ஞாயிறு, மார்ச் 19, 2006

ஆரோக்கியம்!

சிறு வயதில் கேட்ட ஒரு கதை. வயதானாலும் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு கிராமத்துப் பெரியவரை, 'உங்கள் ஆரோக்கியத்திற்கு காரணம் என்ன?' என்று கேட்ட போது இவ்வாறு பதில் கூறினாராம்.

‘ஓரடி நடவேன்
ஈரடி நில்லேன்
இருந்து உண்ணேன்
கிடந்து உறங்கேன்’

இதன் பொருள்:
ஓரடி நடவேன் - அதாவது என் நிழல் ஓரடியாக இருக்கும் காலத்தில் - மதியம் (உச்சி வெயில் காலம்) வெளியே நடக்க மாட்டேன்.
ஈரடி நில்லேன் - ஈரப்பதமான இடத்தில் (வெறுங்காலுடன்) நிற்க மாட்டேன்
இருந்து உண்ணேன் - முதல் வேளை உண்ட உணவு வயிற்றில் இருக்கையில் உண்ண மாட்டேன்
கிடந்து உறங்கேன் - தூக்கம் வருவதற்கு முன் படுக்கையில் புரண்டு கிடந்து உறங்க மாட்டேன் (அதாவது, நன்கு உழைத்து களைப்போடு வந்து படுத்தவுடன் உறங்கி விடுவேன் - உறக்கம் வராத போது படுக்கையில் கிடந்து உறங்க மாட்டேன்).

என்னுடைய தற்போதைய வாழ்க்கையிலும் இதை நான் கடைபிடிக்கிறேன் - அந்தப் பெரியவரின் ஆரோக்கியம் இருப்பதாகத் தெரியவில்லை.

நானும் ஓரடி நடப்பதில்லை - காலை வேலைக்கு வரும் போது அனேகமாக சூரியன் உதித்திருப்பதில்லை; மாலை வீடு திரும்பும் போது அஸ்தமனம் ஆகியிருக்கும். இருக்கும் இருபதாவது மாடியிலிருந்து மதியம் வெளியே போவது கிடையாது!

ஈரடி நிற்பதில்லை - வெறுங்காலுடன். வேறு வழியே இல்லாமல் வீட்டின் வாசலில் இருக்கும் இரண்டடிப் பனியை எடுத்துப் போடுவதற்கு, இரண்டு-மூன்று சட்டைகள், கோட்டு, குல்லா, மப்ளர், கையுறை, காலுறை (இரண்டு), ரப்பர் பூட்ஸ் என்றெல்லாம் மாட்டிக் கொண்டுதான் போகிறேன்.

இருந்து உண்பதில்லை - காலையில் அலுவலகத்திற்கு வரும் அவசரத்தில் ஒரு காப்பியைத் தவிர உண்பதில்லை; மதியம் மீட்டிங்குகளுக்கு இடையில், சமயம் கிடைக்கும் போது உணவு! இரவு வீட்டிற்கு போகும் வழியிலேயே பசிக்க ஆரம்பித்து விடுகிறது!

கிடந்து உறங்குவதில்லை! நிறைய நாட்கள் வீட்டில் சாப்பிட்டு முடித்த உடனேயே தூக்கம் வந்து விடுகிறது - மனைவி, குழந்தைகள் பேச்சுக்கு அந்த அரைகுறை தூக்கத்திலேயே பதில். கிடந்து உறங்குவதற்கு பதில் உட்கார்ந்தே உறக்கம்.

மொத்தத்தில் நானும், ‘ஓரடி நடவேன்; ஈரடி நில்லேன்; இருந்து உண்ணேன்; கிடந்து உறங்கேன்’. ஆனால் ஆரோக்கியம்?!

1 கருத்து:

குமரன் (Kumaran) சொன்னது…

அடியேனும் ஓரடி நடவேன்; ஈரடி நில்லேன்; இருந்து உண்ணேன்; கிடந்து உறங்கேன்.இருந்தாலும்???? :-(