சனி, செப்டம்பர் 24, 2005

மிஸ்ஸியம்மா

மிஸ்ஸியம்மா

நேற்று இரவு மிஸ்ஸியம்மா படத்தை குடும்பத்தோடு வீட்டில் பார்த்தோம்.

முதன் முதலாக அந்தப் படத்தை மன்னார்குடி செண்பகா டாக்கீஸில் நண்பர்களோடு பார்த்தேன். தியேட்டரில் ஒரே ஒரு புரொஜெக்டர் தான். ஆதலால் படத்திற்கு மூன்று இடைவேளை! படச்சுருள் தீர்ந்தவுடன் தியேட்டரின் நடுவில் மேலே இருக்கும் ஒரு பல்ப் எரியும்; ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் மறுபடியும் படம் தொடரும். தரை, பெஞ்ச், சேர் என்றெல்லாம் வகுப்புகள். ஆண்கள் பக்கம், பீடி, சுருட்டு, புகையிலை, வெற்றிலை எல்லாம் சேர்ந்து ஒரு கதம்பமான வாசனை. இந்த மாதிரி இடைவேளை வரும் போதெல்லாம் போய் கோலி சோடா - அதுவும் பன்னீர் சோடா குடிப்போம்!

மிகவும் நகைச்சுவையான ஒரு கதை. நடிகயையர் திலகம் சாவித்திரியின் முகபாவம் மிகவும் அருமையாக இருக்கும். கதையில் முதல் பாடல் அவருடையது தான். தியாகரஜர் கீர்த்தனை - ராக சுதா ரஸ - தமிழ்ப் படுத்திப் பாடுவார் (கதையில் அவர் கிறிஸ்துவ மததைச் சேர்ந்தவர்களால் ஒரு கிறிஸ்துவராக வளர்க்கப் படுவதாகக் காட்டுவார்கள்; ஆனால் அவர் ராக சுதா ரஸ பாடுவார்!).

படத்தை நேற்று பார்த்த போது, மனம் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்று திரும்பியது. பக்கத்தில் இருந்த என் அப்பாவிடம் அதைப் பற்றிப் பேச, அவர் உடனே தான் அந்தப் படத்தை முதன் முதலாக எப்போது பார்த்தேன் என்று பேச ஆரம்பிக்க - அப்புறம் தான் தெரிந்தது நான் இருபது ஆண்டுகள் சென்றால் அவர் ஐம்பது ஆண்டுகள் சென்றிருக்கிறார் என்று! 1950 களில் மகாமகத்திற்கு அப்புறம் கும்பகோணத்தில் அவர் இந்தப் படத்தை தன் அத்தை, தாத்தாவுடன் பார்த்த கதையைச் சொன்னார்.

படத்தில் சாரங்கபாணி ஒரு பாடல் பாடிக்கொண்டு வருவார் - 'சீதா ராம் ஜெய சீதா ராம்' என்று ஆரம்பிக்கும். நாட்டு நடப்பைப் பற்றி அவர் அன்று பாடியது இன்றைக்கும் பொருந்தும். படத்தின் பாடல்கள் மிகவும் அருமை - முக்கியமாக 'வாராயோ வெண்ணிலாவே', 'பிருந்தாவனமும் நந்த குமாரனும்' பாடல்கள் இன்றைக்கும் கேட்க இனிமை! மன்னார்குடியில் திரைப்படச் சுவரொட்டிகளில் முக்கியமான பாடல் வரிகளைப் போடுவார்கள் - முக்கியமான நடிகர், நடிகைகள் படங்களோடு. இந்த இரு பாடல்களும் சுவரொட்டியில் இருக்கும்.

வேலைக்காக கணவன் மனைவி போல் இருவர் நாடகமாடி பின் கல்யாணம் பண்ணிக் கொள்வதுதான் கதை. சென்ற வாரம் செய்தியில் சட்டப் படி வயது பத்தாததால் தம்பியைக் காதலித்தும் அண்ணனைக் கல்யாணம் செய்து கொண்டதைப் பற்றி படித்தேன். ஸ்ரீகாந்த் மீனாட்சியும் இதைப் பற்றி ஒரு திரைக்கதை போல் எழுதியிருந்தார். ஐம்பது வருடத்தில் கதை அதிகம் மாறவில்லை.

ஒவ்வொரு வாரமும் ஒரு பழைய படம் பார்ப்பது என்று தீர்மானம். தாய் தந்தை மற்றும் மாமனார் மாமியார் வாங்கி வந்திருக்கும் விசிடிகளின் உபயத்தில்!

1 கருத்து:

neyvelivichu.blogspot.com சொன்னது…

enna sir aduththa padam haridoss aa..

you are writing after a long time..

do write oftn..

anbudan vichchu