங்களின் வளர்ச்சி பற்றி விளம்பரம், மறுபக்கம் பொறுப்பற்ற மொழி மரியாதைக்குறைவு. இந்த மாதிரி செயல்களினால் இந்நிறுவனங்கள் தங்கள் தரப்பு வாதங்களை பலவீனமாக்குகிறார்கள்.

மொத்தத்தில் இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம். இப்போது மலையிலிருந்து கீழே வரும் பனியுருண்டைபோல் பெரிதாக்கப்பட்டிருக்கிறது. விஷயம் முற்றி, உலக வர்த்தகப் படத்திலிருந்து பெங்களூர் மறையாமல் இருக்க வேண்டும்!

1 கருத்து:

Alex Pandian சொன்னது…

Good consolidation of items on this topic.

Bookmark http://bangalorebuzz.blogspot.com/

also for latest / regular updates.

Happy Deepavali.