வெள்ளி, பிப்ரவரி 11, 2011

இலக்கு - 2

இலக்கு - 2

அதே குழந்தை பசி நீங்கியபின் தெரிவிக்கும் உணர்வு சந்தோஷம் - சிரிப்பின் மூலமாக. வளர வளர பசி நீங்கியதால் மட்டும் அது சிரிப்பதில்லை. ஒரு கிலுகிலுப்பை, பொம்மை என்றெல்லாம் அதன் தேவை வளர ஆரம்பிக்கிறது. யோசிக்க, பேச தெரிய ஆரம்பிக்கும் முன்னமே, பசி நீங்கியவுடன் வேறெதையோ தேட ஆரம்பிக்கும் தன்மை வந்து விடுகிறது. தன்னைத் தூக்கி கொஞ்ச வேண்டும், பாட்டு கேட்க வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டுக் கேட்கத் தொடங்கும் முன்னமே அதன் புலன்களுக்கு சுகம் தரும் விஷங்களைத் தேடத் துவங்குகிறது. இந்த 'சுகம் தேடல்' புலன்களில் ஆரம்பித்தாலும், வளர வளர புலன்களைத் தாண்டி, சிந்தனை, நினைப்பு போன்ற மனது/மூளை சம்பந்தப்பட்ட சமாசாரங்களையும் உள்ளடக்க ஆரம்பிக்கிறது. இந்த மாதிரி 'சுகம் தேடல்' தேவைகளின் பூர்த்தியில் கிடைக்கும் உணர்வை "மகிழ்ச்சி" என்று சொல்லலாம்.

மகிழ்ச்சியின் முதலாவது நிலை புலன்கள் தெரிவிக்கும் உணர்ச்சிகளால் வரும் சுகம், இதம். பண்டைய நூல்களில் நம் உடம்பின் ஐந்து புலன்களை ஞானேந்திரியம் என்றும் (செவி, கண், மூக்கு, நாக்கு, மெய்), இந்தப் புலன்கள் மூலமாக அறியப்படும் உணர்வுகளை தன்மாத்திரை (சப்தம், ரூபம், கந்தம், ரசம், ஸ்பரிசம்) என்றும் குறிப்பிடுகிறார்கள். ஞானேந்திரியங்களின் வேலை, எந்தப் பொருளையும், தன்மாத்திரைகளாக விவரித்து மூளைக்கு அனுப்புவதுதான். ஒரு உயிருக்கு ஒரு சமயத்தில் எந்த தன்மாத்திரை இதம் அளிக்கிறதோ, அதுவே 'மகிழ்ச்சியின்' காரணமாகிறது. சிலருக்கு சில புலன்களின் உணர்ச்சி தரும் சுகம், மற்ற புலன்களின் உணர்ச்சிகளால் வரும் சுகத்தை விட அதிகமாக இருக்கும்; அதனால் முக்கியத்துவமும் மாறலாம். சிலருக்கு சங்கீதம், சிலருக்கு சாப்பாடு - சந்தோஷம் எதில் தான் வரும் என்று சொல்ல முடியாது! இந்த சுகங்களில் ஒன்று பெரியது மற்றொன்று சிறியது என்றெல்லாம் தரம் பிரிக்க முடியாது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது "மகிழ்ச்சி" என்பது ஒரு கூட்டுப் பொருள் - இதற்கு புலன், புலனுக்கு இதம் தரும் மற்றொரு பொருள், புலனின் உணர்வைப் புரிந்து கொண்டு ரசிக்கும் மனம்/மூளை, என்று மூன்றும் சேர்ந்தால் தான் மகிழ்ச்சி. இந்த மூன்றும் ஒருவருக்கு எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதே போல இந்த மூன்றும் இரண்டு மனிதர்களுக்கு ஒன்றே போல இருப்பதில்லை. ஒவ்வொருவரைப் பொறுத்து இது மாறுபடும். சிறுவயதில் மன்னார்குடியில் கோடையில் பனிக்கட்டியைக் கையில் எடுக்கையில் வந்த சுகம், மகிழ்ச்சி இப்போது முழங்கால் அளவு பனியை வீட்டு வாசலில் இருந்து எடுத்துப் போடுகையில் எனக்கு நிச்சயமாக இல்லை!

இந்த முதல் நிலை மகிழ்ச்சியிலும் இரு பிரிவுகள். ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்பட்டுத் தரும் தன்மாத்திரை மகிழ்ச்சி - ஒரு பிரிவு, ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்படாத மகிழ்ச்சி - மற்றொரு பிரிவு. சுருக்கமாக சொல்லப்போனால், ஞானேந்திரியங்களின் நேரடியான துணையில்லாமல் தன்மாத்திரைகள் தரும் இதத்தை மூளை அடைந்தால் வரும் மகிழ்ச்சி, முதல் மகிழ்சியின் ஒரு மாறுபட்ட பிரிவு. உதாரணமாக நல்ல பாட்டைக் கேட்கையில் வரும் மகிழ்ச்சி முதலாம் பிரிவு - காது கேட்டு, பொருள் புரிந்து, மனம் மகிழ்கிறது. இரவு படுக்கையிலே விளக்கணைத்து விட்டு, உறக்கம் வரும்முன், கேட்ட பாட்டில் மனதைக் கவர்ந்த இடங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வது இரண்டாம் பிரிவு. காது கேட்பதற்கு பாட்டு இல்லையென்றாலும், கேட்ட போது ஏற்பட்ட உணர்வை மனது/மூளை நினைவாலே வரவழைக்கிறது. ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்படாத தன்மாத்திரை உணர்வு!

நேரடியாக சம்பந்தப்படாது போனாலும், ஞானேந்திரங்கள் இல்லாமல் தன்மாத்திரை பற்றி மூளை தாமாக அறிய முடியாது. தன்மாத்திரை உணர்வை மூளை அடைய வேண்டுமானால் ஞானேந்திர்யங்கள் அவசியம் தேவை. நினைப்பாலே மூளை தன்மாத்திரை தரும் உணர்ச்சியை புதிதாக உண்டு பண்ண முடியாது; ஏற்கனவே அனுபவித்திருந்த ஒரு உணர்வின் நினைப்பிலிருந்துதான் உருவாக்க முடியும். ஞானேந்திரியம் இல்லையென்றால் தன்மாத்திரையும் இல்லை. இந்த ஞானேந்திரியங்கள், அவை உணரும் பொருள்கள் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன - ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை - ஒரு உயிருக்கு. இந்த சம்பந்தம் பற்றி நான் எழுதிய ஒரு கவிதை இங்கே:

வண்ணமிங்கு இலையென்றால் பார்வை தேவையில்லையே
பார்வையிங்கு இல்லையென்றால் வண்ணமுந்தான் இல்லையே

சப்தமிங்கு இலையென்றால் செவியின் தேவையில்லையே
செவியுமிங்கு இல்லையென்றால் சப்தமுந்தான் இல்லையே

வாசமிங்கு இலையென்றால் நாசியின் தேவையில்லையே
நாசியிங்கு இல்லையென்றால் வாசமுந்தான் இல்லையே

சுவைகளில்லை என்றுபோனால் நாவின் தேவையில்லையே
நாவுமிங்கு இல்லையென்றால் சுவைகளுந்தான் இல்லையே

தீண்டப்பொருளும் இல்லையென்றால் உணர்வின் தேவையில்லையே
உணர்வும் அற்றுப்போனாலே தீண்டுதலிங்கே இல்லையே

மகிழ்ச்சியின் இரண்டாவது நிலை எந்தப் புலனுமே சம்பந்தப் படாத - வெறும் நினைவு/மூளை/மனது சம்பந்தமான விஷயம். அதாவது, தன்மாத்திரை தாண்டிய சுகம், மகிழ்ச்சி. உதாரணம் - ஒரு கடினமான புதிரை மனதினுள் ஆராய்ந்து, விடை கண்டுபிடிக்கையில் வரும் மகிழ்ச்சி. ஒருவிதத்தில் இது வசதியான மகிழ்ச்சி - காரணம் இதிலிருக்கும் சுதந்திரம். புலன்கள் தாமாக மகிழ்சியைத் தர முடியாது - அதற்கு இதம் தரும் பொருளும் வேண்டும். பொருள் மட்டும் இருந்தால் போதாது, அதை உணரும் புலனும் வேண்டும். ஆனால் மனதிலே நினைவாலே தோன்றும் மகிழ்ச்சிக்கு நம் நினைவு, மனம் மட்டும் போதும்.

சிவவாக்கியர் சொன்ன சொல் நினைப்புக்கு வருகிறது:
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே!

இந்த முக்கியத்துவம் மாறுபட்டாலும், சுகத்தை, மகிழ்ச்சியை மொத்தமுமாகத் துறந்தவர்களை நான் பார்த்ததில்லை. புலன்கள் சம்பந்தப்படாத மனது, நினைவு தொடர்பான சுகங்களை அறிந்து கொள்ள ஆரம்பிக்கையில், புலன்கள் சம்பந்தமான தேவைகளில், சுகங்களில் செலவிடும் நேரம் குறைகிறது. இருந்தாலும் இந்த "மகிழ்ச்சி தேடுதல்” (சுருக்கமாக “மகிழ்தல்” என்று அழைக்கலாம்) இறப்பு வரை ஒருவருக்கு உந்துதலாக இருக்கிறது.

இதனால் என்னளவில் "மகிழ்தல்" வாழ்வின் இரண்டாம் இலக்கு. இதைப் பற்றி மேலும் அடுத்த வாரம்.

இலக்கு - 1

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை நாலுநாழி
உம்முளே நாடியே இருந்தபின் பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்; .

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4 (PART-2)
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)


Online Books : TAMIL
http://www.vallalyaar.com/?p=409

Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454