செவ்வாய், ஜூலை 12, 2011

இலக்கு – 10

இலக்கு – 10

வளர்ச்சி உயிரினங்களின் இயல்பு. தாமாக வளரும் உடலுறுப்புகளையும், அவ்வாறு வளராத திறன்களையும் முயன்று வளர்த்திக் கொள்வது தவறாகத் தோன்றவில்லை. வளர்ச்சியடைவது தவறாகத் தோன்றாவிட்டாலும், எது வளர்ச்சி என்று அறுதியிட்டுக் கூறுவது அவ்வளவு சுலபமான விஷயமாகத் தோன்றவில்லை. காலப் பயணத்தில் முன்பிருந்த நிலையை விட தரம் உயர்ந்தால் அது வளர்ச்சியின் அடையாளம். முன்னாளில் படித்த ஒரு ஆங்கிலப் பழமொழி: ‘Life is change. Growth is optional. Choose wisely.’ "வாழ்க்கை மாற்றங்கள் நிரம்பியது. வளர்ச்சி நம் இஷ்டத்திற்கு விடப்பட்டது. அறிவுணர்ந்து தேர்ந்தெடு!"

கவிஞர் கண்ணதாசன் தன்னுடைய 'காலக் கணிதம்' என்ற கவிதையில் இவ்வாறு எழுதியிருக்கிறார்:
“கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை”.

மனித வாழ்க்கையில் நிரந்தரமான ஒன்று மாற்றம் - அது வளர்ச்சியை நோக்கிச் செல்லாத போது ஏமாற்றம் தான். மாற்றம் இல்லாமல் இருக்க முடியாது. இந்த மாற்றம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் விதமாக நாம் மாற்ற முயல வேண்டும். இலக்காக வளர்ச்சியைக் கருதும் போது ஒரு பொறுப்பு வருகிறது. மாற்றங்கள் விதியின் விளைவு என்று எடுத்துக் கொண்டாலும், அதன் திசையை, வளர்ச்சியைத் நிர்ணயிக்கும் கருவியாக என் முடிவுகள், நடப்புகள் அமைய வேண்டும் என்ற தூண்டுதல் வருகிறது.

அதே சமயத்தில் எப்படி வளர்கிறோம் என்பது முக்கியமானது. உடலளவில் 'இயக்க ஊக்கிகள்' என்றழைக்கப்படும் ஊக்க மருந்துகள் (Steroids) உடலுறுப்புகளில் உடனடி வளர்ச்சியைத் தந்தாலும் பின்னாளில் அதிகமான உடலுபாதைகளைத் தருவதை நாம் காண்கிறோம். குறைவளிக்கும் பக்க விளைவுகள் தராத வழிமுறைகள் தரும் வளர்ச்சியே உன்னதமானது. முன்பு எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள்:


முன்னேற்றம் வேண்டி நாகரீகமானேன்
மாறியபின் வந்தது தெளிவு
நாகரீகத்தில் இல்லை முன்னேற்றம்.

வளர்ச்சி என்று கருதி தவறான வழிமுறைகளை அறியாமல் தேர்ந்தெடுப்பது சகஜம். இதைத் தவிர்க்க அறிவை வளர்ப்பது அவசியம். ஆதலால் இங்கு வளர்ச்சிக்கு அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. எந்த விஷயத்தையும் அறிந்து கொள்ளுதல் தவறு என்று வாதிட முடியாது. என்னைப் பொருத்தவரையில் வளர்ச்சியும் அறிதலும் ஒன்றை ஒன்று ஒத்திப் பிணைந்திருக்கின்றன. இரண்டுமே ஒரு உயிரின் வாழ்வுக்கு அத்தியாவசமானது. இவைகளை இலக்காகத் கொள்ளுதல் தவறில்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது: "அறிவு வளர்ச்சி பிறப்பில் தொடங்கி இறப்பில் தான் முடிய வேண்டும்". ‘Intellectual growth should commence at birth and cease only at death.’

இந்த அறிவு வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை சிந்திக்கையில், பாரதியாரின் ஒரு பாடல் - அறிவே தெய்வம் என்ற தலைப்பில் எழுதியது - நினைப்புக்கு வருகிறது.

“ஆயிரந் தெய்வங்க ளுண்டென்று தேடி
அலையு மறிவிலிகாள் - பல்
லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள் - எத
னூடுநின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?”

அறிவே தெய்வம் என்று பாரதி எழுதியதற்கும், 'அனுபவமே தெய்வம்' என்று பொருள் வருமாறு கண்ணதாசன் எழுதியதற்கும் (நீ மணி நான் ஒலி) அதிக வித்தியாசம் இல்லை. அனுபவம் அறிவாக மாறுகிறது. அதே சமயத்தில் அனுபவம் மட்டுமே அறிவாக மாறுவதில்லை. இம்மானுவேல் கன்ட் சொன்னது: 'நம்முடைய அறிவனைத்தும் அனுபவத்தில் தொடங்கினாலும், அனுபவத்தால் மட்டுமே விளைந்ததாகக் கருத முடியாது'. [That all our knowledge begins with experiences, it by no means follows that all arises out of experience – Immanuel Kant in Critique of Pure Reason]. அனுபவத்தால் தோன்றிய அறிவை ஆராய்ந்து, அசைபோட்டு, உறுமாற்றி ஞானமாக்கி வைப்பதும் அறிவுதான்.

முதல் இலக்கான 'வாழ்தல்' சரியா, அதனை அடையும் முறை சரியா என்ற கேள்விகளை விட இரண்டாம் இலக்கான மகிழ்ச்சி சரியா அதனை அடையும் முறை சரியா என்ற கேள்விகள் கடினமானதாக இருக்கின்றன. இதைப் பற்றி யோசிக்கையில் என் அறிவு, அனுபவப் பற்றாக்குறை நிதர்சனமாகத் தெரிகிறது. இந்தக் கேள்விகளுக்கு பதில் தேட ஆரம்பிக்கையில் வளர்ச்சியும் வருகிறது. பதில் தேடும் பயணத்தில், பதில் கிடைக்கையில், அறிவும் வளர்கிறது. மொத்தத்தில் இந்தப் பதிவுத் தொடரை எழுத ஆரம்பித்து, சுய தேடலில் கேள்விகள் கேட்டு, பதில் தேடிப் படித்த புத்தகங்களால் என்னுள் ஒரு வளர்ச்சியையும், அதனால் ஒரு மகிழ்ச்சி வந்ததையும் உணர்கிறேன்.

இந்த அறிவை, வளர்ச்சியை இலக்காக நான் எடுத்துக் கொண்டது தவறு என்று வாதிட எந்தக் காரணமும் தோன்றாததால், இவைகள் சரியான இலக்குகள்தான் என்று கருதுகிறேன். இவைகளை அடையும் முறைகளில் சரி எது என்று யோசிக்கையில், இந்தவிதமான குறிப்பிட்ட முறைதான் சிறந்தது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மாறாக எந்த விதமான செய்கைகளைச் செய்து வளர்ச்சியையோ அறிவையோ பெறுதல் சரியல்ல என்று குறித்துச் சொல்ல முடிகிறது.

வளர்ச்சியாலும், பெற்ற அறிவினாலும் என்னுடைய கடமைகளில் குறைவு வந்தால் இந்த வளரச்சியை, அறிவை அடைந்த முறை சரியான ஒன்றாக இருக்க முடியாது. அதே போல வந்த வளர்ச்சியாலும், அறிவாலும், என்னால் மற்றவர்களுக்குக் கிடைத்து வந்த உதவியும், சந்தோஷமும் குறைந்து போனால் அந்த வளர்ச்சியில், அறிவில் முழுமை இல்லை; அதை அடைந்த முறை சரியல்ல என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் எந்த விதமான வளர்ச்சியாலும், அறிவாலும் எனக்கு மட்டும் மகிழ்ச்சி வராமல், மற்றவர்களுக்கும் ஆதாயம் (அது அவர்களின் மகிழ்ச்சியாகவோ அல்லது வேறு விதமான உதவியாகவோ இருக்கலாம்) உண்டானால் அந்த வளர்ச்சியில், அறிவில் முழுமை இருக்கிறது; அதை அடைந்த முறை சரி என்று சொல்லலாம்.

வாழ்தலில் ஆரம்பித்து, மகிழ்ச்சி, வளர்ச்சி என்று மொத்தமாகப் பார்க்கும் போது அனைத்திலுமே என்னோடு மட்டும் நின்று விடாமல் மற்றவர்களின் சுக-துக்கங்களையும், இன்னமும் சொல்லப் போனால் மற்ற உயிரினங்களின் வாழ்வு, மகிழ்ச்சி, வளர்ச்சியைப் பேணும் விதமாக என் இலக்கையடையும் வழிமுறைகள் அமைய வேண்டும் என்று புரிகிறது. இந்த இலக்குகளை அடையும் வழிமுறைதான் என் வாழ்க்கை என்று பார்க்க ஆரம்பித்தால் புத்தர் சொன்னது போல பிற உயிர்களுக்கு இன்னல் தராத வாழ்க்கையை நடத்த முடியும் என்றும் தோன்றுகிறது. அம்மாதிரியான வாழ்க்கையில் ஒரு முழுமையையும், திருப்தியையும் அடைய முடியும் என்றும் நம்பிக்கை வருகிறது.

என் இலக்குகளை அடையும் வழிமுறைகள் சரியாக அமைந்து விட்டால் என் மகிழ்ச்சியும் மற்ற உயிர்களின் மகிழ்ச்சியும் ஒன்றாகி விடுகிறது; எனக்கும் மற்ற உயிர்களுக்கும் ஒரு பிணைப்பைப் பார்க்க முடியும். இதனால் 'நான்' என்ற குறுகிய உணர்வு குறைந்து, என் ஒருவனின் சுக-துக்கங்களுக்காக மட்டும் வாழாமல் இருக்க முடியும் என்றும் தோன்றுகிறது. இது ஒருவிதத்தில் 'தன்னையே வெல்லும் விதம்'! பாரதியாரின் ஆத்ம ஜெயம் என்ற கவிதையிலிருந்து சில வரிகள்:

"என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ -
தன்னைவென் றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்று முணர்ந்தபின்னும்
தன்னைவென் றாளும் திறமை பெறாதிங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?"

என் வாழ்வு, என் மகிழ்ச்சி, என் வளர்ச்சி என்று இலக்குகளை வரையறுக்க ஆரம்பித்தாலும், விவேகானந்தர் சொன்னது போல அதை அடையும் முறை பற்றி சிந்தித்ததில் சரியான முறையில் அந்த இலக்குகளை அடைய 'நான்' என்ற உணர்வு குறைவது அவசியம் என்று தெரிகிறது. இதை எந்த அளவுக்கு நான் அடையப் போகிறேன் என்று தெரியாது - காலம் தான் சொல்ல வேண்டும். இருந்தாலும், இதை எனக்குள்ளே யோசித்து, நானே உணர்ந்ததே ஒரு விதத்தில் திருப்தி தரும் விஷயம். இதுவும் ஒரு வளர்ச்சிதான். இன்னமும் வளர ஆசை!!!

இப்பதிவுடன் இந்தத் தொடர் நிறைந்தது.

சனி, மே 28, 2011

இலக்கு - 9

என்னுடைய இலக்காக நான் கருதும் "மகிழ்ச்சி"க்கும் சிதப்பிரக்ஞன் விளக்கத்தில் வரும் "ஆனந்த"த்திற்கும் வேறுபாடு இருந்தாலும் அடிப்படையில் சில ஒற்றுமைகளைக் காண்கிறேன். இரண்டிலுமே மற்றவர்களுக்கு எந்த விதமான கஷ்டமோ, தொந்திரவோ வர வாய்ப்பில்லை. மற்றவர்கள் மனம் நொந்து வரும் மகிழ்ச்சியில் நிறைவு இல்லை. அது மட்டுமல்ல, மனதில் இந்த மகிழ்ச்சியை, ஆனந்தத்தை அனுபவித்த பிறகு, அடைந்தவர் மனதில் எந்த விதமான குற்ற உணர்வோ, மனக்கசப்போ, தன்னிறக்கமோ வருவதில்லை. அனுபவித்த பிறகு மனதில் திருப்தியும் நிறைவும் தராத மகிழ்ச்சி முழுமையானதில்லை. இந்த இரண்டு குணாதிசயங்களும் இந்த மகிழ்ச்சியின் தூய்மையை, உன்னதத்தை உணர்த்துகிறது.

'அர்த்தமுள்ள இந்து மதம்' தொடரில் கவிஞர் கண்ணதாசன் எழுதியது: "யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதனின் உணர்வுகளை இந்து மதம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறது". மதத்தை விடுத்து பொது வாழ்க்கையின் தத்துவமாகப் பார்க்கையில் பக்க விளைவுகள் இல்லாத மகிழ்ச்சி உயர்வானதாகவே தோன்றுகிறது. அதிலும், மற்றவர்களுக்கும், தமக்கும் குறைவுதரும் பக்க விளைவுகள் (negative side effects) இல்லாத செயல்கள் அரிதாக இருக்கையில் அந்த மாதிரி செயலால் மகிழ்ச்சியும் வந்தால் அது சிறந்த விஷயம்தான். இந்த மாதிரியான நிறைவான மகிழ்ச்சியை அடைவதை இலக்காகக் கொள்வது தவறில்லை என்றே நான் எண்ணுகிறேன்.

நான் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட "மகிழ்ச்சி" எல்லாமே இதுவரை அனுபவித்த வாழ்க்கையில் இருந்துதான். இந்த எடுத்துக்காட்டுகளை (தம்ஸ் அப் படப் புத்தகம், ராமநாதபுரம் கல்கி, ஆனந்த விகடன் படக் கதைகள்) இலக்காக நான் கருதும் "மகிழ்ச்சி" உணர்வை விவரிப்பதற்காகக் குறிப்பிட்டிருந்தாலும், மகிழ்ச்சிக்காக இது போன்ற விஷயங்களை மட்டுமே தேடுகிறேன் என்று அர்த்தம் இல்லை. படிக்கும் எவரும் அவர்களுடைய வாழ்க்கையில் தொடர்பு படுத்திக் கொள்ள வசதியாக இருக்குமாறு பொதுவான உதாரணங்களைத்தான் தந்திருக்கிறேன். இந்த விஷயங்களில் கிடைத்த மகிழ்ச்சிக்கும், சிதப்பிரக்ஞன் ஆனந்தத்திற்கும் நான் புரிந்து கொண்ட முக்கிய வித்தியாசம் புலன்களின் தொடர்பு. இதுவரை நான் அனுபவித்த மகிழ்ச்சிக் கணங்கள் வருவதற்கு என் புலன்களின் தேவை மிகவும் முக்கியம்.

ஆனால் மகிழ்ச்சியை உணர்வதற்கு அனைத்துப் புலன்களும் தேவையாக இல்லை. சொல்லப் போனால் முழுதாக உணர சில புலன்கள் தடையாக இருந்ததால், மூளை தாமாகவே தேவையில்லாத புலன்களின் தன்மாத்திரை விஷயங்களை தடை செய்திருக்கிறது. தம்ஸ் அப் படப் புத்தகத்தை புரட்டும் ஆர்வத்தில், அந்த மகிழ்ச்சியை உணரும் தருவாயில், அம்மா கூப்பிட்டதை காதில் வாங்காதவாறு மூளை கண் பார்க்கும் படத்தில் ஊன்றிப் போனது. மனதுக்கு இன்பம் தரும் இசையைக் கேட்கையில் கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கும் மனிதர்கள் ஏராளம். மனிதர்களுக்கு ஐந்து புலன்கள் இருந்தாலும் சாதாரணமான புலன்களின் மகிழ்ச்சியை உணரவே மற்ற புலன்கள் தடையாகி விடுகின்றன.

ஆசை என்பது புலன்களின் தேவையை நிரப்பும் உணர்வு; புலன்களின் பசி. ஆசையை பூர்த்தி செய்து வரும் மகிழ்ச்சிக்கு புலன்களின் தொடர்பு இன்றியமையாதவாக மாறி விடுகிறது. சிதப்பிரக்ஞன் விளக்கத்தில் 'ஆசையைத் துறந்து வரும் மகிழ்ச்சியே உன்னதமானது' என்று பொருள் வருகிறது. புலன்கள் இல்லாமல் எப்படி மகிழ முடியும் என்ற கேள்வி முன்னாளில் இருந்தது. மகிழ்ச்சியின் உச்சமாக 'ஆனந்தத்தை' அடைய எல்லாப் புலன்களையும் தாண்டி வர வேண்டும் என்பதை ஒரு சாத்தியமாக இப்போது உணர ஆரம்பித்திருக்கிறேன். சாதாரண புலன்களின் மகிழ்ச்சியின் உச்சத்தை உணர மற்ற புலன்கள் தடையாகின்ற போது, உன்னதமான மகிழ்ச்சியை அடைய அனைத்துப் புலன்களும் தடையாக இருக்க வாய்ப்புண்டு. இருந்தாலும் எப்படி அதை அடைவது என்பதில் இன்னமும் தீர்மானமான வழி தெரியவில்லை.

தனக்கோ, மற்றவருக்கோ மனதிலும், உடலிலும் குறைவுதரும் பக்க விளைவுகள் இல்லாத மகிழ்ச்சி உன்னதமானது; ஆனந்தமானது. இதை அடைவதை இலக்காகக் கொள்வது தவறில்லை என்றே தோன்றுகிறது. இதை அடைய புலன்களைத் தாண்டிய சிந்தனையில் வழியிருக்கும் என்றும் தோன்றுகிறது. இந்த வழியை அடைவது என் வளர்ச்சியிலும், அறிதலிலும் தான் இருக்கிறது - அதனால் தான் இவையிரண்டும் என் இலக்குகள். மேலும் அடுத்த பதிவில்.

ஞாயிறு, மே 08, 2011

இலக்கு - 8

இலக்கு - 8

மனதுக்குப் பிடித்த பாடலைக் கேட்பதில் வரும் சுகத்துக்கும், இந்த குறிப்பிட்ட சில தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளில் (தம்ஸ் அப் படப் புத்தகம், ராமநாதபுரம் கல்கி, ஆனந்த விகடன் படக் கதைகள்) வந்த மகிழ்ச்சிக்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு. இந்த வித்தியாசத்தைக் குறிப்பிட்டு விவரிக்க முடியாத போதிலும் ஒரு விதமான திருப்தியை, முழுமையைக் காரணமாகச் சொல்லலாம். நான் இலக்காகத் தேடுவது இந்த இரண்டாம் வகை, முழுமை தரும், திருப்தி தரும் மகிழ்ச்சி. தினசரி வாழ்க்கையில் சுகங்கள் அதிகமாக வந்தாலும், இது போன்ற நிறைவு தரும் மகிழ்ச்சிகள் அதிகம் இல்லை. இது புலன்களில் இருக்கிறதா, அல்லது பார்க்கும் (கேட்கும், நுகரும்) பொருளில் இருக்கிறதா, அல்லது புலன்கள் வாயிலாக அறியும், உணரும் அறிவில் இருக்கிறதா?

வில்லியம் ஜேம்ஸ் டுரன்ட் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபலமான வரலாற்றாசிரியர் (William James Durant - 1885 - 1981). இவருடைய ஒரு படைப்பு கல்லூரியில் படிக்கும் போது எனக்கு அறிமுகமாயிற்று. இவர் எழுதிய 'நாகரீகத்தின் கதை' - பதினொன்று அத்தியாயங்கள் - ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்களுக்கு மேல். இன்னமும் முழுதாகப் படித்து முடிக்கவில்லை - ஏழு அத்தியாயங்கள் படித்திருக்கிறேன், மற்றவைகளை முழுவதுமாக முடிக்கவில்லை. அவர் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றி விபரமாக எழுதியிருந்தாலும், ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ, குறிப்பிட்ட அந்த அத்தியாய வரலாற்றை ஒட்டி தன் சொந்தக் கருத்துகளை, தன் மன பிரதிபலிப்பை எழுதியிருப்பார். அது மிகவும் யோசிக்க வைக்கும் விதமாக இருக்கும். அப்படி அவர் எழுதிய ஒரு கருத்து 'அழகு' சம்பந்தப்பட்டது. ஒரு நாகரீகத்தின் கலை, இசை பற்றி எழுதிவிட்டு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: "ஒரு மலர் அழகாக இருப்பதால் அது நமக்கு மகிழ்ச்சியளிப்பதில்லை; மாறாக அம்மலரைப் பார்ப்பதால், நுகர்வதால் நமக்கு வரும் மகிழ்ச்சியின் பொருட்டு அதை அழகு என்று வர்ணிக்கிறோம்."

வெளியுலக பொருள்களைப் பற்றிய அறிவு, அதன் தர நிர்ணயம், அது நமக்கு அளிக்கும் உணர்ச்சி போன்ற எல்லாமே நம் மன உணர்வுகளின் பிரதிபலிப்பால் வருகிறது என்ற கருத்தை இதற்கு முன்னமே பல தத்துவ ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள். இது போன்ற கருத்தை பழந்தமிழ் நூல்களிலும் காணலாம். உதாரணமாக திருமூலரின் "மரத்தில் மறைந்தது மாமத யானை" - மனம் மரமாகப் பார்க்கையில் மாமத யானை மறைகிறது; யானையாகப் பார்க்கையில் மரம் மறைகிறது. அது மரமா, மதயானையா என்பது மனதைப் பொறுத்தது. மனத்தைப் பொறுத்துத்தான் மற்றவைகள் இருக்கின்றன என்றால், இலக்கான என் மகிழ்ச்சி சரி, தவறு என்று எப்படி நிர்ணயிப்பது?

ஸ்காட்லாந்தின் டேவிட் ஹூயூம் (David Hume - தத்துவ ஆசிரியர் 1711 - 1776) எழுதிய "கிளை விதி" (Hume's Fork Principle) பற்றிக் குறிப்பிடலாம். அவரின் சித்தாந்தப்படி எந்த ஒரு கருத்தும் மூன்று வகைகளுக்குள் அடங்கும். 1. அந்த கருத்து சரி, தவறு என்ற நிலை சம்பந்தப்பட்ட நிர்ணய வகை (உதாரணம்: நான் இன்று காலை வாழைப் பழம் சாப்பிட்டேன் - இது ஒரு நடந்த நிகழ்ச்சி - சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம்). 2. அனுபவத்தை ஒட்டிய கருத்துகள் (உம்: எனக்கு இந்த அறை குளிர்ச்சியாக இருக்கிறது) 3. அறிவுக்கு அப்பாற்பட்டவை - இவை நடப்பை ஒட்டிய சரி/தவறு கணிப்பிலோ அல்லது அனுபவத்தை ஒட்டியோ இருக்காது (உம்: ஒற்றைக் கொம்புள்ள குதிரைகளின் கொம்பில் விஷமுண்டு. இந்த விதமான கருத்து சரி/தவறு என்று சொல்ல முடியாது; அனுபவத்திலும் உணர முடியாது). என் மகிழ்ச்சி என்பது ஒரு விதத்தில் கருத்து. அது எந்த வகைப் பிரிவுக்குள் அடங்கும்?

ராபர்ட் பிர்சிக் (Robert M Prisig - Zen and the art of motorcycle maintenance) எழுதிய பிரபலமான புத்தகத்தில் 'சிந்தனையில், கருத்தில் தரம் என்பது என்ன?' என்று ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு பதிலாக விளக்கமும் எழுதியிருக்கிறார். அவரின் விளக்கப்படி, சிந்தனையில், கருத்தில் தரம் என்பது சிந்திக்கும் நிலை தாண்டி உணரப்படுவது. அதனால் இந்தத் தரத்தை சிந்தனையால் வரும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இதைப் பற்றி மேலும் எழுதுகையில் இந்த விளக்கத்திற்கும் 'எனக்குத் தெரியாது' என்று சொல்வதற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்கிறார். இந்த விளக்கம் "தரம்" சம்பந்தப் பட்டது - "மகிழ்ச்சி" பற்றி அல்ல. இதையும், ஜேம்ஸ் டுரன்ட்டின் 'அழகு' பற்றிய விளக்கத்தையும் சேர்த்துப் பார்த்தால், 'மகிழ்ச்சி'யும் விளக்கம் தாண்டி உணரப்படும் விஷயம் போலத் தோன்றுகிறது. எனக்கு ஒரு விஷயம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மனதில் இன்பத்தை அளிக்கிறது என்று உறுதியாக முன்னமே விளக்க முடியவில்லை. இம்மாதிரி மகிழ்ச்சி தந்த கடந்த கால நிகழ்ச்சிகளை 'இந்தக் காரணத்தால் தான் மகிழ்ச்சி வந்தது' என்றும் கணித்துக் கூற முடியவில்லை.

டேவிட் ஹூம் எழுதிய கிளைத் தத்துவத்தின் படி என்னுடைய 'மகிழ்ச்சி என்கிற கருத்து' சரி/தவறு வகையில் அடங்கும் என்று தோன்றவில்லை. இது நிச்சயம் அனுபவம் சம்பந்தப்பட்டது; ஆனால் என்னால் விவரிக்க முடியாமல் போவதால், அறிவுதாண்டிய மூன்றாம் பிரிவில் சேருமோ என்றும் கேள்வி வருகிறது. இது அனுபவம் சம்பந்தப்பட்ட இரண்டாம் பிரிவில் வந்தாலும், அல்லது அறிவு தாண்டிய மூன்றாம் பிரிவில் வந்தாலும், 'சரி/தவறு' என்ற நிர்ணயம் இதற்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது. அதே சமயத்தில் விவேகானந்தர் சொன்ன 'இலக்கு சரி என்ற நிர்ணயம் வந்து விட்டால், இலக்கை அடையும் முறை தான் முக்கியம், இலக்கையே மறந்தாலும் பாதகமில்லை' என்ற வழிமுறையை நடைப்படுத்துவது கடினமாகிறது. மொத்தத்கில் "என்னுடைய இலக்கு மகிழ்ச்சி என்று நினைப்பது சரியா, தவறா" என்ற கேள்விக்கு என்னிடம் இந்தச் சமயத்தில் தீர்மானமான பதில் இல்லை.

கீதையில் இரண்டாம் அத்தியாயத்தில் அர்ஜுனன் 'சிதப்பிரக்ஞன் என்பவனின் விளக்கம் என்ன?' என்று கேட்கையில், கிருஷ்ணன் இம்மாதிரி விடையளிக்கிறார்.
प्रजहाति यदा कामान्सर्वान्पार्थ मनोगतान् ।
आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते ॥५५॥
"அர்ஜுனா! எப்பொழுது இந்த மனிதன் மனதிலுள்ள எல்லா ஆசைகளையும் அறவே துறக்கிறானோ, மேலும் ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆனந்தமாக இருக்கிறானோ, அப்பொழுது அவன் சிதப்பிரக்ஞன் என்று கூறப்படுகிறான்" (இது கீதாப்ரஸ், கோரக்பூர் வெளியிட்ட தத்வவிவேசனீ தமிழ் விரிவுரையிலிருந்து).

இதே பாடலுக்கு பாரதியார் தன் மொழிபெயர்ப்பில் இவ்வாறு விளக்கமளித்திருக்கிறார்:
ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களையனைத்தும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.

இந்த விளக்கங்களில் இரண்டு விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன - ஒன்று ஆசையைத் துறப்பது பற்றியது, இரண்டு ஆனந்தமாக இருப்பது. இந்த விளக்கங்களைப் படித்து நான் உணர்ந்து கொண்டது, ஆனந்தமாக இருப்பது சரி, எப்படி அந்த ஆனந்தம் வருகிறது என்பதுதான் முக்கியம்.

என்னுடைய இலக்கான மகிழ்ச்சிக்கும் இங்கு குறிப்பிட்ட ஆனந்தத்திற்கும் என்ன வித்தியாசம்? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளி, ஏப்ரல் 15, 2011

இலக்கு - 7

இலக்கு - 7

வாழ்தலும் மகிழ்தலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. வாழ்வதற்காக உணவை உண்டாலும், அதைத் தெரிவு செய்வதில் ருசி, மணம் போன்ற குணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உணவை எரிபொருள் என்று மட்டும் நாம் நினைப்பதில்லை. அதனால் மனதிற்கு திருப்தியும், சந்தோஷமும் வருமா என்றும் யோசிக்கிறோம். ஆரோக்கியம் மட்டுமே இலக்காகக் கொண்டு எப்போதும் உணவைத் தேர்ந்தெடுப்பதில்லை. உடம்புக்கு நல்லது; ஆரோக்கியம் தரும் என்று உணர்ந்திருந்தாலும் அதன் சுவை, மணம் காரணமாக உணவைத் தவிர்த்திருக்கிறேன். அதே போல ஆரோக்கியத்துக்கு அவ்வளவாக துணை போகாவிட்டாலும், சுவைக்காக உணவை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அனேகமாக எல்லோருமே வாழ்க்கையில் சில சமயங்களில் இந்த மாதிரி சுவையைப் பிரதானமாகக் கருதி உணவைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

உலகில் உள்ள பெரும்பான்மையான மதங்களில் உணவைப் பிரதானமாக்கி வந்த பண்டிகைகள் இருக்கின்றன. இவை உணவை உண்ணும் விதமாகவோ, அல்லது உணவை விலக்கும் விதமாகவோ இருக்கலாம். வாழ்தல் பற்றி எழுதுகையில் சேர்க்க வேண்டியவைகளும் (உணவு) விலக்க வேண்டியவைகளும் (விஷம்) ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்று குறிப்பிட்டிருந்தேன். பெரும்பான்மையான பண்டிகைகள் - அது எந்த மதம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி - உணவில் எதைச் சேர்க்க வேண்டும், எதை விலக்க வேண்டும், அல்லது எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்று குறிப்பிடும் விதமாகவே இருக்கின்றன. உணவு சம்பந்தப்படாத பண்டிகைகள் விகிதாசாரப்படி குறைவு.

எப்படி உணவு வயிற்றுப் பசியைத் தீர்த்து உடல் உறுப்புகளுக்கு சக்தியளிக்கிறதோ, அதே போன்று வேறு விதமான 'உணவுகள்' மற்ற புலன்களின் பசியைத் தீர்க்கின்றன. உடலின் மகிழ்ச்சியென்பது இம்மாதிரிப் புலன் பசித் தீர்வினால் வருகிறது. இசை (அல்லது சித்திரம்) காதின் (அல்லது கண்ணின்) பசி தீர்ப்பதால் வரும் உணர்வு மகிழ்ச்சி. வள்ளுவரின் குறள் நினைப்புக்கு வரலாம்:
செவிக்கு உணவில்லாத போது சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.
இந்த மகிழ்ச்சியை நாடாதவரை நான் சந்தித்ததில்லை; நானும் நாடித் தேடுகிறேன். இந்த நாட்டம் தவறா? இந்தக் கேள்விக்கு தீர்மானமாக உடனேயே பதில் அளிக்க முடியும் என்று தோன்றவில்லை.

இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் முன் இந்த புலன் சம்பந்தப்பட்ட மகிழ்ச்சி எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்று கொஞ்சம் பார்ப்போம். இராமநாதபுரத்தில் வடக்கு வீதியில் வசிக்கையில் (முதலாம் வகுப்பு வரை அங்குதான் வாசம்) உணவு (பொரிவகைகள் - முட்டைப்பொரி மற்றும் அரிசிப் பொரி) மற்றும் உறவு (அப்பா, அம்மா, தம்பி, பாட்டி) தவிர்த்து மகிழ்ச்சி தந்த இரண்டு விஷயங்கள் இன்னமும் நினைப்பில் இருக்கின்றன. கதை மற்றும் பாட்டு. வாராவாரம் வீட்டில் ஆனந்த விகடன், கல்கி வாங்குவார்கள். நம் வீட்டில் ஒன்று, அடுத்த வீட்டில் மற்றொன்று. படித்துவிட்டு மாற்றிக் கொள்வோம். எனக்கு அப்போது நான்கு அல்லது ஐந்து வயது. படத்தோடு இருக்கும் தொடர், துணுக்குகளை எழுத்துக் கூட்டிப் படிப்பேன். புரிந்தது என்றும் சொல்ல முடியாது; படித்ததில் அதனால் மகிழ்ச்சி வந்தது என்றும் சொல்ல முடியாது. பாட்டியைப் படித்துக் காட்டச் சொல்லி பின் கதையாகச் சொல்லச் சொல்வேன். கதையில் வரும் பாத்திரங்களைப் போல மரப்பாச்சி பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவேன். இந்த மாதிரி கதைகளைக் கேட்டு விளையாடியதில் வந்த சந்தோஷம் மகிழ்ச்சி வித்தியாசமானது; முழுமையானது.

அதே போல சில பாட்டுகள், அம்மா பாடியதாலோ, வீட்டில் வானொலியில் கேட்டதாலோ (காலம் சென்ற MS சுப்புலக்ஷ்மி அவர்களின் பாவயாமி ரகுராமம் மற்றும் பாப்பா பாப்பா கதை கேளு) இன்னமும் நினைப்பில் இருக்கிறது. இந்தப் பாட்டுகளைக் கேட்டதில், கதைகளைக் கேட்டதில் வந்த ஒரு மகிழ்ச்சி, மற்றும் திருப்தியை வெறும் புலன்களின் பசித் தீர்வு என்று ஒதுக்கி விட முடியவில்லை. இதே போன்ற சந்தோஷத்தை பின்னாளில் மன்னார்குடியில் பள்ளியில் படிக்கும் போதும் அனுபவித்ததுண்டு. ஆனால் அது திரைப்படப் பாடலிலோ அல்லது கதை கேட்டதிலோ, அல்லது திரைப்படம் பார்த்ததிலோ வரவில்லை. இந்தியா கிரிக்கட்டில் உலகக் கோப்பையை வென்ற பின் (1983) குளிர்பான (Thumbsup) விளம்பரத்திற்காக படப் புத்தகங்கள் வெளியிட்டது. சினிமா பிலிம் சுருள் பாணியில் கபில் தேவ் பந்து வீசுவதும், கவாஸ்கர் ஹூக் செய்வதும் ஒவ்வொரு வினாடிப் படங்களாக எடுத்து (கருப்பு வெள்ளை) புத்தகமாக தந்தார்கள். உள்ளங்கை அளவே இருக்கும் அந்தப் புத்தகங்களை வேகமாகப் புரட்டிப் பார்க்கையில் நிஜமாகவே ஓடி வந்து பந்தெரிவது போல இருக்கும். இந்தப் புத்தகங்களை தினமும் இருபது தடவையாவது பார்த்திருப்பேன் - அப்போது வந்த மகிழ்சியிலும் ஒரு விதமான திருப்தி இருந்தது. இப்போது தொலைக் காட்சியில் விளையாட்டை வண்ணத்தில் பார்த்தாலும், அந்த கருப்பு வெள்ளை புத்தகத்தைப் புரட்டியதில் வந்த மகிழ்ச்சி, திருப்தி இல்லை. புலன்களின் பசி தீர்ந்தாலும் மகிழ்ச்சி இல்லை.

வளர வளர இந்த மாதிரி முழுமை தந்த திருப்தியான மகிழ்ச்சி வெகு அரிதாகவே வந்தது. இந்த புலன் சம்பந்தப்பட்ட மகிழ்ச்சி, அதன் எதிர்பார்ப்பு பற்றி நான் படித்த பகவத் கீதை, பெட்ரண்ட் ரஸ்ஸல், வில்லியம் ஜேம்ஸ் மற்றும் இன்ன பிற படைப்புகளிலிருந்து நான் புரிந்து கொண்டவைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வியாழன், மார்ச் 24, 2011

இலக்கு – 6

இலக்கு – 6

வாழ உணவு அவசியம். உணவில்லாமல் வாழ முடியும் என்று நிரூபித்தவர்களை நான் சந்தித்ததில்லை. உணவைப் பெற அனேக வழிகள் இருக்கின்றன. மாதவனூர் வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் எனக்கும் என் குடும்பத்துக்கும் தேவையான உணவில் பத்து சதவிகிதம் கூட எடிசனில் தயாரிக்கப்படுவதில்லை. பாலுக்கு மாடு இல்லை; வீட்டைச் சுற்றியுள்ள மரம், செடிகளில் உண்ணபதற்கான காய், கனிகள் இல்லை. வீட்டில் கிணறு கிடையாது; நெல் வயல் இந்த மாநிலத்திலேயே இல்லை. ஆனால் உணவைப் பெறும் விதத்தில் வசதிகள், வகைகள் அதிகம். இதில் முக்கியமான வசதி நேரம், மற்றும் சக்தி சம்பந்தப்பட்டது. என்னளவில் நேரம்/சக்தி அதிகம் செலவாகாமல் உணவைப் பெற முடிகிறது. எனக்கு பதிலாக வேறு சிலருடைய உழைப்பில் தயாரான உணவை, என் சொந்த உழைப்புக்கும் நேரத்திற்கும் பதிலாக, பணத்தை மாற்றாகத் தந்து எனக்கும் என் குடும்பத்துக்கும் தேவையான அளவில் பெறுகிறேன். இதில் எது சரி, எது தவறு என்று எப்படி நிர்ணயிப்பது?

சிறு வயதில் உயிரியல் பாடம் படிக்கையில் 'உணவுச் சுழற்சி' பற்றி படித்ததுண்டு. தாவரங்களைத் தின்னும் விலங்குகள், பறவைகள்; அந்த விலங்குகளை, பறவைகளைத் தின்னும் விலங்குகள், பின் அந்த விலங்குகள் இறந்து அதன் உடல் உரமாக மண்ணுக்கு செல்வது என்றெல்லாம் படமும், அம்புக் குறியும் போட்டு விளக்கியிருப்பார்கள். ஒரு விதத்தில் மண்ணும், தாவரமும், விலங்கினமும் ஒன்றையொன்று எப்படிச் சார்ந்திருக்கிறது என்பது அந்தப் பாடம் படிக்கையில் புரிந்தது. மொத்ததில் மனிதனுக்கு மரத்தைப் போன்று தண்ணீர், சூரியன் தயவோடு மட்டும் உணவைத் தயாரிக்க முடியாது – மற்ற தாவர, விலங்கினத்தைச் சார்ந்து தான் இருக்க முடியும். அதனால் நானே பயிரிட்டு உண்பதற்கும், மற்றவர் பயிரிட்டதை பணத்திற்கு மாற்றாகப் பெற்று உண்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அதே போல தாவரத்தை மட்டும் உண்டு வாழும் மானுக்கும், மானை உண்டு வாழும் புலிக்கும் இடையில் அதன் உணவு உண்ணும் முறையால் மட்டும் சரி, தவறு என்று நிர்ணயிக்க முடியும் என்றும் தோன்றவில்லை. தாவரத்தை உண்பது மானின் இயல்பென்றால், மானை உண்பது புலியின் இயல்பாகிறது.

உணவைத் தேர்ந்தெடுக்கும், பெறும் முறையில் எது சரி, எது சரியல்ல என்ற நிர்ணயம் கடினமானதாக இருந்தாலும், உணவை விரயம் செய்வது சரியல்ல என்பது தெளிவு. அதனால் உணவு விரயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உணவு விரயம் பலவகைப்படும். சாப்பிட்டு முடித்தவுடன் மிச்சம் மீதி நிறைய இருந்து அதைக் குப்பையில் எறிவதில் விரயம் தெளிவாகத் தெரிந்தாலும், மற்ற வகை விரயங்கள் அவ்வளவு தெளிவாகத் தெரிவதில்லை. சிறு வயதிலிருந்தே வீட்டில் பெரியவர்கள் கண்டிப்பினால் உணவை வீணாக்காமல், சமைப்பதிலும், பறிமாறுவதிலும், அளவு பார்த்து இருக்கக் கற்றுக் கொண்டாலும், வேறு விதமான விரயங்களைப் பற்றி சமீப காலங்களில் தான் யோசனை அதிகரித்திருக்கிறது.

உணவு ஒரு எரிபொருள், சக்தி! பள்ளியில் படிக்கும் போது, இயற்பியல் பாடங்களில் இந்த "Law of conservation of Energy" (சக்தி பேணுகை விதி?) பற்றி படித்திருக்கிறேன். சுருக்கமாகச் சொல்லப் போனால் இதைப் பற்றி நான் புரிந்து கொண்டது இதுதான். பிரபஞ்சத்தில் சக்தியை உண்டாக்கவோ, அழிக்கவோ முடியாது. இங்குள்ள மொத்த சக்தியைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. சக்தியை (அல்லது ஆற்றலை) ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற முடியும். இந்த மாறுதலில் சக்தியின் ஒரு பகுதி உபயோகிக்க முடியாத வெப்பமாகவோ அல்லது வேறு விதமான சக்தியாகவோ வெளிப்படலாம். இதை சக்தி விரயம் என்றழைக்கலாம். அந்த மாதிரி விரயமாகும்/மாறும் சக்தியும் பிரபஞ்சத்திலேயே இருப்பதால், மொத்த சக்தியில் கூடுதலோ, குறைவோ இல்லை. இதைப் படிக்கும் போது கீதா சாரம் நினைவுக்கு வரும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “பொருளும் ஒரு விதமான சக்தியே - Mass is a form of Energy” - என்று நிரூபித்திருக்கிறார். ஒரு இயந்திரத்தின் உயர்வு அது எந்த அளவுக்கு சக்தி விரயமில்லாமல் இயங்குகிறது என்பதைப் பொறுத்துத்தான் நிர்ணயிக்கப் படுகிறது. உதாரணமாக ஒரு லிட்டர் டீசலுக்கு பத்து கிலோமீட்டர் செல்லும் பேருந்தின் திறத்தை விட, ஐம்பது கிலோமீட்டர் செல்லும் பேருந்தின் திறம் உயர்ந்தது. ஒரு விதத்தில் அந்த ஒரு லிட்டர் டீசலின் மதிப்பும் ஐம்பது கிலோமீட்டர் சென்ற பேருந்தினால் உயர்கிறது!


வாழ்வதற்காக உணவைச் சேர்க்கையிலும் இதே விதிதான் - சாப்பிட்ட உணவின் சக்தி என் மூலமாக வெளிப்படுகிறது. என் மூலமாக வெளிப்படும் சக்தி எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு சாப்பிட்ட உணவின் சக்தியின் வெளிப்பாடு உயர்கிறது. இல்லையென்றால், அந்த சாப்பாட்டின் சக்தி விரயம்தான்! கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள் நினைப்புக்கு வரலாம்:
“தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால், தீபத்தின் பெருமையன்றோ?
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால், தீபமும் பாவமன்றோ?”

வாழ்கையை உபயோகமாக எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி எத்தனையோ பெரியவர்கள் எழுதிவிட்டார்கள்; இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் எழுதிய ஒரு கட்டுரை என்னை நிரம்பவும் யோசிக்க வைத்த ஒன்று. அதில் ஒரு பகுதியின் தமிழ் மொழியாக்கம் இங்கே: "வாழ்க்கை என்பது வெகு சிலரே அடையக் கூடிய இலக்கை நோக்கிய ஒரு இரவு நேர, கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் சூழ்ந்த, வலி மிகுந்த, களைப்புதரும் நெடுந்தூர நடைப் பயணம். இதில் நம்மோடு நடப்பவர்கள் என்றுமிருக்கும் மௌனமான மரண விதியின் ஆணையின் கட்டுண்டு ஒருவர் பின் ஒருவராக நம் கண்ணிலிருந்து மறைவர். அவர்களின் சுக துக்கங்களில் உதவ நமக்கிருக்கும் அவகாசம் குறைவு. அந்த அவகாசத்தை அவர்களுக்கு ஒளிகாட்டுவதற்கோ, கருணையினால் அவர் துயர் துடைப்பதற்கோ, என்றும் தளரா பாசத்தால் மகிழ்விக்கவோ, தளரும் மனத்துக்கு தைரியம் அளிப்பதற்கோ அல்லது நம்பிக்கையூட்டுவதற்கோ பயன்படுத்துவோம்." [Bertrand Russell – Mysticism and Logic and Other Essays – A Free Man’s Worship]

வாழ்கையை உபயோகமாக நடத்துவது என் உணவின் மதிப்பை உயர்த்தும்; வாழ்தல் என்ற இலக்கை அடைய நான் எடுத்துக் கொண்டிருக்கிற முறை சரியா என்ற நிர்ணயிக்கவும் அது உதவும். நான் உண்ட, உண்கிற உணவின் மதிப்பை உயர்த்தியிருக்கிறேனா என்று தெரியவில்லை; இருந்தாலும், இந்தக் கேள்வியைக் கேட்க ஆரம்பித்ததே என் வாழ்க்கையின் சுய தேடலில் ஒரு திருப்புமுனை என்று தோன்றுகிறது. மற்ற புலன்களின் பசித் தேவை பூர்த்தி, அதன் வழிமுறை பற்றி அடுத்த வாரம்.

வியாழன், மார்ச் 10, 2011

இலக்கு - 5

இலக்கு - 5

இலக்குகளை பற்றி நான் முதன் முதலாக யோசிக்க ஆரம்பித்தது கல்லூரியில் படிக்கும் காலத்தில் - இருபது வருடங்களுக்கும் முன்பாக! இந்த யோசனை இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சில வருடங்கள் கழித்து வேறு ஏதாவது இலக்காகத் தோன்றலாம்; அல்லது இந்த நான்கு இலக்குகளில் சில இல்லாமல் போகலாம். இன்றைய தேதியில் இவை நான்கும் என் இலக்குகள். இவைகளை நான் தனித்தனியாக நான்கு இலக்குகளாகப் பார்ப்பதில்லை. ஒருவிதத்தில் இவையனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. புரிந்து கொள்ள எளிதாக இருப்பதற்காக நான்காகப் பிரித்து விவரித்திருந்தாலும், இவை நான்கும் ஒரு முழுமையை நோக்கிச் செல்ல உதவுவதாகவே நான் எண்ணுகிறேன்.

கல்லூரியில் படிக்கும் போது ராமகிருஷ்ணா மடம் பதிப்பித்த விவேகாநந்தர் உரைகளை, புத்தகங்களை விரும்பிப் படித்திருக்கிறேன். அவர் 1900ல் அமெரிக்கா வந்த பொழுது தந்த உரைகள் (லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா) ஒன்றில் இந்த மாதிரி குறிப்பிட்டிருக்கிறார்: "பெரும்பான்மையான மக்கள் இலக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இலக்குதான் முக்கியம்; அதை அடையும் முறை, வழி முக்கியமல்ல என்று கூறுவது தவறு. சரியான இலக்கை நிர்ணயித்தபின் நாம் அதை அடையும் வழியில், முறையில் கவனம் செலுத்த வேண்டும். இலக்கைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்காமல் அதை அடையும் வழிமுறையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் இலக்கை அடைய முடியும். வழியும், முறையும் சரியாக இருந்தால் இலக்கை மறந்தாலும் பாதகமில்லை; இலக்கைத் தாமாகவே சென்றடையலாம்!". இது என்னை மிகவும் கவர்ந்த ஒரு விளக்கம். பின்னாளில் பகவத் கீதை உரைகளைப் படிக்கையில், சிதப்பிரஞ்ஞன் பற்றிய விளக்கத்தையும் இந்த உரையின் தொடர்ச்சியாகப் பார்க்கத் தோன்றியது. மூலத்தைப் பொருத்தே விளைவு - பாதையைப் பொருத்தே பயணம்.

இந்தக் கருத்து தொடர்பான கவியரசர் கண்ணதாசனின் திரைப்பாடல்:
"பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்? அதில்
பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்"
(வாணி ஜெயராம் குரலில், எம். எஸ். விஸ்வநாதனின் இசையில், அபூர்வ ராகங்கள் திரைப்படப் பாடல் - முழுப்பாடலும் அருமை!)

என் வாழ்க்கையின் சுய தேடலில் இரு நிலைகள். என் இலக்கு(கள்) என்ன? அவை சரியா? இது முதல் நிலை. சரியான இலக்குகள் நிர்ணயமான பின் அவைகளை அடையும் முறை, வழி சரியானதா? இது இரண்டாவது நிலை. நான் முன்பெழுதிய நான்கு இலக்குகளையும் சரியா என்றும், அதை அடைய நான் எடுத்த, எடுத்துக் கொண்டிருக்கிற வழிகளைப் பற்றியும் சுயவிசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறேன். இந்த சுயதேடல்/விசாரணை இன்னமும் முடியவில்லை; எப்போது முடியும் என்றும் தெரியவில்லை.

முதலாவதாக 'வாழ்தல்'. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று சொல்வதைப் போல 'நான் வாழ்வது' என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்று தோன்றுகிறது. இதில் சரி/தவறு என்று பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. இந்த இலக்கு தவறு என்று வாதிட எந்த விதமான காரணமும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த 'வாழ்தலுக்கு' உள்ள முறை பற்றி, இந்த இலக்கை அடைய நான் எடுத்த, எடுத்துக் கொண்டிருக்கிற முடிவுகளில், வழியில் எது சரி, எது சரியல்ல என்பதில் அனேக குழப்பம். இந்த 'வாழ்தல்' இலக்கின் முதல் பாகம் பசித் தேவைப் பூர்த்தி. உணவைப் பெறும் முறையில் ஏகப்பட்ட மாற்றம்; காலத்தின் போக்கில் இது மாறிக் கொண்டே வருகிறது.

அறுபது, எழுபது வருடங்களுக்கு முன் என் தாத்தா, பாட்டி (அம்மா வழி) ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிப்பட்டினம் அருகிலுள்ள மாதவனூர் கிராமத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் வாழ்ந்த முறைக்கும் இப்போது எடிசனில் நான் வாழும் முறைக்கும் நிறைய வித்தியாசம் - முக்கியமாக உணவு, வாழ்க்கை வசதி சம்பந்தப்பட்ட விஷயங்களில். அப்போது மாதவனூர் கிராமத்தில் மின்சாரம் கிடையாது. சிறிய தெரு; ஓட்டு வீட்டிற்கு எதிராக மாட்டுத் தொழுவம். பாலுக்காக நான்கு, ஐந்து பசு மாடுகள்; வயலுக்கும், வண்டித் தேவைக்கும் சில எருதுகள். ஒரு கன்றுக் குட்டியாவது எப்போதும் தொழுவத்தில் இருக்கும்! வீட்டின் கொல்லையில் மாதுளம், எலுமிச்சை மற்றும் தென்னை மரங்கள்; சில கொடிகள் (பறங்கி, பூசணி, மல்லி), கீரைப்பாத்தி. கிணறு தாண்டி கத்திரிக்காய் செடி பார்த்ததாக நினைவு. தெருமுனை தாண்டி கொஞ்ச தூரத்தில் ஊரணி (சிறு குட்டை). துணி துவைக்க, மாடு குளிக்க மற்றும் இதர தண்ணீர் உபயோகத்திற்கு. சமையலுக்கும், குடிநீருக்கும் வீட்டுக் கொல்லைக் கிணறு. ஊரணிக்கருகே நிறைய கருவேல மரங்கள், சகதி என்று ஒரு குழப்பமான வாசனை. இன்னமும் கொஞ்ச தூரத்தில் வயல். மாதத்தைப் பொறுத்து பச்சை நாற்றுகள் அல்லது முற்றிய கதிர்கள்.

வீட்டிற்குத் தேவையான உணவு அனேகமாக கிராமத்திலேயே உருவானது - கருப்பட்டி உட்பட. வண்டி கட்டி டவுனுக்கு (தேவிப்பட்டினம் அல்லது எப்போதாவது திருவாடானை) சென்று வருகையில் தாத்தா சர்க்கரை, ஓலைப்பெட்டியில் மிட்டாய்/பட்சணங்கள் அல்லது பிஸ்கட் என்று வாங்கி வருவார். வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த உணவுப் பொருட்களை சேகரிப்பது, பெறுவது எப்படி என்றும் தெரியும். தாத்தா, பாட்டி இருவருமே பால் கறக்க, பசுவைப் பாதுகாக்க (தவிடு, தண்ணீர் காட்டுவது, பசுவை ஊரணிக்கு ஒட்டிச் சென்று குளித்து விடுவது) எல்லாம் தெரியும். சிறு வயதில் தாத்தா வயலிலும் வேலை செய்திருப்பதாகச் சொல்லக் கேள்வி. மாச்சட்டியில் விளக்கெண்ணை விளக்கு வைத்து, மை தயாரித்த கதையும் பாட்டி/அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். மொத்தத்தில் என் கணிப்பில் கிட்டத்தட்ட 75 சதவீத உணவுத் தேவைகளை கிராமத்திலேயே அவர்களே தயாரித்துக் கொண்டார்கள்.

அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

சனி, பிப்ரவரி 26, 2011

இலக்கு - 4

இலக்கு - 4

வாழ்க்கை என்று பார்க்கும் போது இதன் ஆரம்பமும், முடிவும் இங்குதான் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மருத்துவப் பார்வையில், அல்லது ஒரு நாட்டு சட்ட ரீதியாக ஒரு உயிரின் தொடக்கமும், முடிவும் (இறப்பு) வரையறுக்கப்பட்டு விவரிக்கப்பட்டாலும், அது முழுமையான ஒன்று என ஒப்புக்கொள்ள முடியவில்லை. சிவவாக்கியர் அந்நாளில் கேட்டது:
"பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?
பிறந்து மண்ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?"

அவரே வேறொரு பாட்டில் இன்னமும் சொல்கிறார்:
"உடம்பு உயிர் எடுத்ததோ, உயிர் உடம்பு எடுத்ததோ
உடம்பு உயிர் எடுத்தபோது, உருவம் ஏது செப்புவீர்
உடம்பு உயிர் இறந்தபோது உயிர் இறப்பது இல்லையே
உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே!"

வளர்வதில் திறன் சம்பந்தப்பட்ட அறிவு வளர்ச்சியையும் சேர்த்துப் பார்த்தாலும், அதையும் தவிர பேரறிவாய், ஞானத்தைத் தேடும் எண்ணம் வருகிறது. இதை வளர்ச்சி என்று கூறி நிறுத்த முடியவில்லை. இந்தப் பேரறிவு வாழ்தல், மகிழ்தல், வளர்தல் இவைகளைப் பற்றி மட்டுமல்லாமல் இவைகளையும் தாண்டி ஒரு முழுமையை நோக்கிச் செல்லும் விஷயமாகவே எண்ணத் தோன்றுகிறது. ஒரு உயிரின் பயணம் இந்த பூமியில் பிறப்பதில் தான் ஆரம்பிக்கிறது என்று உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. அதே போல அந்தப் பயண முடிவும் இறப்பில் நின்று விடுகிறது என்றும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் பயணத்தில் ஒரு துண்டு, பகுதி 1968ல் பிறந்து ஆரம்பித்து இருக்கிறது. அதற்கு முன்னம் செய்த பயணம் நினைப்பில் இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கல்லூரிப் படிப்பு முடிந்து இந்துஸ்தான் லீவரில் பணிபுரிய ஆரம்பித்த காலத்தில் அலெக்ஸ்பாண்டியன் தயவில் 'பெரி மேசன்' கதைகள் அறிமுகமாயிற்று. அதில் ஒரு கதையில் 'பிறப்பு-இறப்பு' தொடர்பாக பேசிக் கொண்டு வருகையில், எப்படி நினைப்பு இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பற்றியும் பெரி மேசன் விளக்குவதாக வரும். அந்தக் கதை (பெயர் உட்பட) மறந்து விட்டாலும், இந்தப் பகுதி மட்டும் நன்றாக நினைப்பில் இருக்கிறது. நாம் தூங்கி எழுகையில் நம் தூக்கத்துக்கு முன்னால் நடந்த அனைத்து விஷயங்களும் மறந்து விடும் என்று ஒரு வைத்துக் கொள்வோம். அப்படி நடந்தால் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒரு பிறப்பு போலத் தெரியும். கற்றுக் கொண்ட விஷயங்களையே மறுபடி கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அதே போல ஒரு உயிர் பிறக்கும் போது முன் பயணங்களைப் பற்றி மறந்து விடுகிறது என்பது போல இந்தப் பகுதியில் விளக்கம் வரும்.

இந்தக் கதையில் வந்த இந்தப் பகுதியால் பின்னாளில் நிறைய யோசித்திருக்கிறேன் - அதைப் பற்றி பின்னால். இந்த யோசனைகளில் ஒரு குறிப்பிட்ட விஷயம், நினைப்பு, அதன் முக்கியத்துவம். வளர்ச்சியில் ஒரு திறனைக் கற்றுக் கொள்ளுகையில், அது கார் ஒட்டுவதாக இருக்கலாம், அல்லது பியானோ வாசிப்பதாக இருக்கலாம், அந்தத் திறனைப் பற்றிய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூளை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறது. இதற்கு புலன்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியம். பியானோ வாசிக்கையில், வரும் ஒலியை தரம் பிரித்து உணரவே பயிற்சி வேண்டியிருக்கிறது, முதல் மாதத்திலிருந்து இரண்டாம் மாதத்திற்கு என் செவியில் பெரிய வளர்ச்சி இல்லை; ஆனால் இந்தப் பயிற்சியில் செவியும், மூளையும் சேர்ந்து ஒலியின் தரம் பிரிப்பதில் முன்னேற்றம் அடைகிறது. நினைப்பு என்று ஒன்று இல்லையென்றால் இந்த தரம் பிரிக்கும் அறிவு தேக்கி வைக்கப்பட்டிருக்காது.

நினைப்பு திறனைப் பற்றிய அறிவை தேக்கி வைக்கும் பாத்திரம். அந்தப் பாத்திரத்தில் எதைத் தேக்கி வைப்பது என்பது என் முடிவைப் பொறுத்தது. இது வளர்ச்சிக்கு முக்கியம். அதே சமயத்தில் என் முடிவோடு சம்பந்தப்படாமல் என் உடல் இயங்கத் தேவையான திறனை, அறிவை அதுவாகவே சேர்த்து வைத்திருக்கிறது, எனக்குத் தெரியாமலேயே - உதாரணம்: என் இதய இயக்கம். இருதயம் பற்றி அறிந்து கொண்டதே பள்ளியில் படிக்கும் போதுதான். இப்போது அதன் இயக்கம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது, இருந்தும் இயங்கம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. எனக்குள் இயல்பாக இயங்குவதைப் பற்றி அறிந்து கொள்ளவும் என் முயற்சி தேவையாயிருக்கிறது. ஒரு இருதய மருத்துவர், இருதயத்தைப் பற்றி அறிந்து கொள்ள நான்கிலிருந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. இதேபோல மூளை, கண், கால் என்றெல்லாம் அறிந்து கொள்ள நிறைய வருடங்கள் ஆகும். என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவே என் வாழ்நாள் போதாது. இத்தனையும் சேர்த்து வைக்க என் நினைப்பு பாத்திரமும் போதாதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அறிவை, திறனைப் பெருக்கிக் கொள்வதில் நேரம், முயற்சி என்று எத்தனை செலவழித்தாலும், ஒவ்வொரு அறிவும் நிச்சயமாகத் தரும் பாடம் 'எனக்கு அறிந்து கொள்ள வேண்டியது அதிகம்' என்பதுதான்.

சரி இது எல்லாமே தெரிந்து கொண்டு விடுகிறேன் என்றூ ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம். அப்படித் தெரிந்து கொண்டாலும் முழுமை வரும் என்று தோன்றவில்லை. கவிஞர் கண்ணதாசன் சொன்னது:
"ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
மனிதன் இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்".

பத்திரகிரியார் சொன்னது:
“ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம்?”

இந்தத் திறன் சம்பந்தமான அறிவுகளையெல்லாம் தாண்டி, மூல காரணத்தை, இந்த 'ஏன்' என்ற கேள்விக்கான விடை தரும் அறிவை ஞானம் என்றழைக்கலாம். இந்த மூலத்தை, அறிந்தே அறியும் அறிவை, அறிந்து கொள்ள ஆசை! மீண்டும் பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல்களில் இருந்து ஒரு பாடல்:

“அறிவை அறிவால் அறிந்தே அறியும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பது இனி எக்காலம்?”

இன்னமும் அந்த ஞானம் வரவில்லை - அதனால் இந்த 'அறிதல்' என்னுடய இலக்குகளில் ஒன்று.

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

இலக்கு - 3

இலக்கு - 3

"வாழ்தல்", "மகிழ்தல்" இலக்குகளைப் பற்றி விபரமாக எழுதுவதற்கு முன்னால் அடுத்த இலக்குகளைப் பற்றியும் சொல்லி விடுகிறேன். பிறப்பதற்கு முன்னாலேயே கருவிலேயே தொடங்குகிற ஒரு செயல் வளர்ச்சி. விந்துவும், முட்டையும் ஒன்றாகி வந்த ஒரு செல், இரண்டாகி, நான்காகி, வளர ஆரம்பிக்கிறது. பிறந்த பின்னும் தொடர்கின்ற இச்செயல் இறப்பு வரை நடக்கின்ற விஷயந்தான். உடலளவில் ஆரம்பித்த இந்த வளர்ச்சி, ஒரு நிலையில் அறிவு, திறன், கலை என்றெல்லாம் உள்ளடக்கி பெரிதாகிறது. உலகில் உள்ள உயிரனைத்திற்கும் வளர்ச்சி பொது. வளர்ச்சியே வளர்ந்து வரும் திறத்தை, தன்னளவில் வளர்வதோடு மட்டுமல்லாமல் தன் இனமே வளர்வதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதை, பரிணாம வளர்ச்சி என்றழைக்கிறோம்!

ஒரு உயிர் உருவாகிப் பின் பிறந்ததே கரு வளர்ச்சியில் வந்ததுதான். இந்த ஆரம்ப வளர்ச்சியில் அந்த உயிரின் பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது:
"நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா?
இல்லை என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?"

ஆனால் "வாழ்தல்" ஆரம்பித்த பிறகு காலம் செல்லச் செல்ல நானெடுக்கும் முடிவுகள், என் செயல்களின் விளைவுகள் என் வளர்ச்சியை, அதன் திசை, வேகத்தைப் பாதிக்கிறது என்று தெரிகிறது. அது மழையில் நனைந்தால் ஜலதோஷம் வருவதில் ஆரம்பித்து, உணவில், உடற்பயிற்சியில் ஒழுங்கில்லாத காரணத்தால் சக்கரை வியாதி வருவது வரை அனேக விஷயங்களில் வெளிப்படுகிறது. அதே சமயத்தில் என் முடிவுகளோ, விருப்பங்களோ நேரடியாக சம்பந்தப்படாமல் வளரும் விஷயங்களும் இருக்கின்றன. குழந்தையாயிருக்கையில் நான் முடிவெடுத்து என் முடி வளரவில்லை; இப்போது நான் விரும்பினாலும் வளர மாட்டேன் என்கிறது!

வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் என்ன வித்தியாசம்? ஏன் இரண்டு இலக்குகளாகப் பார்க்க வேண்டும்? இவ்வுடலைப் பொறுத்தவரை வாழ்தல் இல்லாமல் வளர்தல் இல்லை. வாழ்வதற்காக நாம் எடுக்கும் முடிவுகளில், செயல்களில் வளர்ச்சி தானாக வருகிறது. உதாரணம் - வாழ்வதற்காக உணவு வேண்டும்; உண்பதனால் உடல் தானாக வளருகிறது. உடலைப் பொறுத்தவரை வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் வித்தியாசம் அதிகமாகத் தெரியாவிட்டாலும், அறிவு, திறன் சம்பந்தப்பட்ட விஷங்களில் வித்தியாசம் நிச்சயம் தெரிகிறது. ஒரு திறனைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அதை செயலாக்குவதாலேயே வளர்ச்சி வருகிறது. வெறுமனே வாழ்வதற்கு அந்தத் திறன் தேவையில்லாமல் இருக்கலாம்; அந்தத் திறனைக் கற்க வளர்ச்சியோ, மகிழ்ச்சியோ காரணமாக இருக்கலாம்!

இந்த வளர்ச்சியில் முக்கியமான ஒரு விஷயம் காலம், நேரம். எப்படி காலம் ஒரு அம்பு போல முன்னோக்கி மட்டும் செல்கின்றதோ அதே போல வளர்ச்சியும் ஒரே திசையிலேயே நடக்கிறது. பள்ளியில் படிக்கையில் மனப்பாடம் செய்து (பரீட்சைக்கு கட்டாயம் வரும்!) எழுதிய இரண்டு உயிர் வளர்ச்சி பற்றிய பாடங்கள் இன்னமும் நினைப்பில் இருக்கிறது. ஒன்று கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சி ஆவது; இரண்டு தவளையில் வளர்ச்சிப் பருவம், நிறைய படங்களுடன் (அதனால் ஐந்து அல்லது பத்து மதிப்பெண் கேள்வியாக வரும்). முட்டை, தலைப்பிரட்டை, வாலுள்ள தவளை, பெரிய வாலில்லாத தவளை எல்லாம் ஒரு குட்டையைச் சுற்றி இருப்பதாக வரைந்திருக்கிறேன் (தவளை உருளைக்கிழங்கு போலத் தான் தெரியும், நான் வரைந்தால்). இதில் முட்டை காணோம், தலைப்பிரட்டை காணோம் என்று ஒவ்வொரு பருவத்தை மட்டும் பார்த்தால் வளர்ச்சியில்லை; மொத்தமாக முட்டையிலிருந்து தலைப்பிரட்டை, அதிலிருந்து தவளை என்று பார்த்தால் வளர்ச்சி தெரியும்.

வண்ணத்துப் பூச்சி, தவளையைப் பொறுத்தவரை இந்த வளர்ச்சி, உடல் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. புழுவாக கூட்டில் வாசம் செய்ய ஆரம்பித்தாலும், வண்ணங்கள் நிறைந்த இறக்கைகளுடன் பூச்சியாக வெளியே வருகிறது. கால்களில்லாமல், நீரில் நீந்திவந்த தலைப்பிரட்டை, நீரிலும், நிலத்திலும் வாசம் செய்யவும், நீந்தவும், தவ்விச் செல்லவும் கால்களோடு தவளையாக வளர்வதும் பிரமிக்க வைக்கும் அதிசயம்தான். இந்த மாற்றத்தில், வளர்ச்சியில் ஒரு நோக்கம், முழுமை தெரிகிறது. என் உடல் வளர்ச்சியில், மாற்றத்தில் இந்த மாதிரி பிரமிக்க வைக்கும் விதமாக மாற்றம் வந்ததில்லை. அதே சமயத்தில் இது வரை அனுபவித்து, உணர்ந்து, அறிந்து கொண்ட விஷயங்களை, என் அறிவில், மனதில் வந்த வளர்ச்சியை சற்று பின் தள்ளி நின்று மொத்தமாகப் பார்க்கையில் நிச்சயம் பிரமிப்பு வருகிறது. இன்னமும் வளர வேண்டும் என்கிற உந்துதலும் இருக்கிறது.

குழந்தையாக இருக்கையில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் வயது ஆக ஆக மாறுகின்றதோ, அதே போன்ற மாற்றம் வளர்ச்சிக்கும் வருகின்றது. இந்த மாற்றம் ஒரு விதமான இழப்பை ஒத்திருக்கிறது. எப்படி வண்ணத்துப்பூச்சி புழுவை இழக்கிறதோ, தவளை தலைப்பிரட்டையை இழக்கிறதோ, அதே போல நானும் என் வளர்ச்சியில் நிறைய இழந்திருக்கிறேன். அறிவால், அறியாமையை, அந்த அறியாமை தந்த வெகுளித்தனத்தை இழப்பதையும் இந்த வகையில் சேர்க்கலாம்.

யோசித்துப் பார்க்கையில் இழப்பதற்கு தைரியம் இல்லாத போது வளர்ச்சிக்கான வாய்ப்பும் குறைகிறது. முதன் முதலில் பள்ளியில் விட்டு விட்டு அம்மா வீடு திரும்பிச் சென்றவுடன் மனதில் வந்த பயம் தொடர்ந்திருந்தால், படிப்பு என்பதே ஒரு மாதிரியாகத் திரும்பியிருக்கும். வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் இந்த 'இழக்கும் தைரியம்' ஒரு முக்கியமான வித்தியாசம் என்று கருதுகிறேன். 'வாழ வேண்டும்' என்று நோக்குகையில் இம்மாதிரியான 'இழக்கும் தைரியம்' தேவையாயிருக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு. ஆனால் வளர்வதற்கு இது தேவையான ஒன்றாகி விடுகிறது.

சுற்றுப்புற சூழ்நிலைகள் காலப் போக்கில் மாறிக் கொண்டே வருகிறது. இது வரை கற்ற கல்வியும், திறனும், அறிவும், காலம் முடியும் வரை துணைக்கு வரும் என்று முடிவெடுத்து நிறுத்திவிட முடியாது என்று தோன்றுகிறது. இவை வளரவில்லை என்றால் வாழ்தலும் பாதிக்கப்படும். அதனால் வளர்ச்சி என்பது எனக்கு மட்டுமல்ல, என் சந்ததிக்கும் அத்தியாவசமாகி விடுகிறது. இந்த வளர்ச்சியில் என்னுடைய ஆக்கபூர்வமான சம்பந்தம், முடிவுகள் பெரும் பங்கு வகிப்பதால், “வளர்தல்” என் இலக்குகளில் ஒன்று.

மேலும் அடுத்த வாரம்.

வெள்ளி, பிப்ரவரி 11, 2011

இலக்கு - 2

இலக்கு - 2

அதே குழந்தை பசி நீங்கியபின் தெரிவிக்கும் உணர்வு சந்தோஷம் - சிரிப்பின் மூலமாக. வளர வளர பசி நீங்கியதால் மட்டும் அது சிரிப்பதில்லை. ஒரு கிலுகிலுப்பை, பொம்மை என்றெல்லாம் அதன் தேவை வளர ஆரம்பிக்கிறது. யோசிக்க, பேச தெரிய ஆரம்பிக்கும் முன்னமே, பசி நீங்கியவுடன் வேறெதையோ தேட ஆரம்பிக்கும் தன்மை வந்து விடுகிறது. தன்னைத் தூக்கி கொஞ்ச வேண்டும், பாட்டு கேட்க வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டுக் கேட்கத் தொடங்கும் முன்னமே அதன் புலன்களுக்கு சுகம் தரும் விஷங்களைத் தேடத் துவங்குகிறது. இந்த 'சுகம் தேடல்' புலன்களில் ஆரம்பித்தாலும், வளர வளர புலன்களைத் தாண்டி, சிந்தனை, நினைப்பு போன்ற மனது/மூளை சம்பந்தப்பட்ட சமாசாரங்களையும் உள்ளடக்க ஆரம்பிக்கிறது. இந்த மாதிரி 'சுகம் தேடல்' தேவைகளின் பூர்த்தியில் கிடைக்கும் உணர்வை "மகிழ்ச்சி" என்று சொல்லலாம்.

மகிழ்ச்சியின் முதலாவது நிலை புலன்கள் தெரிவிக்கும் உணர்ச்சிகளால் வரும் சுகம், இதம். பண்டைய நூல்களில் நம் உடம்பின் ஐந்து புலன்களை ஞானேந்திரியம் என்றும் (செவி, கண், மூக்கு, நாக்கு, மெய்), இந்தப் புலன்கள் மூலமாக அறியப்படும் உணர்வுகளை தன்மாத்திரை (சப்தம், ரூபம், கந்தம், ரசம், ஸ்பரிசம்) என்றும் குறிப்பிடுகிறார்கள். ஞானேந்திரியங்களின் வேலை, எந்தப் பொருளையும், தன்மாத்திரைகளாக விவரித்து மூளைக்கு அனுப்புவதுதான். ஒரு உயிருக்கு ஒரு சமயத்தில் எந்த தன்மாத்திரை இதம் அளிக்கிறதோ, அதுவே 'மகிழ்ச்சியின்' காரணமாகிறது. சிலருக்கு சில புலன்களின் உணர்ச்சி தரும் சுகம், மற்ற புலன்களின் உணர்ச்சிகளால் வரும் சுகத்தை விட அதிகமாக இருக்கும்; அதனால் முக்கியத்துவமும் மாறலாம். சிலருக்கு சங்கீதம், சிலருக்கு சாப்பாடு - சந்தோஷம் எதில் தான் வரும் என்று சொல்ல முடியாது! இந்த சுகங்களில் ஒன்று பெரியது மற்றொன்று சிறியது என்றெல்லாம் தரம் பிரிக்க முடியாது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது "மகிழ்ச்சி" என்பது ஒரு கூட்டுப் பொருள் - இதற்கு புலன், புலனுக்கு இதம் தரும் மற்றொரு பொருள், புலனின் உணர்வைப் புரிந்து கொண்டு ரசிக்கும் மனம்/மூளை, என்று மூன்றும் சேர்ந்தால் தான் மகிழ்ச்சி. இந்த மூன்றும் ஒருவருக்கு எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதே போல இந்த மூன்றும் இரண்டு மனிதர்களுக்கு ஒன்றே போல இருப்பதில்லை. ஒவ்வொருவரைப் பொறுத்து இது மாறுபடும். சிறுவயதில் மன்னார்குடியில் கோடையில் பனிக்கட்டியைக் கையில் எடுக்கையில் வந்த சுகம், மகிழ்ச்சி இப்போது முழங்கால் அளவு பனியை வீட்டு வாசலில் இருந்து எடுத்துப் போடுகையில் எனக்கு நிச்சயமாக இல்லை!

இந்த முதல் நிலை மகிழ்ச்சியிலும் இரு பிரிவுகள். ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்பட்டுத் தரும் தன்மாத்திரை மகிழ்ச்சி - ஒரு பிரிவு, ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்படாத மகிழ்ச்சி - மற்றொரு பிரிவு. சுருக்கமாக சொல்லப்போனால், ஞானேந்திரியங்களின் நேரடியான துணையில்லாமல் தன்மாத்திரைகள் தரும் இதத்தை மூளை அடைந்தால் வரும் மகிழ்ச்சி, முதல் மகிழ்சியின் ஒரு மாறுபட்ட பிரிவு. உதாரணமாக நல்ல பாட்டைக் கேட்கையில் வரும் மகிழ்ச்சி முதலாம் பிரிவு - காது கேட்டு, பொருள் புரிந்து, மனம் மகிழ்கிறது. இரவு படுக்கையிலே விளக்கணைத்து விட்டு, உறக்கம் வரும்முன், கேட்ட பாட்டில் மனதைக் கவர்ந்த இடங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வது இரண்டாம் பிரிவு. காது கேட்பதற்கு பாட்டு இல்லையென்றாலும், கேட்ட போது ஏற்பட்ட உணர்வை மனது/மூளை நினைவாலே வரவழைக்கிறது. ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்படாத தன்மாத்திரை உணர்வு!

நேரடியாக சம்பந்தப்படாது போனாலும், ஞானேந்திரங்கள் இல்லாமல் தன்மாத்திரை பற்றி மூளை தாமாக அறிய முடியாது. தன்மாத்திரை உணர்வை மூளை அடைய வேண்டுமானால் ஞானேந்திர்யங்கள் அவசியம் தேவை. நினைப்பாலே மூளை தன்மாத்திரை தரும் உணர்ச்சியை புதிதாக உண்டு பண்ண முடியாது; ஏற்கனவே அனுபவித்திருந்த ஒரு உணர்வின் நினைப்பிலிருந்துதான் உருவாக்க முடியும். ஞானேந்திரியம் இல்லையென்றால் தன்மாத்திரையும் இல்லை. இந்த ஞானேந்திரியங்கள், அவை உணரும் பொருள்கள் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன - ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை - ஒரு உயிருக்கு. இந்த சம்பந்தம் பற்றி நான் எழுதிய ஒரு கவிதை இங்கே:

வண்ணமிங்கு இலையென்றால் பார்வை தேவையில்லையே
பார்வையிங்கு இல்லையென்றால் வண்ணமுந்தான் இல்லையே

சப்தமிங்கு இலையென்றால் செவியின் தேவையில்லையே
செவியுமிங்கு இல்லையென்றால் சப்தமுந்தான் இல்லையே

வாசமிங்கு இலையென்றால் நாசியின் தேவையில்லையே
நாசியிங்கு இல்லையென்றால் வாசமுந்தான் இல்லையே

சுவைகளில்லை என்றுபோனால் நாவின் தேவையில்லையே
நாவுமிங்கு இல்லையென்றால் சுவைகளுந்தான் இல்லையே

தீண்டப்பொருளும் இல்லையென்றால் உணர்வின் தேவையில்லையே
உணர்வும் அற்றுப்போனாலே தீண்டுதலிங்கே இல்லையே

மகிழ்ச்சியின் இரண்டாவது நிலை எந்தப் புலனுமே சம்பந்தப் படாத - வெறும் நினைவு/மூளை/மனது சம்பந்தமான விஷயம். அதாவது, தன்மாத்திரை தாண்டிய சுகம், மகிழ்ச்சி. உதாரணம் - ஒரு கடினமான புதிரை மனதினுள் ஆராய்ந்து, விடை கண்டுபிடிக்கையில் வரும் மகிழ்ச்சி. ஒருவிதத்தில் இது வசதியான மகிழ்ச்சி - காரணம் இதிலிருக்கும் சுதந்திரம். புலன்கள் தாமாக மகிழ்சியைத் தர முடியாது - அதற்கு இதம் தரும் பொருளும் வேண்டும். பொருள் மட்டும் இருந்தால் போதாது, அதை உணரும் புலனும் வேண்டும். ஆனால் மனதிலே நினைவாலே தோன்றும் மகிழ்ச்சிக்கு நம் நினைவு, மனம் மட்டும் போதும்.

சிவவாக்கியர் சொன்ன சொல் நினைப்புக்கு வருகிறது:
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே!

இந்த முக்கியத்துவம் மாறுபட்டாலும், சுகத்தை, மகிழ்ச்சியை மொத்தமுமாகத் துறந்தவர்களை நான் பார்த்ததில்லை. புலன்கள் சம்பந்தப்படாத மனது, நினைவு தொடர்பான சுகங்களை அறிந்து கொள்ள ஆரம்பிக்கையில், புலன்கள் சம்பந்தமான தேவைகளில், சுகங்களில் செலவிடும் நேரம் குறைகிறது. இருந்தாலும் இந்த "மகிழ்ச்சி தேடுதல்” (சுருக்கமாக “மகிழ்தல்” என்று அழைக்கலாம்) இறப்பு வரை ஒருவருக்கு உந்துதலாக இருக்கிறது.

இதனால் என்னளவில் "மகிழ்தல்" வாழ்வின் இரண்டாம் இலக்கு. இதைப் பற்றி மேலும் அடுத்த வாரம்.

இலக்கு - 1

வெள்ளி, பிப்ரவரி 04, 2011

இலக்கு - 1

இலக்கு - 1

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான இலக்குகள் இருக்கலாம்; இருக்கின்றன. தினசரி வாழ்க்கையில் அன்றாட காரியங்களில் ஆரம்பித்து (ஏழு மணி வண்டி பிடிக்க வேண்டும்) வார/மாத/தொலைநோக்கு பார்வைவரை (ஒருமுறையாவது தாஜ்மகால் பார்க்க வேண்டும்), பல விதமான இலக்குகள். ஆனால் மொத்த வாழ்க்கைக்கும் இலக்கு என்ன என்று யோசித்தால் வெகு சிலருக்கே விடை கிடைக்கிறது. இதிலும் இரு நிலைகள் - என் ஒருவனுடைய வாழ்விற்கு என்ன இலக்கு? மொத்த மனித வர்க்கத்திற்கு/பிறவிக்கு ஒரு இலக்கு உண்டா? அல்லது இந்த வாழ்க்கை என்பது இலக்கற்ற, ஒருவிதமான வேதியல், உயிரியல் சம்பந்தப்பட்ட பரிணாம வளர்ச்சி மட்டும்தானா? நாளாக நாளாக கேள்விகள், அதுவும் சமீபகாலத்தில் இந்த மாதிரிக் கேள்விகள் தொடர்பான யோசனைகள் அதிகமாகி விட்டன. இதை மத்திய வயதுப் பிரச்சனை – mid life crisis – என்று கருதி ஒதுக்க முடியவில்லை. இந்தத் தொடரில் என் யோசனையில் தோன்றிய எண்ணங்களை, பிரதிபலிப்புகளைப் பதிய உத்தேசம்.

உயிர் வாழத் தேவையான விஷயங்கள் (காற்று, உணவு போன்ற சமாசாரங்கள்) இல்லை (அல்லது குறைவு) என்றால் இந்த 'இலக்கென்ன?' கேள்விக்கு விடை எளிது. அந்த மாதிரி சமயங்களில் வாழ்க்கையின் இலக்கு 'உயிர் வாழத் தேவையான விஷயங்களைப் பெறுவது'. எப்போது ஒரு விஷயம் 'தேவை' என்று நினைக்கிறோமோ அப்போது அது இலக்காகிறது. இந்த தேவைகளைப் பற்றி மாஸ்லோ என்பவர் ஒருவிதமான வகைப்படுத்திய சித்தாந்தத்தைச் சொல்ல, அதைப் பற்றி நிறையப் பேர் எழுதிவிட்டார்கள். இதில் அந்த சித்தாந்தம் சரி என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்; சரியல்ல என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்! தேவைகளை இந்த மாதிரி வகைப்படுத்துவதில் எனக்கு அதிக நாட்டமில்லை. வகைப்படுத்துவதால் புரிந்து கொள்வது எளிதாக இருந்தாலும், இந்த வகைகள் எல்லொருக்கும் தொடர்ச்சியாக வருவதாகத் தோன்றவில்லை. தேவைகளை இந்த மாதிரி வகைப்படுத்துவதற்கு பதிலாக மனதில் தோன்றும் உணர்வுகளை வைத்து விவரித்தால், 'இலக்காக எதை நினைக்கிறோம்' என்பது புரிபடலாம்.

குழந்தையாய் பிறக்கையிலே இருக்கும் உணர்வுகள், வளர்ந்து மனிதனாக மாறுகையில் நிச்சயமாக மாறுபடுகின்றன. குழந்தையாய் இருக்கையிலே பசிக்காக அழுவது இயல்பாக வருகிறது. குழந்தைக்கு தேவை என்ன என்று பகுத்தறிந்து சொல்ல வராவிட்டாலும், அதன் உடலில், மூளையில் இருக்கும் இயல்பான செயல்பாடு அழுகையை வரவழைத்து தனக்கு வேண்டிய தேவையை ஒருவிதமாய் தெரியப் படுத்துகிறது. இந்த பசி விஷயம் பிறந்ததில் ஆரம்பித்து, இறக்கும் வரை தொடர்கிறது - இதனால் ஒரு விதத்தில் முதல் இலக்காக, தேவையாக, 'பசி' வந்து விடுகிறது. இங்கே பசி என்பதை 'உணவுத் தேவை' என்பதோடு மட்டும் நிறுத்தாமல், உயிர் வாழ அத்தியாவசியமான எல்லாவிதமான தேவைகளையும் - காற்று, நீர் உட்பட - உணர்த்தும் விதமாகவே உபயோகிக்கிறேன். இதனால் என் கருத்தில் “பசித் தேவை பூர்த்தியே” முதலாவதாக வரும் இலக்கு!

குழந்தை வளர வளர சுற்றுப்புற சூழ்நிலைகள் புரிய ஆரம்பிக்கின்றன. தன் உடலுக்கு எதெது தீங்கு விளைவிக்கும் என்றும் புரிய ஆரம்பிக்கிறது. பசிக்கு பால் தேவை, ஆனால் பால் சூடாக இருந்தால் ஒரு உறிஞ்சலுக்குப் பிறகு நிறுத்திவிடத் தெரிகிறது. வாழ்க்கையில் உடலுக்கும், உயிருக்கும் வரக்கூடிய அபாயங்கள் புரியப் புரிய அந்த அபாயங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற தேவையும் தெரிய ஆரம்பிக்கிறது. இவைகளை தனியாக வகைப்படுத்தாமல் 'பசித் தேவை பூர்த்தி'யின் ஒரு பாதியாகவே கருதுகிறேன். எப்படி தேவை என்று கருதி "சேர்க்க வேண்டியவை" பட்டியலிட ஆரம்பிக்கிறோமோ, அதே போல "சேர்க்கக் கூடாதவை" என்று ஒரு பட்டியலும் தயாரிக்க ஆரம்பிக்கிறோம்.

இந்தப் பட்டியல் வாழ்க்கையில் நம் அறிவும் அனுபவமும் வளர வளர பெரிதாகிக் கொண்டே வருகிறது. சேர்க்க வேண்டியது - உணவு; விலக்க வேண்டியது - விஷம்; என்ற ரீதியில் உடல், உயிர் காக்கும்/ தாக்கும் சமாசாரங்களை நம் அறிவு நினைவில் தேக்க ஆரம்பிக்கிறது. உடலுக்கும், உயிருக்கும் வரும் அபாயமெல்லாவற்றையுமே 'விலக்க வேண்டியவை' என்ற பட்டியலில் சேர்க்கலாம். ஒரு தேவையை முழுதாகப் புரிந்து கொள்ள சேர்க்க வேண்டியதைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது; விலக்க வேண்டியவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். சேர்ப்பதும், விலக்குவதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. உணவு சேர்க்க வேண்டியவை பக்கம் இருந்தாலும், அளவு அதிகமானாலோ, தரம் குலைந்து போனாலோ அதே உணவு விலக்க வேண்டியவை பக்கம் தானாக சென்றுவிடும். வளர வளர இந்த "பசித் தேவை பூர்த்தி" இலக்கு மாறாவிட்டாலும், இந்தத் தேவையின் புரிதல் பெரிதாகி முழுமையை நோக்கி வளர்கிறது. இந்தப் புரிதல் இறக்கும் வரை தொடர்கிறது. இதையே "வாழ வேண்டும்" அல்லது சுருக்கமாக "வாழ்தல்" என்றழைக்கலாம்.

இறைவன் (அல்லது இயற்கை) வீணாக எதையும் செய்வதாகத் தோன்றவில்லை. ஒரு உயிரைப் பிறக்க வைத்ததற்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அதனால் இந்த வாழ்க்கை என்பது இலக்கற்ற, ஒருவிதமான வேதியல், உயிரியல் சம்பந்தப்பட்ட பரிணாம வளர்ச்சி மட்டும்தான் என்று எண்ணி வாழ முடியவில்லை. என் பிறப்பின் காரணம் தெரியவில்லை. அந்தக் காரணம் தெரிந்தால் இவ்வாழ்கையின் முக்கியமான இலக்கும் தெரிந்துவிடும். அந்தக் காரணம் தெரியும் வரை, பிறந்த அந்த உயிரை தொடர்ந்து வாழ்ந்திருக்க என்ன தேவையோ அதுவே முதல் இலக்காகிறது. அதனால் என்னளவில் முதல் இலக்கு "வாழ்தல்"!

முன்பு எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள்:

இலக்கை நோக்கிப் பயணித்தேன்
பயணத்தில் வந்தது தெளிவு
இப்போது பயணமே இலக்கு!

அடுத்த வாரம் தொடர்கிறேன்.

வெள்ளி, ஜனவரி 28, 2011

மறு பிரவேசம்

தந்தனத்தோம் கோமாளி (மறுபடி) வந்தேனுங்க.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் (2006ல்) லாவோட்ஸேயின் கவிதைகள் மூலத்தை தமிழில் எழுத ஆரம்பித்தேன். மொத்தம் 81 கவிதைகள் - 51 கவிதைகள் முடிந்த சமயத்தில் வேலை மாற்றம் - எழுத நேரம் குறைந்து போய், இந்த மொழி மாற்ற வேலை நின்று போயிற்று. சென்ற வருட இறுதியில் மறுபடி வேலை மாற்றம். மறுபடி கொஞ்சம் நேரம் கிடைக்க முனைப்பாக மீதம் இருக்கும் கவிதைகளையும் மொழி மாற்றம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். வாரம் ஒன்றாக பதிய உத்தேசம். இன்று ஆரம்பித்தாகிவிட்டது - 'வழி' தளத்தில். இன்னும் முப்பது வாரத்தில் மொத்தமும் முடிந்துவிடும்.

சென்று பார்த்து, படித்து எப்படியிருக்கிறது என்றூ சொல்லுங்கள்.

சனி, அக்டோபர் 09, 2010

மதமும் மானுடமும்

மதமும் மானுடமும்

மதந்தழுவா மனிதர்களும் வாழ்கையிலே
மனிதர்சேரா மதங்களிங்கே வாழ்ந்ததில்லை

மதம்வாழ மானுடமும் தேவையென்றால்
மதியுரைத்தேன் மானுடமே மேன்மையென்று.

மக்களுக்கு உணவாகும் மாக்களுமே
மனிதர்வாழ உதவிடுமே தன்னுழைப்பால்

மனிதர்வாழ மாக்களுதவி தேவையென்றால்
மனந்தெளிந்தேன் மாக்கள்தானே மேன்மையென்று

மாக்களுக்கு மானுடமும் தேவையில்லை
மரம்செடி புல்பூண்டு போதுமிங்கே

மாக்கள்வாழ தாவரமும் தேவையென்றால்
மரமன்றோ மாக்களினும் மேன்மையிங்கே!

மரம்செடியும் வளர்வதுவும் புவியின்மேலே
மண்ணதனனின் வளத்தாலே செழிக்குமிங்கே

மண்ணதனின் துணையன்றி மரமில்லையென்றாலே
மண்ணன்றோ மற்றதைவிட மேலிங்கே!

மரமதுவும் வளர்ந்திடவே மாரியோடு
மாருதமும் ஆதவனும் வேண்டுமிங்கே

மற்றதெல்லாம் பஞ்சபூதம் தந்ததென்றால்
மதம்காக்க மரணிப்பது மடமையன்றோ?

ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

சரியா? சந்தோஷமா?

சரியா? சந்தோஷமா?

இரண்டு வாரமாக வேலை அதிகம். இணையத்தில் படிக்க நேரமில்லை; பதிய இன்னமும் அதிகம் நேரம் தேவையாதலால் பதியவும் இல்லை. இந்த இரண்டு வார வேலை பளுவில் அதிக நேரம் மத்தியஸதம் செய்வதிலும், மாறுபட்ட இலக்குகளுக்கிடையே ஒரு விதமான சமரசம் செய்வதிலும் செலவானது. அப்போது தோன்றிய ஒரு பொ.போ.பொ. (பொழுது போகாத பொம்மு) சிந்தனைதான் இது. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இந்த பொ.போ.பொ. பிரபலம் - ஒரு பிரதானமான வாரப் பத்திரிகையில் வந்த கார்ட்டூன். குமுதமா அல்லது விகடனா என்று நினைவில் இல்லை.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் வித விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் ஒரே விதமான விடை கிடையாது. எல்லா பிரச்ச்னைகளையும் ஒரே விதமாக வகைப்படுத்தவும் முடியாது. ஆனால் பெரும்பான்மையான சச்சரவுகள் ஒரே விதமான மூல காரணத்தினாலேயே வருகிறது என்று நினைக்கிறேன்.

சிறு வயதிலிருந்தே ஒரு விஷயம் சரியானதாக இருப்பதே நம் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ற பாடம் பதிந்துவிட்டது. உதாரணமாக பரீட்சையில் விடை சரியாக இருந்தால், மதிப்பெண் வரும், அதனால் மகிழ்ச்சி. அதனால் நம் மனதில் நம் எண்ணம், நம் கோணம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக சக்தி செலவழிக்கிறோம். எப்போது நம் கருத்து நமக்கு சரி எனப் பட்டு மற்றவரோடு அது ஒத்துப் போகவில்லையோ அப்போது சச்சரவுதான். நாம் நம்முடைய விடை சரி என்று முழு மதிப்பெண் எதிர்பார்த்து இருக்கையில், விடை திருத்தும் ஆசிரியர் நம் எதிர்பார்ப்போடு ஒத்துப் போகாமல் மதிப்பெண் குறைத்துப் போட நமக்கு வருவது கோபம், வருத்தம்தான்.

அந்த நேரத்தில் ஆசிரியர் ஒருவிதமான விடையை எதிர்பார்க்கிறார் என்று புரிந்து விட்டால், நமக்கு சரி என்று தோன்றுவதை எழுதாமல், ஆசிரியர் எது சரி என்று எதிர்பார்ப்பார் என்று புரிந்து கொண்டு அதை எழுதி மதிப்பெண் வாங்க முயற்சிப்போம். அந்த சிறு வயது பக்குவம் வயது ஆக ஆக குறைந்துவிடுகிறது. நம் கருத்து சரி என்று அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை வந்து விடுகிறது. மற்றவர் கருத்து நம்முடைய கருத்தோடு ஒத்துப் போகாத போது, அது தவறு என்று உடனேயே முடிவெடுத்து, தவறான கருத்தை திருத்த வேண்டும் என்ற ஒரு வேகம் வந்து விடுகிறது. அது மட்டுமல்ல, இந்த திருத்தும் முயற்ச்சியை ஏதோ ஒரு பொது நலத்துக்காக செய்வது போல கற்பனை பண்ணிக் கொண்டு, "என்னதான் இருந்தாலும் ஒரு principle வேண்டும்" என்றெல்லாம் நம் கருத்தை நியாயப்படுத்தி விடுகிறோம்.

இதை ஈகோ என்றும் சொல்லலாம்; பிடிவாதம் என்றும் சொல்லலாம். அலுவலகத்தில் நான் பார்த்த எந்தப் பிரச்சனையையும் உயிரையும் விடத் தகுந்த உயர்ந்த குறிக்கோள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும், அனைவருக்குமே இந்த ஈகோ பிரச்சனையால் தேவையில்லாத விரயம். என் கருத்தை மற்றவர் தவறு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, 'சொன்னால் சொல்லட்டுமே' என்று திரும்பிப் போகக் கற்றுக் கொண்டாலே பாதி சச்சரவு போய் விடும். அப்படி திரும்பிப் போவதால் இரு தரப்பிலும் மகிழ்ச்சிதான். பள்ளியில் படிக்கும் போது இயல்பாக வந்த இந்தத் தன்மை எப்படி தொலைந்து போனது என்று தெரியவில்லை.

கொஞ்சம் யோசித்தால் இந்த ஈகோவிற்காக நம் மகிழ்ச்சியைத் துறக்கக் கூடத் தயாராக இருக்கிறோம். இன்னமும் சொல்லப் போனால் தங்கள் குடும்ப மகிழ்ச்சியைக் கூட தியாகம் செய்து தம் கருத்து சரி என்று வாதிடுகின்ற மக்களை இப்போதும் நாம் பார்க்கிறோம். ஒரு கருத்துக்காக உயிரைக் கூட விடுகின்ற மக்களை சமயத்தில் நாமே ‘தியாகி’ என்றெல்லாம் உயர்த்திப் பேசுகிறோம். அந்த அளவிற்கு நம் வளர்ப்பில், வாழ்க்கை முறையில் கருத்துக்கு உயர்ந்த இடம் கொடுத்து, அதன் பொருட்டு கஷ்டத்தையோ, துயரத்தையோ ஏற்பது கூட உன்னதமானது என்று ஆதி காலம் தொட்டு பாடங்கள் இருக்கின்றன.

இது எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை. உயர்ந்த குறிக்கோளுக்காக உயிரையும் விடலாம் என்ற ரீதியில் நிறையப் படித்தாலும், எது உயர்ந்தது என்ற நிர்ணயம் செய்வது அவ்வளவு சுலபமாகத் தோன்றவில்லை. அரசியல் தலைவர்கள் கைதுக்கெல்லாம் தீக்குளிக்கும் செய்தியைப் படிக்கையில் இது சுத்தப் பைத்தியக்காரத்தனமான விஷயம் என்று தோன்றுகிறது.

மற்றவர் என் கருத்து தவறு என்று சொல்வதைக் கேட்டு வாதம் செய்யக் கிளம்பால் இருந்தாலே மகிழ்ச்சி தானாக வரும் என்றுதான் தோன்றுகிறது. என் கருத்து சரியாக இருப்பதாக ஊர்ஜிதம் செய்ய வேண்டுமா? அல்லது எனக்கும் மற்றவருக்கும் சந்தோஷமும் திருப்தியும் வேண்டுமா? என்று கேட்டால் இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுப்பேன். இந்த ஞானோதயம் இப்போதுதான் வந்திருக்கிறது; நடைமுறையில் எப்படி செயலாகிறது என்று கொஞ்ச நாள் கழித்துத்தான் தெரியும்.

வியாழன், செப்டம்பர் 03, 2009

குப்பை - 4

குப்பை - 4

சரி வீட்டின் குப்பை எது என்பதில் அவ்வளவாகக் குழப்பம் இல்லை; இந்த மனக்குப்பை, இணையக் குப்பை எது என்று கேட்டால் (வல்லியம்மாவின் கேள்வி - சென்ற பதிவிற்கு) எப்படி பதில் சொல்வது? வில்லியம் ஜேம்ஸ் டுரன்ட் என்ற தத்துவ ஆசிரியர் மலர் - அழகு பற்றி எழுதியதை கல்லூரியில் படித்ததுண்டு. "மலர் அழகாயிருப்பதால் நமக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை; அது சந்தோஷத்தைத் தருவதால் அதை அழகு என்கிறோம்" - என்பதுதான் அது. அதே போலத்தான் இந்தக் குப்பை அடையாளமும். எனக்குள் ஒருவிதமான 'நெகட்டிவ்' உணர்வை - அது வெறுப்பு, கோபம், அமைதியின்மை அல்லது அருவெறுப்பு போன்ற உணர்ச்சிகளாக இருக்கலாம் - ஏற்படுத்தும் எந்த செய்கையும், எழுத்தும், படமும் என்னைப் பொருத்தவரை குப்பை.

இந்த விளக்கம் எனக்குத் தெளிவாக இருந்தாலும், இதில் சில நடைமுறைப் பிரச்சனைகள். ஒரு வார்த்தை அல்லது படத்திற்கு எனக்கு வரும் உணர்வும் மற்றவர்களுக்கு வரும் உணர்வும் ஒரே விதமாக இருக்காது. எது எனக்கு குப்பை எனத் தோன்றுகிறதோ அது மற்றவருக்கும் பொருந்தாது. உதாரணமாக ஆத்திகருக்கு நாத்திகம் குப்பை; நாத்திகருக்கு ஆத்திகம் குப்பை. நான் என் உணர்வை பிராதனமாக்கி 'குப்பையை ஒழிப்பேன்' என்று கிளம்பினால் அது மற்றவரோடு சச்சரவைத்தான் உண்டு பண்ணும். அதனால் இந்த விளக்கம் நடைமுறைக்கு 'குப்பையை ஒழிக்க' உதவாது.

அது மட்டுமல்ல - ஒரே எழுத்து சிலருக்கு கோபத்தையும் சிலருக்கு சிரிப்பையும் வரவழைத்தால் அந்த எழுத்தை குப்பை என்று என் உணர்வை மட்டும் பிராதனாமக வைத்து சொல்வது சரியாகத் தோன்றவில்லை. வீரமணி என்ற பெயரைப் பார்த்தவுடன் நாத்திகம் நினைப்புக்கு வருகிறதா அல்லது அய்யப்பன் பாடல் நினைப்புக்கு வருகிறதா என்பது அவரவர் மனநிலையைப் பொருத்திருக்கிறது. 'கடவுள் இல்லை' என்ற வாக்கியத்தைப் பார்த்தவுடன் பெரும்பான்மையான ஆத்திகருக்கு கோபமும், நாத்திகருக்கு மகிழ்ச்சியும் வருவது இயற்கை. அதே சமயத்தில் 'அவன் இல்லை என்று சொல்வதற்குக்கூட அவனை முதலில் சொல்லாமல் இருக்க முடியாது' என்று இந்த வாக்கியத்தைப் பார்த்து மகிழ்ந்த சிவபக்தரைப் பார்த்திருக்கிறேன். 'இல்லை என்பதை எப்படிக் குறித்து இல்லை என்று சொல்லமுடியும்? இதுவே பகுத்தறிவுக்குப் புறம்பானது' என்று இதே வாக்கியத்தைப் பார்த்து கோபப்பட்ட நாத்திகரையும் பார்த்திருக்கிறேன்.

இணையத்தில் குப்பை அதிகம், அதனால் என் நினைப்பில் குப்பை வந்து விட்டது என்று சொல்வது, 'கல் தடுக்கி விட்டது' என்று நாம் சொல்வது போலத்தான். நாம் பார்க்காமல் கால் தடுக்கி விழுந்துவிட்டு ஏதோ நகர்ந்து வந்து கல் நம் காலை வாரி விட்டது போல சொல்வது எப்படிப் பொருந்தாத ஒன்றோ, அதே போல ஒரு எழுத்தை, படத்தை, செய்கையை குப்பை என்று சொல்வது உண்மையில் 'இதைப் பார்த்து படித்ததால், என்னுள்ளே குப்பையான உணர்வுகள் வந்து விட்டன' என்று தான் சொல்வதாக அர்த்தம். நான் 'குப்பை' என்று சொல்வது என்னுணர்வையும், அந்த எழுத்தின் (அல்லது படத்தின், செய்கையின்) வகைப்பாடையும் தான் குறிக்குமே தவிர, அதன் தரத்தைக் குறிக்காது.

அதே சமயத்தில் ஒரு எழுத்து பெரும்பான்மையான மக்களுக்கு ஒரே விதமான உணர்வைத் தந்தால், அந்த எழுத்தும் அந்த உணர்வோடு ஒன்றாகிப் போகிறது. மக்களை ஒரு சங்கடத்தில் ஒன்று சேர்த்து எழுப்பிவிட்ட பேச்சுகளை (உதாரணம்: காந்திஜியின் தண்டி யாத்திரை, மார்ட்டின் லூதர் கிங் பேச்சு) வரலாற்றின் அதிகம் காணலாம். அதே போல பெரும்பான்மையான மக்களுக்கு அருவருப்பைத் தரும் எழுத்தை குப்பை என்று சொல்வது தவறாகத் தோன்றவில்லை. எப்படி ஒரு எழுத்து எனக்குள் உணர்வைத் தூண்டுகிறதோ, அதே போல என் உணர்வுதான் எழுத்தாக என்னிடமிருந்து வருகிறது. என் உணர்வு குப்பையாயிருந்தால், என் எழுத்தும் அதை பிரதிபலிக்கும். மற்றவரைப் பற்றி தரக் குறைவாக எழுதுகையில் உண்மையில் என் உணர்வு குப்பை என்றுதான் நான் பறை சாற்றுகிறேன். இது புரிந்துவிட்டால் நான் குப்பை போடப் போவதில்லை. இது இணையத்தில் எழுதும் அனைவருக்கும் பொருந்தும்.

இணையத்தில் எப்படி குப்பையைக் குறைப்பீர்கள் என்று கேட்டால், நான் குப்பை போடாமல் இருக்கப் போகிறேன் என்றுதான் என்னால் சொல்ல முடியும். என் வீடு சுத்தமாயிருப்பதைப் பார்த்து அடுத்த வீட்டிலும் குப்பை குறைந்தால் அதுவே ஒரு பெரிய வெற்றி. சாதத்தில் கல், உமி வருவது சகஜம். அது குப்பைதான்; எடுத்து எறிந்துவிட்டு சாப்பிடத்தான் செய்கிறோம். அதே சமயத்தில் சாதம் எடுத்து வந்த பிளாஸ்டிக் டப்பா தவறி தரையில் விழுந்து மண்ணோடு கலந்துவிட்டால், சாதத்தைத் தூக்கிப்போட்டு விட்டு டப்பாவை அலம்பி எடுத்து வந்து விடுகிறோம். குப்பை அதிகமாகி வைத்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவையே நாறடித்துவிட்டால், டப்பாவோடு சேர்த்து எறிந்து விடுகிறோம்.

பிளாஸ்டிக் டப்பாவை குப்பையில் போடாமல் அதை மீள்சுழற்சி மூலம் மற்றுமொரு டப்பாவாக செய்ய முடியும்; செய்கிறார்கள். மனதில் வரும் கோபத்தை, அந்த வேகத்தை, வெறியை, ஒரு நல்ல காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று திருப்ப முடியும். என்னளவில் கொஞம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். கோபமே இல்லாமல் இருப்பதென்பது முடியாது போலத் தோன்றுகிறது; ஆனால் கோபம் வருகையில், வெளியில் புல்லை வெட்டவோ, அல்லது தரையை அழுத்திச் சுத்தம் செய்யவோ ஆரம்பித்தால், அந்த கோபத்தில் வரும் வேகம் ஒருவிதமாகத் தணிந்து போகிறது (புல்லும் வெட்டப்பட்டு விடுகிறது, தரையும் சுத்தம்!).

என் மனமும் இந்த சாதம் வைத்த பிளாஸ்டிக் டப்பா போலத்தான். அவ்வப் போது குப்பை வருகிறது - எடுத்துப் போடுவதற்காக மற்ற நல்ல உணர்வு தரும் விஷயங்களில் நேரத்தை செலவழிக்கிறேன். குப்பை தேங்க ஆரம்பித்தால், நானும் குப்பைத் தொட்டியாகிவிடுவேன் என்று தெரியும். அளவு ரொம்பவும் அதிகமானால் குப்பைத்தொட்டியே குப்பையாகிவிடுவதைப் பார்த்ததால், அளவு மீறக் கூடாது என்று தீர்மானம். இல்லையென்றால் யாராவது படையப்பா ஸ்டைலில்:"நேற்று வரைக்கும் குப்பைத் தொட்டியப்பா; இன்று முதல் நீ குப்பையப்பா" என்று பாடிவிடுவார்கள். எதோ ஒரு காரணத்துக்காக ஆண்டவன் (அல்லது இயற்கை) என்னைப் படைத்திருக்கிறான்; அது குப்பையாக மாற அல்ல என்று மட்டும் தெரியும்.

உங்களுக்கு வேறு ஏதாவது வழியில் குப்பையை குறைக்க, அல்லது தேங்காமல் இருக்க வைக்க முடியும் என்று தோன்றினால் அவசியம் சொல்லவும். என்னாலான வழியில் நிச்சயம் முயற்சிப்பேன்.

சனி, ஆகஸ்ட் 29, 2009

குப்பை - 3

குப்பை - 3

இந்தத் தொடர் எழுத ஆரம்பிக்கையில் எனக்குள்ளே நிறைய கேள்விகள். அதில் ஒன்று: 'உண்மையிலேயே சிறு வயதில் வீட்டில் குப்பை இல்லாமல் இருந்ததா?; அல்லது நானும் என் பாட்டி அடிக்கடி சொல்லி வந்தது போல "அந்தக் காலம் போல இல்லை" என்ற ரீதியில் பழையதை மிகைப்படுத்தி, நிகழ்வைப் புறக்கணிக்கிறேனா' என்பது தான். நன்கு ஞாபகப்படுத்திப் பார்க்கையில், பட்டுக்கோட்டையிலும், மன்னார்குடியிலும் வீட்டின் பின்புறம் இருந்த சாக்கடை நினைவுக்கு வந்தது. அவை எல்லோருக்கும் தெரிகிறமாதிரி திறந்த வெளிச் சாக்கடைகள். தண்ணீரில் அடித்துச் செல்லப் படும் வீட்டுக் குப்பைகள் எல்லாம் அதில் தான் சென்று சங்கமித்தன. கரையாத திடக் குப்பைகளுக்கு அங்கு இடமில்லை. தப்பி யாராவது அந்த மாதிரி குப்பையைப் போட்டால், சாக்கடை தேங்கி நாற்றம் மட்டுமல்லாமல் கொசுவும் சேர்ந்து அனைவருக்கும் தொந்தரவு. அதனால் அனைவருமே இந்த எழுதாத சட்டத்தைப் பின்பற்றி, சாக்கடை ஒடுகிற மாதிரியே வைத்துக் கொண்டிருந்தார்கள்.

வீட்டுக் குப்பைகள் இப்படி என்றால், வெளியே மனக் குப்பைகளைத் தூண்டும், சேர்க்கும் விஷங்களிலும், ஒரு விதமான் அளவுத் தடுப்பு இருந்தது. அப்போதெல்லாம் வீட்டில் வானொலி மட்டும்தான்; தொலைக் காட்சி இல்லை. இது இயல்பிலேயே ஆபாசக் குப்பைகள் வருவதைக் குறைத்தன. வெளியே சினிமா போஸ்டர்கள், தெருவில் எழுதப்பட்ட கரி வாசகங்கள் கொஞ்சம் குப்பைகளைக் கொடுத்தாலும், சுவர்கள் எண்ணிக்கைகளில் அளவு இருந்ததால், இந்த மாதிரிக் குப்பைகள் அளவிலே குறைவாக இருந்தன. மொத்த நகரத்தில் இருந்த சுவர்களில் வித விதமான கருத்துகள் - அது ஜவுளிக் கடை விளம்பரமாகட்டும், அல்லது அரசியில் கட்சியின் பிராசரமாகட்டும் (தேர்தல் சமயத்தில் இந்த எண்ணிக்கை பன்மடங்காகப் பெருகும்), அல்லது முனிசிபாலிடியின் சுகாதாரப் பிரசாரமாகட்டும் - மொத்தத்தில் தகவல் தெரிவிக்கும் விதமாகவே இயங்கி வந்ததால், அதிகம் குப்பைகள் இல்லை. பைபிள் போதனைகளைச் சொல்லும் பெண்கள் பள்ளியின் சுவரை பார்க்கையில், மனது கொஞ்சம் சமனப்பட்டுப் போனது.

கொஞ்சம் அரிதாக சுவற்றில் குப்பைகளையும் பார்க்கலாம் - ஒரு ஜாதியைத் திட்டியோ, அல்லது ஒரு வர்கத்தை, கட்சி/அரசியல்வாதியைத் திட்டியோ எழுதப்பட்டிருக்கும். என் வகுப்பில் கூடப் படித்த இராஜகோபாலுக்கும், கருணாநிதிக்கும் இடையில் இந்தமாதிரி ஒரு குப்பை சுவர் வாக்கியம்தான் அவர்களின் நட்புக்கு இடையில் வந்தது. ஊர் முழுதும் இருக்கும் சுவரொட்டிகள், சுவர் வாசகங்களில் இந்த மாதிரி குப்பைகள் விகிதாசாரப்படி மிகக் குறைவு; ஆனால் ஒரு குப்பைச் சுவரால் வந்த தீங்கை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

தற்போதைய காலத்தில், தொழில் நுட்ப வளர்ச்சியால் சில மாற்றங்கள். வீட்டில் இருக்கும் தண்ணீர்க் குப்பைகளை நகர பொதுக் கழிவுக் குழாய்களுக்கு பூமிக்கடியில் மறைத்து எடுத்துச் செல்வதால் அதன் அளவோ, அதிலுள்ள மற்ற சங்கடங்களோ (தேக்கம், அதனானால் வரும் நாற்றம், கொசு) தெரிவதில்லை. சங்கடங்கள் குறைவு என்பதால் இதை முன்னேற்றம் என்றுதான் சொல்லவேண்டும். அதே தொழில்நுட்பம் தொலைக்காட்சி மற்றும் இணையத்தைத் தந்திருக்கிறது. வானொலி அதிகம் கேட்பதில்லை; அதனால் அதில் எந்த அளவு குப்பை இருக்கிறது என்று நிச்சயமாகத் தெரியாது. எப்போதாவது காரில் செல்கையில், சில 'டாக் ஷோ' என்று சொல்லப் படும் பேச்சு மேடைகளில் பேசப் படுவதை கேட்ட போது, குப்பைகள் வானொலியிலும் வந்து விட்டன என்று புரிந்தது.

தொலைக் காட்சியைப் பற்றி சொல்ல வேண்டாம்; அது சினிமாவினால் உந்தப் பட்டு, வரும் பொருளாதாயத்தால் நிலை தடுமாறி, குப்பைகளை விகிதாசாரத்தில் அதிகமாகவே தருகிறது. வெளியே சுவரில் எழுத செலவு அதிகம்; அதனால் அந்த மாதிரிக் குப்பைகள் குறைவு. மாற்றாக வந்தது இணையம். இது ஒரு விதமான பெருச்சுவர்; அளவில் குறைவில்லை. அது மட்டுமல்ல - அனைவர் கைகளிலும் எழுத எடுக்க எடுக்க குறையாமல் வரும் கரித்துண்டுகள். மொத்தத்தில் இயற்கையாக இருந்த சுவர் எண்ணிக்கைத் தடை இப்போது இல்லை - கணினி மூலமாகச் சென்றால் உலகச் சுவர் அனைத்தும் தெரியும். இதில் கரித் துண்டால் மற்றவரைத் திட்டி எழுதியதையும் படிக்கலாம்; அல்லது அழகான வண்ணத்தோடு வரைந்த ஓவியங்களையும் பார்க்கலாம். வரைவது கடினம்; திட்டுவது சுலபம். அதிகப் படியான பக்கங்கள் சுலபமாக வருவதையே தருகின்றன.

இந்த இணையப் பக்கங்கள் நிரந்தரமாக நின்று விடுகின்றன. பொங்கலுக்கு முன் வெள்ளையடித்து, குப்பைகளை அழிக்க முடியவில்லை. மன்னார்குடியில் ஒரு குப்பைச் சுவரால் வந்த கேடு இன்னமும் நினைவில் இருக்கிறதால், இந்த இணையச்சுவர்களால் எத்தனை கேடு வருமோ என்று பயம் வருகிறது. சிறு வயதில் இருபது சுவர்களில் தொடர்ச்சியாக பைபிள் வாசகம் இருந்தாலும், கரித்துண்டால் அசிங்கமான படம் வரைந்து திட்டி எழுதப்பட்ட ஒரு சுவரைத்தான் பார்க்க ஆவல் (curiosity) இருந்தது. இப்போதும் அதே போல அதிகமான் மக்கள் ஒருவிதமான் ஆவலால் இந்த இணையக் குப்பைச் சுவர்களைப் பார்க்கிறார்கள்; படிக்கிறார்கள். இந்தச் சுவர்கள் நிரந்தரமாக இணையத்தில் நிற்பதால், குப்பைகள் தேங்க ஆரம்பித்து விட்டது. ஒரு பழைய திரைப் பாடலில் சொன்னது:
"தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ?
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ?"

இணையத்தில் தமிழ் மூலமாக வரும் குப்பைகளைப் படிக்கையில் தமிழும் பாவம்தானே என்று வருத்தம் வருகிறது. "தமிழினிய தெய்வதமே" என்று பெருமையோடு பாடியவர் இப்போது கணினியில் பதியப்படும் குப்பைகளைப் படித்தால் தன்னுயிரை விட்டுவிடுவார். இந்தக் குப்பைகள் தேங்காமல் எப்படி வெள்ளையடித்து சுவரைச் சுத்தம் செய்வது? எனக்குத் தோன்றியதை அடுத்த பதிவில் எழுதி, தொடரை முடிக்க உத்தேசம்.

வியாழன், ஆகஸ்ட் 20, 2009

குப்பை - 2

குப்பை - 2

'என்னடா இது ஒரு குப்பை விஷயத்துக்கு தொடரா'ன்னு நினைக்க வேண்டாம். இந்த 'குப்பை' வேறு விதமானது. வீட்டில் இருக்கும் பொருள் குப்பைகள் (புறக் குப்பைகள்) எப்படி வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறதோ அதே போல வளர்ந்து வருகையில், மனதிலும் குப்பைகள் (அகக் குப்பைகள்) பின்னிப் பிணைந்திருக்கின்றன. என் வாழ்க்கையில் புறக் குப்பைகள் எப்படி மாறி வளர்ந்தனவோ, அதே போலத்தான் அகக் குப்பைகளும் மாறி வந்திருக்கின்றன.

சிறு வயதில் வீட்டில் குப்பை பார்த்ததாக நினைவில்லை; மனதிலும் மற்றவரைப் பற்றிய பொறாமை, வன்மம், இன்னபிற கெட்ட எண்ணங்கள் இருந்ததாக நினைவில் இல்லை. கொஞ்சம் வளர்ந்தபின், சண்டை, கோபம் நிச்சயமாக வந்தன; ஆனால் அவைகள் நினைத்து நிற்கவில்லை. எப்படி பட்டுக்கோட்டையில், மன்னார்குடியில் வீட்டுக் குப்பைகள் தினமிருமுறை வெளியே சென்றனவோ, அதேபோல மனதிலும் கோபம், வருத்தம், போன்ற குப்பைகள் சீக்கிரம் காலியானது. தாமரை இலை தண்ணீர் போல உடனே கோபம் வெளியேறிப் போனது. நினைப்பிலும் தங்காமல், அது மனதில் ஊறி வன்மம், பொறாமை என்றேல்லாம் உருவேறாமல், காணாமல் போனது.

எனக்கு மட்டுமல்ல, கூடப் படித்த அனைவருமே கிட்டத்தட்ட அதே போலத் தான். 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' - சொல்லுக்கு அவசியம் இல்லாமல் போனது - அனைவருக்குமே 'உள்ளே' அதிகமாக ஒளித்து வைக்க குப்பைகள் இல்லாததால். வளர்ந்து கல்லூரிக்கு செல்கையில், கொஞ்சம் கொஞ்சமாக குப்பைகள் அதிகமானது. விடலைப் பருவ எண்ணங்கள் இப்போது யோசிக்கையில் குப்பைதான்; அப்போது அவை முக்கியமான விஷயம்! மூளையில் நினைவில் தேக்கி வைக்க விரும்பிய குப்பைகள்.

எப்படி நகரத்தில் வாசம் செய்கையில் குப்பைகள் சில மணி நேரம் அதிகம் வீட்டில் இருந்தனவோ, அதே போல வளர வளர கோபம், பொறாமை, கடுப்பு என்றெல்லாம் குப்பைகள் மனதிலும் நினைவிலும் அதிக நேரம் இருக்க ஆரம்பித்தன. குப்பைகள் அதிக நேரம் குப்பைத் தொட்டியில் தங்கி, வீட்டின் வாசம் கெட, குப்பைத்தொட்டியை மாற்ற வேண்டியிருந்தது. பழைய பிளாஸ்டிக் தொட்டியைத் தூக்கியெறிந்து விட்டு, முதிதாக மாற்றவும் முடிந்தது. ஆனால் இந்த மனக்குப்பைகளை வைத்திருக்கும் மனக் குப்பைத்தொட்டியை தூக்கியெறிந்து புதிதாக மாற்ற முடியவில்லை.

அலுவலகம் செல்ல ஆரம்பித்தவுடன் கற்றுக் கொண்ட முதல் பாடம் 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்' கலை! மனதில் குப்பைகள் இருக்கும்; வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்ற பாடம்தான் சரி என்று நம்மை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவும் ஒத்துக் கொள்ளவும் நாளாகினாலும், கடைசியில் அது தான் பாடமாகிப் போனது.

இப்போது நாடு விட்டு நாடு வந்ததில் வீட்டில் வாரக் குப்பை; அதற்காக பள பள தொட்டி, வாசனைப் பை என்றெல்லாம் உபயோகிக்கையில் மனதின் குப்பைகளுக்கும் இதே போல ஒப்பனை செய்யும் நாகரீகமும், வார்த்தை ஜாலமும் அத்தியாவசியமாகிப் போனதை நினைத்து வருத்தம் தான் வருகிறது. மறுபடியும் குப்பைகளில்லாத சிறுவயதுக் குழந்தை, சிறுவர் காலத்திற்கு செல்ல மாட்டோமா என்ற ஏக்கமும் வருகிறது.

குழந்தைகள் பேசும் பேச்சைக் கேட்கையில் குப்பைகளை தேக்காமல் அவர்களால் இருக்க முடிகிறதே என்ற சந்தோஷம் வருகிறது. அதே சமயத்தில் அவர்கள் பேசும் பேச்சு 'மற்றவர்களுக்குப் பிடிக்காது, பின்னாளில் சமூகத்தில் அவர்கள் இயங்குவதற்கு தடையாகும்' என்று நினைத்து பெற்றோர்கள் (நான் உள்பட) 'பண்பாகப் பேச' கற்றுக் கொடுப்பதைப் பார்க்கையில் நாமே குப்பைத்தொட்டியை வளர்க்கிறோமோ என்ற குற்றவுணர்வும் வருகிறது.

குப்பைகளே இல்லாமல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அது தேங்கி, மற்றவற்றையும் நாசம் செய்யாமல், தேங்காமலாவது இருக்கட்டுமே என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2009

குப்பை - 1

குப்பை – 1

இது உண்மையிலேயே 'குப்பை/குப்பைத் தொட்டி' பற்றிய பதிவுதான். சிறு வயதில் பார்த்ததெல்லாம் தெருவில் ஒரு சிமென்ட் சிலின்டர். மூலையில் நிறுத்தி வைத்திருப்பர்கள். வாரம் ஒரு முறை முனிசிபாலிடி குப்பை வண்டி வந்து அந்த சிமென்ட் குழாயைச் சாய்த்து விட்டு, கூடையில் சேர்த்து, வண்டியில் (மாட்டு வண்டி) போட்டு எடுத்துச் செல்வார்கள். மன்னார்குடியில் நாங்கள் இருந்த தெருவில் புழுதி அதிகம்; குப்பை வண்டி வந்து போகும் போது தெரு முழுதும் ஒரே தூசி படலம் தான். காரணம் அந்த தொழிலாளர்கள் துடைப்பத்தால் - நீண்ட கழியின் முனையில் முக்கோண வடிவில் சிறு தட்டி - பெருக்கி குவித்தபடியே போவார்கள்; பெண் தொழிலாளிகள் அதையும் எடுத்து வண்டியில் போட்டுக் கொண்டே தொடர்வார்கள். வீட்டின் அருகிலேயே குப்பைத்தொட்டி இருந்ததால், வீட்டிற்குள் குப்பை சேகரம் இல்லை.

இது வட நாட்டில் (சண்டீகர்/தில்லி) வாசம் செய்த போது 'கூடா'வாக மாறியது. ப்ளாட்டில் இருந்ததால், வீட்டிற்குள்ளேயே ஒரு சிறு குப்பைத் தொட்டியில் முதலில் சேகரம்; தினமும் காலையில் அந்த ப்ளாட்டுகளுக்குப் பொதுவான ஒரு 'கூடா' சேகரம் பண்ணும் பணியாளர் வந்து தன்னுடைய பெரிய பிளாஸ்டிக் கூடையில் ஒவ்வொரு வீட்டு 'கூடா'வையும் போட்டு எடுத்துச் செல்வார். அது ஒரு பெரிய வண்டிக்கு (இது இயந்திர வண்டி; மாடு தப்பித்தது) மாறி நகரத்தை விட்டு வெளியே செல்லும். 'கூடா' மனிதர் வராத நாளில் (அது வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள்), வீட்டுக் குப்பை அளவு அதிகமாகும். ஆக ஒரு விதமான கிராம/நகர இடத்திலிருந்து மாநகரத்துக்கு மாறுகையில், வீட்டுக் குப்பை அதிகமாயிற்று. வீட்டிலே குப்பை சேகரத்திற்கென்று தனியான குப்பைத் தொட்டி - பிளாஸ்டிக்கில்! குப்பையை வீட்டிலே சேமித்து வைப்பது, முன்னேற்றத்திற்கு அடையாளமானது!!


பின் நாடு விட்டு நாடு வந்து அமெரிக்க வாசத்தில் வீட்டுக் குப்பை தொட்டி அளவிலே பெருத்தது - காரணம், இங்கு தினந்தோரும் வீட்டுக் குப்பையை யாரும் எடுத்துச் செல்வதில்லை. வாரம் ஒரு முறை அல்லது இரு முறை - இரண்டுக்கும் தனித் தனிக் கட்டணம். அதிலும், நேரத்திற்கு (முதல் நாள் மாலையே) குப்பைத் தொட்டியை வீட்டு வாசலில், அதற்குறிய இடத்தில் வைக்க வேண்டும். வேளை தப்பினால் வீட்டிலே இருவாரக் குப்பை. எடுத்துச் செல்லும் இயந்திர வண்டி (பெரிய லாரி), தன் இயந்திரக் கரத்தால் குப்பைத் தோட்டியைத் தூக்கி, கவிழ்த்து குப்பை வண்டியில் விழுந்த பின், தொட்டியை வைத்துவிட்டு செல்லும். அதனால் தொட்டி எந்தப் பக்கம் பார்த்து இருக்கிறது என்றெல்லாம் சரிபார்த்து வைக்க வேண்டும்! இல்லையென்றால் பாதி குப்பை பெட்டிக்குள்ளேயே இருக்கும்.

இந்தப் பெரிய குப்பைத்தொட்டி அனேகமாக எல்லா வீட்டு காரேஜிலோ அல்லது வீட்டுப் பின்புறமோ தனியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விட்டிற்கு வெளியே வந்து குப்பையைப் போடுவது இயலாத ஒன்று - அதுவும் பனி பெய்யும் குளிர் காலத்தில். அதனால் வீட்டிற்குள்ளே சிறு குப்பைத் தொட்டிகள். அதுவும், குப்பை வாரியாக - சமையலறை குப்பைத் தொட்டி தனி விதம்; குளியலறை குப்பைத்தொட்டி வேறு விதம்; தவிர பாட்டில், காகிதம் என்று மறுசுழற்சி (recycle) செய்யும் பொருள்களுக்கான குப்பைத் தொட்டி வேறு. நம்மூர் சாப்பாடு சாப்பிட்டு, தட்டில் உள்ள கருவேப்பிலை, முருங்கைக்காய் சக்கை எல்லாம் தட்டைக் கழுவும் தொட்டியில் போட முடியாது - அங்கு 'garbage dispenser' இருந்தாலும் கூட. முருங்கைக்காய் தொட்டியில் மாட்டிக் கொண்டு அதை சுத்தம் பண்ணுவதற்கு முன் பசி வந்து இன்னுமொரு முறை சாப்பிட வேண்டிருக்கும்..


தவிர, இந்தக் குப்பைத் தொட்டி மூன்று-நான்கு நாட்களுக்கான குப்பை சேகரம் பண்ணுவதால், அளவிலும் பெரிதாக இருக்க வேண்டும், மூடியோடு கூட வேறு இருக்க வேண்டும் – இல்லையென்றால் நம் சுவாசம் பாதிக்கும்! குப்பையை நேரடியாக பெட்டியில் போடவும் முடியாது; அப்புறம் பெட்டியை யார் அலம்பி சுத்தம் செய்வது? இதற்கென்று ஒரு பிளாஸ்டிக் பை! அதிலும் வகை வகையாய் இருப்பதால் (நல்ல வாசனையோடு இருக்கும் பைகளும் உண்டு), கடையில் இதைத் தெரிந்தெடுக்கவே நேரமாகும். இதெல்லாம் போதாதென்று குப்பைத் தொட்டியை இளப்பமாகவும் வாங்க முடியாது - வீட்டிற்கு ஏற்ற சமையலறை; சமையலறைக்கேற்ற குப்பைத் தொட்டி. இந்தியாவில் இருக்கையில் உபயோகித்த பிளாஸ்டிக் போய் பள பளபளவென்றிருக்கும் எவர்சில்வர் குப்பைத் தொட்டி வாங்கியாகிவிட்டது. அனேகமாக முக்கால்வாசி வீட்டில் இது தான் சமையலறையில் இருக்கும்.

சாப்பிட்ட கையோடு மூடியைத் திறக்க முடியாதென்று, தொட்டியின் அடியில் ஒரு பெடல். அழுத்தினால் மூடி திறக்கும். நம்மூரில் பிளாஸ்டிக் பெட்டி அதிக நாள் வராது; உடைந்து போகும், வேறு வாங்க வேண்டும். இங்கு நிறைய நாள் உபயோகிக்கலாமே என்று நினைக்க வேண்டாம். அழுத்தும் பெடல் - பிளாஸ்டிக். கொஞ்ச நாளில் உடைந்து போகும் - அப்போது மூடியை கையால் தான் தூக்க வேண்டும். தூக்கிப் போட்டு புதிது வாங்கி விட மனசு வரவில்லை. நான் வளர்ந்த விதம் தனி! பள பளவென்றிறுக்கும் இதை தூக்கிப் போடுவதா என்று யோசனை. இதனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக பெடல் இல்லாத தொட்டி. சரி நாம் தான் இப்படி என்றால் ஒரு நண்பர் (அவரும் நம்மூரிலிருந்து குடி பெயர்ந்தவர்) வீட்டுக்குப் போயிருந்த போது அவர் வீட்டு சமையலறையிலும் இதே போன்று ஒரு பெடல் இல்லாத எவர் சில்வர் தொட்டி!!

சரி ஒரு பொது விஷயம் இருக்கிறதே என்று பேசிக் கொண்டிருந்தோம். இந்த குப்பைத் தொட்டி தயாரிக்கும் நிறுவனங்களை திட்டினோம் - வருமானத்துக்காக வேண்டுமென்றே இப்படி செய்கிறார்களே என்று. வீட்டிற்கு வந்திருந்த மூன்றாவது நண்பர் - அவரும் நம்மூர் தான் - புதிதாக எவர்சில்வர் பெடலோடு வந்த தொட்டி வாங்கியதாகவும், அதுவும் கொஞ்ச நாளில் உடைந்து போய் விட்டது (காரணம் பெடலை தொட்டியோடு இணைக்கும் கம்பி பிளாஸ்டிக்!!) என்றும், அந்தப் பெடல் எவர் சில்வர் என்பதால் அதை தூக்கிப் போடாமல் கராஜில் வைத்திருப்பதாகவும் சொன்னார்! சரி நாமே தேவலை என்றுதான் தோன்றியது.

வாழ்க்கையில் அதிக விஷயங்களில் முன்னேற்றம் இருந்தாலும் இந்த குப்பை மட்டும் முந்நாளை விட இந்நாளில் ரொம்பவும் நெருங்கி இருப்பதை நினைக்கும் போது மனது கொஞ்சம் வருத்தப்படத்தான் செய்கிறது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிறு வயதில் சராசரியாக வீட்டில் இருந்த குப்பையை விட, இப்போது மூன்று அல்லது நான்கு மடங்கு - அதுவும் மிக அருகே! இது ஒரு விதமான பின்னிறக்கம் தான்!! தொடர்ச்சி அடுத்த பதிவில்.

சனி, ஆகஸ்ட் 08, 2009

பார்வை வேறு, கோணம் வேறு.

பார்வை வேறு, கோணம் வேறு.

"மேக மூட்டம் இல்லாத நாளில் இங்கிருந்து பார்க்கையில் அமெரிக்கா தெரியும்", எங்கள் பேருந்தில் இருந்த ஸ்பீக்கரில், பயண கைடு வர்ணித்துக் கொண்டு வந்ததை "ஓ" என்று பஸ்ஸின் பின்புறத்தில் இருந்து ஒரு வந்த சப்தம் பாதியில் நிறுத்தியது. கூட வந்திருந்த ஒரு குடும்பத்தில் (அப்பா, அம்மா - ஒரு பத்து வயது பையனோடு வந்திருந்தார்கள்), அப்பா மெதுவாக அந்த சிறுவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தடங்கலுக்குப் பிறகு - முன்னால் அமர்ந்திருந்த சில தலைகள் திரும்பிப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டன - வர்ணனை தொடர்ந்தது.

கனடாவில் விடுமுறைக்கு சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நாளாக எண்ணம்; இப்போதுதான் நிறைவேறியது. இருவருக்கும் வேலை வேலை என்று ஓடி, கொஞ்சம் அலுப்பும் சேர, திடீரென்று ஒரு விடுமுறை யோசனை தோன்றியதில் இந்தப் பயணம். விடுமுறையில் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் யாராவது வண்டி ஒட்டி எல்லா இடத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று முதலிலேயே முடிவெடுத்து வந்து விட்டோம் - தினசரி வாழ்க்கையில் அதிகமான நேரம் டிராபிக்கில் கார் ஒட்டியதால், ஒரு வாரம் சும்மா சுற்ற வேண்டும் என்றுதான் தீர்மானம். சப்தம் இல்லாமல், அதிக வேலை இல்லாமல் நாளைக் கழிப்பதே இந்த வார இலக்கு எங்களுக்கு!

பயணத்தின் மூன்றாவது நாள் - குபெக். மான்டிரியாலில் இருந்து ஒரு மூடிய ஏ.ஸி. பஸ்ஸில் வந்து, பின் ஒரு திறந்த பஸ்ஸில் குபெக்கிற்குள் சுற்றி வந்து கொண்டிருந்தோம். பயண ஆரம்பத்திலிருந்தே இந்த சிறுவனின் செய்கைகளும், சப்தங்களும் தொந்தரவாகவே இருந்து வந்தன. பஸ் மலையில் ஏறி நிறுத்தத்தில் நின்றது - எங்களைப் போன்று வந்திருந்த பிற சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க, சிரம பரிகாரம் செய்து கொள்ள. இறங்குகையில் சப்தம் போட்ட சிறுவனையும், அந்த குடும்பத்தையும் ஒரு நோட்டம் விட்டுக் கொண்டே இறங்கினேன், மற்ற பயணிகளைப் போலவே. அதிக காசு கொடுத்து கொஞ்சம் ஜாலியாக சுற்றலாம் என்று வந்தால் இத்தனை இடைஞ்சலா என்று தோன்றினாலும், இதற்கு முன் சொந்தக் காரர் ஒருவர் வீட்டுப் பிள்ளையையும் இதே போல பார்த்ததால் எங்களுக்கு அவர்கள் மேல் கொஞ்சம் பரிதாபம் வந்தது.

எங்கள் சீட்டுக்கு முன்னாலிருந்த ஒரு முதிர் தம்பதியினர் இதை தங்களுக்குள் வெளிப்படையாகவே கொஞ்சம் கடுப்போடு (மற்றவர்களுக்கு கேட்காத மாதிரிதான்) பேசிக்கொண்டு வந்தார்கள். பஸ் கிளம்பும் நேரம் வந்தது; பயணிகள் அனைவரும் வந்து விட்டார்கள் அந்த ஒரு குடும்பத்தைத் தவிர. ஐந்து நிமிட தாமத்திற்குப் பிறகு அவர்களையும் ஏற்றிக் கொண்டு மற்ற பயணிகளின் முணுமுணுப்புகளோடு வண்டி கிளம்பியது.

மலையிலிருந்து இறங்குகையில் சப்தம் கொஞ்சம் அதிகமாகவே வந்தது அந்த சிறுவனிடமிருந்து. நல்ல வேளையாக பஸ்ஸில் காலி இடம் கொஞ்சம் இருந்தது. எல்லா பயணிகளும் பஸ்ஸின் முன்புறம் உள்ள சீட்டுகளுக்கு மாற, அந்தக் குடும்பமும் கடைசி சீட்டுக்கு மாற, நடுவில் இரண்டு/மூன்று வரிசை காலி சீட்டுகளோடு வண்டி சென்றது. பஸ்ஸில் கைடு உட்பட அனைவர் முகத்திலுமே கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது - இந்த குடும்பத்தைப் பார்க்கையில்.

அடுத்த நிறுத்தம் குபெக்கிற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்க்க. அங்கிருந்த விஞ்ச் மூலமாக மலைக்கு செல்ல வேண்டும். விஞ்ச்சில் அதிகபட்சம் ஆறு அல்லது எட்டு பேர்தான் செல்ல முடியும்; அதனால் பஸ்ஸின் பயணிகளை இரண்டு/மூன்று குழுவாகப் பிரித்து விஞ்சில் அனுப்பிக் கொண்டிருந்தார் கைடு. எங்கள் முறை வருகையில் நாங்களும், அந்தக் குடும்பமும் மட்டும். விஞ்சில் செல்கையில் எங்கள் பார்வைக்கு பதில் சொல்லும் வகையில் அப்பா சொன்னார் - சிறுவனுக்கு Autism என்று.

கொஞ்சம் பேசிக் கொண்டே வந்தோம்; பின் திரும்பி வருகையிலும், மற்ற பயணிகள் கொஞ்சம் விலகிச் செல்ல, நானும் என் மனைவியும் இவர்களோடேயே விஞ்சில் வந்து, பஸ்ஸில் ஏறினோம். இம்முறை அவர்களுக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தோம்; அந்த அம்மாவின் முகம் 'நன்றி' என்று பார்வையில் சொன்னது. பஸ்ஸில் முன்னாலிருந்த பயணிகள் முகத்தில் கேள்வி - எங்களைப் பார்க்கையில், 'ஏன் முன்னால் அமரவில்லை' என்று.

மான்டிரியால் திரும்புகையில் சிறுவன் உறங்கி விட, அவர்களோடு பேசிக் கொண்டே வந்ததில் அந்த குடும்பத்தைப் பற்றி தெரிந்தது. மனைவி ஒரு டாக்டர். கணவர் நல்ல வேலையில் இருந்து விட்டு, வீட்டு நிலைமைக்காக வேலையை விட்டு விட்டார். விடுமுறைக்காக கனடா வந்திருக்கிறார்கள். பையனுக்கு வயது பத்தாகி விட்டாலும், மனதளவில் ஒன்றரை வயது; பேச்சு வரவில்லை; இன்னமும் Diaper தான் உபயோகிக்கிறான் (அதனால் தான் குபெக்கில் ஐந்து நிமிட தாமதம்). மான்டிரியாலில் இறங்குகையில் அவரிடம் ஆறுதலாகச் சொன்னேன் "உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவன் உங்களை சோதித்திருக்க வேண்டாம்" என்று.

அது வரை இயல்பாக பேசிக் கொண்டிருந்த அவர் முகத்தில் வருத்தம். "நீங்கள் எனக்கு ஆறுதல் என்ற முறையில்தான் சொல்கிறீர்கள்; ஆனால் அடிப்படையில் நீங்களும் மற்ற பயணிகளும் இதை ஒரே மாதிரி தான் பார்க்கிறீர்கள். என் மகனை கடவுள் எங்களுக்கு அளித்த சோதனையாகவோ, தண்டனையாகவோ நாங்கள் கருதவில்லை. என் மகனுக்கு கடவுள் எங்களைப் பரிசாக அளித்திருக்கிறர், அதை எந்த விதத்திலும் குறைத்துவிடக் கூடாது; அவனுக்கு கிடைத்த உயர்ந்த பரிசாக எங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதுதான் எங்கள் நோக்கம். தயவு செய்து அதைப் புரிந்து கொள்ளுங்கள்", என்றார்.

மற்ற பயணிகள் முகத்தில் தெரிந்த எரிச்சலையும், கடுப்பையும் குறையாக நினைத்து என்னை அவர்களை விட உயர்வாக நினைத்த எனக்கு அவர் சொன்னது ஆழமாகப் பதிந்தது. அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவர் நிச்சயம் அவர் மகனுக்கு உயர்ந்த பரிசுதான் என்று சொல்லி, மனைவியுடன் ஓட்டல் திரும்பினேன்.

பிகு:
இது என் நூறாவது பதிவு. ரொம்ப நாளாக மனதில் இருந்த விஷயத்தை சொல்வதா வேண்டாமா என்று போராடி சொல்வது என்று தீர்மானித்து பதிந்திருக்கிறேன்.

திங்கள், ஜூலை 20, 2009

யோசிக்கும் மொழி - 2

யோசிக்கும் மொழி - 2

அலுவலக அல்லது தினசரி வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றி யோசிப்பதற்கும், குழந்தை பசி பற்றி யோசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவதற்கு மொழி அவசியம் தேவை; இரண்டாவது வகைக்கு பேசும் மொழி தேவையில்லை. உடல் உறுப்புகள் தங்களுக்குள் ஏதோ ஒரு வகையில் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டிருக்கிறது. அது எந்த மொழி என்று தெரியவில்லை; ஆனால் இது நாடு, மதம் பொறுத்து மாறாமல், உலகம் முழுதும் உள்ள மனித வர்கத்திற்கு பொதுவாக இருக்கும் என்று தோன்றுகிறது. இது மற்ற விலங்குகளுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை.

அசை போடும் வகையில் நினைப்பில் வெறும் வார்த்தைகள் மற்றும் வருவதில்லை. என் அனுபவத்தில் நினைப்பில், ஸ்பரிசம், வாசனை, வெப்பம்/குளிர் போன்ற மற்ற புலன் சம்பந்தப்பட்ட விஷயங்களும் சேர்ந்தே வருகின்றன. ஒரு நிகழ்ச்சியின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட புலன்களின் அனுபவம், அதே உணர்ச்சியினை அனுபவிக்கும் போது அந்த நினைப்பைக் கொண்டு வருகிறது. இதில் மொழியும் அடங்கும்; ஆனால் நினைப்புக்கு மொழி அத்தியாவசியம் என்று தோன்றவில்லை.

ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை கொஞ்சம் சுவாரசியமானது. இதில் கொஞ்சம் விடை தேடும் வகையில் யோசனையும் சேர்ந்தே இருப்பதால், மொழி தேவைப்படுகிறது. ஆழ்ந்த வினாக்கள் மேலறிவுக்கு மட்டும் புலப்படுவதில்லை; இந்த அடித்தள அறிவு (குழந்தையின் பசி அழுகை போல) மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது. நான் படித்த வரையில் (நிச்சயம் கொஞ்சம் தான்), ஞானிகளின் அனுபவங்கள் வார்த்தைகளால் மட்டும் விபரிக்க முடியாததாகவே இருக்கிறது. உதாரணமாக, இந்த சுயதரிசனம், சுயவிமர்சனம் பற்றி ஆராய்ந்து எழுதிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கும், அவருக்கு நேர்ந்த அனுபவங்களை முழுவதுமாக விபரிக்க கடினமாகவே இருந்திருக்கிறது.

இவர் மட்டுமல்ல, மற்ற ஞானிகளுக்கும் அனுபவங்களை விபரிப்பது கடினமாகவே இருந்திருக்கிறது. மொழியால் விபரிக்க முடியாத அளவுக்கு, இவர்கள் எவருக்கும் மொழிப்பிரச்சனை இருந்ததில்லை; காரணம் அனுபவத்தை விபரிக்கும் வகையில் எந்த மொழியுமே இன்னமும் வளரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

பழங்கதைகளில், அது இந்திய புராணங்களாகட்டும் அல்லது கிரேக்க மற்று ஐரோப்பியக் கதைகளாகட்டும், பறவை - விலங்குகளோடு பேசும் சக்தி படைத்த மனிதர்களைப் பற்றி அதிகம் கதைகள் உண்டு. இந்த விலங்கு மொழியும் ஒரு விதமான புலன்களின் தகவல் பறிமாற்றமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. கருத்துகளை, எண்ணங்களை மற்ற சக மனிதர்களோடு பறிமாறிக் கொள்ள உதவும் வாய் மொழியில் அதிக சக்தி செலவழித்ததால், மனிதர்களுக்கு இந்த புலன்களின் தகவல் பறிமாற்ற மொழி மறந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

மொத்தத்தில் மனித மூளை இயக்கத்திற்கு வாய்மொழி அவசியம் இல்லை; அதே சமயத்தில் விடை தேடும் வகையில் வரும் யோசனைகளுக்கு வாய் மொழி நிச்சயம் உதவுகிறது (தேவை) என்பது என் கணிப்பு.

உங்களுக்குத் தோன்றுவதை கருத்தாகப் பதியலாம்.

பி.கு.: சென்றவாரம் பிட்ஸ்பர்க் சென்று பாலாஜி தரிசனம் செய்ததால், இணையத்தில் பதியவில்லை.

ஞாயிறு, ஜூலை 05, 2009

யோசிக்கும் மொழி

யோசிக்கும் மொழி

யோசனை என்பது ஒருவிதமான கற்பனையே. மூளையில் ஏதோ ஒரு மூலை, நாம் யோசிக்கும் போது இயங்குகிறது. யோசனைகள் பல வகை. என் கணிப்பில் இவைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 1. விடை தேடும் வகை 2. அசை போடும் வகை 3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை. ஒரு பிரச்சனையை தீர்க்க, வழிதேட முயல்கையில் வரும் சிந்தனைகள், ஒரு நல்ல நிகழ்ச்சி, திரைப்படம் பற்றி நினைத்து அசைபோட்டு இன்பமுறுகையில் வரும் சிந்தனையை விட வித்தியாசமானது. இதிலும், ஒரு சுய படைப்பில், அது கதையோ, கவிதையோ வரும் சிந்தனை கிட்டத்தட்ட ஒரு பிரச்சனையைத் தீர்க்க வரும் சிந்தனை போலிருந்தாலும், கொஞ்சம் மாறுபட்டது. படைப்பைப் பற்றி, அல்லது இயற்கையைப் பற்றி வரும் யோசனைகள், சிந்தனைகள் இந்த மாதிரியே.

சிறுவயதில் என் யோசனைகளில் அதிகமான நேரம் இந்த கற்பனை, ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகையிலும், விடை தேடும் வகையிலும் சென்றது. வளர்ந்து படிக்கும் காலத்தில், முக்கியமாக பரீட்சை நடக்கும் காலத்திற்கருகில் விடை தேடும் வகையிலேயே அதிக நேரம் சென்றது. இப்போதெல்லாம், அசைபோடும் வகையில் அதிக நேரமும், கொஞ்சம் பிரதிபலிப்பிலும் செல்லுகிறது. இதில் நான் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று நினைக்கிறேன்; எனக்குத் தெரிந்த பல பேர்கள் இது போன்றே நேர விகிதாசார வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த யோசனையில் ஒரு வித்தியாசத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன். சிறு வயதில் சிந்தனைகள் தமிழிலேயே இருந்தன. அயல்நாட்டு வாசம், வேலை காரணமாக ஆங்கிலம் அதிகமாக பேசப் போக, இப்போதெல்லாம் சில விதமான சிந்தனைகள் - முக்கியமாக அலுவலக சம்பந்தமான விடை தேடும் வகையில் சிந்தனை ஆங்கிலத்திலேயே வருகிறது. இதுவும் நாடு விட்டு நாடு வந்த அனைவரும் உணர்ந்ததுதான் என்று நினைக்கிறேன்; நிச்சயமாகத் தெரியவில்லை. சமீப காலமாக அசைபோடும் கற்பனைகள் தவிர, மற்ற அனைத்து சிந்தனைகளும் ஆங்கிலத்திலேயெ இருப்பதைப் பார்க்கிறேன்.

இதையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் (இந்த யோசனையே ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகைதான்) தோன்றிய கேள்விகள் - யோசனைக்கு மொழி தேவையா? எந்த மொழி சிந்தனைக்கு அதிகம் உதவும்? இந்தக் கேள்விகளைப் பற்றி நான் ஆராய்ந்ததே இந்தப் பதிவும், இதன் தொடர் பதிவும்.

இங்கு நான் யோசனை, சிந்தனை, நினைப்பு என்ற வார்த்தைகளை ஒன்றே போல பாவித்து, மாற்றி மாற்றி எழுதியிருந்தாலும், இவற்றுக்குள் வித்தியாசம் இருக்க வேண்டும். குழப்பத்தைக் குறைப்பதற்காக, இந்தப் பதிவில் இதற்குப் பின் ஒவ்வொரு வகைக்கும் தனி வார்த்தையை உபயோகித்திருக்கிறேன்:
1. விடை தேடும் வகை – Problem solving - யோசனை;
2. அசை போடும் வகை – Thought/memory - நினைப்பு
3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை – Reflection/analysis - சிந்தனை

முதலில் யோசனை: இந்த வகைக்கு முக்கிய தேவை ஒரு பிரச்சனை அல்லது தீர்க்க வேண்டிய புதிர். வாழ்க்கையில் பெரும்பான்மையான சமயம் இந்த பிரச்சனையே ஒரு மொழி மூலமாகத் தான் நம் மூளைக்குத் தெரிய வருவதால், அது சம்பந்தமான யோசனையும் அந்த மொழியிலேயே வருவது இயல்பு. சிறுவயதில் நான் தமிழ்நாட்டில் தமிழிலேயே பேசி, கல்வி கற்றதால், அப்போது தமிழில் இந்த யோசனை இருந்ததும், இப்போது அலுவலகத்தில் ஆங்கிலத்திலேயே பேசி பணிபுரிவதால், இப்போது ஆங்கிலத்தில் இந்த யோசனை வருவதும் இயல்பே. மொத்தத்தில் பிரச்சனை எந்த மொழியோ அந்த மொழியே யோசனைக்கும் உதவும்.

இதில் ஒரு சங்கடம். குழந்தையாக இருந்த போதும் பிரச்சனைகள் இருந்திருக்கும், உ.ம். பசி. அப்போது மூளையில் யோசனை இருந்ததா? குழந்தை அழுது பால் குடிக்கையில் நிச்சயம் யோசனை இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் குழந்தைக்கு மொழி தெரியாதே - யோசனை எந்த மொழி?

அடுத்த வாரம் தொடர்கிறேன்.