செவ்வாய், ஆகஸ்ட் 11, 2009

குப்பை - 1

குப்பை – 1

இது உண்மையிலேயே 'குப்பை/குப்பைத் தொட்டி' பற்றிய பதிவுதான். சிறு வயதில் பார்த்ததெல்லாம் தெருவில் ஒரு சிமென்ட் சிலின்டர். மூலையில் நிறுத்தி வைத்திருப்பர்கள். வாரம் ஒரு முறை முனிசிபாலிடி குப்பை வண்டி வந்து அந்த சிமென்ட் குழாயைச் சாய்த்து விட்டு, கூடையில் சேர்த்து, வண்டியில் (மாட்டு வண்டி) போட்டு எடுத்துச் செல்வார்கள். மன்னார்குடியில் நாங்கள் இருந்த தெருவில் புழுதி அதிகம்; குப்பை வண்டி வந்து போகும் போது தெரு முழுதும் ஒரே தூசி படலம் தான். காரணம் அந்த தொழிலாளர்கள் துடைப்பத்தால் - நீண்ட கழியின் முனையில் முக்கோண வடிவில் சிறு தட்டி - பெருக்கி குவித்தபடியே போவார்கள்; பெண் தொழிலாளிகள் அதையும் எடுத்து வண்டியில் போட்டுக் கொண்டே தொடர்வார்கள். வீட்டின் அருகிலேயே குப்பைத்தொட்டி இருந்ததால், வீட்டிற்குள் குப்பை சேகரம் இல்லை.

இது வட நாட்டில் (சண்டீகர்/தில்லி) வாசம் செய்த போது 'கூடா'வாக மாறியது. ப்ளாட்டில் இருந்ததால், வீட்டிற்குள்ளேயே ஒரு சிறு குப்பைத் தொட்டியில் முதலில் சேகரம்; தினமும் காலையில் அந்த ப்ளாட்டுகளுக்குப் பொதுவான ஒரு 'கூடா' சேகரம் பண்ணும் பணியாளர் வந்து தன்னுடைய பெரிய பிளாஸ்டிக் கூடையில் ஒவ்வொரு வீட்டு 'கூடா'வையும் போட்டு எடுத்துச் செல்வார். அது ஒரு பெரிய வண்டிக்கு (இது இயந்திர வண்டி; மாடு தப்பித்தது) மாறி நகரத்தை விட்டு வெளியே செல்லும். 'கூடா' மனிதர் வராத நாளில் (அது வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள்), வீட்டுக் குப்பை அளவு அதிகமாகும். ஆக ஒரு விதமான கிராம/நகர இடத்திலிருந்து மாநகரத்துக்கு மாறுகையில், வீட்டுக் குப்பை அதிகமாயிற்று. வீட்டிலே குப்பை சேகரத்திற்கென்று தனியான குப்பைத் தொட்டி - பிளாஸ்டிக்கில்! குப்பையை வீட்டிலே சேமித்து வைப்பது, முன்னேற்றத்திற்கு அடையாளமானது!!


பின் நாடு விட்டு நாடு வந்து அமெரிக்க வாசத்தில் வீட்டுக் குப்பை தொட்டி அளவிலே பெருத்தது - காரணம், இங்கு தினந்தோரும் வீட்டுக் குப்பையை யாரும் எடுத்துச் செல்வதில்லை. வாரம் ஒரு முறை அல்லது இரு முறை - இரண்டுக்கும் தனித் தனிக் கட்டணம். அதிலும், நேரத்திற்கு (முதல் நாள் மாலையே) குப்பைத் தொட்டியை வீட்டு வாசலில், அதற்குறிய இடத்தில் வைக்க வேண்டும். வேளை தப்பினால் வீட்டிலே இருவாரக் குப்பை. எடுத்துச் செல்லும் இயந்திர வண்டி (பெரிய லாரி), தன் இயந்திரக் கரத்தால் குப்பைத் தோட்டியைத் தூக்கி, கவிழ்த்து குப்பை வண்டியில் விழுந்த பின், தொட்டியை வைத்துவிட்டு செல்லும். அதனால் தொட்டி எந்தப் பக்கம் பார்த்து இருக்கிறது என்றெல்லாம் சரிபார்த்து வைக்க வேண்டும்! இல்லையென்றால் பாதி குப்பை பெட்டிக்குள்ளேயே இருக்கும்.

இந்தப் பெரிய குப்பைத்தொட்டி அனேகமாக எல்லா வீட்டு காரேஜிலோ அல்லது வீட்டுப் பின்புறமோ தனியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விட்டிற்கு வெளியே வந்து குப்பையைப் போடுவது இயலாத ஒன்று - அதுவும் பனி பெய்யும் குளிர் காலத்தில். அதனால் வீட்டிற்குள்ளே சிறு குப்பைத் தொட்டிகள். அதுவும், குப்பை வாரியாக - சமையலறை குப்பைத் தொட்டி தனி விதம்; குளியலறை குப்பைத்தொட்டி வேறு விதம்; தவிர பாட்டில், காகிதம் என்று மறுசுழற்சி (recycle) செய்யும் பொருள்களுக்கான குப்பைத் தொட்டி வேறு. நம்மூர் சாப்பாடு சாப்பிட்டு, தட்டில் உள்ள கருவேப்பிலை, முருங்கைக்காய் சக்கை எல்லாம் தட்டைக் கழுவும் தொட்டியில் போட முடியாது - அங்கு 'garbage dispenser' இருந்தாலும் கூட. முருங்கைக்காய் தொட்டியில் மாட்டிக் கொண்டு அதை சுத்தம் பண்ணுவதற்கு முன் பசி வந்து இன்னுமொரு முறை சாப்பிட வேண்டிருக்கும்..


தவிர, இந்தக் குப்பைத் தொட்டி மூன்று-நான்கு நாட்களுக்கான குப்பை சேகரம் பண்ணுவதால், அளவிலும் பெரிதாக இருக்க வேண்டும், மூடியோடு கூட வேறு இருக்க வேண்டும் – இல்லையென்றால் நம் சுவாசம் பாதிக்கும்! குப்பையை நேரடியாக பெட்டியில் போடவும் முடியாது; அப்புறம் பெட்டியை யார் அலம்பி சுத்தம் செய்வது? இதற்கென்று ஒரு பிளாஸ்டிக் பை! அதிலும் வகை வகையாய் இருப்பதால் (நல்ல வாசனையோடு இருக்கும் பைகளும் உண்டு), கடையில் இதைத் தெரிந்தெடுக்கவே நேரமாகும். இதெல்லாம் போதாதென்று குப்பைத் தொட்டியை இளப்பமாகவும் வாங்க முடியாது - வீட்டிற்கு ஏற்ற சமையலறை; சமையலறைக்கேற்ற குப்பைத் தொட்டி. இந்தியாவில் இருக்கையில் உபயோகித்த பிளாஸ்டிக் போய் பள பளபளவென்றிருக்கும் எவர்சில்வர் குப்பைத் தொட்டி வாங்கியாகிவிட்டது. அனேகமாக முக்கால்வாசி வீட்டில் இது தான் சமையலறையில் இருக்கும்.

சாப்பிட்ட கையோடு மூடியைத் திறக்க முடியாதென்று, தொட்டியின் அடியில் ஒரு பெடல். அழுத்தினால் மூடி திறக்கும். நம்மூரில் பிளாஸ்டிக் பெட்டி அதிக நாள் வராது; உடைந்து போகும், வேறு வாங்க வேண்டும். இங்கு நிறைய நாள் உபயோகிக்கலாமே என்று நினைக்க வேண்டாம். அழுத்தும் பெடல் - பிளாஸ்டிக். கொஞ்ச நாளில் உடைந்து போகும் - அப்போது மூடியை கையால் தான் தூக்க வேண்டும். தூக்கிப் போட்டு புதிது வாங்கி விட மனசு வரவில்லை. நான் வளர்ந்த விதம் தனி! பள பளவென்றிறுக்கும் இதை தூக்கிப் போடுவதா என்று யோசனை. இதனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக பெடல் இல்லாத தொட்டி. சரி நாம் தான் இப்படி என்றால் ஒரு நண்பர் (அவரும் நம்மூரிலிருந்து குடி பெயர்ந்தவர்) வீட்டுக்குப் போயிருந்த போது அவர் வீட்டு சமையலறையிலும் இதே போன்று ஒரு பெடல் இல்லாத எவர் சில்வர் தொட்டி!!

சரி ஒரு பொது விஷயம் இருக்கிறதே என்று பேசிக் கொண்டிருந்தோம். இந்த குப்பைத் தொட்டி தயாரிக்கும் நிறுவனங்களை திட்டினோம் - வருமானத்துக்காக வேண்டுமென்றே இப்படி செய்கிறார்களே என்று. வீட்டிற்கு வந்திருந்த மூன்றாவது நண்பர் - அவரும் நம்மூர் தான் - புதிதாக எவர்சில்வர் பெடலோடு வந்த தொட்டி வாங்கியதாகவும், அதுவும் கொஞ்ச நாளில் உடைந்து போய் விட்டது (காரணம் பெடலை தொட்டியோடு இணைக்கும் கம்பி பிளாஸ்டிக்!!) என்றும், அந்தப் பெடல் எவர் சில்வர் என்பதால் அதை தூக்கிப் போடாமல் கராஜில் வைத்திருப்பதாகவும் சொன்னார்! சரி நாமே தேவலை என்றுதான் தோன்றியது.

வாழ்க்கையில் அதிக விஷயங்களில் முன்னேற்றம் இருந்தாலும் இந்த குப்பை மட்டும் முந்நாளை விட இந்நாளில் ரொம்பவும் நெருங்கி இருப்பதை நினைக்கும் போது மனது கொஞ்சம் வருத்தப்படத்தான் செய்கிறது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிறு வயதில் சராசரியாக வீட்டில் இருந்த குப்பையை விட, இப்போது மூன்று அல்லது நான்கு மடங்கு - அதுவும் மிக அருகே! இது ஒரு விதமான பின்னிறக்கம் தான்!! தொடர்ச்சி அடுத்த பதிவில்.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

http://thulasidhalam.blogspot.com/2009/08/blog-post.html

Please post pictures as well like in above post - it will give the perspective to readers.

ரங்கா - Ranga சொன்னது…

Thanks Anonymous; I have to learn how to post pictures.....will do in future.

துளசி கோபால் சொன்னது…

ரங்கா,

நல்ல பதிவு.

குப்பை இப்போ பெரிய பிரச்சனையா ஆகிக்கிட்டு வருது.

நான் இங்கே வருமுன்பே நம்மைப் பத்திச் சொல்லிப்போன அனானி நண்பருக்கு நன்றியை இங்கே சொல்லிக்கறேன்.

ரங்கா - Ranga சொன்னது…

வாங்க துளசியம்மா. எனக்கு குப்பையால இரட்டிப்பு பிரச்சனை; இரண்டாம் பதிவும் போட்டாச்சு. வந்து பாருங்க.

வல்லிசிம்ஹன் சொன்னது…

குப்பையில் இவ்வளவு எழுத முடியுமா.:))

நான் தயாரா இருக்கேன் ரங்கா. அடுத்த பகுதிக்குப் போகிறேன்!

ரங்கா - Ranga சொன்னது…

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க - குப்பையில எவ்வளவு விஷயம் இருக்கு தெரியுமா? :-) என்னால எழுத முடியுமாங்கறதுதான் உண்மையான கேள்வி.