ஞாயிறு, நவம்பர் 20, 2005

தினமலருக்கு நன்றி!

என் வலைப்பக்கத்தை தினமலரில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று அலெக்ஸ் பாண்டியனும், நிலவு நண்பனும் பதிவின் மூலம் தெரிவித்தனர். நன்றி அலெக்ஸ்/நிலவு :-)

முதல் உணர்ச்சி ஆச்சரியம்! 'அட நம்ம எழுத்துக்குக் கூட அங்கீகாரமா?' என்று! இரண்டாவது மகிழ்ச்சி - 'ஆகா நாமும் ஏதோ சாதித்துவிட்டோம்' என்று. மூன்றாவது ஒரு நகைச்சுவை உணர்வு (விபரம் கீழே!).

தமிழ் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் தவறாமல் படிக்கும் பழக்கம் நின்று போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாகப் படித்த தமிழ் பத்திரிகை/செய்தித்தாள் என்று யோசித்தால், அம்மா/அப்பா இந்த முறையும் இந்தியாவிலிருந்து வரும் போது வாங்கி வந்த பாக்குப் பொட்டலத்தை கட்டிய காகிதம் தான்! எந்தப் பத்திரிகை என்று தெரியாமல் (எழுத்தைப் பார்த்து பத்திரிகையைக் கண்டுபிடித்ததும் ஒரு காலம் - இப்போது இல்லை!) மீதி செய்தி என்னவென்றும் புரியாமல் (சிறு வயதில் முடி வெட்டிக் கொள்வதற்காகக் காத்து இருக்கையில் அங்கிருக்கும் பழைய பத்திரிகைகள்/செய்தித் தாள்கள் படித்ததும், படித்து முடிக்கு முன் நம் முறை வந்துவிட, கதையின் முடிவு தெரியாமல் தவித்ததும் ஞாபகம் வருகிறது) ஒரே அவஸ்தை. அப்போதெல்லம் தோன்றும் ஒரு கேள்வி, 'எப்படி இவர்கள் எல்லாருக்கும் எழுத முடிகிறது?' என்பதுதான். அப்படி ஆச்சர்யமான ஒரு நிகழ்சி - அட என் பேரும் பத்திரிகையிலா? - எனக்கும் வந்திருக்கிறது!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் வளர்ந்து வந்த ஒரு அணிலையும், அதை எடுத்து வளர்த்து வந்த என் அப்பவையும் படம் பிடித்து வாரமலரில் வந்த செய்திக்குப் பிறகு பத்திரிகையில் என் எழுத்தும் வந்தது ஒரு மகிழ்ச்சி. என் ஈகோ அரிப்பை சற்று சொறிந்து கொடுப்பதாக இருந்தாலும், ஒரு மகிழ்ச்சிதான்!

அலெக்ஸ்/நிலவு கொடுத்த இணைப்பைக் கொண்டு போய் பார்த்தால் நகைச்சுவை! என் வலைப்பக்கத்தை 'அறிவியல் ஆயிரம்' பகுதியில் 'அமெரிக்க நிறுவனங்களில் ஆட்குறைப்பு' என்ற தலைப்பின் கீழ், 'நான் யார்?' என்ற கேள்விக்கு அருகில் குறிப்பிட்டு இருந்தார்கள். பாண்டவர்கள் எத்தனை பேர் என்ற கேள்விக்கு பதிலாக ஒருவன் 'கட்டில் கால்களைப் போல் மூன்று பேர்' என்று சொல்லிக்கொண்டே ஒரு கையில் இரு விரலைக் காட்டி மறு கையால் சுவற்றில் ஒன்று என்று எழுதிய கதை ஞாபகம் வந்தது.

இருந்தாலும் இந்த ஞாயிறை ஒரு மகிழ்சியான தினமாக ஆக்கிய, வெவ்வேறு உணர்ச்சிகளை வழங்கிய தினமலருக்கு நன்றி.

2 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

வாழ்த்துகள் ரங்கா. தினமலர் சுட்டியை எங்கே வைத்துள்ளீர்கள்?

ரங்கா - Ranga சொன்னது…

குமரன், என்னுடைய 'நான் யார்' பதிவினில் அலெக்ஸும், நிலவு நண்பனும் சுட்டி கொடுத்தார்கள்:

'தினமலர்'