செவ்வாய், ஜூலை 04, 2006

மனதில் நின்ற ஆசிரியர் - திரு சந்தானம் ஸார்

சிறு வயதில் இருந்து இன்றும் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள், அதிலும் முக்கியமாக பள்ளி ஆசிரியர்கள் எத்தனையோ பேர். எல்லோரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று ஆசை. இந்த வாரம் அமெரிக்க விடுதலை நாளுக்காக வாண வேடிக்கைகள் வீட்டுக்கு அருகில் எங்கு இருக்கும் என்று இணையத்தில் தேடுகையில், இந்த மத்தாப்பு, வெடியில் இருக்கும் இரசாயனப் பொருள்கள் பற்றியும் ஒரு இணையப் பக்கத்தில் பார்த்தேன். எனக்கு +1 / +2 வில் வேதியல் சொல்லிக் கொடுத்த மறைந்த திரு சந்தானம் ஸார் ஞாபகம் வந்தது.

சந்தானம் ஸார் சொல்லிக் கொடுத்த வேதியலை விட, உலக/நாட்டு நடப்புகள், மனோதத்துவம் பற்றிய அவர் 'பொன் மொழிகள்', இன்னமும் நினைவில் நிற்கிறது. ஒரு சந்தோஷமான வித்தியாசமான மனிதர். சாந்துப் பொட்டு இட்டுக் கொண்டுதான் வருவார். அனேகமாக அத்தனை மாணவர்களையும் பற்றி தெரிந்து வைத்திருப்பார். இவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை; மாணவரை அடித்தும் நான் பார்த்தில்லை. வழக்கமாக முதல் வகுப்பு (பீரியட்) அவருடையது தான். மன்னார்குடி தேசியப் பள்ளியில் அப்போது முதல் இரண்டு வகுப்புகள் 45 நிமிடங்கள்; மற்ற வகுப்புகள் எல்லாம் 40 நிமிடங்கள். முதல் வகுப்பில் தான் இந்த பதிவேடு (அட்டென்டன்ஸ்), லீவ் லெட்டர் (விடுப்பு விண்ணப்பம் என்று எழுதினால் கொஞ்சம் செயற்கையாகத் தோன்றுகிறது; தமிழ் வித்தகர்கள் மன்னிக்க!) சமாச்சாரமெல்லாம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று லீவ் லெட்டராவது இருக்கும். ஒவ்வொன்றாகப் படித்து ரசித்து சிரிப்பார்; விமர்சிப்பார்!

லீவ் லெட்டரைப் பொறுத்தவரை ஒரு எழுதாத சட்டம், அது ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும். பெரும்பான்மையான மாணவர்கள் தமிழ் வகுப்பில் படித்து விட்டு, +1 ல் ஆங்கில வகுப்புக்கு மாறியிருப்பார்கள் (நானும் எட்டாவது வரைக்கும் தமிழ் மீடியம் தான்; பத்தாவது வரைக்கும் ஆங்கிலத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தது; அப்புறம் தயக்கம் பழகி விட்டது!). ஆறாவது/ஏழாவது வகுப்பில் ஆங்கிலப் பாட வகுப்பில் இந்த லீவ் லெட்டர் ஒரு கட்டுரை மாதிரி இருக்கும். ஆகையால் எல்லா மாணவருக்கும் இது தெரியும். இவர் கிண்டலுக்கு பயந்தே எல்லோரும் எந்த காரணமாக இருந்தாலும், இந்த கட்டுரையில் வந்தது போல் லீவ் லெட்டர் எழுதிவிடுவோம்! “As I am suffering from fever, I humbly request you to grant me leave for two days”. நாள் மட்டும் தான் மாறும். இதை சுட்டிக்காட்டி சிரிப்பார். "கல்யாணத்துக்காக திருச்சி போயிருக்கான்; இருந்தாலும் அதே லெட்டர்! அது மட்டுமில்லை. Father’s signature என்று எழுதி ஒரு X குறி வேறு போட்டிருக்கான். நல்லாப் படிச்சு கவர்மெண்ட் உத்தியோகத்தில் அப்பா இருக்கார்; இருந்தாலும் அப்பன் தற்குறின்னு இவனே சொல்றான்!" என்று சொல்லி சிரிப்பார்.

தினசரி நடக்கும் விஷயங்களிலும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை இவரிடம் உண்டு. "பாத்திருக்கியாடா?" என்று தான் ஆரம்பிப்பார். "ஒரு ரூபாய் கடன் கொடுக்கிறியா? என்று கேட்டால், 'என்னிடம் பணம் இல்லை' என்று மட்டும் சொல்ல மாட்டான்! சட்டைப் பையையோ, பர்ஸையோ திறந்தும் பார்த்துவிட்டு காட்டுவான். ஏன் தெரியுமா? எங்கே நமக்கே தெரியாமல் ஒரு ரூபாய் வந்திருக்குமோ? என்று ஒரு நப்பாசைதான். இவன் கிட்ட ரூபாய் இருக்காது என்று கேட்பவனுக்குத் தெரியாதா என்ன? இரண்டு பேரும் கிளாசுக்கு மட்டம் போட்டுட்டு சேர்ந்து தானே மாட்னி போனாங்க?!"

எங்கள் வகுப்பு மாடியில் இருந்தது, ஜன்னலிலிருந்து ரோடை பார்க்கிற மாதிரி. ஒரு முறை ரோட்டில் ஏதோ ஊர்வலம் போனது. எல்லொரும் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னது: "பாத்தியாடா? 'வரி கொடுக்க மாட்டோம்'ன்னு சொல்றத்துக்கு ஒரு ஊர்வலம். கொஞ்ச தூரம் போனதும் பள்ளம் தடுக்கி கீழே விழுவான்! அப்ப முனிசிபாலிடியைத் திட்டுவான் - 'ரோடு ஒழுங்காப் போடலை'ன்னு. ஏண்டா - நீ வரி கொடுத்தாத் தானே அவன் ரோடு போட முடியும்?!"

எனக்கு வேதியல் சுத்தமாக மறந்து போனாலும், வாழ்க்கையை 'ஓவர் சீரியஸாக' எடுத்துக் கொள்ளாமல், ஒரு நகைச்சுவையோடு பார்க்கக் கற்றுத் தந்த திரு சந்தானம் ஸார் எப்போதும் என் நினைவில் நிற்பார்.

7 கருத்துகள்:

சீமாச்சு.. சொன்னது…

அன்பின் ரங்கா,
ஆசிரியர்கள் என்றைக்குமே உயர்ந்தவர்கள். உங்கள் பதிவும் அதன் எண்ணங்களும் அருமை. பாராட்டுக்கள்
சீமாச்சு

வல்லிசிம்ஹன் சொன்னது…

ரங்கா, எங்கள் ஆசிரிய,ஆசிரியைகள் கூட ஸ்கேல் கொண்டு வரும் வழக்கம் கூட இல்லாதவர்கள்.எங்கள் மிஸ்.நவமணியை நான் இப்போது நினைக்க உதவி செய்தீர்கள்.நன்றி.

ரங்கா - Ranga சொன்னது…

சீமாச்சு,

பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

மனு,

பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி. ஸ்கேல் மட்டுமா, நான் ரூல்தடி கூட பார்த்திருக்கிறேன் :-)

ரங்கா.

பெயரில்லா சொன்னது…

You brought so many wonderful memoried to us too.

Thanks. Keep posting.

ரங்கா - Ranga சொன்னது…

Thanks for the comments Anonymous.

Ranga.

இலவசக்கொத்தனார் சொன்னது…

நல்ல பதிவு ரங்கா.