செவ்வாய், நவம்பர் 15, 2005

சரஸ்வதி சபதம்

சென்ற வாரம் 'சரஸ்வதி சபதம்' திரைப்படம் பார்த்தேன். மூன்று தெய்வங்களுக்கு (சரஸ்வதி, லக்ஷ்மி மற்றும் சக்தி) இடையே நடக்கும் போட்டி - யார் சிறந்தவர் என்று. நடிகர் திலகத்தின் நடிப்பு - முக்கியமாக வசன உச்சரிப்பு அருமை. ஜெமினி கணேசன் வீரமல்லனாக (சேனாபதி) கோபித்து பேசும் போது நகைச்சுவையாக இருக்கிறது. போன மாதம் பார்த்த படங்களில் (திருவிளையாடல், மிஸ்ஸியம்மா) இருந்த பொலிவு சாவித்திரிக்கு இந்தப் படத்தில் இல்லை.

போட்டி மூன்று பேருக்கு இடையே என்றாலும், படத்தை நகர்த்துவது புலவனுக்கும், அரசிக்கும் இடையே நடக்கும் தகராறைப் பற்றித்தான். 'தெய்வத்தைப் பாடுவேன்; அரசியைப் பாட மாட்டேன்' என்ற கொள்கையினால் (பிடிவாதம்?) தான் கதையே நகருகிறது. இந்த விஷயம் ஒன்றும் புதிதல்ல.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இரு செய்யுள்கள் இதே போன்ற தொனியில்:
1] 1559 - ஓடாவாளரியி ன்...பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு...
2] 2456 - நாக்கொண்டு மானிடம் பாடேன் ...

இதற்குப் பின் பொய்யமொழிப் புலவரின் 'வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ?' (இதற்காக முருகப் பெருமான் சிறுவனாக வந்து அவரை முட்டையைப் பற்றிப் பாடச் சொன்னதும், பாடிய பின் - 'முட்டையைப் பாடுகிறீர், ஆனால் கோழிக்குஞ்சைப் பாட மாட்டீரோ?' என்று கேட்டு திருத்தி ஆட்கொண்டதும் வேறு கதை).

இந்த விஷயத்தை கொள்கைப் பிடிப்பு என்று பாராட்டுவதா அல்லது வீண் பிடிவாதம் என்று கூறுவதா என்று புரியவில்லை. இப்போதும் இந்த மாதிரித்தான் நடந்து கொண்டிருக்கின்றது.

நேற்றைய செய்திதாள் சொன்னது: 'மகாராஷ்டிர முதல்வர் நாராயண மூர்த்திக்கு அழைப்பு'.
கர்நாடகம், மகாராஷ்டிரம் இரண்டிலும் காங்கிரஸ் (கூட்டணியோடுதான்) ஆட்சி. இருந்தும் வெவ்வேறு நிலை. இந்தப் பிரச்சனைக்கும் மூல காரணம் மூர்த்தியின் "கிருஷ்ணாவைப் பாடும் வாயால் தேவ கவுடாவைப் பாடுவேனோ?" என்ற கொள்கைதான் என்கிறார்கள். அட தே(வ க)வுடா!

கருத்துகள் இல்லை: