புதன், மே 10, 2006

வீடு!

நேற்று மாலையில் அலுவலகத்திலிருந்து வரும்போது அந்தப் புது வீட்டின் வாசலில் பலகை வைத்திருந்தார்கள் – For Sale - என்று. மனதிற்குள் ஒரு வருத்தம் கலந்த சந்தோஷம்.

நான் அலுவலகத்திலிருந்து திரும்பும் வழியில் ஒரு தெருவில் கடைசி வீடு அது. தெரு முனை என்பதால், மெதுவாகத்தான் திரும்ப வேண்டும்; சில சமயம் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக சில நிமிடம் நிற்கவும் வேண்டும். தினமும் பார்ப்பதால் அந்த வீட்டோடு ஒரு அன்யோன்யமான நட்பு - வீட்டோடு நட்பா என்று கிண்டலெல்லாம் வேண்டாம் - ஒரு பரிச்சயம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

முன்பு அங்கு ஒரு பழைய வீடு - ஒரு மாதிரி மரப் பழுப்பு வண்ணத்தில் - இருந்தது. வீட்டிலே யாரும் வசித்ததாகவும் தெரியவில்லை. கிட்டத்தட்ட நான்கு மாதத்திற்கு முன்னால் திடீரென்று ஒரு நாள் அந்த வீட்டின் அருகில் பெரிய பெரிய இயந்திரங்கள் - புல்டோஸர். தெருவுக்குள் போக ரொம்ப நேரமாயிற்று - வழி அதிகம் இல்லாததால். அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறு வழியில் (கொஞ்சம் சுற்று வழி) வீட்டுக்கு வந்ததால் என்ன நடந்தது என்று விபரம் தெரியாது. மறுபடியும் வழக்கமான பாதையில் வந்தால், வீடு இருந்த இடத்தில் வெறும் குழி - ஒரு குட்டி மலை போல மண்ணைக் குமித்திருந்தார்கள். ‘Free Fill Dirt’ என்ற பலகை அருகில் இருந்தது.

அடுத்த வாரம் அந்த மண்ணைக் காணோம் - பதிலாக குழியின் பக்கங்களில் கான்கிரீட் ப்ளாக்குகள் வைத்து சுவர். அடுத்த வாரம் தளம் தயார், மரச் சட்டங்கள் வந்து இறங்கின. ஒரு வாரத்திற்குள் இரு நிலைகள் கொண்ட வீட்டின் ஃப்ரேம் தயார். கிடு கிடுவென வீடு வளர்ந்தது. பின்பு வாசல் படி, ஜன்னல்கள், கராஜ் கதவுகள் என்று ஒவ்வொன்றாக வந்தது. சென்ற வார ஆரம்பத்தில் வாசல் சாலை ரெடி; பின்பு வாசல் புல்வெளி. நேற்று வீடு விற்பதற்கான பலகை. ஒரு மாதிரியான மங்கின சந்தனக் கலர் வீடு - குறைந்தது $750,000 ஆவது இருக்கும்.

அழகான வாசல் படி, உயரமான கூரை, நிதானமான அதே சமயம் ஒளி நன்றாக வரும் விளக்கு, Bay Window, என்று வீடு அழகாக இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக மனத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் அந்த பழுப்பு நிற வீட்டை நினைத்து மனம் ஏன் வருந்துகிறது என்று தெரியவில்லை.

பொதுவாக வீட்டைப் பற்றி என் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் தான் சிறுவனாக தாத்தா வீட்டில் (தஞ்சாவூர் அருகில் வழுத்தூர்) இருந்தது, வீட்டிற்கு எப்படி மண் சாந்து (களிமண்ணை அரைத்து, கடுக்காய் நீர் விட்டு, செங்கலைப் பூசுவது) பூசுவது, எப்படி ஓடு மாற்றுவது என்றெல்லாம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன் நடந்தது அவருக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. பூசுவதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருளைக் கேட்டால் வித்தியாசமாக இருந்தது - உ.ம். பசுஞ்சாணி, கடுக்காய், துவரை விதை உறை, சுண்ணாம்பு, காவி, களிமண். பெரிய பணக்காரர்கள் வீட்டில் வாசலுக்கு இந்தக் கலவையொடு முட்டையையும் அரைத்துப் போடுவார்களாம் - பளபளப்புக்காக!

நான் பார்த்து வளர்ந்த இந்தப் புது வீட்டில் பூசப்பட்டது எல்லாம் செயற்கையான பொருட்களே; வெளியில் வந்த புல் தரை கூட ஏதோ ஒரு இடத்தில் வளர்த்த புல்; இரண்டு அங்குலத் தரையோடு சேர்த்து எடுத்து வந்து கம்பளம் விரிப்பது போல் விரித்து தண்ணீர் விட்டு ஒரே நாளில் தயார் பண்ணி விட்டார்கள்.

அதனால்தான், மூன்றே மாதத்தில் சகல வசதிகளோடு அழகாக வந்துவிட்டதில் மனது சந்தோஷப்பட்டாலும், பழைய வீட்டை மனசு நினைத்து வருந்துகிறதோ? இன்னும் கொஞ்ச நாளில் அந்த பழைய வீட்டின் நினைவு முற்றிலும் மறந்து போய் இந்தப் புது வீட்டில் வைத்துள்ள ரோஜாச் செடிகளையும், புல்வெளியையும் மட்டுமே நினைவில் வைத்துக் கொள்வேனோ என்னமோ.

7 கருத்துகள்:

neyvelivichu.blogspot.com சொன்னது…

the old house might have sold for 450, 500k.. now they have modified the whole house with another 15o k and this will sell for 750 800.. so you know why the new house is for sale so soon..

by the way .. did you enquire how much does that cost..

anbudan vichchu

ரங்கா - Ranga சொன்னது…

Vishy,

I do not know the numbers. It's possible - cost of construction is possibly around 150-200, plus old house purchase cost of 450+. And a potential margin of 100K. But the market is dull.

Ranga.

Unknown சொன்னது…

Nanraaga irundhadhu...

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி பாலா.

ரங்கா.

Alex Pandian சொன்னது…

apdiye oru photo-vum pudichchu pottirukkalaame.:-)

ரங்கா - Ranga சொன்னது…

அலெக்ஸ்,

அது கொஞ்சம் பிரச்சனை - வீட்டு சொந்தக்காரர் அனுமதியில்லாமல் படம் எடுப்பது 'வேலியில் போகும் ஓணானை காதிலே விட்டுக் கொண்ட கதையாகி விடும்' ;-]

ரங்கா.

குமரன் (Kumaran) சொன்னது…

:-)