வியாழன், செப்டம்பர் 01, 2005

தலைகீழ் பூமி?

சென்ற வாரம் இரவில் தூக்கம் கலைந்து குருட்டு யோசனை செய்து கொண்டிருந்த போது சுவற்றில் இருந்த உலகப் படம் மங்கலாக தென்பட்டது. பலமுறை இப்படத்தைப் பார்த்திருந்தாலும், புதிதாக ஒன்று தோன்றியது. சிறு தீவுகள் தவிர எல்லா நிலப்பரப்பும் வடக்கே அகலமாகவும், தெற்கே குறுகலாகவும் இருக்கிறது. இது என்னவோ சரியாகப் படவில்லை. இயற்கையில் மேலிருந்து கீழே வருகிற எல்லாப் பொருள்களும் கீழே அதிகமாகவும், மேலே குறுகலாகவும் இருக்க, உலகப் படத்தில் மட்டும் இது ஏன் வித்தியாசமாக இருக்க வேண்டும்?

உதாரணமாக, கடுகை ஒரு கண்ணாடி பாட்டிலில் கொட்டும் போது அது ஒரு குவியலாகத்தான் விழுகிறது. இதை நாம் மணலைக் கொட்டும் போதும் (வீடு கட்டும் போது லாரியிலிருந்து கொட்டுவார்களே?) பார்க்கலாம். இந்தக் குவியல்களின் வடிவம் ஒரு 'நார்மல் டிஸ்ட்ரிபியூஷன்' போல் இருக்கும். ஆனால் உலகப் படத்தில் (வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, இந்தியா) பெரும்பான்மையானவை மேலே அகலாமாயும், கீழே குறுகியும் இருக்கின்றன. ஏன் இவைகள் மட்டும் முரணாக இருக்கின்றன என யோசனை வந்தது! ('சுத்த லூஸோ' என்று நீங்கள் நினைப்பது புரிகிறது!). இரண்டு நாள் தீவிர யோசனைக்குப் பிறகு என் நினைப்பு இதுதான்.

நம்முடைய பார்வையில்தான் கோளாறு. முதலில் வரைபடம் எழுதியவர் வடக்கு திசையை (பூமியின் வடக்கு) மேலே வைத்து விட்டார். பிரபஞ்சத்தில் மேல்-கீழ் எது என்பது தெரியாததால் இந்தக் குழப்பம். உண்மையில் தெற்கு திசை (பூமியின் தெற்கு) தான் பிரபஞ்சத்தின் மேல் பகுதி. உலகப் படத்தை தலைகீழாக வரைந்தால் இயற்கைக்கு முரணாக இருக்காது. காலங்கள் வருவதிலும் (கோடை, இலையுதிர், குளிர், வசந்தம்), சூரியன் தோன்றுவதிலும்/மறைவதிலும் ஒரு மாற்றமும் வராது!

விஞ்ஞானத்தில் இதற்கு விளக்கம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. பழம் நூல்களில் இதைப் பற்றி ஏதாவது குறிப்பு உள்ளதா என அறிய ஆவல். இணைய நண்பர்கள், நண்பிகள் இதைப் பற்றி கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

2 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

என்னங்க நீங்களும் இப்படிச் சொல்றீங்க?

இங்கே எங்க ஊருக்கு ஒரு 'விசர்ட்(wizard of Christchurch) இருக்கார். அவர் இப்படி உலகப்படத்தைத் தலைகீழாய் வச்சிக்கிட்டு இப்படித்தான் உலகம் இருக்கணும். எல்லாம் இப்பத் தலைகீழா இருக்குன்னு ப்ரசங்கிச்சுக்கிட்டு இருப்பார்!( இருப்பார்ன்னா இப்பவும் இருக்கார். ஆனா பக்கத்து ஊருக்குப் போயிட்டார்இன்னொரு விஷயம் இவர் ஒண்ணும் ஏப்பைசாப்பை இல்லே, முந்தி இங்கே யூனிவர்சிட்டி லெக்சரர்!பெரிய படிப்பு படிச்ச ஆளு)

ரங்கா - Ranga சொன்னது…

தகவலுக்கு நன்றி துளசி கோபால்! அவர் எந்த காரணங்களுக்காக அவ்வாறு கூறுகிறார் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும். பூமத்திய ரேகைக்கு மேல் உள்ள நிலப்பரப்பு அதற்கு கீழுள்ள நிலப்பரப்பைப் போல் இரண்டு மடங்குக்கும் மேலாக இருப்பதும் என் நினைப்பு சரியோ என எண்ண வைக்கிறது (உருகி வழியும் எந்தப் பொருளும் கீழே தான் அதிகம் சேரும் - பூமியும் முதலில் கொதிக்கும் பாறைக் குளமாக (லாவா) இருந்து பின் குளிர்ந்தது என அறிவியலில் படித்ததுண்டு).