ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

சரியா? சந்தோஷமா?

சரியா? சந்தோஷமா?

இரண்டு வாரமாக வேலை அதிகம். இணையத்தில் படிக்க நேரமில்லை; பதிய இன்னமும் அதிகம் நேரம் தேவையாதலால் பதியவும் இல்லை. இந்த இரண்டு வார வேலை பளுவில் அதிக நேரம் மத்தியஸதம் செய்வதிலும், மாறுபட்ட இலக்குகளுக்கிடையே ஒரு விதமான சமரசம் செய்வதிலும் செலவானது. அப்போது தோன்றிய ஒரு பொ.போ.பொ. (பொழுது போகாத பொம்மு) சிந்தனைதான் இது. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இந்த பொ.போ.பொ. பிரபலம் - ஒரு பிரதானமான வாரப் பத்திரிகையில் வந்த கார்ட்டூன். குமுதமா அல்லது விகடனா என்று நினைவில் இல்லை.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் வித விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் ஒரே விதமான விடை கிடையாது. எல்லா பிரச்ச்னைகளையும் ஒரே விதமாக வகைப்படுத்தவும் முடியாது. ஆனால் பெரும்பான்மையான சச்சரவுகள் ஒரே விதமான மூல காரணத்தினாலேயே வருகிறது என்று நினைக்கிறேன்.

சிறு வயதிலிருந்தே ஒரு விஷயம் சரியானதாக இருப்பதே நம் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ற பாடம் பதிந்துவிட்டது. உதாரணமாக பரீட்சையில் விடை சரியாக இருந்தால், மதிப்பெண் வரும், அதனால் மகிழ்ச்சி. அதனால் நம் மனதில் நம் எண்ணம், நம் கோணம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக சக்தி செலவழிக்கிறோம். எப்போது நம் கருத்து நமக்கு சரி எனப் பட்டு மற்றவரோடு அது ஒத்துப் போகவில்லையோ அப்போது சச்சரவுதான். நாம் நம்முடைய விடை சரி என்று முழு மதிப்பெண் எதிர்பார்த்து இருக்கையில், விடை திருத்தும் ஆசிரியர் நம் எதிர்பார்ப்போடு ஒத்துப் போகாமல் மதிப்பெண் குறைத்துப் போட நமக்கு வருவது கோபம், வருத்தம்தான்.

அந்த நேரத்தில் ஆசிரியர் ஒருவிதமான விடையை எதிர்பார்க்கிறார் என்று புரிந்து விட்டால், நமக்கு சரி என்று தோன்றுவதை எழுதாமல், ஆசிரியர் எது சரி என்று எதிர்பார்ப்பார் என்று புரிந்து கொண்டு அதை எழுதி மதிப்பெண் வாங்க முயற்சிப்போம். அந்த சிறு வயது பக்குவம் வயது ஆக ஆக குறைந்துவிடுகிறது. நம் கருத்து சரி என்று அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை வந்து விடுகிறது. மற்றவர் கருத்து நம்முடைய கருத்தோடு ஒத்துப் போகாத போது, அது தவறு என்று உடனேயே முடிவெடுத்து, தவறான கருத்தை திருத்த வேண்டும் என்ற ஒரு வேகம் வந்து விடுகிறது. அது மட்டுமல்ல, இந்த திருத்தும் முயற்ச்சியை ஏதோ ஒரு பொது நலத்துக்காக செய்வது போல கற்பனை பண்ணிக் கொண்டு, "என்னதான் இருந்தாலும் ஒரு principle வேண்டும்" என்றெல்லாம் நம் கருத்தை நியாயப்படுத்தி விடுகிறோம்.

இதை ஈகோ என்றும் சொல்லலாம்; பிடிவாதம் என்றும் சொல்லலாம். அலுவலகத்தில் நான் பார்த்த எந்தப் பிரச்சனையையும் உயிரையும் விடத் தகுந்த உயர்ந்த குறிக்கோள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும், அனைவருக்குமே இந்த ஈகோ பிரச்சனையால் தேவையில்லாத விரயம். என் கருத்தை மற்றவர் தவறு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, 'சொன்னால் சொல்லட்டுமே' என்று திரும்பிப் போகக் கற்றுக் கொண்டாலே பாதி சச்சரவு போய் விடும். அப்படி திரும்பிப் போவதால் இரு தரப்பிலும் மகிழ்ச்சிதான். பள்ளியில் படிக்கும் போது இயல்பாக வந்த இந்தத் தன்மை எப்படி தொலைந்து போனது என்று தெரியவில்லை.

கொஞ்சம் யோசித்தால் இந்த ஈகோவிற்காக நம் மகிழ்ச்சியைத் துறக்கக் கூடத் தயாராக இருக்கிறோம். இன்னமும் சொல்லப் போனால் தங்கள் குடும்ப மகிழ்ச்சியைக் கூட தியாகம் செய்து தம் கருத்து சரி என்று வாதிடுகின்ற மக்களை இப்போதும் நாம் பார்க்கிறோம். ஒரு கருத்துக்காக உயிரைக் கூட விடுகின்ற மக்களை சமயத்தில் நாமே ‘தியாகி’ என்றெல்லாம் உயர்த்திப் பேசுகிறோம். அந்த அளவிற்கு நம் வளர்ப்பில், வாழ்க்கை முறையில் கருத்துக்கு உயர்ந்த இடம் கொடுத்து, அதன் பொருட்டு கஷ்டத்தையோ, துயரத்தையோ ஏற்பது கூட உன்னதமானது என்று ஆதி காலம் தொட்டு பாடங்கள் இருக்கின்றன.

இது எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை. உயர்ந்த குறிக்கோளுக்காக உயிரையும் விடலாம் என்ற ரீதியில் நிறையப் படித்தாலும், எது உயர்ந்தது என்ற நிர்ணயம் செய்வது அவ்வளவு சுலபமாகத் தோன்றவில்லை. அரசியல் தலைவர்கள் கைதுக்கெல்லாம் தீக்குளிக்கும் செய்தியைப் படிக்கையில் இது சுத்தப் பைத்தியக்காரத்தனமான விஷயம் என்று தோன்றுகிறது.

மற்றவர் என் கருத்து தவறு என்று சொல்வதைக் கேட்டு வாதம் செய்யக் கிளம்பால் இருந்தாலே மகிழ்ச்சி தானாக வரும் என்றுதான் தோன்றுகிறது. என் கருத்து சரியாக இருப்பதாக ஊர்ஜிதம் செய்ய வேண்டுமா? அல்லது எனக்கும் மற்றவருக்கும் சந்தோஷமும் திருப்தியும் வேண்டுமா? என்று கேட்டால் இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுப்பேன். இந்த ஞானோதயம் இப்போதுதான் வந்திருக்கிறது; நடைமுறையில் எப்படி செயலாகிறது என்று கொஞ்ச நாள் கழித்துத்தான் தெரியும்.

4 கருத்துகள்:

Tamil Home Recipes சொன்னது…

சிந்திக்க வைக்கும் எழுத்து

பெயரில்லா சொன்னது…

//இந்த ஞானோதயம் இப்போதுதான் வந்திருக்கிறது; நடைமுறையில் எப்படி செயலாகிறது என்று கொஞ்ச நாள் கழித்துத்தான் தெரியும்.//

உங்கள் ஞானோதய வெற்றியின் பலனை அறியக் காத்திருக்கிறோம்.

எங்கும், எதிலும், எப்பொழுதும் வெற்றி உண்டாகட்டும்.

Saravanan AR சொன்னது…

yes, Ranga.

as you say, my friend is also used say one saying, very frequently...

"argument wins the situation; but, loses the person"

nowadays, i'm also practising onthing - "I may conflict with others' thoughts; but not with the person".

At the end of any argument/discussion, we should come to a conclusion which is acceptable (atleast, to some extend) by everyone;

sinehamudan,
saravanan.ar

ரங்கா - Ranga சொன்னது…

Thanks for the comments Saravanan. One Lawyer friend told me once: "At times you have to be willing to lose some arguments to win the case; at times you should be willing to lose cases to win a client. Its far more satisfying to win a client than an argument".

Ranga.