சனி, ஆகஸ்ட் 26, 2006

காப்பி – 4

ஓட்டல்களில் காப்பி என்றவுடன் நினைவுக்கு வருவது அளவுதான்! எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும், பயணங்கள் அதிகமானதால் ஓட்டல்களில் சாப்பிடுவது அதிகமானது. தமிழ்நாட்டில் அதிகமான ஓட்டல்களில் உள்ள டம்ளர், டபரா மிக மிக சின்னது. சொல்லப் போனால் குழந்தைகள் விளையாடும் சொப்பு விளையாட்டில் இருக்கும் அளவுதான். போதாக்குறைக்கு, அந்த டம்ளரிலும், "இந்த டம்ளர் XXX ஓட்டலிலிருந்து திருடப்பட்டது" என்று பொறித்திருப்பார்கள். ஒரு முறை வேலூரில் சாப்பிட்ட ஒட்டலில் இருந்த டம்ளரில் வேறு ஒரு ஓட்டல் பெயர் இருந்தது. விசாரித்ததில் பில் கொண்டுவந்த பணியாளர், முதலில் அந்தப் பெயர் தான் இருந்ததாகவும், பின் உரிமையாளர் புதுப் பெயர் மாற்றியதால், வெளியே போர்டில் வேறு பெயரும், டம்ளரில் வேறு பெயரும் இருப்பதாகவும் விளக்கினார்.

சரி அளவு தான் சின்னதாக இருக்கிறதே என்று பார்த்தால், காப்பியை அவர்கள் தரும் முறையும் வித்தியாசமானது. முதலில் டம்ளர் நிறைய காப்பியை ஊற்றி, பின் டபராவை கவிழ்த்து டம்ளரை மூடி, மொத்தத்தையும் தலை கீழாக கவிழ்துக் கொண்டு வருவார்கள். நம்மிடம் வந்து இருப்பது ஒரு டபரா, அதில் தலைகீழாக ஒரு டம்ளர்; டம்ளருக்குள்ளே படு சூடாக காப்பி! எடுப்பது அவ்வளவு சுலபமில்லை. டம்ளர் முழுதும் காப்பியிருப்பதால் வெளியே இருக்கும் காற்றின் அழுத்தம் காரணமாக விசையோடு தான் டம்ளரை எடுக்க வேண்டும் (வெறுப்பேற்றும் பௌதீக விதி). சூடு, வேகமாய் இழுப்பதால் காப்பி நம் சட்டை/வேட்டியில் கொட்டும் அபாயம், எல்லாம் தாண்டி எடுத்தால், சக்கரையை கரைப்பதற்காகவும், சூட்டைக் குறைப்பதற்காகவும், ஆற்ற வேண்டியிருக்கும். இந்த வேலையைகள் அனைத்தையும் செய்து முடித்து சாப்பிட ஆரம்பித்தால், இரண்டு வாயோடு காப்பி காலி! இந்த வேலைக் களைப்புக்கே இன்னுமொரு காப்பி சாப்பிட வேண்டும் போல் இருக்கும்.

அமெரிக்காவில் காப்பி சூடாக இருக்கிறது என்று சொல்லவில்லை; கப்பில் எழுதவில்லை என்று காரணம் காட்டி, வழக்குத் தொடுத்து, காசு பண்ணிவிட்டார்கள்! நம்மூரில் சூடான காப்பியைக் கொட்டிக் கொண்டால், எல்லோரும் நக்கலாச் சிரிப்பார்கள். அங்கே டம்ளரில் எந்த ஓட்டலில் திருடப்பட்டது என்று எழுதினால், இங்கே ‘குடிக்கும் பானம் சூடாக இருக்கும்; கொட்டிக் கொண்டால் வலிக்கும் என்று எழுதுகிறார்கள். அமெரிக்க சட்டங்கள் போல இந்தியாவிலும் வந்துவிட்டால், டம்ளரில் இந்த மாதிரி வாக்கியங்களையும் பார்க்க நேரிடலாம்: "எச்சரிக்கை: இந்த டம்ளரை வாயில் வைத்துக் குடித்தால், வாயில் எந்த பாகமும் அறுபட்டு ரத்தம் வரலாம்". காரணம் இந்த எவர்சில்வர் டம்ளர்களில் விளிபுகள் மிகவும் கூரானவை, சமயத்தில் வெட்டுப் பட்டும் இருக்கும். உதடோ, நாக்கோ அறுபடும் சாத்தியக்கூறு உண்டு.

இரயில் பயணத்தில் நிலையத்தில் கிடைக்கும் காப்பி ஒரு தனி வகை. இங்கு காப்பி மட்டும் அனேகமாக பீங்கான் கோப்பையில் தான் கிடைக்கும். ஆனால் டீ கண்ணாடி டம்ளரில் தான். இரயில் நிலையம் ஒரு முக்கியமான பெரிய ஜங்க்ஷனாக இருந்து விட்டால், காப்பி டிகாஷன் முறையிலும், இன்ஸ்டன்ட் முறையிலும் கிடைக்கும். ஒரு எவர்சில்வர் பாத்திரத்திலிருந்தோ, அல்லது ஒரு பெரிய கெட்டிலிலிருந்தோ கப்பில் ஊற்றிக் கொடுப்பார்கள். ஒரு வசதி என்னவென்றால், இதற்காக இரயிலிலிருந்து கீழே இறங்க வேண்டாம். இந்திய இரயில்வேயில் (ஏ சி பெட்டி தவிர), ஜன்னலின் இடையே இறுக்கும் குறுக்குக் கம்பிக்குள் இந்த கப்பும், சாசரும் (பீங்கான் தட்டு) வந்து விடும். இரயில் கிளம்புவதற்கும் முன் குடித்து கப்பை திரும்பத் தருவதற்கு வசதியாக, காப்பி அதிக சூடாக இருக்காது; தவிர சாசரில் காப்பியை ஊற்றி 'சர்'ரென்று உறிஞ்சிக் குடித்துவிடலாம். சமயத்தில் வண்டி கிளம்பிவிட்டால், பெட்டியோடு கூட ஓடி வந்து கப்பைப் பெற்றுக் கொள்ளும் புண்ணியவான்களும் உண்டு. இந்த காப்பியில் ஒரு விதமான கரி வாசனை வரும் - நான் பள்ளியில் படிக்கும் போது (பள்ளியில் படிக்கும் போது பயணங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்குள் மட்டும் தான்; வடமாநிலங்களில் அமைப்பு வேறு - அது பற்றி பின்னொரு பதிவில்) குறைந்த அளவு டீசல் வண்டிகள் தான்; பெரும்பான்மையானவை கரி எஞ்ஜின்கள். அது ஒரு காரணமாக இருக்கலாம். வீட்டில் குடும்பத்தோடு பயணம் செய்யும் போது, அப்பா அனேகமாக கீழே இறங்கிப் போய், ஒரு கூஜாவில் ஐந்து கோப்பை வாங்கி வருவார்.

பஸ் பயணங்களில், முக்கியமாக தொலைதூர, இரவுப் பயணங்களில், வழியில் இருக்கும் தெருவோர டீக் கடைகளில் இருக்கும் காப்பி அனேகமாக 'இன்ஸ்டன்ட்' வகை. அனேகம் பேர் தேனீர் தான் சாப்பிடுவதால், காப்பி டிகாஷன் போட்டு சரிப்படாது என்பதால் எளிதான வழியில் காப்பி. பெரும்பான்மையான கடைகளில் 'புரூ' தான். டீயை ஆற்றும் அதே தகர டப்பாவில் மேலிருந்து கீழே வேகமாக ஆற்றி, நுரையோடு தருவார்கள். டீயோ, காப்பியோ, இந்த ஆற்றும் முறையே அலாதியானது. புவியீர்ப்பு விசையின் தாக்கத்தை மிக அனாயாசமாக சமாளித்து, ஒரு சிறிய இடத்துக்குள் படு சூடான திரவத்தை ஊற்றுவது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். இந்த மாதிரி இரவுக் கடைகள் அனேகமாக பஸ் டிரைவருக்கும், கண்டக்டருக்கும் சலுகைகள் தருவதால், அவசரப் பட்டு குடிக்க வேண்டிய அவசியமில்லை. கடைக்காரரே சமயத்தில் நமக்கு வண்டி கிளம்புவதை அறிவிப்பதோடு, டிரைவருக்கும் ஒரு 'ரெகமண்டேஷன்' தருவார், கொஞ்சம் தாமதமாகக் கிளம்ப! இந்தக் காப்பியில் மிக மிக லேசான டீசல் வாசனை - இன்ஸ்டன்ட் என்பதால் அதிகமாகத் தெரியாது. பாலும் தண்ணியாக இருப்பதால், கொஞ்சம் டிகாஷன் சாப்பிடுவது போலத் தோன்றும்.

அடுத்த பதிவில் கல்யாணக் காப்பி பற்றியும், காப்பி குடிக்கும் முறையில் நான் பார்த்த விஷயங்களையும் தருகிறேன்.

முந்தைய பதிவுகள்
காப்பி – 3
காப்பி – 2
காப்பி – 1

செவ்வாய், ஆகஸ்ட் 22, 2006

காப்பி - 3

என்னுடைய ஆறாவது/ஏழாவது வகுப்புகள் பட்டுக்கோட்டையில், எட்டாவதிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மன்னார்குடியில், வழக்கம் போல் அப்பாவின் உத்தியோக மாற்றம் காரணமாக. இந்த இரண்டு இடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காப்பி முறை, ஆனால் சென்னையில் இருந்த முறையிலிருந்து பெரிய மாற்றம்.

பட்டுக்கோட்டை, மன்னார்குடி போன்ற இடங்களில் பால் வருவது அருகிலுள்ள கிராமங்களில் இருக்கும் சொசைட்டிகள் மூலமாக. சைக்கிள் காரியரில் ஒரு பெரிய பாத்திரத்தில் (குழாய் வைத்தது), காலையிலும், மாலையிலும் எடுத்து வருவார்கள். ஒவ்வொரு சைக்கிளுக்கும் ஒரு பெரிய மணி, சைக்கிள் பாரில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். காலால் பெடலை மிதித்துக் கொண்டே தெரு முனை வரும் போது, கால் முட்டியாலேயே அந்த மணியை அடிப்பார்கள். மணி சத்தத்தை வைத்துக் கொண்டே,‘எடமேலையூர் பால்’, ‘மதுக்கூர் பால்’, ‘சொசைட்டி பால்’ (மன்னார்குடி) என்றேல்லாம் சொல்லுவோம். இதில் மதுக்கூர் பாலும், எடமேலையூர் பாலும் பதப்படுத்தப் படாதவை - அருமையான வாசனை.

இந்த காரியரிலும் இரண்டு வகை. சாதாரண அளவுள்ள காரியரில் ஒரு பாத்திரம் தான் வரும். மன்னார்குடி சொசைட்டி பால் இந்த வகையைச் சார்ந்தது. மதுக்கூரிலிருந்து வரும் பால் காரியர்களில் சில சற்று வித்தியாசமானவை. இந்த சைக்கிள்களில் பின்புறக் காரியர் கொஞ்சம் பெரிசு (ஓகே சோப் விளம்பரம் போல: உண்மையிலேயே ரொம்பப் பெரிசு). சைக்கிளிலில் இருக்கும் இரும்புச்சட்டம் போதாதென்று, சில கட்டைகளையும் முட்டுக் கொடுத்து வைக்கப் பட்டிருக்கும். இதில் இரண்டு பால் பாத்திரங்கள் - ஒன்று வழக்கமான அளவு, மற்றொன்று கொஞ்சம் சிறிசு. அனேமாக எருமைப் பால் தான் பெரிய காரியரில் இருக்கும். பதப் படுத்தப் பட்டதென்றால் எருமைப் பாலும், பசும் பாலும் சேர்ந்த கலவை தான். இந்த சின்னப் பாத்திரத்தில் ஸ்பெஷல் பால் (பசும் பால்); சற்று விலையும் அதிகம். பால் வினியோகம் செய்து வரும் இவர்களிடம் சற்று பேச்சுக் கொடுத்தால் விசித்திரமான விஷயங்களும், சமயத்தில் வம்புகளும் கிடைக்கும்.

மதுக்கூரிலிருந்து மன்னார்குடி வரும் சாலை தார் ரோடு - ஆனால் ரொம்பவும் அகலமானது அல்ல. தார் ரோடுக்கு இரு புறமும் வெறும் மணலும், தூசியும் தான், எப்போதாவது கடினமான தரை. இரு பேருந்துகள் இந்தச் சாலையில் எதிரெதிராக வந்து விட்டால் எழுதாத சட்டம், ஒரு பக்க சக்கரங்கள் தார் ரோடிலும் மற்றொரு பக்க சக்கரங்கள் மணலிலும் தான் போக வேண்டும். இந்த எட்டு, பத்து கிலோமிட்டர் பயத்தில் பத்து முறையாவது, இந்த பால் சைக்கிள்கள் மணலில் இறங்க வேண்டியிருக்கும். சைக்கிளிலிருந்து இறங்கி தள்ளிக் கொண்டு, பேருந்து போன பின் மறுபடி உதைத்து ஏறி வர வேண்டியது தான். நிச்சயமாக எளிதானது இல்லை. அறுவடைக் காலத்தில், நெற்போர் அடிக்க அனேகமாக இந்த தார் சாலைகளைத்தான் உபயோகிப்பார்கள். காய்ந்த நெற்பயிரின் மேல் சைக்கிளை ஒட்டி வருவது, ஓட்டுபவருக்கு வெறுப்பேற்றும் விஷயம். கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் ஒரு பெரிய பித்தளை பாத்திரத்தில் பாலை எடுத்து வைத்துக் கொண்டு சைக்கிளை இப்படி லாவகமாக ஓட்டி வந்த அந்த பெரும் உழைப்பாளிகளை இப்போது நினைத்தாலும் மனதில் ஒரு மரியாதை வருகிறது!

நிறைய வீடுகளில் காப்பிக் கொட்டை வாங்கி அரைக்கும் வழக்கம் இருந்தது. பொடியாகவே கடையில் வாங்கி வருவது சுலபமானதாக இருந்ததாலும், சென்னையில் நான்கு ஆண்டுகள் பொடி வாங்கிப் பழகிவிட்டதாலும், எங்கள் வீட்டில் அரைப்பது பற்றி யோசிக்கக் கூட இல்லை. மன்னார்குடியில் நிறைய பிரபலமான காப்பிக் கடைகள் இருந்தாலும், தேசிய மேல் நிலைப் பள்ளிக்கு எதிரில் 'சுதர்ஸன் காபி' கடையில் தான் பொடி வாங்குவோம். ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் நிரந்தர வாடிக்கைக்காரர்களுக்கு மட்டும் 'டெய்லி ஷீட்' காலண்டர் கிடைக்கும். 'ப்ளாண்டேஷன் ஏ', 'பீப்ரி' என்று இரண்டு வகைக் கொட்டைகள். தனியாகக் கேட்டு சிக்கரி கலந்து கொள்ளலாம். எங்கள் வீட்டில் சிக்கரி கிடையாது; எப்போதும் பீப்ரி கொட்டைகள் தான். இந்தக் காப்பிக்கும் மணம் உண்டு, கொஞ்சம் வித்தியாசமானது. பால் வாசனை தூக்கலாக தெரியும். அடுப்பு குமுட்டி இல்லை - அப்போது பிரபலமான 'நூதன்' ஸ்டவ்! எங்கள் உறவினர் டில்லி போய் வந்த போது வாங்கி வந்தது. கிரசின் வாசனை எல்லாம் இல்லை - வெறும் காப்பியும் பாலும் தான்; ஆகையால் போதை இல்லை! காப்பி பில்டரும் பித்தளையில் இருந்து எவர்சில்வருக்கு மொத்தமாக மாறியது; பித்தளை பில்டர் பரண் ஏறியது.

அடுத்த பதிவில் பயணங்களின் போது இரயில் நிலையத்தில், தெருவோரக் கடைகளில், ஒட்டல்களில் குடித்த காப்பியைப் பற்றி பதிகிறேன்.

முந்தைய பதிவுகள்
காப்பி 1
காப்பி 2

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2006

காப்பி - 2

இராமநாதபுரத்தில் முதல் வகுப்பு முடித்தவுடன் சென்னை வந்தேன் - தந்தையாரின் உத்தியோக மாற்றம் காரணமாக. எல்லாமே புதுசு, காப்பிக்கு பால் உட்பட. அப்போதுதான் ஆவின் புட்டிப் பால் வந்திருந்த சமயம். வீட்டுக்கு ஒரு அட்டை - கலர் கலராக - ஒரு பாட்டிலா, இரண்டு பாட்டிலா என்று அடையாளம் காட்ட. எங்கள் தெருவில் நான்கு ஐந்து வீட்டுக்கு ஒரு அம்மாள் (பேர் தெரியாது; ஆயா என்றுதான் எல்லோரும் - அவரை விட வயதானவர் உட்பட- கூப்பிடுவோம்) மொத்தமாக அட்டையை எடுத்துக் கொண்டு போய் பாட்டில் அத்தனையும் இரண்டு பெரிய துணிப்பைகளில் போட்டு எடுத்து வந்து கொடுப்பார். பாட்டில் வெளியே அழுக்கு அதிகம், முதலில் பாட்டிலை தண்ணீரால் அலம்பிவிட்டுத்தான், மூடியையே திறப்போம். மூடி கலர் கலராக இருக்கும் அலுமினியத் தாள். அந்தக் காலத்தில் இந்த மூடியை எல்லாம் சேகரித்து, மாலையாகவோ, அல்லது நவராத்திரிக்கு கொலுவில் தோரணமாகவோ தொங்க விடாத வீடுகளே இல்லை; அப்படிப் பிரபலமான ஒரு மூடி.

புட்டிப் பாலின் வாசனை ஒரு விதமானது. பாட்டிலோடு, அதுவும் அதிக பாட்டில்கள் இருக்கும் பையோடு இருக்கையில் ஒரு வாசனை. பாட்டிலை அலம்பிவிட்டு, பாலை பாத்திரத்தில் விடும் போது வேறு விதமான வாசனை - கொஞ்சம் தாக்கம் குறைவாக. காய்ச்சியவுடன், மெல்லிய பால் வாசனை மட்டும் தான். அது மட்டுமல்ல, பாட்டிலுக்கு எவ்வளவு வேர்த்திருக்கிறது என்பதைப் பொறுத்தும் வாசனை கொஞ்சம் மாறும். பதப் படுத்தப்பட்டு, குளிர்வித்த பாலின் வாசனை (வேர்த்த பாட்டில்) கொஞ்சம் தூக்கலாக இருக்கும். ஆவின் அப்போதுதான் வந்திருந்தது என்பதால், அம்மா அதே தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் தினமும் கொஞ்சம் பால் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார் - ஒரு பிளான் B வேண்டாமா? அது கறந்த பால் என்பதால், வாங்கி வரும் பாத்திரத்தில் வேர்க்காது. ஔவையாருக்கு முருகன் கேட்ட 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' கேள்வி போல் 'வேர்த்த பால் வேண்டுமா? வேர்க்காத பால் வேண்டுமா'? என்று கேட்போம்! எந்தப் பால் என்பதைப் பொறுத்து காப்பியின் சுவை, வாசனை கொஞ்சம் மாறும்.

இந்த சமயத்தில் பில்டரும் பித்தளையிலிருந்து குட்டி எவர்சில்வருக்கு மாறியது. வீட்டிற்கு உறவினர் வந்தால் மட்டும் பித்தளை பில்டர் வந்தது - அதிகம் டிகாஷன் வேண்டுமே! காப்பிக் கொட்டை வாங்கி அரைப்பதும் குறைந்து, பொடியாகவே வாங்க ஆரம்பித்தோம். அப்பா தினம் வேலைக்காக பாரிஸ் கார்னர் சென்று வந்ததால் மாதத்தில் ஒரு முறை வாங்கி வருவார். குமுட்டி அடுப்பின் உபயோகமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது, கிரசின் ஸ்டவ் வந்ததால்.

நாங்கள் சென்னையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு வருவதற்கு சற்று முன்னால் புட்டிப் பாலோடு, பாலிதீன் பைகளில் பால் தருவதை ஆவின் ஆரம்பித்தது. இதில் ஆயாவுக்கு ரொம்ப சந்தோஷம். பைகளின் கனம் குறைந்தது, அதிக வீடுகளுக்கு பால் எடுத்து வர ஆரம்பித்ததால், ஆயாவுக்கும் வருமானம். மூடி சேர்ப்பது குறைந்தாலும், பழைய பால் கவர்களினால் வேறு உபயோகம் வந்ததால், அம்மாவுக்கும் சந்தோஷம்தான். பாலித்தீன் பையும் அழுக்குதான், அதனால் அதையும் முதலில் தண்ணீரால் அலம்பிவிட்டுத்தான் வெட்ட வேண்டும். ஆனால் பாலின் சுவையில் ஒரு மாறுதலும் இல்லை.

இதன் நடுவே, சென்னையிலேயே உறவினர் வீட்டுக்குப் (பெசன்ட் நகர் என்று நினைவு) போன போது, அவர்கள் வீட்டுக்கருகில் டோக்கன் போட்டால் பால் தரும் நிலையங்களைப் பார்த்து பிரமித்ததுண்டு. முதலில் ஒரு கவுண்டரில் பைசா கொடுத்து டோக்கன் வாங்க வேண்டும். பின் பாத்திரத்தை அருகில் உள்ள குழாய்க்கடியில் வைத்து பின்னர் அந்த டோக்கனை குழாய்க்கு அருகில் இருக்கும் ஒட்டையில் போட வேண்டும். பத்து செகண்டுக்குள் பால் குழாயிலிருந்து கீழேயுள்ள பாத்திரத்தில்! அந்த அறைக்குள் நின்று கொண்டு யாரோ டோக்கனைப் பெற்றுக் கொண்டு அளந்து பாலை குழாய் வழியாக விடுகிறார்கள் என்றும் நினைத்ததுண்டு. அது இயந்திரம் தான் என்று ஊர்ஜிதமானதும், சோடா பாட்டிலின் மூடியை தட்டை செய்து வெட்டிப் போட்டால் பால் வருமா என்று அந்த உறவினர் வீட்டுப் பையன்களோடு விவாதித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்தப் பாலில் புட்டிப் பாலில் வாசனை இருக்காது, அதே சமயம் வெளியே வாங்கும் பாலின் வாசனையும் இருக்காது. சொல்லப் போனால் தனித்த வாசனையே இல்லாத பால்.

இந்தப் பதிவே கொஞ்சம் பெரிதாகிவிட்டதால், தஞ்சை ஜில்லாவில் வசித்த போது இருந்த காப்பி முறையைப் அடுத்த பதிவில் தருகிறேன்.

முந்தைய பதிவு - காப்பி 1

சனி, ஆகஸ்ட் 19, 2006

காப்பி - 1

நிறைய இடங்களில் காபி என்று எழுதியதைப் பார்த்திருந்தாலும், எனக்கு காப்பி என்று எழுதியே பழகிவிட்டது; எது சரி? காபியா, காப்பியா? இந்த வருட ஆரம்பத்தில் எடுத்த ஒரு முடிவு ஒரு நாளைக்கு இரண்டு கோப்பைக்கு மேல் காப்பி குடிப்பதில்லை என்று. முப்பது வருடங்களுக்கு மேலாக இருக்கும் பழக்கத்தை சட்டென்று விட முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உத்தேசம். எப்போதாவது தான் சக்கரை சேர்த்துக் கொள்கிறேன். இன்னும் கொஞ்ச நாட்களில் (வருடங்களில்?) மொத்தமாக விட்டு விடலாம் என்று எண்ணம். காப்பி குடிப்பதை விடப் போகிறேன் என்பதால், இந்தப் பதிவுகள் ஒரு மாதிரியான நினைவு அஞ்சலி என்று வைத்துக் கொள்ளலாம்.

என் நினைவில் நிற்கிற காப்பி தொடர்பான விஷயங்களில் முதலாவது எது என்று யோசித்தால், நான்கு வயது இருக்கும் போது மாதத்திற்கு ஒரு முறை என் அம்மா காப்பிக் கொட்டைகளை வறுத்ததுதான். இராமநாதபுரத்தில் வடக்குத் தெருவில் எங்கள் வீடு. ஒரு விறகு அடுப்பில் இரும்பு வாணலியில் பச்சைக் கொட்டைகளைப் போட்டு அவை கருக்கும் வரை நன்கு வறுத்து, கூடத்தில் சுத்தம் செய்த தரையில் சூடு ஆறுவதற்காக பரப்பி வைப்பார்கள். புகையும், காப்பிக் கொட்டை வறுக்கும் வாசனையும் கலந்து வீடு முழுவதும் அடிக்கும். பொழுது போகாமல் அவ்வப் போது கசப்பான வறுபட்ட காப்பிக் கொட்டைகளைச் சாப்பிடுவேன். சூடு ஆறியதும், அந்தக் கொட்டைகளை ஒரு சின்னதான காப்பிக் கொட்டை அரைக்கும் மிஷினில் - ஒரு சமயத்தில் இரண்டு கைப்பிடி தான் அரைக்க முடியும் - அம்மாவுக்கு உதவியாக அரைப்பேன். அரைத்து தட்டில் விழும் பொடியை டப்பாவில் போட்டு வைப்பது அம்மாவின் வேலை - நான்கு வயதில் எனக்கு கீழே கொட்டத்தான் தெரியும்!

வறுத்த காப்பிக் கொட்டைக்கு இந்த மணம் என்றால், காப்பிக்கு வேறு விதமான வாசனை. அனேகமாக பாலைக் காய்ச்சுவது குமுட்டி அடுப்பில்தான். இரும்பில் ஒரு கோப்பை வடிவில் இருக்கும். கரியைப் போட்டு எரித்து, பாத்திரத்தை கரியின் மேல் வைத்து பாலைக் காய்ச்சுவார்கள். கரியைப் பற்ற வைக்க முதலில் சூடம், தேங்காய் நார்/மட்டை, மண்ணெண்ணை போன்றவைகள் உபயோகப் படுத்தப் படும். கரி நன்றாக எரிய அவ்வப் போது ஊத வேண்டியிருக்கும்.

காப்பி பில்டர் பித்தளையில் பெரிதாக இருக்கும். ஒரு முறை தொட்டு கை சுட்டுவிட்டதால் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத ஒன்று! முதலில் காப்பிப் பொடியைப் பில்டரின் மேல் பாத்திரத்தில் போட்டு, கொதிக்கின்ற வென்னீரை விட்டு, பின் ஒரு கைப்பிடியோடு இருக்கும் ஜல்லடைத் தட்டை போட வேண்டும். முதல் முறை மிக வேகமாக தண்ணீர் இறங்கிவிடும். மொத்தத் தண்ணீரும் இறங்கியபின், கீழ் பாத்திரத்தில் இருக்கும் டிகாஷனை மறுபடியும் மேல் பாத்திரத்தில் கொட்டி, இரண்டாம் முறை இறங்கிய டிகாஷனை காப்பிக்காக உபயோகிப்பார் அம்மா.

காய்ச்சின பாலோடு, காப்பி டிகாஷனையும் கலந்து, சக்கரை போட்டு, நுரை வரும்வரை நன்று ஆற்றி, தகுந்த சூடு வந்தவுடன் டம்ளர், டபராவில் தருவார்கள். குமுட்டி அடுப்பை ஊதும் போது எரிந்த தேங்காய் நாரோ, கரித்துண்டோ சமயத்தில் காப்பியில் கலந்து வரும். அந்த காப்பியின் மணமே ஒரு போதை தரும் - பால், காப்பிக் கொட்டை, எப்போதாவது மண்ணெண்ணை, கரி, சூடம் என்று ஒரு கதம்பமான வாசனை!

அடுத்த பதிவில் தஞ்சாவூர் ஜில்லாவில் வசித்த போதும், சென்னையில் வசித்த போதும் குடித்த காப்பி பற்றிய நினைவுகளை பதிகிறேன்.

திங்கள், ஆகஸ்ட் 14, 2006

மூன்று வரி ஆறு வார்த்தை

இரண்டு மூன்று வாரங்களாக தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பார்த்த, படித்த சில செய்திகளின் விளைவு - இந்த மூன்று மூன்றுவரி ஆறு வார்த்தைக் கவிதைகள்.

மௌனத்தின் இரைச்சல்
கேட்க முடியவில்லை!
ஊமையின் பாஷை.

விஷப் புரளி
சாக்கடையில் சோறு!
பசியோடு பார்வை.

தியாகியா தீவிரவாதியா?
எப்படி அழைத்தாலும்
போனது உயிர்தானே!

திங்கள், ஜூலை 31, 2006

சுயநலம்

பள்ளியில் படிக்கும் போது மோசமான குணங்களில் ஒன்று சுயநலம் என்று பெரும்பான்மையான ஆசிரியர்கள் சொன்னார்கள். பாடங்களிலும், சுயநலம் எவ்வளவு மோசமானது என்பதை விளக்கும் கதைகள் இருந்தன. போதாதற்கு, வீட்டிலும், பழகிய ஏனைய பெரியவர்களும் இது தவறு என்பது போன்றே சொன்னார்கள். பொதுவாக மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்; அதுமாதிரி இல்லாமல் நாமே அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால் அது சுயநலம் என்ற மாதிரி விளக்கம் வந்தது. அதிகமாக யோசிக்காமல், இதர பழக்க வழக்கங்கள், குணங்கள் போன்று (உ.ம். நகம் கடிக்காமல் இருத்தல், போய் பேசாது இருத்தல்) சுயநலம் பற்றிய ஒரு முடிவையும், அதிகம் விவாதிக்காமல் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் இது வரை வந்தாயிற்று.

வெளியுலகில், முக்கியமாக அலுவலக வாழ்க்கையில், பொய், சுயநலம் போன்றவற்றிற்கு எக்கச்சக்கமான விளக்கங்கள் கிடைத்தன. வயது ஏற ஏற, வரும் அனுபவங்கள் இது போன்று கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்ட குணங்களையும், வழக்கங்களையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வைத்தன. ஏற்கனவே பொய்/உண்மை பற்றி எனக்குத் தோன்றியவற்றை ஒரு பதிவாக எழுதியிருக்கிறேன். இங்கு சுயநலம் பற்றி நான் புரிந்து கொண்டதையும், பார்த்ததையும், புரியாததையும் பற்றி பதிந்திருக்கிறேன்.

என்னுடைய எந்த செயலும் ஒரு எதிர்பார்ப்பை ஒத்தே எடுக்கப் படுகிறது. எனக்கு சொந்தமாக ஒரு லாபத்தைத் தரா விட்டாலும் கூட, ஒரு எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கிறது. அது எனக்கு 'கடமையச் சரிவர செய்துவிட்டோம்' என்கிற திருப்தியையோ, அல்லது எனக்கு ஒரு நல்ல நினைவை, மன சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது என்பதாலேயோதான் ஒரு செயலைச் செய்கிறேன். நிர்பந்தமாய் எனக்குப் பிடிக்காத செயலைச் செய்வதற்கும் என்னுள் இருக்கும் ஒரு எதிர்பார்ப்பே காரணம். ஒரு உதாரணத்துக்கு வைத்துக் கொண்டால் கூட, ஒருவர் என்னை ஒரு கத்திமுனையில் மிரட்டி பணத்தை திருடிக் கொள்ளும் போதும், நான் பணத்தைக் கொடுக்க 'பணத்தைக் கொடுத்தால், கத்தியால் குத்து விழாது' என்ற ஒரு எதிர்பார்ப்பு முக்கியமான காரணம். எதிர்பார்ப்பு இல்லாமல் காரியங்கள் செய்ததாக நினைவில்லை. இந்த எதிர்பார்ப்பையும், என் மனமகிழ்ச்சியையும், நல்ல நினைவையும், சுயநலம் என்று சொன்னால் என்னுடைய எல்லாச் செயல்களும் சுயநலத்தை எண்ணியே செய்ததாக அர்த்தம் (பொருள்) வருகிறது.

என்னுடைய எல்லாக் காரியத்திலும் கொஞ்சம் சுயலநம் இருப்பதால் விளக்கத்தை சற்று மாற்ற வேண்டியிருக்கிறது. நான் செய்யும் ஒரு காரியத்தில் எனக்கு வரும் நலம், என்னைத் தவிர மற்றவர்களுக்கு வரும் நலத்தை விட அதிகமாக இருந்தால் அது சுயநலம்; மற்றவருக்கு நலம் அதிகமாகக் கிடைத்தால் அது சுயநலம் இல்லை. (நாயகன் திரைப்படத்தில் வரும் வசனம் போல: "நாலு பேருக்கு நல்லது கிடைச்சுதுன்னா எதுவுமே தப்பில்லை"). அதாவது ஒரு செயலில் மற்றவருக்கு கிடைக்கும் நலத்தைவிட சுயநலம் குறைவாக இருக்கிறது.

ஆனால் இந்த இரண்டு விளக்கங்களுமே எனக்கு சரி என்று தோன்றவில்லை. பெரும்பான்மையான மக்கள் வலியப் போய் குற்றங்கள் செய்வது இல்லை; யாரும் கண்டுபிடிக்கப் போவதில்லை என்றால், மற்றவர்களுக்கு அதிகம் நஷ்டம் வராத ஒரு செயலை, அதிலும் அந்த செயலினால் சுயலாபம் வரும் என்றால், செய்யத் தயாராகவே இருக்கிறார்கள். முதல் விளக்கத்தைப் பார்த்துவிட்டு 'எல்லோருமே சுயநலவாதிகள் தான்; ஆகையால் நான் லஞ்சம் வாங்குவது தவறில்லை' என்று நியாப்படுத்தி விடுவார்களோ என்ற பயம் இருக்கிறது. இரண்டாவது விளக்கம் அதைவிட மோசம். ஒரு மந்திரி 'ரோடு போடும் பணியை அனுமதித்தால், லட்சக்கணக்கான மக்களுக்கு நலம் வரும், ஆகையால் காண்ட்ராக்டரிடம் 10% வாங்கினால் என் சுயநலத்தின் மதிப்பு பொதுநலத்தின் மதிப்பை விடக் குறைவானதுதானே. என்ன தவறு?' என்று சொல்லலாம்.

இதற்கு 'சுயநலம் இருப்பது தவறில்லை; அது அதிகமாகப் போய், ஒருவரின் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி செயல்களைச் செய்யச் சொன்னாலோ அல்லது, மற்றவரின் வாழ்வை, அமைதியைக் குலைக்கும் வண்ணம் இருந்தாலோ தவறு' என்று சொல்வது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதே சமயம், பாலகனாய் இருந்த போது இருந்த தெளிவு, இப்போது - அனுபவமும், அறிவும் அதிகமான போது - இல்லையே என்ற வருத்தமும் வருகிறது. 60 அல்லது 70 வயதிலாவது சரி, தவறு என்ற வித்தியாசம் புரிந்து, தெளிவும் வருமா? தெரியவில்லை; ஆனால் எதிர்பார்ப்பு இருக்கிறது.

செவ்வாய், ஜூலை 25, 2006

பணம் தரும் (உருப்படாத?) யோசனைகள்

அலுவல் நிமித்தமாக கொலம்பஸ் (ஒஹாயோ) செல்ல வேண்டியிருந்தது. பயணம் ஒன்றரை மணி நேரம் என்றால், விமானத்தில் ஏறி ரன்வே செல்லவே ஒன்றேகால் மணி ஆகிவிட்டது! போய் இறங்கினால் கூட வந்த ஒரு பயணியின் பெட்டி வரவில்லை என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்! வெறுத்துப் போய் மற்ற விமானங்களையும் (நியுவர்க்), விமான நிலயத்தையும் (கொலம்பஸ்) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது வந்த இரு யோசனைகள். இந்த ஐடியாக்களை வைத்துப் பணம் பண்ணலாம் என்று நினைக்கிறேன் (ஒரு நப்பாசைதான்). பணம் தருமா, இல்லை பத்தோடு பதினொன்று என்ற கணக்கில் உருப்படாத யோசனைகள் தலைப்பின் கீழ் போகுமா என்று தெரியவில்லை.

ஒன்று.

சரக்கு விமானத்திலிருந்து சரக்கை வேகமாக இறக்கக் கையாளும் உத்தியை ஏன் பயணிகளுக்கும் உபயோகிக்கக் கூடாது? சரக்கு விமானத்தில் அதன் மூக்கு மேல் நோக்கித் திறந்து கொள்ள (சமயத்தில் அதன் அடி வயிறும் திறந்து கொள்ள), உள்ளே இருக்கும் பிரம்மாண்டமான பெட்டிகள் (கன்டெய்னர்) சுலபமாக கிரேன்களாலும், கன்டெய்னர்கள் இருக்கும் தண்டவாளங்களினாலும் இறக்கப் படுகிறது.

அதே போல விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கையில், விமான இருக்கைகளை ஒரு பெரிய அடித்தளத்தோடு வைத்து, அதில் முதலிலேயே பயணிகளையெல்லாம் உட்கார்த்தி, சீட் பெல்டால் கட்டி வைத்து விட்டு, விமானத்தின் மூக்கையோ அல்லது அடி வயிறையோ திறந்து, இந்த இருக்கைகளை அப்படியே தண்டாவாளத்தின் மூலமாக விமானத்தின் உள் ஏற்றி, விமானத் தளத்தோடு பூட்டு ஒன்று போட்டு இணத்து விட்டால் எல்லோருக்கும் சௌகரியமாக இருக்கும் அல்லவா? காத்து நிற்கும் நேரமும் குறைவு; விமானம் வந்து நின்றவுடன், உள்ளே இருப்பவர்கள் இருக்கைகளோடு மூக்கு வழியாக வெளியேறவும், ஏற வேண்டியவர்கள் வயிற்றின் வழியாக இருக்கைகளுடன் உள்ளே போகவும், பத்து நிமிடங்களில் விமானம் மறுமுறை பயணத்திற்கு ரெடி!

இரண்டு.

விமானப் பயணத்தில் பெட்டிகள் தொலைந்து போவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. மும்பாயில் மதிய உணவு அலுவலகங்களுக்கு எடுத்துப் போகும் 'டப்பா வாலா'க்கள் கலர் கலரான பெயிண்டால் எழுதும் குறிகளை வைத்து அடையாளம் கண்டு கொண்டு அருமையாக சாப்பாடை கொண்டு சேர்க்கிறார்கள். அவர்களில் சிலரை இங்கு (அமெரிக்கா) கூட்டி வந்து விமான நிறுவனங்களுக்கு பயிற்சி நடத்தலாம்! தொலையும் பெட்டிகளின் எண்ணிக்கை குறையும்.

இன்னமும் யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன்: கூட்ட நேரத்தில் இரயிலில் உட்கார இடம் பிடிப்பது எப்படி, ஹைவேயில் எக்ஸிட் எடுக்க முடியாமல் வாகனங்கள் அதிகம் இருந்தால் சுலபமாக வெளியேருவது எப்படி, என்றெல்லாம். உங்களுக்கு ஏதாவது ஐடியா வந்தால் சொல்லுங்கள்.

செவ்வாய், ஜூலை 04, 2006

மனதில் நின்ற ஆசிரியர் - திரு சந்தானம் ஸார்

சிறு வயதில் இருந்து இன்றும் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள், அதிலும் முக்கியமாக பள்ளி ஆசிரியர்கள் எத்தனையோ பேர். எல்லோரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று ஆசை. இந்த வாரம் அமெரிக்க விடுதலை நாளுக்காக வாண வேடிக்கைகள் வீட்டுக்கு அருகில் எங்கு இருக்கும் என்று இணையத்தில் தேடுகையில், இந்த மத்தாப்பு, வெடியில் இருக்கும் இரசாயனப் பொருள்கள் பற்றியும் ஒரு இணையப் பக்கத்தில் பார்த்தேன். எனக்கு +1 / +2 வில் வேதியல் சொல்லிக் கொடுத்த மறைந்த திரு சந்தானம் ஸார் ஞாபகம் வந்தது.

சந்தானம் ஸார் சொல்லிக் கொடுத்த வேதியலை விட, உலக/நாட்டு நடப்புகள், மனோதத்துவம் பற்றிய அவர் 'பொன் மொழிகள்', இன்னமும் நினைவில் நிற்கிறது. ஒரு சந்தோஷமான வித்தியாசமான மனிதர். சாந்துப் பொட்டு இட்டுக் கொண்டுதான் வருவார். அனேகமாக அத்தனை மாணவர்களையும் பற்றி தெரிந்து வைத்திருப்பார். இவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை; மாணவரை அடித்தும் நான் பார்த்தில்லை. வழக்கமாக முதல் வகுப்பு (பீரியட்) அவருடையது தான். மன்னார்குடி தேசியப் பள்ளியில் அப்போது முதல் இரண்டு வகுப்புகள் 45 நிமிடங்கள்; மற்ற வகுப்புகள் எல்லாம் 40 நிமிடங்கள். முதல் வகுப்பில் தான் இந்த பதிவேடு (அட்டென்டன்ஸ்), லீவ் லெட்டர் (விடுப்பு விண்ணப்பம் என்று எழுதினால் கொஞ்சம் செயற்கையாகத் தோன்றுகிறது; தமிழ் வித்தகர்கள் மன்னிக்க!) சமாச்சாரமெல்லாம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று லீவ் லெட்டராவது இருக்கும். ஒவ்வொன்றாகப் படித்து ரசித்து சிரிப்பார்; விமர்சிப்பார்!

லீவ் லெட்டரைப் பொறுத்தவரை ஒரு எழுதாத சட்டம், அது ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும். பெரும்பான்மையான மாணவர்கள் தமிழ் வகுப்பில் படித்து விட்டு, +1 ல் ஆங்கில வகுப்புக்கு மாறியிருப்பார்கள் (நானும் எட்டாவது வரைக்கும் தமிழ் மீடியம் தான்; பத்தாவது வரைக்கும் ஆங்கிலத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தது; அப்புறம் தயக்கம் பழகி விட்டது!). ஆறாவது/ஏழாவது வகுப்பில் ஆங்கிலப் பாட வகுப்பில் இந்த லீவ் லெட்டர் ஒரு கட்டுரை மாதிரி இருக்கும். ஆகையால் எல்லா மாணவருக்கும் இது தெரியும். இவர் கிண்டலுக்கு பயந்தே எல்லோரும் எந்த காரணமாக இருந்தாலும், இந்த கட்டுரையில் வந்தது போல் லீவ் லெட்டர் எழுதிவிடுவோம்! “As I am suffering from fever, I humbly request you to grant me leave for two days”. நாள் மட்டும் தான் மாறும். இதை சுட்டிக்காட்டி சிரிப்பார். "கல்யாணத்துக்காக திருச்சி போயிருக்கான்; இருந்தாலும் அதே லெட்டர்! அது மட்டுமில்லை. Father’s signature என்று எழுதி ஒரு X குறி வேறு போட்டிருக்கான். நல்லாப் படிச்சு கவர்மெண்ட் உத்தியோகத்தில் அப்பா இருக்கார்; இருந்தாலும் அப்பன் தற்குறின்னு இவனே சொல்றான்!" என்று சொல்லி சிரிப்பார்.

தினசரி நடக்கும் விஷயங்களிலும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை இவரிடம் உண்டு. "பாத்திருக்கியாடா?" என்று தான் ஆரம்பிப்பார். "ஒரு ரூபாய் கடன் கொடுக்கிறியா? என்று கேட்டால், 'என்னிடம் பணம் இல்லை' என்று மட்டும் சொல்ல மாட்டான்! சட்டைப் பையையோ, பர்ஸையோ திறந்தும் பார்த்துவிட்டு காட்டுவான். ஏன் தெரியுமா? எங்கே நமக்கே தெரியாமல் ஒரு ரூபாய் வந்திருக்குமோ? என்று ஒரு நப்பாசைதான். இவன் கிட்ட ரூபாய் இருக்காது என்று கேட்பவனுக்குத் தெரியாதா என்ன? இரண்டு பேரும் கிளாசுக்கு மட்டம் போட்டுட்டு சேர்ந்து தானே மாட்னி போனாங்க?!"

எங்கள் வகுப்பு மாடியில் இருந்தது, ஜன்னலிலிருந்து ரோடை பார்க்கிற மாதிரி. ஒரு முறை ரோட்டில் ஏதோ ஊர்வலம் போனது. எல்லொரும் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னது: "பாத்தியாடா? 'வரி கொடுக்க மாட்டோம்'ன்னு சொல்றத்துக்கு ஒரு ஊர்வலம். கொஞ்ச தூரம் போனதும் பள்ளம் தடுக்கி கீழே விழுவான்! அப்ப முனிசிபாலிடியைத் திட்டுவான் - 'ரோடு ஒழுங்காப் போடலை'ன்னு. ஏண்டா - நீ வரி கொடுத்தாத் தானே அவன் ரோடு போட முடியும்?!"

எனக்கு வேதியல் சுத்தமாக மறந்து போனாலும், வாழ்க்கையை 'ஓவர் சீரியஸாக' எடுத்துக் கொள்ளாமல், ஒரு நகைச்சுவையோடு பார்க்கக் கற்றுத் தந்த திரு சந்தானம் ஸார் எப்போதும் என் நினைவில் நிற்பார்.

புதன், ஜூன் 21, 2006

அல்ப சந்தோஷங்கள்

"வாழ்க்கை என்பது நீ மற்ற திட்டங்களை யோசிக்கும் நேரத்தில் நடப்பது" என்று எப்போதோ படித்தது. (Life is what happens to you while you're busy making other plans. John Lennon). இந்த பழமொழியை (Quote என்ற வார்த்தைக்கு தமிழில் பொருத்தமான சொல் இருக்கிறதா?) படித்தவுடன் ஒரே சிந்தனை - இது வரை வாழ்ந்த நாட்களிலே எத்தனை நாட்களை இது மாதிரி கோட்டை விட்டிருக்கிறேன் என்று.

இதுபோல இன்னுமொரு கொடேஷன்: "வாழ்க்கையின் குறிக்கோளே, குறிக்கோளோடு வாழ்வதுதான்". [The purpose of life is to live a life of purpose - Richard Leider] இதைப் படித்துவிட்டு ஒரே குழப்பம் - என் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று ஓயாமல் சிந்தனை - நடுவே முதல் பழமொழி நினைவுக்கு வந்து, இந்த குறிக்கோள் பற்றிய யோசனையில் சில வாழ்க்கை மணிகளைத் தொலைத்துவிட்டேனோ என்ற குழப்பம்.
இப்படி எல்லாம் சிந்தனைகள் வந்து போய்க் கொண்டிருக்கும். அடிக்கடி திடீர் ஞானோதயம் வரும்; போகும். சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு ஞானோதயம் இது. வாழ்க்கை என்பது ஒரு பெரிய சந்தோஷத்தைத் தேடி அலைவது என்றில்லை. வழியில் ஆங்காங்கே வரும் - யாருக்கும் தீமையோ தொந்தரவோ தராத அல்ப சந்தோஷங்களிலும் ஒளிந்திருப்பதுதான் வாழ்க்கை.

உதாரணமாக எனக்கு காய்கறி நறுக்குவது - அதிலும் முக்கியமாக ஒரே சீரான அளவோடு நறுக்குவது பிடிக்கும். ஒரு வேளைக்கான வெண்டைக்காயை (அல்லது வேறு எந்தக் காய்கறியையோ) ஒரே சீராக நறுக்கி முடித்தால் வரும் திருப்தியிலும் என் சந்தோஷம் இருப்பதைப் பார்க்கிறேன். இதில் மட்டுமல்ல - புல்லை வெட்டுவதிலும், காரை சுத்தம் செய்வதிலும், அலுவலகத்தில் ஒரு மின் மடல் எழுதியவுடன், 'ஸ்பெல் செக்' செய்து ஒரு தவறும் இல்லை என்று கணினி சொல்லும் போதும் மனதுக்கு ஒரு திருப்தி வருகிறது. எல்லாமே பைசா செலவில்லாத அல்ப சந்தோஷம் தான் - இருந்தாலும் எனக்கு அது வேண்டியிருக்கிறது.

குடும்பத்தோடு லண்டன் சென்று இரண்டுவாரம் செலவு செய்து வந்த திருப்தியோடு இவைகளை என்னால் ஒப்பிட்டு பார்க்க முடியாவிட்டாலும், அல்லது இந்த மாதிரி அல்ப சந்தோஷங்கள் என் வாழ்க்கையின் குறிக்கோளாக இல்லாவிட்டாலும், வருடத்திற்கு ஒரு முறை வரும் ஒரு பெரும் சந்தோஷத்தோடு கூட, தினமும் கிடைக்கும் இரண்டு அல்லது மூன்று அல்ப சந்தோஷங்கள் என் தினசரி வாழ்க்கையை ஒரு உற்சாகத்தோடு நடத்த உதவுகிறது.

இப்போதெல்லாம் தினசரி வாழ்க்கையில் திருப்தியும், சந்தோஷமும், ஒரு விதமான contenment தரும் நிகழ்ச்சிகளை கொஞ்சம் உணர்ந்து பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். இந்த ஞானோதயம் எத்தனை நாள் இருக்கும் என்று தெரியவில்லை; இருக்கும் வரை தினசரி வாழ்க்கை டானிக் போல் இருக்கும் இந்த அல்ப சந்தோஷங்கள் வாழ்க!

திங்கள், ஜூன் 19, 2006

இங்கிலாந்துப் பயணம்

கிட்டத்தட்ட இரண்டு வாரம் லண்டன் பயணம் - குடும்பத்தோடு விடுமுறையில். இதற்கு முன் அலுவல் நிமித்தமாக மூன்று அல்லது நான்கு முறை வந்திருந்தாலும், விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் சுற்றிப் பார்க்க வருவது இதுவே முதல் முறை. பத்து வருடங்கள் அமெரிக்காவில் இருந்துவிட்ட படியால், இங்கு வந்தவுடன் அலுவலகம் சம்பந்தமில்லாத பொது வாழ்வில் தெரிந்த வித்தியாசங்கள் - அதனால் எனக்குத் தோன்றிய சிந்தனைகள் இங்கே.

அலுவலகத்தில் உள்ள வித்தியாசங்கள் - கூப்பிடும் முறை, செயல்படும் முறை அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆனால் பொதுவாழ்வில் இவைகளின் தீவிரம் அதிகம். உதாரணமாக நாங்கள் சென்ற இரயில் நிலையத்திலெல்லாம் தானியங்கிக் கருவி (பயணச்சீட்டு வழங்க) வைத்திருந்தார்கள். அதே சமயத்தில் அதன் அருகே ஒரு பணியாளர் நின்று கொண்டு கருவியை உபயோகிக்க உதவிக் கொண்டிருந்தார்! மனதுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயத்தில் ஸவுத்தாம்டன் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் போது, ஐந்து மணிக்கு கதவை இழுத்து மூடிவிட்டார்கள். வெளியே உட்கார நாற்காலி கிடையாது, கழிப்பிடம் அலுவலகத்திற்க்கு உள்ளே தான். அலுவலகத்திற்குள் பேருந்துப் பணியாளர்கள் நால்வர் அமர்ந்து பேசிக் கொண்டும், சுடொக்கு போட்டுக் கொண்டும், ஏதோ வேலை பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். கிட்டத்தட்ட 40 பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாய் வந்த பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். கடைசி வரை அந்தப் பணியாளர்கள் கதவைத் திறக்கவேயில்லை, பயணிகள் கண்ணாடி ஜன்னலைத் தட்டிக் கூப்பிட்ட போதும்!

நாங்கள் வந்திருக்கும் சமயம் உலகக் கோப்பை (கால் பந்து) ஜுரம். கார், வீடு, உடைகள், ஏன் முகத்திலும் கூட இங்கிலாந்துக் கொடி. நிறைய கார்களில் இரண்டு கொடிகள்; வசிக்கும் ஊcன இங்கிலாந்து, பிறந்த ஊரான பிரேசில் (அல்லது ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இன்ன பிற நாட்டுக் கொடிகள்)! வித்தியாசமாக இருந்தது.

செய்திகளில் முக்கியமான அரசியல், சமூகப் பிரச்சனை ஒரு நீதிபதி சட்டத்தில் உள்ளது போல ஒரு குற்றவாளிக்கு (child molestation) 'பரோல்' கொடுத்தது. அரசும் அரசியல் வாதிகளும், நீதிபதியைத் தாக்கி அறிக்கைகள் விட, நீதிபதி சார்பில் மற்ற வழக்குரைஞர்கள் சட்டம் இயற்றிய அரசைக் குற்றம் கூற, முடிவில் அரசு தரப்பில் ஒரு மந்திரியை அமெரிக்கா அனுப்பி அங்கு எப்படி இது போன்ற விஷயங்களை அரசும் சட்டமும் கண்காணிக்கிறது என்று அறியப் போவதாக செய்தி வந்திருக்கிறது. நாலு பாட்டும், இரண்டு சண்டைக்காட்சிகளும் சேர்த்தால் நம்மூர் சினிமா தான்!

இதைத் தவிர இரண்டு செய்திகள் - சென்ற வாரத்தில். 1. தவறான தகவல் அடிப்படையில் இங்கிலாந்துப் போலீஸ் ஒரு வீட்டில் புகுந்து ஒருவரை சுட்டும், அவரது சகோதரரை அடித்தும் கைது பண்ணி பத்து நாட்கள் முட்டிக்கு முட்டி தட்டி விசாரித்து பின் தவறு தெரிந்து விடுதலை செய்திருக்கிறார்கள். இந்த சகோதரர்கள் முஸ்லிம்! அதே வாரத்தில் இங்கிலாந்துப் போலீஸ் தலைவருக்கு ஒரு விருதும் வழங்கப் படுவதாக அறிவிப்பு வந்திருக்கிறது 2. இங்கிலாந்து ராணிக்கு 80 வயதாகிவிட்டது. பிரார்த்தனைக் கூட்டத்தில் தூங்கிய பிரதம மந்திரியின் மனைவியின் புகைப்படம் செய்தித் தாள்களில் வந்திருக்கிறது.

அமெரிக்காவைப் போல் மற்ற இன, மதங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இங்கு அதிகம் இல்லை. வந்த இரண்டாம் நாள் அருகில் உள்ள பூங்காவில் மகளையும், என் மைத்துனன் குழந்தையையும் விளையாட அழைத்துச் சென்றிருந்த என் மனைவியிடம் ஒரு சிறுவனும், சிறுமியும் (பத்து - பதிமூன்று வயதிருக்கும்) 'You are all slaves, why dont you go to your country?' என்று கேட்டதில் உள்ள வருத்தம் கொஞ்சம் இன்னமும் இருக்கத்தான் செய்தாலும், மொத்ததில் குடும்பத்தோடு ஒன்றாக சந்தோஷமாக இருந்தது மகிழ்ச்சியையே தருகிறது.

திங்கள், ஜூன் 12, 2006

ஒலி

சிறிது நாட்களுக்கு முன் ஒளி பற்றி 'வண்ணங்கள்' என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டேன். அதன் தொடர்ச்சியாக இந்த 'ஒலி'. மன்னார்குடியில் படிக்கும் போது (+1), 'டியூனிங் ஃபோர்க்' சம்பந்தப் பட்ட ஒரு பௌதீக சோதனை - கம்பியில் சிறு பேப்பர் துண்டுகளை தொங்க விட்டு, Tuning Forkஐ ஒரு தட்டு தட்டி, எங்கு அந்தப் பேப்பர் எழும்பி விழுகிறது என்று பார்த்து, கணக்கெல்லாம் போட்டு, அலைவரிசை கண்டுபிடிக்கும் ஒரு சோதனை - நினைவுக்கு வருகிறது. வெண்பா இலக்கணம் சொல்லித்தந்த தமிழ் ஆசிரியர் சொன்னது 'அசையில்லாமல் இசை இல்லை'; நிச்சயமாகச் சொல்லலாம் அசைவில்லாமல் ஒலியில்லை என்று. காற்றிலுள்ள அணுக்கள் மூலமாக பரவுகின்ற அதிர்வே நாம் ஒலியைக் கேட்க உதவுகிறது.

இந்த ஒலியும் ஒரு அலைதான் - ஆனால் ஒளி போல் குறுக்குவாட்டில் போகாமல் நெடுக்கு வாட்டில் போகும். இதைவிட முக்கியமான வித்தியாசம் - ஒலி செல்வதற்கு ஏதாவது ஒரு ஊடகம் - carrier - தேவை. ஒளி வெற்றிடத்திலும் செல்லும், ஒலியால் முடியாது. அது மட்டுமல்ல; ஒலி செல்லும் வேகம் ஊடகத்தைப் பொறுத்தது. திடப் பொருள்களில் மிக வேகமாகவும், திரவப் பொருள்களில் அதை விட சற்று மெதுவாகவும், வாயுப்பொருள்களில் மிக மிக மெதுவாகவும் செல்லும். ஒலியின் அலைவரிசையை ஹெர்ட்ஸ் என்று குறிப்பார்கள் Heinrich Rudolph Hertz (1857-94) நினைவாக.
மனிதக் காதுகளுக்கு 20ல் இருந்து 20,000 ஹெர்ட்ஸ் வரை அலைவரிசையுடைய ஒலிகள் கேட்கும். சில விலங்குகளுக்கு - நீர்யானை, யானை, திமிங்கிலம் போன்றவை - "இன்ஃப்ரா" என்று சொல்லப்படும் 20 ஹெர்ட்ஸ்க்கும் குறைவான அலைவரிசைகளில் வரும் ஒலியையும் கேட்கும் திறமை உண்டு. நாய், பூனை, எலிகள் - "அல்ட்ரா" என்று சொல்லப்படும் 20,000 ஹெர்ட்ஸ்க்கும் மேலான அலைவரிசைகளில் வரும் ஒலியையும் கேட்கும் திறமை உண்டு. வௌவாலின் கேட்கும் திறன் பற்றி எல்லோருக்கும் தெரியும். பாம்புக்கு காதுகள் இல்லாவிட்டாலும், மகுடியிலிருந்து வரும் ஒலி அலைகளின் அதிர்வு, நிலத்திலிருந்து, அதன் உடலில் உள்ள எலும்புகள் மூலமாக அதன் மூளைக்கு செல்கின்றது என்று படித்ததாக நினைவு.

நம் காதுக்குள் வந்த ஒலி அதிர்வு, காதுக்குள் உள்ள திரவத்தை அதிர்வடையச் செய்கிறது; பின் அந்த அதிர்வே மூளைக்கு அனுப்பப்பட்டு நம்மால் ஒலியாக உணரப்படுகிறது. நாம் பேசும் போதோ, பாடும் போதோ நம்முடைய வாயிலிருந்து வரும் ஒலிவலைகள் காற்றின் மூலமாக காதை அடையும். அதே சமயத்தில் நம்முடைய வாய் எலும்புகளில் அந்த ஒலியலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் காதை அடைந்து, பின் மூளையை அடையும் போது, நம் குரலின் அடையாளம் நமக்கு ஒருவிதமாக மாற்றிக் காட்டப்படுகிறது - இரண்டுவிதமான அதிர்வுகளின் கலவையாக (காற்றின் மூலம் வந்த அதிர்வு + எலும்பின் மூலம் வந்த அதிர்வு). இதனாலேயே நம்முடைய குரலை பதிவு பண்ணிக் கேட்கும் போது கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறது. இந்த விஷயத்தைப் பற்றி ஸ்ரீகாந்த் மீனாக்ஷி சமீபத்தில் எழுதிய பதிவு இங்கே.

காதில் எல்லா உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்தாலும், சமயத்தில் பிறர் சொல்வது நமக்கு கேட்பதில்லை; முக்கியமான காரணம் மூளை அந்த சமயத்தில் வேறு ஏதாவது ஒரு காரியத்தில் மிகவும் நுணுக்கமாக ஈடுபட்டிருப்பதுதான். ஆர்க்கிமிடிஸ் இது போன்று ஒரு புதிரை தீர்க்க முயன்று கொண்டிருக்கையில், அருகில் வந்த ஒரு வீரனுக்கு உடன் பதில் சொல்லாததால் கொல்லப்பட்டார் என்று கேள்வி. வேறு வேலையில் ஈடுபடாவிட்டாலும் வரும் ஒலி அதிர்வுகளைப் பற்றி ஒரு விதமான பரிச்சயம் இருந்துவிட்டால், மூளை செயல்பட மறந்துவிடும்.

நாங்கள் மன்னார்குடியில் இருந்த வீட்டில் ஒரு அரதப் பழசான மின்விசிறி உண்டு. அது போடும் சத்தம் மிக அதிகம். முதலில் சங்கடமாய் இருந்தாலும், சில மாதங்கள் கழித்து தூங்குவதற்கு அந்த சத்தம் தொந்தரவாயில்லை; என் மூளை அந்த சத்தத்தை நிராகரித்து செயல்பட கற்றுக் கொண்டுவிட்டது. என் வீட்டம்மாவிடம் சில நாட்களுக்கு முன் இதை விவரித்தபோது அவங்களுக்கு வந்ததே கோபம். "நான் சொல்வதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வதும் இல்லாமல், என் குரலை இனம் பிரித்து உங்கள் மூளை நிராகரித்து விடுகிறது என்று சொல்ல என்ன தைரியம்" என்று! தவறு என் மீது தான். 'பேப்பர் குப்பைகளை எல்லாம் எடுத்து வையுங்கள்' என்று இரண்டு, மூன்று முறை கூறியது என் காதில் விழவில்லை; 'ஏன் விழவில்லை' என்ற அவங்க கேள்விக்கு எப்போதும் போல் அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு பேப்பரை எடுத்து வைக்காமல் அன்றைக்கு என்று இந்த விளக்கத்தைக் கொடுத்தேன். விளக்கம் சொல்லாமல் காது சரியில்லை என்று சமாளிக்காதது என் குற்றம் தானே!

திங்கள், மே 29, 2006

வண்ணங்கள்

சென்ற வாரம் எங்க வீட்டம்மா என்னை மாடியிலிருந்து 'பச்சை'ப் பையை எடுத்துத் தரச் சொன்னாங்க. நான் கொண்டு வந்த பின் அது 'பச்சை' இல்லை, 'நீலம்' என்று சொல்லி திருப்பித்தர நான் மறுமுறை பத்து படி ஏறி 'நீல'ப் பையை எடுத்துக் கொண்டு வந்தேன். எனக்கு கண்ணில் ஏதும் கோளாறு இல்லை (அப்படித்தான் சென்ற வருடம் மருத்துவர் சொன்னார்). அப்புறம் எப்படி பச்சைக்கும் நீலத்திற்கும் உனக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று கேட்பீர்கள் என்று தெரியும். விஷயம் இதுதான். இரண்டு பைகளுமே பச்சைக்கும் நீலத்திற்கும் இடையே இருக்கும் ஒரு குழப்பமான கலர். ஒரு மாதிரியாகப் பார்த்தால் பச்சை; கொஞ்சம் தள்ளி நின்று வேறு கோணத்தில் பார்த்தால் நீலம். ஒரு விதத்தில் நாங்கள் இருவருமே சரிதான் - எங்களின் தனித்தனிக் கோணங்களில். இதை மாடு அசைபோடுவது போல அலுவலகத்திற்கு காரை ஓட்டிக்கொண்டுவரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன்.

முதன் முதலில் ஒளி அலைகளைப் பற்றி விபரமாக அறிந்து கொண்டது மன்னார்குடி தேசிய மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் போதுதான். அறிவியல் ஆசிரியர் திரு. சேதுராமன் (தற்போது அவர் தான் தலைமை ஆசிரியர்) அனுபவித்து பாடம் சொல்லிக் கொடுத்தது, எனக்கு அறிவியலில் ஒரு தனி விருப்பம் வருவதற்குக் காரணம். ஒளியும் ஒரு வித அலை தான் (ஒளிக்கு துகளின் தன்மையும் உண்டு). இந்த அலைகள் பல விதமானவை. ஒரு முக்கியமான அளவுகோல் "அலைநீளம்" ஆகும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் ஒரு அலை ஒரு முறை மேலே எழுந்து, கீழே போய், மறுபடியும் தொடங்கிய நிலைக்கு வரும் தூரத்தை அலை நீளம் என்று கூறுவார்கள்.

ரேடியோ அலைகளின் அலைநீளம் மிக அதிகம் - 570 மீட்டர் வரை போகும். காமா அலைகளின் அலைநீளம் மிக மிகக் குறைவு - மீட்டரில் அளந்தால் தசமப் புள்ளிக்குப் பிறகு பனிரெண்டு பூஜ்யம் போட்டு ஒன்று போட்டால் வரும் தூரம் - அதாவது ஒரு மில்லி மீட்டரில் நூறு கோடியில் ஒரு பங்கு! நாம் கண்ணால் பார்க்கும் ஒளி அலைகள் இந்த காமா அலைகளின் நீளத்தை விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமானவை (அதாவது ஒரு மில்லி மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு). இந்த தூரத்தை நானோ மீட்டர் என்று கூறுவார்கள். நாம் பார்க்கும் ஒளி அலைகளின் அலைநீளம் 400ல் இருந்து 700 நானோ மீட்டர்கள். முழுப் பட்டியலுக்கு பதிவின் முடிவிற்கு செல்லவும்.

இந்த ஒளி அலைகளின் பங்கு - மொத்த அலைகளின் விஸ்தீரணத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, ரொம்பவும் சின்னது. அதாவது மொத்த அலைகளில் பத்தாயிரம் கோடியில் ஒரு பங்கைத் தான் நாம் கண்களால் பார்க்க முடியும். பள்ளியில் படிக்கும் போது விபரீதமான கற்பனைகள் வரும். நம் கண்ணுக்கு மட்டும் மற்ற அலைநீளங்கள் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ரேடியோ டெலஸ்கோப் துணையோடு பார்ப்பதற்கு பதிலாக தொலைதூர நட்சத்திரங்களையும், கோள்களையும் கண்ணாலேயே பார்க்க முடியும், என்றெல்லாம் யோசித்ததுண்டு.

இந்த வண்ணக் குழப்பம் வந்தபின் 'ஆட்டுக்குக் கூட தாடியை அளந்து தான் வைத்தான்' என்ற பழமொழி ஞாபகம் வருகிறது. தம்மாத்தூண்டு இருக்கும் ஒளி அலைகளுக்குள்ளேயே இத்தனை வண்ணங்கள், குழப்பங்கள் - பச்சையா? நீலமா? என்று. மற்ற அலைநீளங்களையும் கண்ணால் பார்க்க முடிந்தால் எத்தனை வண்ணங்கள் இருக்குமோ? இன்னமும் எத்தனை பிரச்சனையோ? கல்யாண சேலைக்குப் பொருத்தமாக சட்டை எடுப்பதற்குள் அறுபதாம் கல்யாணமே வந்து விடும்! பார்க்க முடிகிறதே என்ற சந்தோஷம் தான் மனதில் இருக்கிறது.

அலை நீளங்கள்
ரேடியோ அலைகள் = 570 - 2.8 மீட்டர்
தொலைக்காட்சி அலைகள் = 5.6 - 0.34 மீட்டர்
மைக்ரோ அலைகள் = 0.1 - 0.001 மீட்டர்
ஒளி அலைகள் (சிகப்பு-வயலட்) = 700 - 400 நானோ மீட்டர்
அல்ட்ரா வயலட் = 0.1 - 0.0001 நானோ மீட்டர்
X அலைகள் = 0.0001 - 0.000001 நானோ மீட்டர்
காமா அலைகள் = 0.000001 நானோ மீட்டருக்கும் குறைவு

புதன், மே 10, 2006

வீடு!

நேற்று மாலையில் அலுவலகத்திலிருந்து வரும்போது அந்தப் புது வீட்டின் வாசலில் பலகை வைத்திருந்தார்கள் – For Sale - என்று. மனதிற்குள் ஒரு வருத்தம் கலந்த சந்தோஷம்.

நான் அலுவலகத்திலிருந்து திரும்பும் வழியில் ஒரு தெருவில் கடைசி வீடு அது. தெரு முனை என்பதால், மெதுவாகத்தான் திரும்ப வேண்டும்; சில சமயம் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக சில நிமிடம் நிற்கவும் வேண்டும். தினமும் பார்ப்பதால் அந்த வீட்டோடு ஒரு அன்யோன்யமான நட்பு - வீட்டோடு நட்பா என்று கிண்டலெல்லாம் வேண்டாம் - ஒரு பரிச்சயம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

முன்பு அங்கு ஒரு பழைய வீடு - ஒரு மாதிரி மரப் பழுப்பு வண்ணத்தில் - இருந்தது. வீட்டிலே யாரும் வசித்ததாகவும் தெரியவில்லை. கிட்டத்தட்ட நான்கு மாதத்திற்கு முன்னால் திடீரென்று ஒரு நாள் அந்த வீட்டின் அருகில் பெரிய பெரிய இயந்திரங்கள் - புல்டோஸர். தெருவுக்குள் போக ரொம்ப நேரமாயிற்று - வழி அதிகம் இல்லாததால். அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறு வழியில் (கொஞ்சம் சுற்று வழி) வீட்டுக்கு வந்ததால் என்ன நடந்தது என்று விபரம் தெரியாது. மறுபடியும் வழக்கமான பாதையில் வந்தால், வீடு இருந்த இடத்தில் வெறும் குழி - ஒரு குட்டி மலை போல மண்ணைக் குமித்திருந்தார்கள். ‘Free Fill Dirt’ என்ற பலகை அருகில் இருந்தது.

அடுத்த வாரம் அந்த மண்ணைக் காணோம் - பதிலாக குழியின் பக்கங்களில் கான்கிரீட் ப்ளாக்குகள் வைத்து சுவர். அடுத்த வாரம் தளம் தயார், மரச் சட்டங்கள் வந்து இறங்கின. ஒரு வாரத்திற்குள் இரு நிலைகள் கொண்ட வீட்டின் ஃப்ரேம் தயார். கிடு கிடுவென வீடு வளர்ந்தது. பின்பு வாசல் படி, ஜன்னல்கள், கராஜ் கதவுகள் என்று ஒவ்வொன்றாக வந்தது. சென்ற வார ஆரம்பத்தில் வாசல் சாலை ரெடி; பின்பு வாசல் புல்வெளி. நேற்று வீடு விற்பதற்கான பலகை. ஒரு மாதிரியான மங்கின சந்தனக் கலர் வீடு - குறைந்தது $750,000 ஆவது இருக்கும்.

அழகான வாசல் படி, உயரமான கூரை, நிதானமான அதே சமயம் ஒளி நன்றாக வரும் விளக்கு, Bay Window, என்று வீடு அழகாக இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக மனத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் அந்த பழுப்பு நிற வீட்டை நினைத்து மனம் ஏன் வருந்துகிறது என்று தெரியவில்லை.

பொதுவாக வீட்டைப் பற்றி என் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் தான் சிறுவனாக தாத்தா வீட்டில் (தஞ்சாவூர் அருகில் வழுத்தூர்) இருந்தது, வீட்டிற்கு எப்படி மண் சாந்து (களிமண்ணை அரைத்து, கடுக்காய் நீர் விட்டு, செங்கலைப் பூசுவது) பூசுவது, எப்படி ஓடு மாற்றுவது என்றெல்லாம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன் நடந்தது அவருக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. பூசுவதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருளைக் கேட்டால் வித்தியாசமாக இருந்தது - உ.ம். பசுஞ்சாணி, கடுக்காய், துவரை விதை உறை, சுண்ணாம்பு, காவி, களிமண். பெரிய பணக்காரர்கள் வீட்டில் வாசலுக்கு இந்தக் கலவையொடு முட்டையையும் அரைத்துப் போடுவார்களாம் - பளபளப்புக்காக!

நான் பார்த்து வளர்ந்த இந்தப் புது வீட்டில் பூசப்பட்டது எல்லாம் செயற்கையான பொருட்களே; வெளியில் வந்த புல் தரை கூட ஏதோ ஒரு இடத்தில் வளர்த்த புல்; இரண்டு அங்குலத் தரையோடு சேர்த்து எடுத்து வந்து கம்பளம் விரிப்பது போல் விரித்து தண்ணீர் விட்டு ஒரே நாளில் தயார் பண்ணி விட்டார்கள்.

அதனால்தான், மூன்றே மாதத்தில் சகல வசதிகளோடு அழகாக வந்துவிட்டதில் மனது சந்தோஷப்பட்டாலும், பழைய வீட்டை மனசு நினைத்து வருந்துகிறதோ? இன்னும் கொஞ்ச நாளில் அந்த பழைய வீட்டின் நினைவு முற்றிலும் மறந்து போய் இந்தப் புது வீட்டில் வைத்துள்ள ரோஜாச் செடிகளையும், புல்வெளியையும் மட்டுமே நினைவில் வைத்துக் கொள்வேனோ என்னமோ.

திங்கள், மார்ச் 27, 2006

பந்து!

சனிக்கிழமை என் 18 மாத மகனுக்கும், மூன்றரை வயதான என் மகளுக்கும் போட்டி, சண்டை. இருவருக்கும் ஒரே பந்து தான் வேண்டும். வீட்டில் வித விதமான பந்துகள் - பெரிதும் சிறிதுமாக, ரப்பர், பிளாஸ்டிக், தோல், துணி என்று விதவிதமான வகைகள் - பல வண்ணங்களோடு. இருந்தாலும், இருவருக்கும் ஒரே சமயத்தில் ஒரே பந்துதான் வேண்டும். சர்ச்சைக்குரிய பந்தை நான் எடுத்து ஒளித்து வைத்தேன். என் பெற்றோர்களின் யோசனை – ‘அதே மாதிரி இன்னுமொரு பந்து வாங்க வேண்டியதுதானே’ என்று என்னைக் கேட்கிறார்கள்!! நான் சிறுவனாக இருக்கும் போது வருடத்திற்கு ஒரு பந்து வாங்கிக் கொடுக்கவே யோசனை செய்தவர்களா இவர்கள்?! பேரன் பேத்தி என்று வந்து விட்டால் எல்லாம் மாறி விடும் போல் இருக்கிறது.

சிறு வயதில் கிரிக்கட் விளையாட பந்தில்லாமல் நாங்கள் செய்த வேலைகள் தான் எத்தனை? ரப்பர் பந்து சீக்கிரம் பிய்ந்து போய் விடும். வாடகை சைக்கிள் கடை வைத்திருப்பவரிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு பழைய சைக்கிள் டியூப் கேட்போம். கொஞ்சமாகத்தான் கொடுப்பார் - அவருக்கு பங்க்சர் ஒட்ட அந்த டியூப் உதவுமே! டியூபை ஒரு விரற்கடை அகலத்திற்கு துண்டு துண்டாக (ஒரு வளையம் போல்) வெட்டிக் கொள்வோம். பந்து கனமாக இருக்க வேண்டும் என்றால் சிறு கல்லை எடுத்து, அதன் மேல் காகிதத்தை சுற்றிக் கொள்வோம். பந்து இலேசாக இருக்க வேண்டும் என்றால் வெறும் காகிதம் தான் - கல் கிடையாது. பின்பு இந்த ரப்பர் வளையங்களை ஒவ்வொன்றாக காகித உருண்டையின் மேல் இறுக்கமாகப் போட்டு விட்டால் பந்து தயார்.

இந்த மாதிரி பந்து செய்வதற்கும் திறமை வேண்டும். தெருவில் இரண்டு, மூன்று பேர் - இணையத்தில் எழுதும் அலெக்ஸ்பாண்டியன் உட்பட - இதில் கை தேர்ந்தவர்கள்! இந்த மாதிரிப் பந்து கொஞ்ச நாள் தாங்கும். அவ்வப்போது இதற்கு 'மெயின்டெனன்ஸ்' உண்டு. அறுந்த ரப்பர் வளையங்களை எடுத்து புதிதாகப் போடுவது, தண்ணீரில் நனைந்து போனால் எல்லாவற்றையும் எடுத்து விட்டு உள்ளே உள்ள காகிதத்தை மாற்றுவது, என்று எல்லாம் சரியாக நடக்க வேண்டும். இந்தப் பந்தோடு விளையாட கொஞ்சம் திறமை வேண்டும் - அடிபட்டால் வலிக்கும். சமயத்தில் பந்து வரும் போது மேலே உள்ள ரப்பர் விண்டு போய் தனியாக வந்து மூஞ்சியில் அடிக்கும். கிரிக்கட்டில் அருகே உள்ள பீல்டர்களுக்கு இது ஒரு தொந்திரவு. ஸ்பின் அதிகம் ஆகும்! கொஞ்சம் பார்த்து விளையாட வேண்டும்.

செலவில்லாவிட்டாலும் இந்தப் பந்தை எல்லா விளையாட்டுகளுக்கும் உபயோகிக்க முடியாது. தெருவில் அனேகமாக எல்லா வீடுகளும் ஓட்டு வீடு தான் - அதிலும் நாட்டு ஓடு தான் அதிகம். ரப்பர் பந்தை கூரையில் விட்டெறிந்து, அது கீழே வரும் போது ஒருவர் மாற்றி ஒருவர் கையால் மறுபடியும் கூரையில் தட்டி விளையாடுவோம். பந்து ஒட்டில் பட்டு சட்டென்று திசை மாறி வரும்; அதனால் விளையாட்டில் சுவாரசியம் அதிகம். கிட்டத்தட்ட ஸ்குவாஷ் அல்லது ராக்கெட் பால் என்று சொல்லப்படும் விளையாட்டுகள் போல; ஆனால் மட்டை கிடையாது. அதற்கு இந்த வகை சைக்கிள் டியூப் பந்து ஒத்து வராது - ஓடு உடைந்து விடும்; வீட்டில் திட்டு/அடி கிடைக்கும். அதே போல் 'புட்டு', 'பே-பே' போன்ற விளையாட்டுகளுக்கும் இந்தப் பந்து உதவாது - இவ்விரு விளையாட்டுகளிலும் எதிர் அணியில் உள்ளவர்களை பந்தால் அடிக்க வேண்டும் என்பதால்.

மன்னார்குடியில் ஒரு டென்னிஸ் கிளப் உண்டு. அங்கிருந்து பழைய பந்தை எப்போதாவது தெருவில் உள்ள நண்பர்கள் யாரேனும் வாங்கி வருவார்கள். அது கிடைத்தால் சந்தோஷம் தான். பந்து தொலைந்து போகும் வரை அல்லது கிழியும் வரை விளையாடுவோம். சமயத்தில் பந்தில் மேலுள்ள உறையெல்லாம் தேய்ந்து போய், வழ வழ என்று சாதா ரப்பர் பந்து போல் ஆகிவிடும். ஒரு காலத்தில் அது டென்னிஸ் பந்து என்று இருந்ததற்கு சாட்சியாக அதன் மேல் ஒரு வெளிர் கோடு மட்டும் தெரியும் - அணில் முதுகில் இருக்கும் கோட்டைப் போல். இருந்தாலும் தீர்மானமாக அதை வைத்துக் கொண்டு விளையாடுவோம்.

இதில் சண்டைகளும் அடிக்கடி வரும். எனக்கும் என் தம்பிக்கும் இடையேயும் சண்டைகள் வந்திருக்கின்றன. ஒரு முறை கிரிக்கட் விளையாடும் போது, வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவரை என் மட்டை பதம் பார்த்துவிட, அவர் என்னைத் துரத்திக் கொண்டு ஓடி வர, என் தம்பி அவர் பின்னால் என்னைக் காப்பாத்த ஓடி வந்தது இன்னமும் நினைவில் நிற்கிறது. 'சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து; அதை மாற்ற யாராலும் முடியாது' என்று சிவாஜியின் திருவிளையாடல் வசனம் ஞாபகம் வந்தது. இது உடன்பிறந்தவர்களுக்கும் பொருந்தும். இதையெல்லாம் நினைத்துப் பார்த்து, ஒளித்து வைத்த பந்தை எடுத்து மறுபடியும் என் மகனுக்கும் மகளுக்கும் இடையே போட்டேன் - தொடரட்டும் சண்டை என்று!

வெள்ளி, மார்ச் 24, 2006

ஓட்டுனர்கள்!

இரண்டு வருட இடைவேளைக்குப் பிறகு இந்த வருட ஆரம்பத்தில் வேலை நிமித்தம் இரண்டு வாரம் பெங்களூர் சென்றிருந்தேன். அலுவலகத்திலிருந்து வீடு (கம்பெனியின் அபார்ட்மென்ட்) செல்ல அலுவலகக் கார் - கார் சோபையிழந்து இருந்தாலும், ஓட்டுனர் களையாக இருந்தார்! (தப்பான கற்பனைக்குப் போக வேண்டாம்!). என்னிடம் “என்ன 'சிடி' வேண்டும் - பாப்? ஹிந்துஸ்தானி? கன்னடம்?” என்றெல்லாம் நேயர் விருப்பம் போல் கேட்டார். அவரிடம் இருந்த செல்போன் வித விதமாய் சத்தம் போட்டது ('இது என் வீட்டிலிருந்து, இது என் மானேஜர்' என்றெல்லாம் விளக்கம் கிடைத்தது). வீடு திரும்புகையில் களைத்து உட்கார்ந்து இருக்கும் என்னையும், அவரையும் தூரத்திலிருந்து யாராவது பார்த்தால், ஓட்டுனர் யார் என்ற சந்தேகம் கட்டாயமாக வரும்! எனக்கு சிறு வயதிலிருந்து பார்த்த வித விதமான ஓட்டுனர்களின் ஞாபகம் வந்தது!

முதலாக பரமக்குடியில் என் பெரியப்பா வீட்டு 'டிரைவர் சந்தானம்'. ஊருக்குள்ளேயே சற்று தொலைவு போவதற்கும் (சினிமா, தெரிந்தவர் வீடு), மற்றும் முக்கியமாக மதுரை மற்றும் அக்கம் பக்கம் உள்ள கோர்ட்டுகளுக்கு (என் பெரியப்பா ஒரு வக்கீல்) போவதற்கும்தான் கார். அருமையாகப் பேசுவார்; கதை சொல்லுவார்; எல்லா விஷயமும் பேசுவார்! ஒரு ஐந்து வயதுப் பையனுக்கு வேறு என்ன வேண்டும்.

பின்பு பள்ளியில் படிக்கும் காலத்தில் (பட்டுக்கோட்டை, மன்னார்குடி) வெளியூருக்கு செல்லும் போது பார்த்த பேருந்து ஓட்டுனர்கள். அப்போது இருந்த முக்கியமான பஸ் பயணம் எல்லாம் சென்னைக்கு (திருவள்ளூவர் - இரவுப் பேருந்து); அல்லது திருச்சி, மதுரை போற 'லோக்கல்' பயணங்கள். அனேகமாக சற்று பருமனாகவும், முறுக்கு மீசை வைத்துக் கொண்டும், வழியில் நிற்கையில் ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு, ஒரு பீடி வலிப்பவராகவும் இருப்பார்.

அடுத்ததாக கல்லூரியில் (திருச்சி) படிக்கையில் தனியார் பேருந்துகள், எப்போதாவது 'தீரன் சின்னமலை'. பெரிய முறுக்கு மீசை, பீடி எல்லாம் இல்லை; சிகரெட்தான்! இந்த ஓட்டுனர்கள் எல்லாம் கொஞ்சம் ஒல்லி - ஆனால் ரொம்பவும் போட்டி மனப்பான்மை நிறைந்தவர்கள். மெயின்கார்ட்கேட்டிலிருந்து மாலையில் (அல்லது காலையில்) செல்லும் எல்லாப் பேருந்தும் ரொம்பி வழியும். அதிலும் இராசநாயக்கன்பட்டி செல்லும் 45ம் நம்பர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய ஒரு பேருந்து - ஒரு வண்டியில் இத்தனை மனிதர்கள் போக முடியுமா?!? என் நண்பன் ஒருவன் சொன்னது 'இந்த கண்டக்டர்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் நம் முகம் தெரியாது; நம்மையெல்லாம் ஒரு எட்டணா, அல்லது ஒரு ரூபாய் என்றுதான் அவர்களுக்குத் தெரியும்!'

பின்பு சென்னைக்கு வந்த பின் தினமும் 'பல்லவன்' ஓட்டுனர்கள் - இவர்களுக்கு வசூல் கவலையெல்லாம் கிடையாது; அதனால் கிளம்ப வேண்டிய நேரத்திற்கு முன்பாகவே கிளம்பிவிடுவார்கள் அல்லது சில நிறுத்தங்களை விட்டு விடுவார்கள். நகைச்சுவை உணர்வு நிறம்பியவர்கள். நமக்கு உடற்பயிற்சி தருவதற்காக, நிறுத்த வேண்டிய இடத்த்ற்கு முன்பாகவோ அல்லது தாண்டியோ நிறுத்துவார்கள். நாம் ஓடி வருவதைப் பார்த்தாலும் கிளம்பி விடுவார்கள்.

அமெரிக்கா வந்த பின் நானே என் வீட்டுக்கு (முக்கியமாக வீட்டு அம்மாவிற்கு) ஓட்டுனராகி விட்டதால் அதிகம் மற்ற ஓட்டுனர்களைப் பார்க்க முடிவதில்லை! வயதாகி வருவதால் இப்போதெல்லாம் முதன்மை ஓட்டுனரை - அர்ஜுனனின் சாரதியை - அதிகம் நினைக்கத் தொடங்கியிருக்கிறேன்!

ஞாயிறு, மார்ச் 19, 2006

ஆரோக்கியம்!

சிறு வயதில் கேட்ட ஒரு கதை. வயதானாலும் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு கிராமத்துப் பெரியவரை, 'உங்கள் ஆரோக்கியத்திற்கு காரணம் என்ன?' என்று கேட்ட போது இவ்வாறு பதில் கூறினாராம்.

‘ஓரடி நடவேன்
ஈரடி நில்லேன்
இருந்து உண்ணேன்
கிடந்து உறங்கேன்’

இதன் பொருள்:
ஓரடி நடவேன் - அதாவது என் நிழல் ஓரடியாக இருக்கும் காலத்தில் - மதியம் (உச்சி வெயில் காலம்) வெளியே நடக்க மாட்டேன்.
ஈரடி நில்லேன் - ஈரப்பதமான இடத்தில் (வெறுங்காலுடன்) நிற்க மாட்டேன்
இருந்து உண்ணேன் - முதல் வேளை உண்ட உணவு வயிற்றில் இருக்கையில் உண்ண மாட்டேன்
கிடந்து உறங்கேன் - தூக்கம் வருவதற்கு முன் படுக்கையில் புரண்டு கிடந்து உறங்க மாட்டேன் (அதாவது, நன்கு உழைத்து களைப்போடு வந்து படுத்தவுடன் உறங்கி விடுவேன் - உறக்கம் வராத போது படுக்கையில் கிடந்து உறங்க மாட்டேன்).

என்னுடைய தற்போதைய வாழ்க்கையிலும் இதை நான் கடைபிடிக்கிறேன் - அந்தப் பெரியவரின் ஆரோக்கியம் இருப்பதாகத் தெரியவில்லை.

நானும் ஓரடி நடப்பதில்லை - காலை வேலைக்கு வரும் போது அனேகமாக சூரியன் உதித்திருப்பதில்லை; மாலை வீடு திரும்பும் போது அஸ்தமனம் ஆகியிருக்கும். இருக்கும் இருபதாவது மாடியிலிருந்து மதியம் வெளியே போவது கிடையாது!

ஈரடி நிற்பதில்லை - வெறுங்காலுடன். வேறு வழியே இல்லாமல் வீட்டின் வாசலில் இருக்கும் இரண்டடிப் பனியை எடுத்துப் போடுவதற்கு, இரண்டு-மூன்று சட்டைகள், கோட்டு, குல்லா, மப்ளர், கையுறை, காலுறை (இரண்டு), ரப்பர் பூட்ஸ் என்றெல்லாம் மாட்டிக் கொண்டுதான் போகிறேன்.

இருந்து உண்பதில்லை - காலையில் அலுவலகத்திற்கு வரும் அவசரத்தில் ஒரு காப்பியைத் தவிர உண்பதில்லை; மதியம் மீட்டிங்குகளுக்கு இடையில், சமயம் கிடைக்கும் போது உணவு! இரவு வீட்டிற்கு போகும் வழியிலேயே பசிக்க ஆரம்பித்து விடுகிறது!

கிடந்து உறங்குவதில்லை! நிறைய நாட்கள் வீட்டில் சாப்பிட்டு முடித்த உடனேயே தூக்கம் வந்து விடுகிறது - மனைவி, குழந்தைகள் பேச்சுக்கு அந்த அரைகுறை தூக்கத்திலேயே பதில். கிடந்து உறங்குவதற்கு பதில் உட்கார்ந்தே உறக்கம்.

மொத்தத்தில் நானும், ‘ஓரடி நடவேன்; ஈரடி நில்லேன்; இருந்து உண்ணேன்; கிடந்து உறங்கேன்’. ஆனால் ஆரோக்கியம்?!

புதன், மார்ச் 08, 2006

வல்லினப் பழம்? மெல்லினப் பழம்?

சென்ற வாரம் என் மகளுக்கு படம் பார்த்து வார்த்தைகள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆப்பிள் என்று சொன்னதும் என்னை 'ஆப்பில்' என்று திருத்தினாள் - நான் படித்துக் கொண்டிருந்தது ஆங்கிலப் புத்தகம்; சிறிது நேரம் கழித்து தமிழ் ஆத்திச்சூடியில் நான் ஆப்பில் என்றவுடன் 'ஆப்பிள்' என்று திருத்தினாள்! மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது - உச்சரிப்பு வித்தியாசம் புரிந்து திருத்துகிறாள் என்று. அப்புறம் தோன்றியது இந்தக் கேள்வி - எது சரி? ஆப்பிலா? ஆப்பிளா?

சிறிது நேரம் (2 - 3 நாள்) யோசனை பண்ணியபின் நான் புரிந்து கொண்டது இங்கே. இது போன்ற நிறைய வார்த்தைகள் மற்ற மொழியிலிருந்து வரும் போது உச்சரிப்பில் வேறுபடுகிறது. சில வேறுபாடுகள் பொருத்தமான எழுத்துக்கள் இல்லாத காரணத்தால் - உதாரணமாக 'தமிழ்' என்பதே 'டமில்' என்று மாறுகிறது - ஆங்கிலத்தில் 'ழ்' இல்லாததால்.

பாங்ளா (பெங்கால்) என்பது வங்காளம் என்று மாறுகிறது, தமிழில். வங்காள மொழியில் 'வ' இல்லை என்று பள்ளியில் தமிழ் ஆசிரியர் சொன்ன ஞாபகம். அது சரி என்றாலும், ஒரு மொழியிலிருந்து வார்த்தையை உபயோகிக்கும் போது, மாற்றப்படுகின்ற மொழியில் அந்த உச்சரிப்பு இல்லை என்றால் தானே மாற்ற வேண்டும்? தமிழில் 'ப'வும் இருக்கிறது, 'ல்' ம் இருக்கிறது - பெங்கால் என்று எழுதினால் என்ன? வங்காள மொழியில் 'வ' இல்லை என்ற காரணம் காட்டி அங்குள்ள அத்தனை 'ப' வையும் 'வ' என்றாக்குவது சரியா? அதே போல் தமிழில் 'ல்' இருப்பதால் ஆப்பில் என்று எழுதுவதில் என்ன தவறு?

தமிழ் இலக்கணப்படி புள்ளி எழுத்தில், ஆய்த எழுத்தில் வார்த்தை தொடங்கக் கூடாது. புளோரிடா என்பதை விட ப்ளோரிடா அல்லது ஃப்ளோரிடா என்று எழுதினால் என்ன? தமிழ் எழுத்துக்கள் வடிக்கப்பட்ட காலத்தில் எழுதிய இலக்கணத்தை, அப்போது அவர்களுக்கு தெரிந்திராத ஊர்களுக்கும், வார்த்தைகளுக்கும் உபயோகப் படுத்துவது சரியானதுதானா? (தொல்காப்பியர் மன்னிக்க!).

இவைகளெல்லாம் வார்த்தைகளை அப்படியே தமிழ் எழுத்தில் எழுதுவது பற்றி. மொழி பெயர்த்து எழுதுவது இன்னும் குழப்பமானது. 'Bell Road' என்பதை ‘பெல் தெரு’ என்று சொல்லலாம். இதையே மணித் தெரு என்று மொழி பெயர்த்தால்?! இங்கு ‘பெல்’ என்பது ஒரு மனிதரின் பெயர். அவரை மணி என்று விளிப்பதை அவர் ஆட்சேபிக்கலாம்!

கல்லூரியில் படிக்கும் போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களின் பெயர்களை சுவரொட்டிகளில் பார்த்து ரசித்து சிரித்ததுண்டு. 'சூரிய பகவானின் வளைவு', 'சாவுக்கு முன் சாமி கும்பிடு' என்ற படங்களின் சுவரொட்டிகள் இன்னமும் நினைவில் நிற்கின்றன. முடிந்தால் மூலப் படங்களின் ஆங்கிலப் பெயர்களை ஊகியுங்கள் பார்ப்போம்!

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் 'ஒரு கம்ப்யூட்டரின் கதை' என்ற புத்தகத்தின் முன்னுரையில் இந்த மாதிரி மொழிபெயர்த்த வார்த்தைகளை ஏன் உபயோகிக்கவில்லை என்று காரணம் காட்டியிருந்தார். BASIC என்ற ஒரு மென்பொருள் மொழி ' Beginners’ All-purpose Symbolic Instruction Code ' என்ற சொற்றொடரின் முதலெழுத்துகளால் ஆனது - இதையே தமிழில் 'ஆபகுசம்' – ‘ஆரம்பிப்போரின் பல்திறமை குறியீட்டு சங்கேதம்’ என்று மொழிபெயர்த்தால் எப்படியிருக்கும்? என்று கேட்டிருந்தார்!

எனக்கு அவர் கருத்தோடு ஒத்துப்போகிறது. இருந்தாலும், இந்த மாதிரி மொழிபெயர்ப்புகளில் ஒரு நகைச்சுவை இருக்கிறது என்பதால் மொழிபெயர்ப்புகளைப் படிக்கவும் தோன்றுகிறது.

பின் குறிப்பு: ஆங்கிலப் படங்களை ஊகிக்க முடியவில்லையா?
1. Arc of the Sun God
2. Pray before death.

வியாழன், ஜனவரி 12, 2006

நினைப்பில் நன்மை தீமை உண்டா?

ஏனோ தெரியவில்லை இந்த வாரம் முழுதும் ஒரே கையரிப்பு - ஏதாவது எழுத! இரண்டு நாட்கள் முன்பு வழக்கம் போல் இல்லாமல் காரில் அலுவலகம் வரும்போது ஈ.எஸ்.பி.என். ரேடியோ கேட்டுக்கொண்டு வந்தேன். எனக்கு அமெரிக்க கால்பந்தாட்டம் தெரியாது; பார்க்கவும் விருப்பமில்லை. வானொலியில் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு முக்கியமான ஆட்டத்தில் ஒரு அணியின் முக்கியமான விளையாட்டுவீரர் காயமடைந்து ஆட்டத்திலிருந்து வெளியேற (ஸ்ரெச்சரில்) அந்த அணி தோற்றது.

நிகழ்ச்சியில் வர்ணனையாளர் கேட்ட கேள்வி: அடிபட்ட அந்த வீரர் வெளியேறும் போது, எதிர் அணியின் ஆட்டக்காரர்கள், ரசிகர்கள் 'நடந்தது நம் நன்மைக்கே; இனி ஆட்டத்தில் வெற்றி நிச்சயம்' என்று நினைத்தால் அவர்கள் எல்லோரும் கெட்ட மனிதர்களா?

எனக்கு சிறு வயதில் தெருவில் கிரிக்கெட் ஆடும் போது எதிர் அணியில் இருப்பவரை அவுட்டாக்க செய்த கோமாளித்தனமான செய்கைகள் (மூடநம்பிக்கை) ஞாபகம் வந்தது. அதை விட இது தீவிரமானது!

நிகழ்ச்சி தொகுப்பாளர் மேலும் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட கேள்விகள்:
அடிபட்டு விழுந்ததும் 'அப்பாடா! இனி நம்மணி வெற்றி பெறலாம்' என்று நினைப்பதற்கும், ஆட்டத்திற்கு முதல்நாள் இந்த மாதிரி எதிர் அணியில் இருப்பவர் காயம் பட்டால் நன்றாக இருக்குமே என்ற நினைப்பதற்கும் (ஏன் சில சமயம் பிராத்தனைகள் கூட) வித்தியாசம் உண்டா?

வேண்டாதவருக்கு தீங்கு வந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டால் கெட்ட மனிதனா? அல்லது மனத்தால் மற்றொருவருக்கு தீங்கு வந்தால் நல்லது என்று நினைத்தால், கெட்ட மனிதனா?

இப்படியெல்லாம் நிகழ்ச்சியில் கேள்விகள் கேட்கப்பட, வானொலி ரசிகர்கள் தொலைபேசியிலும், மின் மடலிலும் தங்கள் கருத்துகளை சொன்னார்கள். அப்படிச் சொல்லப்பட்ட கருத்துகளிலிருந்து குறிப்பிடும்படியான சில கருத்துகள் :
1. நான் எதிர் அணியின் முக்கிய ஆட்டக்காரர் ஆட முடியாமற் போனதற்கு சந்தோஷப் படவில்லை என்றால் என் அணிக்கு ஒரு நல்ல ஆதரவாளனே அல்ல.
2. எதிர் அணியின் ஆட்டக்காரருக்கு அடி பட வேண்டும் என்று பிரார்த்திப்பது தவறு; ஆனால் அடி பட்டு விளையாட முடியாமல் போனால் அதற்கு சந்தோஷப் படுவது தவறில்லை.
3. ஒருவர் அடிபட்டதற்கு சந்தொஷப்பட்டால் அவன் நல்ல மனிதன் அல்ல.
4. அடிபடுவதற்காக பிராத்தனை செய்வதற்கும், அடிபட்டபின் சந்தோஷப்படுவதற்கும் வித்தியாசம் இல்லை; அடிப்படையில் அவர்கள் நல்ல மனிதர்கள் அல்ல.
5. மறுமுறை விளையாடவே முடியாதவாறு அடிபட்டால், அதற்கு மகிழக்கூடாது; ஒன்று அல்லது இரண்டு ஆட்டங்கள் ஆட முடியாது, அதனால் நம் அணிக்கு நன்மை என்றால் மகிழ்வதில் தவறில்லை.
6. தமக்கு வேண்டாதவர் அடி பட்டால் எவராயிருந்தாலும் மகிழ்ந்து தான் போவார்; அப்படி மகிழமாட்டோம் என்று சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள்.
7. தமக்கு வேண்டாதவர் அடி பட வேண்டும் என்று நினைப்பதும், அடிபட்டால் மகிழ்ந்து போவது இயற்கை; சரியா தவறா என்பது பற்றி தெரியாது. உலகத்தில் பெரும்பான்மையான மக்கள் இப்படித்தான் நினைப்பார்கள். இயற்கையே இப்படித்தான் என்றால் அது சரி என்று தான் நினைக்கிறேன்.

இதற்கு முந்திய பதிவில் நான் எழுதியது வார்த்தைகளினால் சொல்வதும், அதன் விளைவுகளும். இது ஒருவரின் நினைப்பு பற்றியது. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா? எனக்கு மேலே சொன்ன ஏழாவது கருத்தோடுதான் அதிகம் ஒத்துப் போகிறது.

புதன், ஜனவரி 11, 2006

உண்மையா அல்லது (பெரும்பான்மை) நன்மையா?

பொய் சொல்வது என்பது கிட்டத்தட்ட பேசத் தெரிந்தவுடனேயே ஆரம்பித்துவிடுகிறது. பொய் சொல்வது சரி என்று நான் சொல்லவில்லை - இயல்பாகவே வந்து விடுகிறது என்றுதான் சொல்கிறேன். பொய்யை யார் சொன்னாலும், அதை நியாப்படுத்துவதற்கு நிறைய வாதங்கள், காரணங்கள் இருக்கின்றன. தமிழில் இம்மாதிரி நியாயப்படுத்த, காரணமாக மேற்கோள் காட்ட நிறைய பழமொழிகளும், ஏன் திருக்குறளே கூட இருக்கின்றன. “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.” (292)

புரைதீர்ந்த என்றால் குற்றமற்ற என்று பொருள் (புரை - குற்றம்; தீர்ந்த - முடிந்த, இல்லாத). ‘பொய் குற்றமற்ற நன்மை விளைவிக்கிறதா’ என்று யார் தீர்மானிப்பது?

பொய் சொல்லும் எவரும் தனக்கு தீமை வரும் என்று எண்ணினால் பொய் சொல்லப் போவதில்லை; குறைந்தபட்சம் தற்காலிக நன்மை வரும், அல்லது வரப்போகும் தீமை தற்காலிகமாகவாவது போகும் என்று எண்ணித்தான் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல - பொய் சொல்வது குற்றம் என்று கொண்டால், குற்றமில்லாத நன்மை பொய் சொல்வதால் வர முடியாது.

முதற் குறளில் வள்ளுவரே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொல்.” (291)

இங்கேயும் இதே பிரச்சனை - யார் தீமை எது என்று தீர்மானிப்பது. எப்போது மாற்றம் வருகிறதோ, அப்போது நன்மை, தீமை இரண்டும் வரும். ஒருவரின் உணவு மற்றவருக்கு விஷம். இது தவிர்க்க முடியாதது. நன்மை தீமை இரண்டும் வராமல் பேச முடியும்; ஆனால் சுவாரசியம் அல்லது மாற்றம் இருக்காது. ஒரு நல்ல துணுக்குக்குக் கூட கொஞ்சம் கற்பனை - பொய் - தேவையாயிருக்கிறது.

இந்த இரண்டு குறள்களையும் இப்படி மாற்றியும் எழுதலாம்:

“பொய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
நன்மை இலாத சொல்.” (291-அ)
“வாய்மையும் பொய்மை யிடத்த புரைசேர்ந்த
தீமை பயக்கும் எனின்.” (292-அ)

சில சமயங்களில் உண்மையைச் சொல்வதால் ஏற்படும் கஷ்டங்கள், சங்கடங்கள் தீயனவாகவும் போகலாம். என் அனுபவத்தில் தேவையில்லாத சமயத்தில் சொல்லப்பட்ட உண்மைகள் விளைவித்த சங்கடங்கள் அதிகம் (உதாரணம், அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போது, சட்ட திட்டங்களுக்காக மருத்துவர் அறுவை சிகிச்சையில் என்ன மாதிரி தீமைகள் வருமென்று 10 நிமிடங்கள் விவரித்தார் - எனக்கோ 'அபசகுனம் பிடித்த மாதிரி இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே' என்று வருத்தமாயிருந்தது). அவர் சொன்னது எல்லாம் உண்மைதான் - எனக்கு வருத்தம் விளைவித்ததால் அதை 291ம் குறளில் (அல்லது 291 – அ) சொன்னது போல் வாய்மை இல்லை என்று கொள்ளலாமா?

இதைவிட அடிப்படையாக - விளைவுகள் (நன்மை - தீமை) குணத்தை (வாய்மை - பொய்மை) விளக்குவது சரியானதா? விளைவுகள் தான் முக்கியமென்றால் குணத்தை குறைந்து மதிப்பிடுகிறோமா? உண்மையைவிட (பெரும்பான்மை) நன்மை முக்கியமானதா? அல்லது உண்மை பேசுவதே, உண்மையாய் இருப்பதே பெரும் நன்மையா? சரியாகத் தெரியவில்லை.

செவ்வாய், ஜனவரி 10, 2006

கறுப்பும் - வெளுப்பும்

சென்ற வாரம் தொலைக்காட்சியில் இரண்டு நிகழ்ச்சிகள் பார்த்தேன்: ஒன்று கறுப்பு மற்றது வெளுப்பு. முதலாவது அண்டங்காக்கைகள் பற்றி (ஆங்கிலத்தில் ரேவன்); இரண்டாவது பனிக்கரடிகள் பற்றி. இதற்கு முன்பு தெரியாத நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

முதலில் அண்டங்காக்கைகள் பற்றி:
1. இவைகள் 40 வருடம் வரை கூட உயிர்வாழும்.
2. துணை ஒன்றைப் பெற்றுவிட்டால் கடைசி வரை துணையை மாற்றாது (டைவர்ஸ் எல்லாம் இல்லை)
3. 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற சித்தாந்தத்தில்தான் நம்பிக்கை! (இது வர்ணனையாளர் கொஞ்சம் சுற்றி வளைத்து சொன்னது! நிகழ்ச்சியில் பனியில் உருண்டு புரண்டு விளையாடுகிறது - நாய்க்குட்டி போல)
4. மிகவும் புத்திசாலி - நிகழ்ச்சியில் என்னதான் சிக்கலோடு கயிறுகள் இருந்தாலும், மாமிசம் கட்டியிருக்கும் கயிறை சரியாகக் கொத்துகிறது; காலால் கதவைத் திறக்கிறது! (எனக்கு 'ஸ்ப்ரைட்' காக்கை ஞாபகம் வந்தது)
5. இளவயதுக் காக்கைகள் கூடித்தான் வாழ்கின்றன; தினமும் இரவில் கூடிப் பேசுகின்றன! (வர்ணனையாளர் சொன்னது: ‘தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றன, எங்கு இரை கிடைத்தது என்பது பற்றியெல்லாம் பேசிக் கொள்கின்றன’)
6. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் சில இடங்களில் மக்கள் இவற்றை பாதுகாத்து உணவளிப்பது நெடுங்காலமாய் வழக்கத்தில் இருக்கிறது - பார்க்க/கேட்க அழகாக இல்லை; அதிகம் உபயோகம் இல்லை என்றாலும்.
7. திருடித் தின்பதில் இவற்றிற்கு ஈடு இல்லை - ஒவ்வொரு விலங்கிற்கும் அதன் பலம், பலவீனத்திற்கு தகுந்தாற்போல் தனி யுக்தி வைத்திருக்கிறது (உ.ம். காட்டுப் பன்றி தீனி திங்கும் போது, அதன் மேல் அமர்ந்து கொண்டு அதன் கழுத்தில் ஒரு கொத்து; பன்றி நகர்ந்ததும் அதன் தீனியை எடுத்துக் கொண்டு பறந்துவிடுகிறது)
8. தங்களை விட பெரிய விலங்குகளையும் உபயோகிக்கும் திறன் படைத்தது - வர்ணனையாளர் சொன்னது: சில இடங்களில் (ஸ்காட்லாந்து) ரேவன்கள் ஓநாய்க் கூட்டத்திற்கு முன்பாகப் பறந்து சென்று இரையைக் காட்டிக் கொடுப்பதும், ஓநாய்கள் இரையைக் கொன்றதும், கூட்டமாக வந்து இரையில் பங்கு போட்டு உண்பதும் வழக்கம். (சமீபத்தில் இணையத்தில் இரண்டு அண்டங்காக்கைகள் ஒரு சாதாக் காக்கையை கைமா பண்ணுவதைப் படம் பிடித்துப் போட்டிருந்ததைப் பார்த்தேன்)!
9. காலத்திற்கு ஏற்றவாரு மாறும் திறமை (லண்டனில் ஒரு ஓட்டல் வெளியே இருக்கும் குப்பைப் பையை ஒட்டை போட்டு, அதில் இருந்த மாமிசத் துண்டுகளை தனியாக கொத்தி எடுத்துப் போகிறது! மிருகக் காட்சி சாலையில் எப்போது உணவளிப்பார்கள் என்று காத்திருந்து வந்து கொத்திப் போகிறது!)
10. காட்டில் தனியாக தீனி கிடைத்தாலும், கூச்சல் போட்டு மற்ற காக்கைகளையும் சாப்பிடக் கூப்பிடுகிறது ('இது ஏன் எனப் புரியவில்லை' என்றார் வர்ணனையாளர்)

பனிக்கரடிகள்
1. உண்மையிலேயே ரொம்பப் பெரிசு! (ஓகே சோப் விளம்பரம் ஞாபகம் வருதா?)
2. வளர்ந்த கரடிகள் அண்டங்காக்கைகளுக்கு நேர் எதிர் - சேர்ந்து இருப்பதில்லை; தப்பித் தவறிப் பார்த்துக் கொண்டால் சண்டைதான்!
3. நன்றாக வேட்டை ஆடுகிறது (நிகழ்சியில் ஒரு கன்று தன்னையும் விட கனமான ஒரு திமிங்கிலக் குட்டியை எப்படி வேட்டையாடுகிறது என்று காட்டினார்கள்; வேட்டையாடி அதை சாப்பிட ஆரம்பித்ததும், ஒரு பெரிய கரடி வந்துவிட இரையை விட்டுவிட்டு அந்த இளம் கரடி சோகமாய்ப் போனது பாவமாய் இருந்தது - காக்கைக்கு நேர் எதிர்)
4. குட்டிகளை அம்மாக் கரடி நன்கு பார்த்து வளர்க்கிறது (கோக்க கோலா எல்லாம் கொடுக்கலை!)
5. நன்கு மோப்பம் பிடிக்கிறது (நிகழ்ச்சியில் திமிங்கில வாசனையையும், வால்ரஸ் வாசனையையும் நன்கு மோப்பமிட்டு வேட்டையாடுவதைக் காட்டினார்கள். இருபது முப்பது கரடிகள் புகுந்து விளையாடி ஒரு வால்ரஸ் கூட்டத்தையே துவம்சம் செய்தன. வெள்ளைக் கரடிகள் மேல் அத்தனை வால்ரஸ் இரத்தம் - மனது ரொம்பக் கஷ்டப்பட்டது!)
6. அத்தனை பெரிய உடலை வைத்துக் கொண்டும், சர்வ சாதாரணமாக பனிப் பாளத்தில் நடக்கிறது - உடைந்து விடுமோ என்று எனக்குத் தோன்றினாலும், அதற்கு கவலையே இல்லை.
7. கரடிகளை கிட்டத்தில் படம் எடுக்க வேண்டும் என்று ஒரு இரும்புக் கூண்டுக்குள் ஒருவர் காமெராவுடன் உட்கார்ந்து கொள்ள, கரடிகள் அந்தக் கூண்டை போட்டு உருட்டியது (கூண்டுக்குள் இரை இருக்கிறதே!) எனக்கு பயமாய் இருந்தது.

சதா போரையும், உயிர் இழப்பையும் பார்த்துக் கொண்டிருப்பதற்கு ஒரு மாறுதலாய் இருந்தன இவ்விரு நிகழ்சிகளும். அதிலும் கூட வேட்டையாடுவதைப் பார்த்ததுதான் கொஞ்சம் வேதனை.