புதன், நவம்பர் 09, 2005

ஹாலோவின் பயங்கரம்

மூன்று வாரங்களாக வேலைப்பளு அதிகம் - அதைவிட மனத்தின் பளு அதிகம். அலுவலகத்தில் சிக்கனம் கடைபிடிக்கும் நிகழ்சிகளைப் பற்றிய அறிவிப்புகள் - முக்கியமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகள். இந்த 'ஹாலோவின்' பண்டிகை ஆரம்பத்திலிருந்து வருட இறுதி வரை இந்த மாதிரி நடவடிக்கைகளால், அலுவலகத்தில் அதிகமான சிரிப்போ, சந்தோஷமோ இல்லை!

இது எங்கள் நிறுவனத்தில் மட்டுமல்ல, அமெரிக்காவிலுள்ள முக்கால் வாசி நிறுவனங்களில் நடப்பவை தான். பெரும் நிறுவனங்கள் எல்லாவற்றிலும், நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கு அந்த நிறுவனங்களின் லாபத்தை ஒட்டி, அந்த நிறுவனப் பங்குகள் (shares), மற்றும் சலுகை விலையில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் (options) மற்றும் சிறப்பு ஊதியங்கள் (bonus) நிர்ணயிக்கப்படுகின்றன. சம்பளத்தை விட இம்மாதிரி சலுகைகளின் மதிப்பு பல லட்சங்களைத் தாண்டும். முக்கால் வருடம் போன பின், நிறுவனங்களின் வருடாந்திர லாபங்களைப் பற்றிய ஒரு மதிப்பீடு நிறுவன அதிகாரிகளுக்குத் தெரிந்துவிடுகிறது. இலக்கை எட்டுவதற்கான முயற்சியில், செலவுக் குறைப்பு ஒரு சுலபமான வழியாகத் தென்படுகிறது.

ஒவ்வொரு நிறுவனமும் வேலை நீக்கத்திற்கு எத்தனை நாள் முன்பாக சீட்டு கொடுக்கவேண்டும் என்று விதித்திருக்கும். அனேகமாக முழு நேர ஊழியர்களுக்கு எட்டு வாரம், அல்லது நான்கு வாரம் என்றெல்லாம் இருக்கும். தற்காலிக வேலைக்கு ஒரு நாள் கிடைத்தாலே அதிகம்! இந்த மாதிரி அறிவிப்பெல்லாம் ஒரு வார இறுதியில் தான் நடக்கும். ஹலோவின் வருட இறுதியிலிருந்து அறுபது நாட்களுக்கு முன்னால் வருவதால், ஆட்குறைப்பு அறிவிப்பெல்லாம் இந்தப் பண்டிகைக்கு அருகாமையில் ஆரம்பிக்கும். இந்தப் பண்டிகையே பயமுறுத்தும் உடையணிந்து இனிப்பு வாங்குவதுதான்! நிறையப் பேர்களுக்கு பயம் ஒன்று தான் மிஞ்சுகிறது!!

இந்த மாதிரி அறிவிப்பில் வேலை போகாமலிருந்தாலும், பாதிக்கப்பட்ட மற்ற ஊழியர்களுக்கு இடையே நம்மால் சகஜமாக நடந்து கொள்ள முடியாது. அதிலும் பாதிப் போது யார் யார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியாததால், மொத்த அலுவலுகமும் சோபையிழந்து இருக்கும்.

என் சக ஊழியர் ஒருவர் தன் மகனோடு (நான்கு வயது) தனியாக (single Mom) வசிக்கிறார். கிரிஸ்த்மஸ் பண்டிகைக்காக அவர் காசு சேர்க்கும் முறையே தனி! ஒவ்வொரு நாளும் மதிய காப்பிக்கு ஒரு டாலர் கொடுத்து, மீதி சில்லறையை ஒரு பாட்டிலில் போட்டு வைப்பார். வருட இறுதியில் அந்த பெரிய பாட்டிலிலிருக்கும் பணத்தை பரிசுக்காக உபயோகிப்பார். இந்த வருடம் அவரும் பாதிப்புக்கு உள்ளானார். நேற்று காப்பி குடிக்கையில் 'சேமிப்பதற்காக காப்பியை நிறுத்தினால், மகனின் பரிசுக்கான பணம் குறைந்திடுமே' என்று சோகப் புன்னகையோடு சொன்னது வருத்தமாய் இருந்தது. வீட்டில் சென்று வலைத்தளத்தில் (யாஹூ) நிர்வாக அதிகாரிகளின் பங்கு இருப்பைப் பார்த்தால் கோபம் வந்தது. இந்த பிரச்சனைக்கு என்று தீர்வு வருமென்று தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: