திங்கள், ஜூலை 31, 2006

சுயநலம்

பள்ளியில் படிக்கும் போது மோசமான குணங்களில் ஒன்று சுயநலம் என்று பெரும்பான்மையான ஆசிரியர்கள் சொன்னார்கள். பாடங்களிலும், சுயநலம் எவ்வளவு மோசமானது என்பதை விளக்கும் கதைகள் இருந்தன. போதாதற்கு, வீட்டிலும், பழகிய ஏனைய பெரியவர்களும் இது தவறு என்பது போன்றே சொன்னார்கள். பொதுவாக மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்; அதுமாதிரி இல்லாமல் நாமே அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால் அது சுயநலம் என்ற மாதிரி விளக்கம் வந்தது. அதிகமாக யோசிக்காமல், இதர பழக்க வழக்கங்கள், குணங்கள் போன்று (உ.ம். நகம் கடிக்காமல் இருத்தல், போய் பேசாது இருத்தல்) சுயநலம் பற்றிய ஒரு முடிவையும், அதிகம் விவாதிக்காமல் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் இது வரை வந்தாயிற்று.

வெளியுலகில், முக்கியமாக அலுவலக வாழ்க்கையில், பொய், சுயநலம் போன்றவற்றிற்கு எக்கச்சக்கமான விளக்கங்கள் கிடைத்தன. வயது ஏற ஏற, வரும் அனுபவங்கள் இது போன்று கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்ட குணங்களையும், வழக்கங்களையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வைத்தன. ஏற்கனவே பொய்/உண்மை பற்றி எனக்குத் தோன்றியவற்றை ஒரு பதிவாக எழுதியிருக்கிறேன். இங்கு சுயநலம் பற்றி நான் புரிந்து கொண்டதையும், பார்த்ததையும், புரியாததையும் பற்றி பதிந்திருக்கிறேன்.

என்னுடைய எந்த செயலும் ஒரு எதிர்பார்ப்பை ஒத்தே எடுக்கப் படுகிறது. எனக்கு சொந்தமாக ஒரு லாபத்தைத் தரா விட்டாலும் கூட, ஒரு எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கிறது. அது எனக்கு 'கடமையச் சரிவர செய்துவிட்டோம்' என்கிற திருப்தியையோ, அல்லது எனக்கு ஒரு நல்ல நினைவை, மன சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது என்பதாலேயோதான் ஒரு செயலைச் செய்கிறேன். நிர்பந்தமாய் எனக்குப் பிடிக்காத செயலைச் செய்வதற்கும் என்னுள் இருக்கும் ஒரு எதிர்பார்ப்பே காரணம். ஒரு உதாரணத்துக்கு வைத்துக் கொண்டால் கூட, ஒருவர் என்னை ஒரு கத்திமுனையில் மிரட்டி பணத்தை திருடிக் கொள்ளும் போதும், நான் பணத்தைக் கொடுக்க 'பணத்தைக் கொடுத்தால், கத்தியால் குத்து விழாது' என்ற ஒரு எதிர்பார்ப்பு முக்கியமான காரணம். எதிர்பார்ப்பு இல்லாமல் காரியங்கள் செய்ததாக நினைவில்லை. இந்த எதிர்பார்ப்பையும், என் மனமகிழ்ச்சியையும், நல்ல நினைவையும், சுயநலம் என்று சொன்னால் என்னுடைய எல்லாச் செயல்களும் சுயநலத்தை எண்ணியே செய்ததாக அர்த்தம் (பொருள்) வருகிறது.

என்னுடைய எல்லாக் காரியத்திலும் கொஞ்சம் சுயலநம் இருப்பதால் விளக்கத்தை சற்று மாற்ற வேண்டியிருக்கிறது. நான் செய்யும் ஒரு காரியத்தில் எனக்கு வரும் நலம், என்னைத் தவிர மற்றவர்களுக்கு வரும் நலத்தை விட அதிகமாக இருந்தால் அது சுயநலம்; மற்றவருக்கு நலம் அதிகமாகக் கிடைத்தால் அது சுயநலம் இல்லை. (நாயகன் திரைப்படத்தில் வரும் வசனம் போல: "நாலு பேருக்கு நல்லது கிடைச்சுதுன்னா எதுவுமே தப்பில்லை"). அதாவது ஒரு செயலில் மற்றவருக்கு கிடைக்கும் நலத்தைவிட சுயநலம் குறைவாக இருக்கிறது.

ஆனால் இந்த இரண்டு விளக்கங்களுமே எனக்கு சரி என்று தோன்றவில்லை. பெரும்பான்மையான மக்கள் வலியப் போய் குற்றங்கள் செய்வது இல்லை; யாரும் கண்டுபிடிக்கப் போவதில்லை என்றால், மற்றவர்களுக்கு அதிகம் நஷ்டம் வராத ஒரு செயலை, அதிலும் அந்த செயலினால் சுயலாபம் வரும் என்றால், செய்யத் தயாராகவே இருக்கிறார்கள். முதல் விளக்கத்தைப் பார்த்துவிட்டு 'எல்லோருமே சுயநலவாதிகள் தான்; ஆகையால் நான் லஞ்சம் வாங்குவது தவறில்லை' என்று நியாப்படுத்தி விடுவார்களோ என்ற பயம் இருக்கிறது. இரண்டாவது விளக்கம் அதைவிட மோசம். ஒரு மந்திரி 'ரோடு போடும் பணியை அனுமதித்தால், லட்சக்கணக்கான மக்களுக்கு நலம் வரும், ஆகையால் காண்ட்ராக்டரிடம் 10% வாங்கினால் என் சுயநலத்தின் மதிப்பு பொதுநலத்தின் மதிப்பை விடக் குறைவானதுதானே. என்ன தவறு?' என்று சொல்லலாம்.

இதற்கு 'சுயநலம் இருப்பது தவறில்லை; அது அதிகமாகப் போய், ஒருவரின் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி செயல்களைச் செய்யச் சொன்னாலோ அல்லது, மற்றவரின் வாழ்வை, அமைதியைக் குலைக்கும் வண்ணம் இருந்தாலோ தவறு' என்று சொல்வது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதே சமயம், பாலகனாய் இருந்த போது இருந்த தெளிவு, இப்போது - அனுபவமும், அறிவும் அதிகமான போது - இல்லையே என்ற வருத்தமும் வருகிறது. 60 அல்லது 70 வயதிலாவது சரி, தவறு என்ற வித்தியாசம் புரிந்து, தெளிவும் வருமா? தெரியவில்லை; ஆனால் எதிர்பார்ப்பு இருக்கிறது.

2 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

Good Analysis Ranga Annaa

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி குமரன்.

ரங்கா.